பிரதமர் நரேந்திர மோடி 2014, மே மாதம் இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய தன்னுடைய முதல் உரையில் பெண்களையும் சிறுமிகளையும் வன்முறையிலிருந்து பாதுகாக்க அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கோரினார். தனது முதல் சுதந்திர தின உரையில் இந்தச் செய்தியை அவர் மீண்டும் வலியுறுத்தினார், பெற்றோர்கள் தங்கள் மகன்களை ஒழுங்குபடுத்தத் தவறிவிட்டதாக அவர் விமர்சித்தார். 2014முதல், பாரதிய ஜனதா கட்சி நடத்தும் மாநில அரசுகள் சிறப்புக் காவல் பிரிவுகள் மூலம் Street harassment எனப்படும் பொது இடங்களில் பெண்களைத் துன்புறுத்தும் செயல்களைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளன. ஏன் இந்த நடவடிக்கை?
பெண்களுக்கு எதிராகப் பொது இடங்களில் நடக்கும் துன்புறுத்தல்களின் மீது கவனம் செலுத்துவதன் மூலமாகவும், அதீதமாக அரசியல்மயமாக்கப்பட்ட காவல்துறை மூலம் அதைக் கட்டுப்படுபடுத்துவதன் மூலமாகவும், பாஜக பல அரசியல் இலக்குகளைக் குறிவைக்கிறது. முதலாவதாக நடமாட்டம், பொதுப் பாதுகாப்பு தொடர்பான பெண்களின் தீவிரமான கவலைகளைப் போக்கும் முயற்சிகளை எடுப்பதன் மூலம் கட்சி பெண் வாக்காளர்களை ஈர்க்க முனைகிறது. இரண்டாவதாக, பெண்கள் தங்கள் வீடுகளிலும் பணியிடங்களிலும் தெரிந்த ஆண்களிடமிருந்து எதிர்கொள்ளும் வன்முறையைக் கவனிப்பதற்குப் பதிலாகத் தெரியாத ஆண்களிடமிருந்து எதிர்கொள்ளும் வன்முறையில் கவனம் செலுத்துகிறது. இறுதியாக, கட்சியால் எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய நிறுவனமான காவல்துறையை இதில் ஈடுபடுத்துவதன் மூலம் பாஜக அரசியல்வாதிகளும் அக்கட்சியுடன் தொடர்புடைய அமைப்புகளும் இத்தகைய துன்புறுத்தல் நிகழ்வுகளை அடையாளம்கண்டு தண்டனைகளை மேற்பார்வையிட வகைசெய்கிறது.
பாஜகவின் புதிரான அணுகுமுறை
பொது இடங்களில் பெண்கள் மீதான துன்புறுத்தலுக்கு எதிரான பாஜகவின் தலைமையில் நடக்கும் முயற்சிகள் புதிராக உள்ளன. இந்தப் பிரச்சினையில் கட்சியின் ஆர்வம் பாலினப் பிரச்சினைகள் தொடர்பான அதன் முந்தைய அணுகுமுறைகள், அதன் கொள்கை சார்ந்த அடிப்படைகள் ஆகியவற்றின் முக்கிய அம்சங்களுடன் முரண்படுகிறது. பாஜக பாரம்பரியமாக ஆண்களுக்கான, ஆண்களின் கட்சியாகவே இருந்துவருகிறது. இது ஆண் வாக்காளர்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளது. அரசியல் பதவிகளில் ஆண்களையே அதிகம் நியமிக்கிறது. இத்தகைய ஆணாதிக்க அரசியல் அடித்தளமும் தலைமைக் கட்டமைப்பும் கொண்ட இந்தக் கட்சி பொது இடத்தில் பெண்களின் பாதுகாப்பில் அக்கறை காட்டுவது ஏன் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பொது இடங்களில் பெண்களின் உரிமைகளில் கவனம் செலுத்தும் மோடி அரசு, வீட்டில் பெண்களின் உரிமைகளை குறைத்துவிட்டது. மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, குடும்ப வன்முறைக்கு எதிராகக் குற்றவியல் தண்டனைகளை வழங்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 498A பிரிவைத் தொடர்ந்து பலவீனப்படுத்திவருகிறது. இந்தப் பிரிவைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று வாதிடும் உள்துறை அமைச்சகம், இந்தச் சட்டத்தை நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தவும், "தவறான" புகார்களுக்கான அபராதத்தை அதிகரிக்கவும் முன்மொழிந்துள்ளது. குடும்ப வன்முறைக்கு எதிராகத் தங்கள் உரிமையைக் காத்துக்கொள்ளும் முயற்சியில் பெண்கள் குறிப்பிடத்தக்க