கோவிட்-19 இரண்டாம் அலை இந்தியாவைச் சீரழித்ததுடன் அதன் மருத்துவ அமைப்பையும் உலுக்கி எடுத்துவிட்டது. உலகத் தரமான மருத்துவ வசதிகளை அதுகாறும் பெற்றுவந்த மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினருக்கும் இதே நிலைதான். மருத்துவமனைப் படுக்கைகள், ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகள் ஆகிய அடிப்படை வசதிகளும் கடும் பற்றாக்குறையில் இருந்தன. அதிகாரபூர்வமான கணக்கின்படி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். ஆனால், 30 முதல் 40 லட்சம்வரை மரணங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று அதிகாரபூர்வமற்ற கணக்குகள் கூறுகின்றன. மருத்துவ நெருக்கடியின் மீது உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டியிருந்தாலும், இரண்டாம் அலையின் விளைவாய் ஏற்பட்ட பொருளாதாரப் பேரழிவைக் கவனிப்பதும் முதல் அலைக்குப் பிறகு ஏற்பட்ட நெருக்கடியில் கிடைத்த பாடங்களைக் கற்பதும் உடனடித் தேவைகளாக உள்ளன.
மருத்துவத் தாக்கத்தைப் பொருத்தவரை கடந்த ஆண்டின் முதல் அலை ஒப்பீட்டளவில் மென்மையானது. ஆனால், பொது முடக்கமும் இதர கட்டுப்பாடு நடவடிக்கைகளும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாய் அமைந்தன. 2020 ஏப்ரல்-மே மாதங்களில் சுமார் 10 கோடித் தொழிலாளர்கள் வேலைகளை இழந்தார்கள். 2020ஆம் ஆண்டின் இறுதியில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கினாலும் ஒன்றரைக் கோடித் தொழிலாளர்கள் அப்போதும் வேலையில்லாமல் இருந்த நிலையில் தொழிலாளர் சந்தையும் குடும்பங்களின் வருமானமும் முழுவதுமாக மீளவில்லை. நெருக்கடியின் பாதிப்புகள் அந்த அளவுக்குக் கடுமையாக இருந்தன. தனிநபர் சராசரி வருமானம் 2020 பிப்ரவரியில் இருந்ததைக் காட்டிலும் 2020 அக்டோபரில் 16 விழுக்காடு குறைவாக இருந்தது.
அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 2021, மே மாதம் “2021இல் இந்தியாவில் வேலைகளின் நிலை: கோவிட்-19இன் ஓராண்டு” என்னும் அறிக்கையை வெளியிட்டது. முதல் அலை வேலைகள், வருமானம், சமமற்ற நிலை, வறுமை ஆகியவற்றில் ஏற்படுத்திய தாக்கத்தை அது ஆவணப்படுத்தியிருந்தது. முதல் அலைக்குப் பிறகு நிவாரணத்திற்காக அரசு மேற்கொண்ட கொள்கைசார் நடவடிக்கைகளின் பலன்களையும் அந்த அறிக்கை ஆய்வு செய்திருந்தது. தேசிய அளவிலான பிரதிநிதித்துவம் கொண்ட மாதாந்தரக் குழுவைக் கொண்டு குடும்பங்களின் வருமானம், வேலைவாய்ப்பு குறித்து இந்தியப் பொருளாதார கண்கணிப்பு மையம் (CMIE) நடத்ததிய கணக்கெடுப்பு, முதல் அலைக்குப் பின் செயல்படுத்தப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்த வேறு இரண்டு கணக்கெடுப்புகள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பல்கலைக்கழகத்தின் அறிக்கை பயன்படுத்துகிறது.
முதல் அலை ஆண்களின் வேலைவாய்ப்பைக் காட்டிலும் பெண்களின் வேலைவாய்ப்பில் மிகவும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேலைசெய்துகொண்டிருந்த ஆண்களில் 61 விழுக்காட்டினர் 2020இன் பொது முடக்கத்தின்போதும் அதற்குப் பிந்தைய மாதங்களிலும் தங்கள் வேலைகளை இழக்கவில்லை. 28 விழுக்காட்டினர் வேலை இழந்தாலும் அந்த ஆண்டின் இறுதிக்குள் அவர்கள் வேறு வேலைகளில் சேர்ந்துவிட்டார்கள். 7 விழுக்காட்டினருக்கு 2020 டிசம்பர்வரை வேலை கிடைக்கவில்லை (இந்த மாதம் வரையிலும்தான் புள்ளிவிவரம் இருக்கிறது). இதே பொது முடக்கத்தின்போது பெண்களில் 19 விழுக்காட்டினர் மட்டுமே வேலையில் நீடித்தார்கள். 47 விழுக்காட்டினர் நிரந்தரமாக வேலையை இழந்தார்கள். 2020 டிசம்பர் வரை அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
வரைபடம் 1: பெண்கள் வேலையை இழப்பதும் மறு வேலை கிடைக்காமல் இருப்பதும் ஆண்களைக் காட்டிலும் அதிக அளவில் இருந்தன.

