உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளைப் போலவே அமெரிக்காவும் இந்தியாவும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில் சிக்கிக்கொண்டன. நியூ யார்க் போன்ற நகரங்கள் கடந்த ஆண்டில் மோசமான பாதிப்புக்கு உள்ளாயின. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அபாயகரமான இரண்டாம் அலை இந்தியாவைத் தாக்கியது. நாட்டின் தலைநகரம் தில்லி உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவித்தன. ஒரு கட்டத்தில் ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாயினர்.
அண்மையில் அமெரிக்காவும் இந்தியாவும் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் கூட்டு நடவடிக்கைகளை அதிகரித்துக்கொண்டன. இது குறிப்பிடத்தக்க நிகழ்வு. ஏனென்றால் ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு இரு நாட்டின் அரசுகளுக்கும் இடையிலான உறவு சீர்குலையும் எனப் பலர் கருதியிருந்தார்க்ள். குறிப்பாக, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இருந்த நெருங்கிய நட்பின் பின்னணியில் இந்த ஐயம் நிலவியது. நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
கூட்டு நடவடிக்கையின் நீண்ட வரலாறு
மருத்துவத் துறையில் இந்த இரு நாடுகளிடையிலான உறவு நீண்ட காலமாகவே நிலவிவருகிறது. USAID, HHS, CDC, FDA, NIH போன்ற அமைப்புகளைச் சேர்ந்த அமெரிக்காவின் பொதுச் சுகாதார நிபுணர்கள் “இந்தியாவின் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பிரிவினரின் உடல் நலத்தையும் மக்களின் நலவாழ்வையும் மேம்படுத்துவதில் இந்திய அதிகாரிகளுடன் 70 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றிவருகிறார்கள்.” அமெரிக்காவின் NIH, இந்திய உயிரி தொழில்நுட்பத் துறை, இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் 33 ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டுவரும் இந்திய – அமெரிக்கத் தடுப்பூசிச் செயல்திட்டம் (VAP or the Indo-US Vaccine Action Program) போன்ற திட்டங்களும் உள்ளன.
“கோவிட்-19 போன்ற நோய்ப் பரவல்களைத் தடுக்கவும் கண்டறியவும் எதிர்வினைவதற்குமான உலகளாவிய முயற்சிகளுக்குத் துணையாக, தடுத்தல், முன்கூட்டியே கண்டறிதல், நோய்ப்பரவலுக்கு விரைவாக எதிர்வினை ஆற்றுதல் ஆகியவற்றில் தங்களுடைய வெற்றிகரமான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதில் பிரதமர் மோடியும் அதிபர் ட்ரம்பும் பற்றுறுதி கொண்டிருக்கிறார்கள்” என்று 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வந்தபோது இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டது. ஆனால், கள யதார்த்தம் மிகவும் மாறுபட்டதாக இருந்தது. இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் தூங்கிக்கொண்டிருந்தன.
இரண்டாம் அலை இந்தியாவைத் தாக்குவதற்கு முன்பு இந்தியா “தடுப்பூசித் தோழமை (“Vaccine Maitri”)” திட்டத்தின் கீழ் பிற நாடுகளுக்குத் தடுப்பூசிகளை அனுப்பிக்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல நாடுகள் இதனால் பலனடைந்தன. எனினும் இந்தியாவுக்குத் தடுப்பூசித் தட்டுப்பாடு ஏற்பட்டபோது இந்தத் திட்டம் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாயிற்று.
2021, ஏப்ரல் மாதம் இந்தியா முழுவதிலுமுள்ள மருத்துவமனைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறிக்கொண்டிருந்தபோது “இந்தியாவில் உள்ள எமது கூட்டாளிகளுக்கு 100 மில்லியன் டாலருக்கும் மேற்பட்ட மதிப்புள்ள ஆக்சிஜனை வரும் நாட்களில் வழங்க” அமெரிக்கா உறுதிபூண்டது. இத்துடன், அரசுக்கும் அரசுக்கும் இடையிலான வழிகளைத் தவிர, குவாட் (Quad or the Quadrilateral Security Dialogue) முதலான அமைப்புகள் மூலம் கொரோனாவைரஸ் விஷயத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே ஒத்துழைப்பு நிலவுகிறது. நான்கு நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பில் ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் உள்ளன.