தடைகளை எதிர்கொள்கிறார்கள். நிறுவன ரீதியான பல்வேறு உதவிகள் மூலம்தான் இவ்விஷயத்தில் அவர்களால் எந்த விதமான முன்னேற்றத்தையும் அடைய முடிகிறது. குடும்ப வன்முறை பற்றிய எனது முந்தைய ஆய்வும் பிரபல வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோரின் ஆய்வுகளும் இதைத் தெளிவுபடுத்துகின்றன. இந்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள், பெண்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்னும் கற்பனையான சொல்லாடலை உறுதிப்படுத்தி, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஊக்குவித்து, புகார்களைப் பதிவு செய்வது தொடர்பான செலவுகளை மேலும் அதிகரிக்கச்செய்கின்றன. ஏற்கெனவே பயன்படுத்துவதற்குக் கடினமான உள்ள இந்தச் சட்டத்தை மேலும் கடினமானதாக இந்தத் திருத்தங்கள் ஆக்குகின்றன.
பாஜக அரசியல்வாதிகளும், பாஜகவுடன் தொடர்புகொண்ட தன்னார்வ அமைப்புகளும் வகுப்புவாதக் கலவரங்களின்போது முஸ்லிம் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். 1992 பாபர் மசூதி கலவரம், 2002இல் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடந்த கலவரம், 2013இல் ஏறத்தாழ ஐம்பது முஸ்லிம் பெண்களை இந்து ஆண்கள் கூட்டு வன்புணர்வு செய்த முசாபர்நகர் கலவரம் ஆகியவை இதில் அடங்கும். இந்த வன்முறைகளின் பெரும்பகுதி வெட்ட வெளியில் நடந்தது. இந்த இடத்தைத்தான் பாஜக தான் ஒழுங்குபடுத்துவதாகக் காட்டிக்கொள்ள முயல்கிறது.
இந்தப் பின்னணியில், பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம் (உ.பி.) ஆகிய மூன்று மாநிலங்களும் பாலியல் துன்புறுத்தலைக் கட்டுப்படுத்தச் சிறப்புக் காவல் பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. துன்புறுத்தல் என்பது பொது இடப் பிரச்சினை என வரையறுக்கப்படுகிறது. ரோமியோ எதிர்ப்புப் படைகளும் (உ.பி., குஜராத்), ஆபரேஷன் துர்கா படையும் (ஹரியானா) பூங்காக்களிலும் போக்குவரத்து மையங்களிலும் ரோந்துப் பணிகளை மேற்கொள்கின்றன. "பெண்களைத் துன்புறுத்துபவர்”களையும் "ரோமியோ”க்களையும் - பெண்களைப் பின்தொடர்ந்து சென்று, அவர்களுக்குத் தொல்லை அளித்துப் பாலியல் ரீதியாகப் பேசி அவர்களை இழிவுபடுத்தும் ஆண்கள் - கைது செய்து அபராதம் விதிக்கின்றன. இந்தப் படைகள் 2013ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தைப் (POSH) பயன்படுத்துவதில்லை.
உ.பி.யிலிருந்து கிடைக்கும் விவரங்கள் களத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பற்றிய பார்வையை வழங்குகின்றன. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் 2017ஆம் ஆண்டில் முதன்முதலில் ரோமியோக்களுக்கு எதிரான படைகளைப் (Anti-Romeo squads) பற்றிக் குறிப்பிட்டபோது, அவரது தேர்தல் பிரச்சார அறிக்கை முஸ்லிம் ஆண்கள் இந்துப் பெண்களுக்கு ஏற்படுத்தும் ஆபத்துகளைப் பற்றி அதிகம் பேசியது. மார்ச் 2017முதல் டிசம்பர் 2020வரை, ரோமியோ எதிர்ப்புப் படைகள் 14,454 பேரைக் கைது செய்துள்ளன. இந்தப் படையினர் சட்டத்திற்குப் புறம்பான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களைப் பணம் வாங்கிக்கொண்டு விடுதலை செய்திருக்கிறார்கள். பொது இடங்களில் தோப்புக்கரணம் போடச்செய்தல், தலையை மழித்தல், முகத்தில் கரி பூசுதல் போன்றவற்றுக்கு உட்படுத்தி அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.
