நிச்சயமற்ற நிலையை உருவாக்கிய கோவிட்-19 பெருந்தொற்று, உலகச் சமூகம், பொருளாதாரங்கள், கட்டமைப்புகளின் மீது சேதத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் மிகக் கடுமையான, குறிப்பிடத்தக்க பாதிப்பை அது ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பெருந்தொற்று உண்டாக்கிய பேரழிவின் வீச்சானது உலக நாடுகள் தனித்த, சுயபரிசோதனை சார்ந்த அணுகுமுறைகளைக் கைக்கொள்ளக் காரணமாக அமைந்தது. எனினும், உலக அமைப்புகளிடையே உள்ள பரஸ்பரத் தொடர்புகளின் பின்னணியில் கூட்டுச் செயல்பாடுகள் மூலம் - முக்கியமாக ஆப்பிரிக்க நாடுகளுடன் – நாம் மீள்வற்கான நிகழ்முறையைப் பின்பற்றுவது குறித்து ஆராய்வது மிக முக்கியமானதாகும்.
பெருந்தொற்று இறுதியாகத் தாக்கிய பிராந்தியங்களில் ஆப்பிரிக்காவும் ஒன்று. இங்கு 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆசியாவில் பாதிக்கப்பட்டோரை விடக் குறைவானோர்தான் ஆப்பிரிக்காவில் பாதிக்கப்பட்டனர்; ஐரோப்பா போலத் தொற்று வேகமாக இங்கு பரவவும் இல்லை. இளையோர் எண்ணிக்கை அதிகம் இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் குறைந்ததாலும் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, சீனா மற்றும் பிற சந்தைகளிலிருந்து தேவை குறைந்ததாலும் வினியோகம்-தேவை விகிதம் அதிர்ச்சிக்குள்ளாகியது. இதனால் பொருளாதார ரீதியில் ஆப்பிரிக்கா பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. சஹாரா பிராந்திய ஆப்பிரிக்காவின் தனிநபருக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தி -5.4%ஆக இந்த ஆண்டு குறையக்கூடும் இது நிலைமையை மிக மோசமாக ஆக்குகிறது. கடந்த பத்தாண்டுகளில் கண்ட முன்னேற்றத்தை பாதிப்பதுடன் 49 மில்லியன் ஆப்பிரிக்க மக்கள் மீண்டும் வறுமைப் பிடியில் சிக்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. 30 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பை இழப்பதுடன் நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, அங்கோலா போன்ற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கோவிட்-19க்கு முந்தைய பொருளாதார வளர்ச்சியை 2023, 2024 வரை அடையும் என எதிர்பார்க்க இயலாத நிலை உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் சமூகநலத் திட்டங்கள், சுகாதார நலக் கட்டமைப்பு ஆகியவை ஒப்பீட்டளவில் பலவீனமாக உள்ளதை இப்பெருந்தொற்று உணர்த்தியிருக்கிறது. இப்பிராந்தியத்தின் பல நாடுகளில் ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு மருத்துவமனை, ஒரு மருத்துவர்; 10,000 பேருக்கு ஒரு படுக்கை என்ற நிலையே உள்ளது.
என்றாலும், ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள், ஆப்பிரிக்க யூனியன், நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆப்பிரிக்க மையங்கள் (ACDCP) ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டுறவின் காரணத்தால் சோதிக்கும் திறன், வளஆதாரங்களைத் திரட்டுதல் வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் போன்றவை அதிகரித்துள்ளன. அரசு முயற்சியுடன் சேர்ந்து, இந்நாடுகளிலுள்ள குடிமைச் சமூக அமைப்புகளும் இளம் செயல்பாட்டாளர்களும் வளஆதாரங்களை திரட்டுவதிலும், விழிப்புணர்வைப் பரப்புவதிலும், பெருந்தொற்றிலிருந்து மீள்வதற்கான தீர்வு காணவும் முக்கியப் பங்காற்றியுள்ளன. பிரச்சினையை ஒருங்கிணைந்து எதிர்நோக்குவதற்கான தேவையான வலிமை ஆப்பிரிக்க முகவாண்மை அமைப்புகளிடம் இருந்தாலும், அதற்கு வெளியிலுள்ள பன்முக முகமைகள், நிறுவனங்கள், பிறரிடமிருந்து வரக்கூடிய உதவி ஆகியவை இம்முயற்சிக்கு வலுசேர்க்கும் என்பதில் ஐயமில்லை. இந்த அம்சத்தில்தான், உயர்மட்ட அதிகாரிகளின் வருகை, அதிகரிக்கும் ராஜதந்திர உறவு, பல்துறைக் கூட்டுறவு, பண்பாட்டுப் பரிமாற்றங்கள் ஆகியவை மூலம் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ள இந்திய-ஆப்பிரிக்க உறவு இந்திய ஆப்பிரிக்கக் கூட்டு, இதுவரை கண்டிராத இந்தப் பெருந்தொற்று நெருக்கடியின்போது பேருதவியாக இருக்கக்கூடும்.
