கற்பனை வரைபடங்களைத் தேடி

11/10/2021
IiT English Page

பிரிவினையின் சரி, தவறுகள் குறித்த அலசல்கள் இந்த ஆண்டு புதிதாக எழுந்தன. பிரிவினைச் செயல்முறையின் பலன்கள், பெரும் அவசரத்தில் நிகழ்ந்த அதன் இறுதியாக்கம் ஆகியவை குறித்த விவாதங்கள் கடந்த சில மாதங்களாக பாலஸ்தீனிலும் அயர்லாந்திலும் – இந்த நாடுகளின் பிரிவினைச் சூழல் இந்திய, பாகிஸ்தான் பிரிவினையுடன் பல அம்சங்களில் ஒத்திருப்பவை – நடைபெற்றன. இந்த இரு நாடுகளிலிருந்து கிடைக்கும் படிப்பினைகள் இந்தியாவுக்கு முக்கியமானவை. குறிப்பாகப் பிரிவினையின் நினைவுகளை அரசியல்மயமாக்கும் முயற்சி நடந்துவரும் இப்போதைய சூழலில் இவை மிகவும் முக்கியமானவை.

நிலப்பரப்பு, அரசியல் ஆகியவை சார்ந்து அயர்லாந்தில் நெடுங்காலமாக நீடித்துவந்த பிரச்சினையில் தொடர்புடைய பல்வேறு பயனுரிமையாளர்களும் 1998இல் வடக்கு அயர்லாந்து புரோட்டோகால் என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். இந்த ஒப்பந்தம் இந்தப் பகுதியில் ஸ்திரத்தன்மையையும் அமைதியையும் மீட்டதுடன், நூறாண்டுகளாக நீடித்துவந்த பிரிவினைக்கு ஒப்பான மோதலையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. இப்போது பிரக்ஸிட் தொடர் நிகழ்வுகள் அயர்லாந்து பிரச்சினையையும் தம்முள் சேர்த்துக்கொண்டிருக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளாகக் குறைந்திருந்த வன்முறையும் அமைதியின்மையும் மீண்டும் தலையெடுப்பதற்கான வாய்ப்பையும் அது ஏற்படுத்தியிருக்கிறது.

நெகிழ்வான எல்லைக் கோடுகள், ஐரோப்பிய ஒப்பந்தத்தின் கட்டமைப்பின் கீழ் அமையும் அரசியல் ஒப்பந்தத்தில், வெளியிலிருந்து அமைக்கப்படும் கட்டமைப்பின் மூலம் நடக்கும் ஆளுகை ஆகியவற்றைக் கொண்ட கூட்டாட்சி மாதிரியில் அயர்லாந்து ஆட்சி அமையும் என அயர்லாந்து அமைதி முயற்சி கற்பனை செய்தது. இந்தியாவில் இதேபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் முயற்சியில் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாக அடுத்தடுத்த அரசுகள் தவித்துவரும் நிலையில், பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்குப் பிறகு இங்கிலாந்தில் இத்தகைய தீர்வு எட்டப்படுவதற்கு வழிவகுத்த செயல்முறையை இந்தியர்கள் மலைப்புடன் பார்க்கக்கூடும்.

இங்கிலாந்தின் சுங்க எல்லைகளை அயர்லாந்து கடலை நோக்கிப் பின்னே கொண்டுசெல்வது என்னும் பிரெக்ஸிட் தீர்வு ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டது. எல்லைக் கோட்டை ஒருதலைப்பட்சமாக மாற்றியமைப்பதாக அமைந்த இந்தச் செயல்பாட்டினால் வடக்கு அயர்லாந்தில் வசிக்கும் புராடஸ்டண்டுகள், குடியரசின் பெரும்பான்மையினரால் தாங்கள் தங்களுடைய பகுதியில் சிறுபான்மையாக்கப்படும் அபாயத்திற்குள்ளானதாக உண்ர்ந்தார்கள். வடக்கு அயர்லாந்தில் மீண்டும் வன்முறை தலையெடுக்கக்கூடும் என்றும் மோதல்களும் சமூகத்திற்குள் விரோத உணர்வும் அதிகரிக்கும் என்றும் அரசியல் கருத்தாளர்கள் தற்போது எச்சரிக்கிறார்கள். பிரிவினை ஒப்பந்தத்தால் கஷ்டப்பட்டுப் பெற்ற பலன்களை இது அரித்துவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