அதிகாரிகள் "ரோமியோக்களை" அவர்களின் உடைத் தேர்வுகள் மூலம் அடையாளம் காண்கிறார்கள்: ஆண்கள் "காலா சாஷ்மா" (கறுப்புக் குளிர்க் கண்ணாடி) அணிந்திருப்பார்கள், சட்டையின் "முதல் மூன்று பொத்தான்களை அவிழ்த்துவிட்டிருப்பார்கள்." ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) போன்ற பாஜகவுடன் தொடர்புகொண்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் சட்டத்திற்குப் புறம்பான தண்டனைகளைச் செயல்படுத்துவதில் காவல் துறையுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறப்படுகிறது. பாஜகவின் அரசியல் எதிரிகளும் ஒடுக்கப்பட்ட சமூகக் குழுக்களும் (முஸ்லிம்கள், தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்கள்) இந்த நடவடிக்கைகளில் குறிவைக்கப்படுவதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். தன்பாலின ஈர்ப்பாளர்கள், மண உறவுக்கு வெளியே உறவு கொள்பவர்கள், சாதி, மத எல்லைகளை மீறி உறவு கொள்ளும் ஆண், பெண்கள் ஆகியோருக்கு எதிராக ஒழுக்கக் காவலர்களாக இவர்கள் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
துன்புறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கையின் அரசியல்
பொதுவெளிகளில் நடக்கும் துன்புறுத்தல்களைக் காவல் துறை மூலம் கட்டுப்படுத்தும் முயற்சியில் பாஜக ஏன் ஈடுபடுகிறது என்னும் கேள்வியை மீண்டும் எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதலாவதாக, பொதுவெளிகளில் நடக்கும் துன்புறுத்தல் என்பது இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை. அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கட்சியாக பாஜக தன்னைக் கட்டமைத்துக்கொள்கிறது. பெண்கள் தெருவில் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள் என்பதை இந்தியாவின் முக்கியமான பெருநகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. கொல்கத்தாவில் உள்ள பெண்கள் இரவில் வெளியே செல்வதையும் காலியான தெருக்களில் செல்வதையும் தவிர்க்கிறார்கள். மும்பையில் 91 சதவீதப் பெண்கள் தெருவில் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள். தில்லியில் 95 சதவீதப் பெண்கள் துன்புறுத்தல் பற்றிய கவலைகளால் தங்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். பெண்களுக்கு ஏற்படும் அதிக அளவிலான பாதிப்புகளிலிருந்தே இத்தகைய கவலைகள் உருவாகின்றன. தில்லியில் பதிலளித்தவர்களில் 40 சதவீதம் பேர் உடல்ரீதியாக அல்லது வாய்மொழியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறியுள்ளனர், மும்பையில் 80 சதவீதம் பேருக்கு மேல் அவ்வாறு கூறியிருக்கிறார்கள்.
2012ஆம் ஆண்டு தில்லியில் ஜோதி சிங் பாண்டே என்பவர் ஒரு வேனில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாகிக் கொலை செய்யப்பட்டதிலிருந்து சமூக ஆர்வலர்கள் பொது இடங்களைப் பெண்களுக்குப் பாதுகாப்பானவையாக ஆக்குவதற்காக இரவு நடைப்பயணங்கள், பூங்காக்களில் தூங்குதல், வீதி உலாக்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளார்கள். பெண்ணிய நடவடிக்கைக் குழுக்கள் பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து அரசியல்வாதிகள் தங்கள் பிரச்சாரங்களில் பேச வேண்டும் என்று கோரியிருக்கின்றன. பெண்கள் வாக்களிப்பது அதிகரித்துவரும் தற்போதைய சூழலில் இந்தக் கவலைகளுக்கு முகம் கொடுப்பதன் மூலம் பாஜக பெண் வாக்காளர்களை ஈர்க்க முனைகிறது. கொள்கை சார்ந்த இந்தக் கவனக் குவிப்புக்குப் பலன் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் கட்சி வெற்றி பெற்ற நான்கு மாநிலங்களிலும் முதன்முறையாக ஆண்களைவிடப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பாஜகவுக்கு வாக்களித்தனர். சட்டம் ஒழுங்கு தொடர்பில் பாஜக எடுக்கும் கடுமையான நிலைப்பாட்டின் காரணமாக அதை ஆதரிப்பதாகப் பெண்கள் பலர் சுட்டிக்காட்டினர்.