கோவிட்-19 நிவாரண நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கேற்பது, சமமாக அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கு முயற்சி எடுப்பது ஆகியவை இணைந்து செய்யப்பட வேண்டிய செயல்களில் முன்னுரிமை அளிக்க வேண்டியவை. இதையடுத்து, ஆப்பிரிக்காவின் சுகாதாரக் கட்டமைப்பைப் முழுமையாக வலுவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்திய-ஆப்பிரிக்க சுகாதாரக் கூட்டுறவானது பன்முகம் கொண்டது, விரிவானது, தேசிய, மாநில, துணைதேசிய அமைப்புகளை உள்ளடக்கி ஆப்பிரிக்காவின் நிறுவனம் சார்ந்த திறன்களையும் தனிநபர் திறன்களையும் மேம்படுத்தும் முயற்சியில் இந்தக் கூட்டுறவு ஈடுபட்டுவருகிறது. விலை குறைந்த பொதுவான மருந்துகளை ஏற்றுமதி செய்தல், சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்குதல், உதவி, தொழில்நுட்ப உதவி, மருத்துவ சிகிச்சைக்காகப் பயணம் செய்பவர்களைக் கவனித்துக்கொள்ளுதல் ஆகியவை இவற்றில் அடங்கும்.
“உலகின் மருந்தக”மாக விளங்கும் இந்தியா ஹைட்ராக்ஸிக்ளோரோக்வின் உள்ளிட்ட சில மருந்துகளை 25க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது. மலிவு விலையில் கோவிட்-19 தடுப்பூசிகளையும் இப்பிராந்தியத்துக்கு அனுப்புவதில் இந்தியா முக்கியப் பங்காற்ற இயலும். செரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா (SII) உள்ளிட்ட பலர் தடுப்பூசி தயாரித்து வரும் இவ்வேளையில் பாரத் பயோடெக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ICMR) கூட்டாகத் தயாரித்துவரும் கோவாக்ஸின் உள்ளிட்ட தடுப்பூசிகளும் ஜூடஸ் கடிலாவின் ZyCoV-D தடுப்பூசியும் மலிவு விலையில் நடுத்தர, குறைந்த வருமானமுள்ள மக்கள் உள்ள நாடுகளில் கிடைக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) உதவியுடன் நடக்கும் கோவாக்ஸ் மருந்து வழங்கும் முன்னெடுப்புகளுக்கான மருந்துகளைத் தருவதாக செரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா கூறியுள்ளது; இந்த இன்ஸ்டிட்யூட்டுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி அடுத்த 2 மாதங்களில் 1.5 மில்லியன் தடுப்பூசி மருந்து டோஸ்கள் வந்துசேரும் என்று தென்னாப்பிரிக்கச் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது. மருந்துகள் சப்ளை செய்வதுடன் ஆப்பிரிக்க நாடுகளின் மருந்து தயாரிக்கும் திறனை மேம்படுத்துவதிலும் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பங்காற்ற இயலும். பிராந்தியத்தின் பெரும்பாலான நாடுகள் இந்திய மருந்து நிறுவனங்களைப் பெருமளவில் சார்ந்திருக்கின்றன. கென்யா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் நிலவும் முதலீட்டுச் சூழலால் பல இந்திய நிறுவனங்கள் ஈர்க்கப்பட்டு இந்த நாடுகளின் நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுகின்றன. இந்திய நிறுவனங்கள் இந்நாடுகளில் வெற்றி அடைந்துள்ள பின்னணியில் சிக்கலான காப்புரிமை விவகாரங்களைக் கையாள்வதில் உதவுதல் உள்ளிட்ட தொழில்துறையின் செய்முறைகளைக் கற்றுத்தருதல், இந்தப் பிராந்தியத்தில் ஏற்கனவே துடிப்புடன் இயங்கிவரும் அமைப்புகளுடன் கூட்டுறவுகளை அமைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 2007ஆம் ஆண்டு உருவான தொழில் திட்டமான ‘ஆப்பிரிக்காவுக்கான மருந்து உற்பத்தித் திட்டம்’ கூறுவது போல் ஆப்பிரிக்காவில் மருந்து உற்பத்தித் தளத்தை ஏற்படுத்தினால் அது ஆப்பிரிக்காவின் ஏற்றுமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, மருந்து கிடைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். மருந்துகள் கிடைக்கச்செய்தல், மருந்துகளின் தரம், கட்டுப்படியாகக்கூடிய விலை ஆகியவற்றையும் உறுதிசெய்யும்.