மே மாதம் கிழக்கு ஜெருசலேமில் அக்சா மசூதி அருகே நடந்த வன்முறையால் தூண்டப்பட்ட கலவரம் “11 நாள் போரில்” முடிந்தது. இந்தப் போரில் மேற்குக் கரையில் இருக்கும் குடியிருப்புகளை இஸ்ரேல் குறிவைத்தது. இதில் 230 பாலஸ்தீனியர்கள் மரணமடைந்தார்கள். பாலஸ்தீனியர்களின் நிலையை இஸ்ரேல் அரசு பல ஆண்டுகளாகப் பலவீனப்படுத்திவரும் விதம் நன்கு அறிந்ததுதான். ஆனால், அண்மையில் நடந்த தாக்குதல் தெற்காசியாவின் பிரிவினையுடன் கொண்டுள்ள ஒருமித்த கூறுகளால் அதை மேலும் தீவிரமாக ஆராய வேண்டியிருக்கிறது.

கிழக்கு ஜெருசலேமில் சர்ச்சைக்குரிய குடியிருப்புகளில் வசிக்கும் 300 குடும்பங்கள் இருக்கும் இடம் அங்கே குடியேறிய யூதர்களுக்குச் சொந்தமானது என்று வாதிடும் இஸ்ரேல் அந்த இடத்தின் மீதான பாலஸ்தீனியர்களின் சொத்துரிமையைக் கேள்விக்கு உட்படுத்தக்கூடும் என்பதால் அவர்கள் வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்கொண்டனர். கிழக்கு ஜெருசலேமில் போராடுபவர்கள் “தனிநபர்களுக்கிடையிலான சொத்துரிமைத் தகராறை ஜெருசலேமில் வன்முறையைத் தூண்டுவதற்காகத் தேசியப் பிரச்சினையாக முன்னிறுத்துகிறார்கள்” என்று இஸ்ரேல் அரசு வாதிட்டது.

இன்னொரு தேசத்தின் வேட்கையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படுவதற்கான கோரிக்கையை முன்வைக்கும் பாலஸ்தீனியக் குடிமக்களின் திறன் திட்டமிட்ட வகையில் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தீர்வுக்கான அவர்களுடைய ஆதார மூலங்கள் குறைந்துவிட்டன. பாலஸ்தீனில் குடியிருப்புவாசிகளின் பலவீனம் இதனால் அதிகரித்திருக்கிறது. 2020 ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட “ட்ரம்ப் அமைதித் திட்ட”த்தை இஸ்ரேல், பாலஸ்தீன் விவகாரங்களைக் கவனித்துவரும் கருத்தாளர்கள் பெரிதும் விமர்சித்தார்கள். பாலஸ்தீனியர்களுக்கு அளிக்கப்பட்ட தனி நாடு அந்தஸ்து என்னும் நடைமுறை யதார்த்தத்துக்கான வாய்ப்பைப் படிப்படியாகக் குறைப்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டு என்று அவர்கள் விமர்சித்தார்கள்.

இரு நாடுகள் பங்கேற்கும் கட்டமைப்பு அங்கு இல்லாதிருப்பது அகதிகளின் “திரும்பி வரும் உரிமை”யை ஏற்றுக்கொள்வதை மேலும் பாதித்திருக்கிறது. 1948இல் நிகழ்ந்த “நப்கா” என்னும் வெளியேற்றும் செயல்முறையைப் பற்றி ஆழமாக அறிந்தவர்கள், இஸ்ரேல் உருவாக்கப்பட்டதற்கு அடுத்த ஆண்டு பாலஸ்தீனியர்கள் நெடுங்காலத்திற்கு அங்கு தங்கியிருப்பது சாத்தியமில்லை என்னும் கருத்தைத் துணை ராணுவப் படைகள் முன்னிறுத்தியதால் 750,000 பாலஸ்தீனியர்கள் தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதை நினைவுகூர்கிறார்கள். அப்பட்டமான வன்முறை அல்லது தொடர்ந்த வாய்மொழிப் பிரச்சாரம் என்னும் அச்சுறுத்தல் ஆகியவற்றின் மூலம் அந்த வெளியேற்றம் நடந்தது. மீண்டும் தங்கள் இடத்திற்குத் திரும்பி நிவாரணம் பெறுவது அல்லது தங்கள் சொத்துக்களை மீண்டும் பெறுவது ஆகியவற்றுக்கான பாலஸ்தீனிய அகதிகளின் உரிமைகள் இன்றுவரையிலும் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன.