பொது வெளியில் துன்புறுத்தல் என்பது பெண்களுக்கு முக்கியமான பிரச்சினையாக இருந்தாலும், பாஜக இவ்விஷயத்தில் கொடுத்துவரும் கவனத்தை அதன் முக மதிப்பில் எடுத்துக்கொள்வது தவறான முடிவுகளுக்கு நம்மை இட்டுச்செல்லகூடும். இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின அடிப்படையிலான வன்முறை என்பது பொது வெளியில் நடக்கும் துன்புறுத்தல் மட்டுமல்ல. 30 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியப் பெண்களும் சிறுமிகளும் குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார்கள். குறைந்த ஊதியம் பெறும் பணிகளிலும் முறைசாராத் துறைகளிலும் பணிபுரியும் பெண்கள், குறிப்பாகத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், வீட்டுப் பணியாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் ஆகியோர், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். பணியிடத்தில் அனுபவிக்கும் துன்புறுத்தலைப் புறக்கணித்துக் குடும்ப வன்முறைக்கு எதிரான பெண்களின் உரிமைகளைக் குறைக்கும் அதே வேளையில், பொது வெளியில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தலின் மீது கவனத்தை ஈர்ப்பதன் மூலம், பாலினப் பாதிப்பிற்குக் காரணமான முக்கியமான நிறுவனங்களின் தளங்களை பாஜக சுருக்கிவிடுகிறது. நிகழும் வன்முறைகளில் சில வகையான வன்முறைகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தருவது ஏன் என்னும் கேள்வி எழுகிறது.
பொது வெளியில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தலைக் கட்டுப்படுத்துவதில் கட்சிக்கு உள்ள தெளிவான நன்மை என்னவென்றால், ஒப்பீட்டளவில் அணுக முடியாத பணியிடங்கள், வீடுகள் ஆகியவற்றைக் கண்காணிப்பதில் உள்ள சிரமத்தைத் தவிர்க்க இது உதவுகிறது. இந்த உத்தி பணியிடங்களையும் குடும்பங்களையும் கட்டமைக்கும் (முதலாளி – தொழிலாளி, கணவன் - மனைவி ஆகியோருக்கு இடையேயான) சமூகப் படிநிலைகள் மாறாமல் இருக்க உதவுகிறது. மேலும், பெண்கள் பெரும்பாலும் அவர்களுக்குத் தெரியாத ஆண்களாலும், தெருவில் சுற்றித் திரியும் ஆண்களாலும் பாதிக்கப்படுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன என்ற கற்பிதத்தை இது பாதுகாக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அகமணமுறை என்பது நெருங்கிய உறவினர்களால் கட்டமைக்கப்படுவது. "தெரு" என்பது பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட பிரிவுகளையும் முஸ்லிம் சமூகத்தையும் சேர்ந்த வசதிக் குறைவான ஆண்களின் இடம். பொது இடத்தில் பெண்களுக்கான ஆபத்து என்னும் கருத்து வர்க்கம், சாதி ஆகியவற்றுடன் குறிப்பிடத்தக்க விதத்தில் இணைந்துள்ளது. குடும்பங்களிலும் பணியிடங்களிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து பாஜக பாராமுகமாக இருப்பது, மதம் சார்ந்த இதர தேசியவாதக் கட்சிகளின் அணுகுமுறையோடு ஒத்துப்போகிறது. சமூக இனப்பெருக்கத்திற்கும் ஒழுக்கம் சார்ந்த சமூகமயமாக்கலுக்குமான தளமாகப் பாரம்பரியக் குடும்ப உறவுகளை அவை பார்க்கின்றன. அன்னிய ஆண்களால் பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்படும் ஆபத்துகளையும் அவை எடுத்துக்காட்டுகின்றன.