அதேபோல், ஜனவரி 01, 2021 அன்று செயல்படத் துவங்கிய ஆப்பிரிக்க கண்ட சுதந்திர வர்த்தக மண்டலமானது (AfCTA) முதலீட்டாளர்களுக்குக் குந்தகமாக இருக்கும் சிதறுண்ட சந்தைகளால் எழும் சவால்களை சமாளித்து இப்பிராந்தியத்தில் மருந்து உற்பத்தியையும் மேம்படுத்தும். இன்று 1.3 மில்லியன் மக்கள்தொகைக்கான (2050இல் 2.2 பில்லியனாகும்) ஒரு சந்தையை உருவாக்குவதன் மூலம் சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கான பெருமளவிலான வர்த்தகத்தை உற்பத்தியாளர்களுக்கு அளிக்க இயலும். அத்துடன், வரும் பல தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பை அளித்து, திறன் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றங்களுக்கு வழிவகுத்து, இன்று நிலவும் அறிவுசார் இடைவெளியையும் நிரப்ப உதவும். இந்த நாடுகள் அந்நிய முதலீட்டாளர்களுக்குத் தரும் ஊக்கங்களாலும் உள்ளூர் தொழில் துறையினருடன் ஏற்படும் கூட்டணியாலும் இந்தியத் தொழில்துறையும் ஆதாயம் பெறும். மருந்து உற்பத்தி செய்வதைத் தாண்டி அதைச் சார்ந்த தொழில்களான கச்சாப்பொருள்களைக் கையாளுதல், அனுப்ப வேண்டிய பொருள்களை முறையாகக் கட்டி அனுப்புவது ஆகியவற்றாலும் இந்தியத் தொழில் முனைவோர்கள் ஆதாயம் பெறலாம். மேலும், இந்தியத் தனியார் சுகாதாரத் துறை நிறுவனங்கள் ஏற்கனவே ஆப்பிரிக்காவில் காலூன்றியுள்ளது. சுகாதாரச் சூழலைக் கட்டமைத்தல், முதலீட்டை அதிகரித்தல், நாடுகளுக்கிடையேயான கூட்டணியை உருவாக்குதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்தியச் சுகாதாரக் கூட்டமைப்புக்கும் (NATHEALTH) ஆப்பிரிக்கச் சுகாதாரக் கூட்டமைப்புக்குமிடையே (AHF) அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் சுகாதாரத் துறையில் இரு நாடுகளுக்கிடையிலான வலுவான கூட்டணி தரக்கூடிய வணிக வாய்ப்புகளை வாய்ப்புகளை இனம்கண்டு அங்கீகரிக்கிறது.