2021, மார்ச் மாதம் குவாட் நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக்கொண்டு, கொரோனோவைரஸ் விஷயத்தில் இணைந்து பணிபுரிய ஒப்புக்கொண்டனர். “நம்முடைய சொந்த மக்களின் உடல் நலனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதில் நாம் வலுவான பற்றுறுதி கொண்டிருக்கும் அதே வேளையில் பெருந்தொற்று தொடர்ந்து பரவிவரும் நிலையில் நாம் யாருமே பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதையும் உணர்ந்திருக்கிறோம். எனவே இந்தோ-பசிபிக் பகுதிகள் அனைத்திற்கும் சமமான முறையில் தடுப்பூசி கிடைக்கும் வழிகளை வலுப்படுத்துவதற்காக நாம் ஒருங்கிணைகிறோம். இதற்காக உலக சுகாதார அமைப்பு, கோவேக்ஸ் முதலான பலதரப்பு அமைப்புகளுடன் நெருங்கிய முறையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்று அறிவித்தனர். ஆனால், பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்த குவாட் நாடுகளே சிக்கலில் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
இந்த முக்கியமான கட்டத்தில் அமெரிக்காவின் தனியார் துறையும் இதில் ஈடுபட்டது. போயிங், மாஸ்டர்கார்ட் ஆகிய நிறுவனங்கள் தலா 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிதியுதவித் திட்டங்களை அறிவித்தன. கூகுள் நிறுவனம் 18 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை அறிவித்தது. பெங்களூருவில் போயிங் நிதியுதவியில் உருவானது போன்ற கோவிட் மருத்துவமனைகளை அமைக்க இந்த உதவிகள் பயன்பட்டன. அமேசான் நிறுவனம் இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளுக்கும் இதர கோவிட்-19 பராமரிப்பு மையங்களுக்கும் 5 மில்லியன் டாலர் மதிப்புள்ள முக்கியமான மருத்துவ உபகரணங்களை அனுப்பியது.
அமெரிக்காவின் பெருநிறுவனத் துறையும் கைகொடுத்தது. அமெரிக்க சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ், அமெரிக்க இந்திய பிசினஸ் கவுன்சில், அமெரிக்க இந்திய ஸ்ட்ராட்டஜிக் பார்ட்னர்ஷிப் ஃபோரம், ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட்டன. கோவிட்-19க்கு எதிரான போரில் “குறிப்பாக இந்தியாவிற்கும் பொதுவாக இதர நாடுகளுக்கும் உதவுவதற்காக உலகளாவிய பணிக் குழுவை அமைப்பதற்காக உயர் மட்டத்திலுள்ள் 40 சிஇஓக்களை ஒன்றிணைப்பது” என்னும் இலக்கை வைத்துக்கொண்டு இவை செயல்பட்டன. ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், சோதனைக் கருவிகள் உள்ளிட்ட “அதிமுக்கியமான மருத்துவப் பொருள்கள், தடுப்பூசிகள், ஆக்சிஜன், இதர உயிர் காக்கும் உதவிகள்” ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்குவதே இந்த அமைப்புகளின் முக்கியக் குறிக்கோள்.
வேலைகள் நடந்து முடிந்தனவா?
கொரோனோவைரஸைப் பொருத்தவரையில் இந்திய அமெரிக்கக் கூட்டு நடவடிக்கை என்பது மிகவும் தாமதமாக நடந்த மிகக் குறைவான செயல்பாடு என்பது தெளிவு. இதில் பல்வேறு தடைக்கற்கள் உருவாயின. அமெரிக்காவில் தயாராகி இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட தடுப்பூசிகளின் முதல் சிக்கல் காப்பீடு உறுதிமொழி வழங்குதல். ஃபீஸர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்கள் இது குறித்து இந்திய அரசுடன் பேசிவருகின்றன. இன்றுவரையிலும் தீர்வு கிடைக்கவில்லை. இரண்டாவதாக, இந்திய, அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு இன்னமும் உருப்பெறவில்லை. இத்தனைக்கும் இந்தத் துறையில் கூட்டுச் செயல்பாட்டுக்கான வாய்ப்பு அபரிமிதமாக உள்ளது. இந்திய மருந்து நிறுவனங்கள் அளவில் பெரியவை. அமெரிக்க மருந்து நிறுவனங்களிடம் சிறந்த தொழில்நுட்பம் உள்ளது. இன்னமும் தடுப்பூசி கிடைக்கப்பெறாத சில ஆப்பிரிக்க நாடுகள் போன்ற சில நாடுகளுக்காக மலிவு விலையில் உற்பத்தி செய்ய இந்தக் கூட்டுறவைப் பயன்படுத்தியிருக்க முடியும். மூன்றாவதாக, கொரோனாவைரஸ் தடுப்பூசிகளைத் தயாரிக்க இந்தியாவுக்குத் தேவைப்படும் கச்சாப் பொருட்களைத் தருவதற்கு பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தை முன்னிட்டு அமெரிக்கா தயங்குவது குறித்துப் பெரும் சலசலப்பு எழுந்தது. எனினும் இந்தக் கட்டுப்பாடுகள் பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டன. இந்திய மருந்து நிறுவனங்கள் பலவும் சீனாவிடமிருந்து கச்சாப் பொருள்களைப் பெற்றுவருவதும் ஒரு பிரச்சினையாக இருந்துவருகிறது. ஆனால், இந்திய, சீன நாடுகளுக்கிடையே பதற்றம் உருவானதையடுத்து இந்த நிலை மாறிவிட்டது.
