1998ஆம் ஆண்டில், ஜப்பான் இந்தியாவின் அணுசக்தி சோதனைகளைக் கடுமையாக விமர்சித்தது. கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இந்தியாவும் ஜப்பானும் 1952 இல் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்டபோதிலும், பனிப்போருக்குப் பிந்தைய காலத்தில்தான் உறவு நெருக்கமானது. வளர்ந்துவந்த உறவுகளை இந்திய அணுசக்திச் சோதனைகள் மிக மோசமாக பாதித்தன.அதன் பிறகு பல நிகழ்வுகள் அரங்கேறிவிட்டன. 2000ஆம் ஆண்டில் அப்போதைய ஜப்பானிய பிரதமர் யோஷிரோ மோரியின் இந்திய விஜயத்திற்குப் பிறகு இருதரப்பு உறவுகள் அதிகரித்தன.
இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஜனவரியில் இந்திய-ஜப்பான் வீர் கார்டியன் 2023 விமானப் போர்ப் பயிற்சிகள் நடைபெற்றன. இத்தகைய பயிற்சி நடப்பது இரு நாடுகளுக்கும் இதுவே முதல் முறையாகும். 2019ஆம் ஆண்டில், இந்திய மற்றும் ஜப்பானிய விமானப் படைகள் இந்தியாவில் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டன. ஆனால் அந்தப் பயிற்சி விமானங்களின் நடமாட்டம், போர் வியூகம் ஆகியவற்றில் மட்டுமே இருந்தது; போரில் அல்ல. தற்போதைய பயிற்சியில், இந்திய விமானப் படை (IAF) நான்கு Su-30MKI போர் விமானங்களையும், ஒரு IL-78 மிட் ஏர் எரிபொருள் நிரப்பும் கருவியையும், 150 பணியாளர்களைக் கொண்ட ஒரு குழுவையும் களமிறக்கியது. ஜப்பான் விமானத் தற்காப்புப் படை (JASDF) நான்கு F-15 விமானங்களையும் நான்கு F-2 போர் விமானங்களையும் ஈடுபடுத்தியது. "பரஸ்பரப் புரிதலை ஊக்குவிப்பதற்கும் விமானப் படைகளுக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் JASDFஇன் போர் வியூகத் திறன்களை மேம்படுத்துவதற்கும்" இந்தப் பயிற்சிகள் நடந்ததாக AJASDF வெளியிட்ட அறிக்கை (JASDF release) குறிப்பிட்டது.
ஜப்பானுக்கு இதில் என்ன கிடைக்கும்?
முதலாவதாக, ஜப்பானைப் பொறுத்தவரை, இந்தப் பயிற்சிகள் மேம்பட்ட நம்பிக்கையைக் குறிப்பதாக இருந்தன. ஏனெனில் கடந்த காலத்தில் அது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகியவற்றுடன் கூட்டு வான்வெளிப் போர்ப் பயிற்சிகளை நடத்தியிருக்கிறது (இந்த நாடுகள் மேற்கத்தியக் கூட்டணியில் அங்கம் வகிப்பவை; இந்தியாவைப் போலல்லாமல் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகள்.)
இரண்டாவதாக, இந்தப் பயிற்சிகள், ஜே.எஸ்.டி.எஃப்.-க்கு, ரஷ்யாவில் தயாரான, இந்திய தற்போது பயன்படுத்தும் SU-30 MKI போர் விமானத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை அளித்தன. ரஷியாவில் உருவான ஏராளமானமான போர் விமானங்கள் சீனாவில் பயன்பாட்டில் உள்ளன. எனவே, இந்தப் பயிற்சிகளுக்கு இந்தியா கொண்டுவந்த SU-30MKI விமானங்கள் அது இதற்கு முன்பு பயன்படுத்திய Su-30MKK, Su-30MK2, Su-35, J-11, J-15, J-16 (இவை அனைத்தும் ரஷ்ய Su-27) ஆகிய விமானங்களிலிருந்து வேறுபட்டவை. என்பதை சீன அரசு அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.
மூன்றாவதாக, ஜப்பான் ரஷ்யா, சீனா, வட கொரியா போன்ற நாடுகளின் சவால்களை எதிர்கொள்கிறது. இந்தியாவுடனான உறவு மேம்பட்டால் இந்த நாடுகளால் எழும் அச்சுறுத்தல்களில் ஜப்பான் கவனம் செலுத்த முடியும். ஜப்பான் அண்மையில் புதிய தேசியப் பாதுகாப்பு வியூகத்தை வெளியிட்டது. 2027ஆம் ஆண்டிற்குள் பாதுகாப்புச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக அதிகரிப்பதே அந்த வியூகத்தின் இலக்கு. 2023 நிதியாண்டில், ஜப்பானின் பாதுகாப்புச் செலவு 6.8 டிரில்லியன் யென்களாக உயரும். இது கடந்த ஆண்டைவிட 1.4 டிரில்லியன் யென் அதிகம்.