சுகாதாரத் துறையில் இந்திய-ஆப்பிரிக்கக் கூட்டுறவை விரிவாக்குவதற்கான உதவிகளைச் செய்துதரும் பங்கை இந்திய அரசு ஆற்ற வேண்டும். மருத்துவத் தொழில்முறை அலுவலர்கள் அடங்கிய பணிக்குழுக்களை உருவாக்கி, ஆப்பிரிக்க மருத்துவத் தொழில்முறை வல்லுநர்களுடன் காணொளி மூலம் அல்லது தொலைபேசி மூலம் கலந்துரையாடல்களை ஏற்பாடுசெய்ய வேண்டும். பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது, தடுப்பூசிகளை அனுப்புவது முதலானவை தொடர்பான அனுபவங்களையும் பாடங்களையும் இதன் மூலம் பகிர்ந்துகொள்ளலாம். 2019 அக்டோபரில் தொடங்கப்பட்ட E-VBAB திட்டத்தின் ஒரு பகுதியான e-ஆரோக்யபாரதி திட்டமானது இது தொடர்பாக எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை. e-வித்யாபாரதி (தொலைவழிக் கல்வி) திட்டத்தை உள்ளடக்கிய e-VBAB திட்டம் முழுக்க முழுக்க இந்திய அரசின் நிதியுதவி பெற்று நடக்கும் திட்டம். ஆப்பிரிக்கா முழுமைக்குமான இணையதள நெட்வொர்க் திட்டத்தை இது உருவாக்குவதுடன் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்கள், மருத்துவ வல்லுநர்களுடன் தொடர்புகொள்வதற்கும் வழிவகுக்கிறது. இந்தச் சேவைகளை வெளியுறவுத் துறை அமைச்சகமும் சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகமும் சென்டர் ஃபார் டெவெலெப்மென்ட் ஃபார் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் (CDAC) அமைப்புடனும் இதர பயனுரிமையாளர்களுடனும் இனைந்து வழங்குகின்றன. ஆயினும், இத்தகைய பரிவர்த்தனைகள் மேலும் வெளிப்படையாகவும் எளிதில் அணுகும்படியாகவும் (உரையாடல் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு பலரையும் சென்றடையும்படி) இருந்தால் இன்னும் உதவிகரமாக இருக்கும்.
இரு பிராந்தியங்களும் பெருந்தொற்றின் பிடியிலிருந்து மீண்டுவருவதால் இந்திய-ஆப்பிரிக்கச் சுகாதாரக் கூட்டுறவானது குறுகிய, நடுத்தர, நீண்ட கால அளவில் முக்கியமானது. ஆப்பிரிக்க சுகாதாரத் துறையின் தொழில்முறை வல்லுநர்களுக்கான நீண்டகால பயிற்சித் திட்டம் வரும் பல ஆண்டுகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும்; துணைப் பணியாளர்கள், பயிற்சி செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப அலுவலர்கள், பிற சுகாதார பயிற்சி அலுவலர்கள் ஆகியோருக்கு இந்தியாவின் முக்கிய மருத்துவக் கல்லூரிகளின் மூலம் குறிப்பான, குறுகிய காலப் பயிற்சிகளைத் தருவதும் மிகவும் முக்கியம். இரு பிராந்தியங்களின் மருத்துவத் தொழில்முறை அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கிடையிலான கூட்டுறவு, இந்திய மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சில ஆண்டுகள் கட்டாயமாகப் பணிபுரிய வேண்டும் என்னும் திட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் பணியாற்றுவதையும் உள்ளடக்குதல் முதலானவை அதிக முதலீடு தேவைப்படாத, புதுமையான திட்டங்கள். ஆப்பிரிக்கா விரைவில் மீள்வதற்காக மேலும் பலவித முயற்சி செய்ய உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட அமைப்புகளைக் கூடுதல் பங்காற்றச்செய்யும் பணியிலும் இந்தியா மேற்கொள்ளலாம். இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றால் பல்வேறு குழப்பங்கள் விளைந்துள்ளதால் இந்தியாவில் செய்ய வேண்டிய வேலைகளே நிறைய உள்ளன என்ற வாதத்தைச் சிலர் முன்வைக்கக்கூடும். எனினும், நெருக்கடியான இந்தத் தருணத்தில் ஆப்பிரிக்காவுடன் இணைந்து பணிபுரிந்தால் அது இந்திய-ஆப்பிரிக்க வரலாற்று ரீதியான வளமான ஒற்றுமைக்கு மேலும் மதிப்புக் கூட்டுவதாக அமையும்.