எதிர்காலத்தை நோக்கி
இந்தியாவிடம் தற்போது அங்கீகரிக்கப்பட்ட நான்கு தடுப்பூசிகள் இருக்கின்றன: கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி. இவற்றுடன் சூழ்நிலையின் அவசரத்தன்மையைக் கணக்கில் கொண்டு இந்திய மருந்து நிறுவனமான சிப்லாவுக்கு மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது.
பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் மட்டுமல்லாமல் பிற நாடுகளுடனும் மேலும் ஒத்துழைப்பு ஏற்பட வேண்டியிருக்கிறது. டெல்டா, டெல்டா பிளஸ் போன்ற உருமாறிகள் தங்கள் கோர முகத்தைக் காட்டத் தொடங்கியிருக்கும் நிலையில் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டும். அமெரிக்கத் தடுப்பூசி வியூகத்திலிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் வயது வந்தோரில் 67 விழுக்காட்டினர் ஒரு முறையேனும் தடுப்பூசி பெற்றிருக்கின்றனர்.
நியூ யார்க் போன்ற நகரங்களிடமிருந்தும் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டில் மிக மோசமான நிலையில் இருந்த நியூ யார்க் இப்போது கிட்டத்தட்ட இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது. மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்னும் உத்தரவை நியூ யார்க் கண்டிப்பாக அமல்படுத்தியிருந்தது. அமெரிக்காவின் பிற மாநிலங்களைக் காட்டிலும் கூடுதலான காலத்திற்கு இங்கே வணிகங்கள் மூடப்பட்டிருந்தன. கொரோனாவைரஸைக் கையாள்வதற்கான வெற்றிகரமான நடைமுறைகளை அமல்படுத்துவதற்காகப் புது தில்லி போன்ற உள்ளூர் அரசாங்கங்கள் நியூ யார்க்குடன் இணைந்து பணிபுரியலாம். இந்தியாவில் மூன்றாவது அலை வரக்கூடும் என்று பல வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில் இந்தப் பாடங்களை விரைவில் உள்வாங்கி அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
இந்தியாவுக்கான அமெரிக்க ஆதரவு அரசியல் அரங்கின் எல்லாத் தரப்புகளிலிருந்தும் எல்லாப் பக்கங்களிலிருந்தும் வந்திருக்கிறது. இத்தகைய உதவி முன்பெல்லாம் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு மட்டுமே கிடைத்துவந்தது. இது நிச்சயம் வரவேற்கத்தக்கதுதான். ஏனென்றால் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இரு நாடுகளுக்கிடையேயான கூட்டுறவு பிற முனைகளிலும் ஒத்துழைப்பு அதிகரித்துவருவதற்கான எடுத்துக்காட்டு. எனினும் இந்த ஒத்துழைப்பு தொடங்குவதற்கு முன்பு ஏற்பட்ட கால விரயமும் உயிரிழப்புகளும் மூன்றாவது அலை பாயத் தயாராகப் பதுங்கியிருக்கும் நிலையில் எதிர்காலத்திற்கான பாடமாக அமைய வேண்டும். “ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்கும்வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லை” என்னும் கூற்றை மனதில் கொள்ள வேண்டும்.