நான்காவதாக, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்த அதன் சுதந்திரமான, திறந்த இந்தோ-பசிபிக் கண்ணோட்டத்தில் இந்தியா முக்கியமான பங்காளியாக உள்ளது. ஜப்பான் தற்காப்புப் படை (JSDF) ஜிபூட்டியில் ஒரு தளத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் இருப்பிடம் இப்பகுதியில் ஜப்பானியத் திட்டங்களுக்கு முக்கியமானதாக அமைகிறது. 2020 செப்டம்பரில் இந்தியாவும் ஜப்பானும் கையகப்படுத்துதல் மற்றும் இருதரப்புச் சேவை ஒப்பந்தத்தில் (ACSA) கையெழுத்திட்டன, இது "ஜப்பானின் தற்காப்புப் படைகளுக்கும் இந்திய ஆயுதப் படைகளுக்கும் இடையே விநியோகங்களையும் சேவைகளையும் சீராகவும் விரைவாகவும் ஆக்க உதவு"வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். இந்த ஒப்பந்தம் ஜப்பானின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவுடன் இந்தியா கையெழுத்திட்ட லாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்சேஞ்ச் மெமோராண்டம் ஆஃப் அக்ரீமென்ட் (LEMOA) போன்ற ஒப்பந்தங்களுடன் ஒத்துப்போகிறது.
இதனால் இந்தியாவுக்கு என்ன பலன்?
முதலாவதாக, இந்தப் பயிற்சிகள் இந்தியாவிற்குத் தன் எல்லைக்கு அப்பால் தன்னுடைய பலத்தை வெளிப்படுத்தும் திறனை அளித்தன. இந்தியா நான்கு தரப்பினருக்கிடையிலான பாதுகாப்பு சார்ந்த உரையாடலில் பங்கு பெற்றுள்ளது. சீனாவுடன் நீண்ட காலமாக அதற்கு எல்லைத் தகராறு உள்ளது. 2020இல் இந்திய, சீனப் படைகள் இமயமலையின் பனிச் சிகரங்களில் மோதிக்கொண்டன. இந்த மோதலில் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இரு தரப்பினருக்குமிடையே முதல் உயிரிழப்புகள் ஏற்பட்டன. "சீனாவைக் கட்டுப்படுத்துபதற்கான தன்னுடைய இந்தோ-பசிபிக் வியூகத்தில் இணைந்துகொள்ளும்படி அமெரிக்கா ஜப்பான், இந்தியா ஆகிய இரு நாடுகளையும் கேட்டுக்கொள்கிறது. ஜப்பான் தைவான் பிரச்சினையில் இராணுவ ரீதியாகத் தலையிடத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவுக்குச் சீனாவுடன் எல்லைப் பிரச்சினைகள் உள்ளன" என்று வீர் கார்டியன் பயிற்சிகள் பற்றி குளோபல் டைம்ஸ் எழுதியது.
இரண்டாவதாக, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் மலபார் கடற்படைப் பயிற்சியில் பங்குபெற்றன. இந்தியக் கடற்படை ஏற்பாட்டில் நடக்கும் பல நாடுகள் கலந்துகொள்ளும் பயிற்சியில் (MILAN) 2022இல் முதன்முறையாக ஜப்பானும் பங்கேற்றது.
மூன்றாவதாக, வீர் கார்டியன் 2023 பயிற்சி இந்தியா, ஜப்பான் இடையே அனைத்து முனைகளிலும் முழு அளவிலான ஒத்துழைப்பின் உச்சத்தைக் குறிக்கிறது. இரு நாட்டுக் கடற்படைகளும் இணைந்து ஜிமெக்ஸ் (JIMEX) என்ற கூட்டுப் பயிற்சியையும், இந்திய ராணுவமும் ஜப்பான் தரைத் தற்காப்புப் படையும் (JGSDF) இணைந்து தர்மா கார்டியன் பயிற்சியையும் நடத்திவருகின்றன.
நான்காவதாக, உக்ரைனுக்குச் செல்லும் வழியில் இந்தியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையரின் (UNHCR) கிடங்கிலிருந்து நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல ஜப்பானியத் தற்காப்புப் படை (SDF) விமானத்திற்கு இந்தியா அனுமதி வழங்கவில்லை என்று கூறப்பட்ட நிலையிலிருந்து பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை இது குறிக்கிறது. ரஷ்யாவுடனான தன்னுடைய நெருங்கிய உறவுகளைச் சீர்குலைக்க இந்தியா விரும்பவில்லை என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம் (பின்னர் அதே பொருட்களை எடுத்துச்செல்ல ஜப்பானிய வணிக விமானத்தை இந்தியா அனுமதித்தது).