இந்தச் செயல்முறையை எந்த அளவுக்குத் தடுத்து நிறுத்த முடியும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், 1950களின் தொடக்கத்தில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருந்த சூழல் இது தொடர்பான சுவாரஸ்யமான சில பார்வைகளை முன்வைக்கிறது. கிழக்கு பாகிஸ்தானிலிருந்து மேற்கு வங்கத்திற்குக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிகழ்ந்த இடப்பெயர்ச்சியைத் தடுத்து நிறுத்த இந்திய, பாகிஸ்தான் அரசுகள் பல ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டன. 1948இல் முதலில் மாகாண அளவில் இது நடந்தது. இதன் உச்சமாக 1950இல் நேரு லியாகத் ஒப்பந்தம் உருவானது.

சொத்துக்களை விட்டுவிட்டு வெளியேறும் பிரச்சினை தொடர்பாக ஒருங்கிணைந்து செயல்படவும் இந்திய, பாகிஸ்தான் அரசுகள் முயன்றன. இன்னொரு நாட்டின் ஒப்புதல் என்னும் வலிமையால் கிடைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில் பிரிவினைக்குப் பிந்தைய சொத்து ஆக்கிரமிப்புகள் கட்டுப்படுத்தப்படாமல் தொடரும் என்னும் எண்ணம் இதற்கொரு காரணம். பிரிவினைச் செயல்முறைகள் இந்திய, பாகிஸ்தான் உறவில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டதும் தெற்காசியாவில் 1950களில் நிகழ்ந்த பிரிவினைக்கான பாதைகள் ஓரளவிற்கு மாறுபட்டவையாக இருந்ததற்கான காரணங்கள்,

தெற்காசிய நாடுகளில் பிரிவினைக்குப் பிந்தைய குடியேற்றங்களின் அடிப்படைகளைக் கேள்விக்குட்படுத்துவதை உள்ளடக்கிய உள்நாட்டு, வெளியுறவுக் கொள்கைகளுக்கான புதிய கருத்தியல் சட்டகத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபடும் இந்தியா வட அயர்லாந்திலும் பாலஸ்தீனிலும் ஏற்பட்ட தோல்விகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இறுதியாக, ஒரு அரசு ஒருதலைப்பட்சமாக முடிவு செய்யும் தீர்வுகள் அல்லது ஒரு அரசு இன்னொரு அரசைப் பலவீனப்படுத்துவதற்காக முன்னெடுக்கும் தீர்வுகள் நீடித்து நிற்காது. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பலிவாங்கி நிலப்பரப்பு ரீதியான தேசியத்தன்மையை வலுக்கட்டாயமாக சட்டமாக்கும் முயற்சியாக அமைந்துவிடக்கூடிய இத்தகைய செயல்பாடுகள் ஆகக் குறுகலான பார்வை கொண்டதாகவே இருக்கும்.

பல்லவி ரங்கநாதன்

Author

பல்லவி ரங்கநாதன் அசோகா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையின் துணைப் பேராசிரியர் Animosity at Bay: An Alternative History of the India-Pakistan Relationship, 1947-1952, என்னும் அவருடைய நூலை 2020ஆம் ஆண்டில் சி. ஹர்ஸ்ட் அண்ட் கோ (இங்கிலாந்து), ஹார்ப்பர் காலின்ஸ் ஆகிய பதிப்பகங்கள்  வெளியிட்டன.

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்