ஆதாரம்: இந்தியாவில் வேலைகளின் நிலை 2021
முறைசாராப் பணிகள் கோவிட்-19இன் முதலாம் ஆண்டில் கணிசமாக அதிகரித்தன. முறைசார் சம்பளப் பணிகளில் இருந்தவர்களில் கிட்டத்தட்டப் பாதிப்பேர் 2020இன் இறுதிக்குள் சுய வேலைவாய்ப்பு (30 விழுக்காடு), அன்றாடக் கூலி (10 விழுக்காடு) அல்லது முறைசாராச் சம்பளப் பணி (9 விழுக்காடு) ஆகியவற்றுக்கு மாறிவிட்டார்கள். கடந்த ஆண்டில் வேலையிழந்தவர்களுக்கு வேளாண்மை, கட்டுமானம், சிறு வணிகம் ஆகிய துறைகள் கை கொடுத்தன. ஆனால், இரண்டாம் அலைக்குப் பிறகு மேலும் பலருக்கு இடமளிப்பதற்கான திறன் இந்தத் துறைகளில் குறையக்கூடும்.
பெருந்தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரிவினரில் வசதிக் குறைவான குடும்பங்களும் அடக்கம். வசதிக் குறைவான குடும்பங்களில் 2020 மார்ச் – அக்டோபர் மாதங்களில் ஏற்பட்ட ஒட்டுமொத்த வருமான இழப்பு கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய மாதங்களில் இருந்த வருமான இழப்பைக் காட்டிலும் அதிகம். அதிக வருமானம் கொண்ட பிரிவினரில் இந்த இழப்பு குறைவாக இருந்து பிறகு சிறிதளவு உயர்ந்தது. வருமான அளவில் கடைமட்டத்தில் உள்ள 10 விழுக்காட்டினருக்கு இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சராசரி வருமான இழப்பு ரூ. 15,700. இது இரண்டு மாத வருமானத்திற்கும் அதிகமான இழப்பு.
வரைபடம் 2: ஒப்பீட்டளவிலான வருமான இழப்பு வறுமையில் உள்ள குடும்பங்களில் அதிகம்

ஆதாரங்களும் குறிப்புகளும்: இந்தியாவில் வேலைகளின் நிலை 2021. கோவிட்-19இன் முதல் எட்டு மாதங்களில் (மார்ச்-அக்டோபர் 2020) ஒவ்வொரு பிரிவினருக்கும் இருந்த வருமானத்தை அதற்கு முந்தைய எட்டு மாதங்களின் வருமானத்தோடு ஒப்பிட்டுக் காட்டும் வரைபடம். மேலும் விவரங்களுக்கு மேற்படி அறிக்கையைக் (Appendix of the report) காணவும்.
குறைந்தபட்சக் கூலிக்கும் (கிராமப்புறங்களில் நபர் ஒருவருக்கு ரூ 107, நகர்ப்புறங்களில் ரூ. 120) குறைவாகச் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை பெருந்தொற்றின்போது கணிசமாக அதிகரித்தது. முதல் அலையின்போது இந்த எண்ணிக்கை 23 கோடி அதிகரித்தது. பெருந்தொற்று இருந்திராவிட்டால் இந்த எண்ணிக்கை 5 கோடிக்கும் மேல் குறைந்திருக்கும்.
வரைபடம் 3: பெருந்தொற்றின்போது வறுமை பெருமளவில் வளர்ந்தது

இந்த நெருக்கடியைச் சமாளிக்க உணவைக் குறைவாக எடுத்துக்கொள்வது, சொத்துக்களை விற்பது, நண்பர்கள், உறவினர்கள், கடன் வழங்கும் வணிகம் செய்வோர் ஆகியோரிடம் கடன் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை மக்கள் பின்பற்றினார்கள். கோவிட் வாழ்வாதாரம் குறித்து அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் மேற்கொண்ட தொலைபேசி ஆய்வில் பங்குகொண்டவர்களில் 90 விழுக்காட்டினர் பொது முடக்கத்தின் காரணமாகத் தாங்கள் உட்கொள்ளும் உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது என்று தெரிவித்தது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பொது முடக்கத்திற்குப் பிந்தைய ஆறு மாதங்களிலும் தாங்கள் உட்கொள்ளும் உணவின் அளவில் முன்னேற்றம் இல்லை என்று 20 விழுக்காட்டினர் தெரிவித்தது மேலும் கவலை அளிப்பதாக உள்ளது.
ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தாலும் அவை பாதிப்புக்குள்ளான மக்களில் மிகச் சிறிய பிரிவினருக்கே போய்ச் சேர்ந்தன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் கூடுதல் உணவுப் பொருட்களை வழங்குதல், ஜன்-தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ 500 வீதம் மூன்று மாதங்களுக்குப் பண உதவி தருதல் ஆகியவை முக்கியமான நிவாரண நடவடிக்கைகள். வருமானப் பிரிவில் கடைமட்டத்தில் இருக்கும் குடும்பங்களின் வருமான இழப்பு (மார்ச்-டிசம்பர் 2020 காலகட்டத்தில்) ரூ. 15,700 என்னும் நிலையில் இது மிகவும் குறைவான தொகை. அத்துடன், பணப் பரிமாற்றத் திட்டம் அதிகம் பேருக்குப் போய்ச் சேரவும் இல்லை. பெறத்தக்கவர்களில் 50 விழுக்காட்டினருக்கே இது கிடைத்தது.
குடும்பங்களில் இருந்த சேமிப்பு அல்லது சமாளிக்கும் திறனை வற்ற அடித்துவிட்ட முதல் அலையின் முடிவில் வந்துள்ளதால் இரண்டாம் அலையின் பொருளாதார அதிர்ச்சி மிகவும் கடுமையானதாக இருக்கும். ஓராண்டுக்கும் குறைவான இடைவெளியில் பொருளாதார ரீதியாக ஏற்படும் இரண்டாவது அதிர்ச்சியின் மோசமான தாக்கத்திலிருந்து குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் கூடுதலான நிவாரண நடவடிக்கைகளை அரசு அவசரமாக எடுத்தாக வேண்டும். அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழக அறிக்கை பின்வரும் அவசரமான கொள்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது: குறைந்தபட்சம் 2021 முடிவுவரை இலவச உணவுப் பொருட்கள் வினியோகத்தை விரிவுபடுத்த வேண்டும் (இது ஓரளவு செயல்படுத்தப்பட்டுள்ளது). தற்போதுள்ள இணைய உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு, பாதிப்புக்குள்ளான ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5000 பண உதவி செய்ய வேண்டும். ஊரகப் பொதுப் பணித் திட்டத்தை விரிவுபடுத்தி, இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் கூலியை அதிகரிக்க வேண்டும். மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தொடங்க வேண்டும். இந்தத் திட்டம் கூடியவரையில் பெண் ஊழியர்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.
அரசு போதிய அளவில் செயல்படத் தவறியது வறுமையைக் குறையவைத்த பல ஆண்டுக்கால முயற்சியின் முன்னேற்றத்தை ஏற்கனவே பாழடித்துவிட்டது. வறுமை அதிகரிப்புடன் சேமிப்பு, உற்பத்தித்திறன் மிகுந்த வள ஆதாரங்கள் இழப்பு ஆகியவையும் சேர்ந்து பல குடும்பங்களை மீளாத வறுமைப் பொறியில் தள்ளிவிட்டுள்ளன. உடல் சத்து, கல்வி ஆகியவற்றில் பற்றாக்குறையையும் ஏற்படுத்தியுள்ளன. அது மட்டுமல்ல; பெண்கள் பணிக்களத்திலிருந்து தொடர்ந்து வெளியேறிவருவதால் பணிக்களத்தில் பாலின இடைவெளி மேலும் மோசமான நிலையை அடைவதை நாம் காணக்கூடும். பணிக்கால அனுபவம் குறைவதால் இளைஞர்களின் வருமானம், அவர்களுடைய உற்பத்தித்திறன் ஆகியவையும் பாதிக்கப்படக்கூடும். எளிமையாகச் சொன்னால் அடிப்படையான இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதை மேலும் தாமதித்தால் நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் தற்போது எதிர்கொண்டு அல்லது அனுபவித்துவரும் கஷ்டங்கள் தொடர்வதோடு, நீண்ட கால நோக்கில் எண்ணற்ற எதிர்மறை விளைவுகளும் அலையலையாய் உருவாகும்.