காத்திருக்கும் சவால்கள்
ஜப்பான்-இந்தியா பாதுகாப்பு உறவுகள் விஷயத்தில் மேலும் பல சவால்கள் உள்ளன. ஷின்மேவா யுஎஸ்-2ஐ என்னும் கடல்சார் உளவு விமானத்தை இந்தியாவிற்கு ஜப்பான் வழங்குவதற்காக முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் இரு நாடுகளிலும் மிக உயர்ந்த மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையிலும் அது இன்னமும் நிறைவேறவில்லை. தவிர, உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பிற்குப் பிறகு ஜப்பான் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக நிற்கிறது. இந்தியாவோ ரஷ்யாவை வெளிப்படையாக விமர்சிப்பதைத் தவிர்த்தது; ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் எரிபொருளை வாங்கிவருகிறது.
சீனாவுடனான உறவை எவ்வாறு கையாள்வது என்பதில் ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. சீனாவுடன் இந்தியாவுக்கு நில எல்லைத் தகராறு உள்ளது. ஜப்பானுக்குக் கடல்சார் தகராறு உள்ளது. எனவே, இந்தியாவின் கவனம் நிலத்தில் இருக்க, ஜப்பானின் கவனமோ கடல் பகுதியில் உள்ளது. தவிர, இந்தியாவும் சீனாவும் 1962இல் போரில் ஈடுபட்டன. ஜப்பான்-சீனா உறவில் இத்தகைய அம்சம் இல்லை. வடகொரியா மீது சீனாவின் செல்வாக்கு உள்ளது. எனவே, வட கொரியவின் சிக்கலுக்குத் தீர்வுகாண்பதில் சீனாவுக்கும் பங்கு உள்ளது. எனவே, ஜப்பான் சீனாவுடன் நேருக்கு நேர் மோதுவது குறித்து எச்சரிக்கையாக உள்ளது. இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் சீனாவுக்குக் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இல்லை.
இவை தவிர, ஜப்பானும் இந்தியாவும் அதிகாரபூர்வமாக நட்பு நாடுகள் அல்ல. சோவியத் யூனியன் சிதறுண்டுபோகும்வரை (பனிப்போர் முடிவடையும்வரை) இவ்விரு நாடுகளும் வெவ்வேறு முகாம்களில் இருந்தன. ஜப்பான் அமெரிக்காவுக்கும் பிற மேற்கத்திய நாடுகளுக்கும் உறுதியாக ஆதரவு தெரிவிக்கிறது. இந்தியாவோ வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் அணிசேராக் கொள்கையையும் அண்மைக் காலத்தில் பன்முக அணிகள் என்னும் கொள்கையையும் விரும்புகிறது. இந்தியா இன்றளவிலும் ரஷ்யாவுடன் நெருக்கமான இராணுவ உறவுகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னே செல்லும் வழி
பனிப்போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு அபரிமிதமாக அதிகரித்துள்ளது. இந்த இரு நாடுகளும் சீனாவின் தலைமையிலான பெல்ட் அண்ட் ரோடு (BRI) என்னும் உள்கட்டமைப்புத் திட்டத்தில் சேரவில்லை. உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான மாற்று மாதிரியை உலகிற்கு வழங்க இந்தியாவும் ஜப்பானும் முயற்சிக்கின்றன. மேம்பட்ட உலகை மீண்டும் கட்டமைப்பதற்கான (Build Back Better World (B3W) திட்டத்தில் ஜப்பான் இதர G7 நாடுகளுடன் இணைந்துள்ளது. "வளரும் நாடுகளில் $40+ டிரில்லியன் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் தேவைகளுக்கு உதவிபுரிவதற்காக பெரிய ஜனநாயக நாடுகளின் தலைமையில் ஒரு கூட்டாண்மை அமைந்துள்ளது. இது விழுமியங்களின் அடிப்படையில், உயர்ந்த தரமும் வெளிப்படைத்தன்மையும் கொண்டுள்ளது.”
ராணுவத் தேவைகளுக்கான உற்பத்திகளை வாங்குவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. டோக்கியோவில் இந்திய, ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையே கடந்த முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது (last 2+2 talks in Tokyo) இந்தியப் பாதுகாப்பு அமைச்சர், "இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிய ஜப்பானிய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்புவிடுத்தார்.” இந்திய-ஜப்பான் வீர் கார்டியன் பயிற்சிகள் 2023 வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பது 1998இலிருந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய-ஜப்பான் பாதுகாப்பு உறவுகள் முழுச் சுற்று வந்திருப்பதைக் காட்டுகிறது. காலம் எல்லாவற்றையும் சமனப்படுத்திவிடும் என்பதற்கான சான்று இது.