பொதுவெளியில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தலுக்கு எதிரான தன் கொள்கைகளை ஊழல் நிறைந்த, ஏற்கெனவே அதிக வேளுப்பளு கொண்ட, அதிக அரசியல்மயமாக்கப்பட்ட காவல் துறையைப் பயன்படுத்துவதன் மூலம், அரசியல் அழுத்தத்திற்கு ஆட்படக்கூடியதும் எளிதில் கட்டுப்படுத்தக்கூடியதுமான ஒரு நிறுவனத்தை பாஜக உருவாக்குகிறது. காவல் துறை நியமனங்கள், பதவி உயர்வுகள் ஆகியவை மாநில அரசுகளாலும், அவற்றை நடத்தும் அரசியல் கட்சிகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. பாஜக அரசியல்வாதிகளும் பாஜகவுடன் நெருங்கிய உறவு கொண்ட அமைப்புகளும் காவல்துறையைப் பயன்படுத்தி, எந்தெந்தச் செயல்கள் துன்புறுத்தலாகும் என்பதையும் துன்புறுத்துதலை எப்படிக் கட்டுப்படுதுவது என்பதையும் தீர்மானிக்கக்கூடும்.
முழுக்க முழுக்க ஆண்களைக் கொண்ட ராணுவப் பாணியிலான இந்து தேசியவாத அமைப்புகளுடன் இணைந்து உ.பி. காவல் துறை இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதையும், சட்டத்திற்குப் புறம்பான தண்டனைகள் வழங்கப்படுவது குறித்த பரவலான செய்திகளும் இதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. பொது வெளியிலிருந்து தன்பாலின ஈர்ப்பாளர்களை அப்புறப்படுத்துவது, வெவ்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த ஆண் – பெண்களுக்கிடையிலான பாலியல் உறவுகளைக் கட்டுப்படுத்துவது, முதலான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் காவல் துறைக் குழுக்கள் ஒழுக்கத்தின் காவலர்களாகச் செயல்படுகின்றன. குஜராத்தில் "ரோமியோக்கள்", "ஜூலியட்கள்" என்று முத்திரை குத்தப்படும் ஆண்களையும் பெண்களையும் குஜராத்தின் ரோமியோ எதிர்ப்புப் படைகள் கைது செய்வதாகத் தெரிகிறது. ரோமியோவும் ஜூலியட்டும் கதையில் வரும் புனைவுக் கதாபாத்திரங்கள். பரஸ்பரம் சண்டையிட்டுக்கொள்ளும் இரண்டு குலங்களைச் சேர்ந்தவர்கள். ஒருவரை ஒருவர் விரும்பி உறவு கொண்டவர்கள். இந்தப் பெயர்களுக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ரோமியோவும் ஜூலியட்டும் சமூக எல்லைகளைத் தாண்டிய பாலியல் உறவுகளுக்காக அறியப்படுபவர்கள்.
பொதுவெளியில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தலைக் கண்காணிப்பதன் மூலம், இணக்கமான சட்ட ரீதியான அமைப்பு என்னும் போர்வையைப் பயன்படுத்தி, எதிர்பாலின உறவு என்னும் அமைப்பு, வர்க்க, சாதி, மத அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகள் ஆகியவற்றை பாஜகவால் மேலும் வலுப்படுத்த முடியும். குடும்பங்களிலும் பணியிடங்களிலும் நடக்கும் வன்முறைகள் மீதான கவனத்தை திசைதிருப்பி, குடும்ப வாழ்க்கையின் புனிதத்தை உறுதிப்படுத்தி, வீடு, அலுவலகம் முதலான இடங்களை ஒழுங்குபடுத்துவதில் உள்ள தொந்தரவைத் தவிர்க்கவும் இந்த அணுகுமுறை உதவும். இறுதியாக, பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு என்னும் உண்மையான பிரச்சினையைக் கவனிப்பதாகக் காட்டிக்கொண்டபடியே தன்னுடைய செயல்திட்டத்தை பாஜகவால் முன்னெடுத்துச் செல்ல முடியும். பொதுவெளியில் பெண்கள் மீதான துன்புறுத்தல் என்னும் பிரச்சினை பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கட்சியாகத் தன்னைக் காட்டிக்கொண்டபடியே பிற்போக்குத்தனமான சமூக உறவுகளைப் பேணிப் பாதுகாப்பதற்கான வாய்ப்பை பாஜகவுக்கு அளிக்கிறது.