வேளாண்வணிகம் பெருகிவரும் நிலையில், இந்திய விவசாயம் நீடித்திருப்பது குறித்துப் பேசுவது யார்?

20/12/2021
IiT English Page

2020, நவம்பர் 26முதல் டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், இந்தியாவின் விவசாயத் துறையைச் சீர்திருத்துவதாக மோடி அரசாங்கம் கூறிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை அண்மையில் நிறுத்திவைத்தனர். தற்போதைய குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது ரத்து செய்யப்பட்ட இந்தச் சட்டங்கள் விவசாயப் பொருட்களை வாங்குதல், விற்பனை செய்தல், இருப்பு வைப்பது தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதுடன், எழுத்துபூர்வமான ஒப்பந்தத்தின் அடிப்படையிலான ஒப்பந்த விவசாயத்தை இந்தியாவில் செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. தனியார் துறை பங்கேற்பையும் முதலீட்டையும் விவசாய-உணவு விநியோகச் சங்கிலிகளில் பங்கேற்க வகைசெய்வதுதான் இந்த மூன்று சட்டங்களின் அடிப்படையான நோக்கம் என வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் வாதிட்டன. இந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெறுவது போன்ற சில கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்று, மற்ற கோரிக்கைகளுக்காக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். அந்தக் கோரிக்கைகளில் மிகவும் சிக்கலானது, விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகளைச் சட்டப்படி உத்தரவாதப்படுத்தும் கோரிக்கையாகும். தங்களுக்கு லாபம் ஏற்படும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச விலைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென்று விவசாயிகள் கோருகிறார்கள்.

இந்த சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களின் நன்மை தீமைகள் பற்றி அதிகம் எழுதப்பட்டாயிற்று. எனினும் இந்திய விவசாயம் சூழலியல் சார்ந்தும் விவசாயிகளுக்கான பொருளாதாரம் சார்ந்தும் நீடித்திருக்கும் துறையாக மாறுவதற்கு அது செல்ல வேண்டிய திசையைப் பற்றிய விவாதங்கள் குறைவாகவே உள்ளன. இந்த வேளாண் சட்டங்கள் இந்திய விவசாயத்தை வடிவமைக்கும் என்பதோடு, விவசாய வணிகம் என்பது விவசாயத்தில் வளர்ச்சியை முன்னெடுக்கக்கூடிய தனித்துவமான திருப்பமாகவும் அமையும். இந்தச் சட்டங்கள் இயற்றப்படுவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே விவசாய வணிகம் முன்னெடுக்கக்கூடிய வளர்ச்சி வேரூன்றத் தொடங்கிவிட்டதால் இது முக்கியமான விவாதமாகும். இத்துறையில் நடைபெற்றுவரும் மாற்றங்களின் வேகத்தை அதிகரிப்பதே இந்த மூன்று சட்டங்களின் நோக்கமாகும்.

விவசாயத்தில் வேளாண் வணிகம் சார்ந்த வளர்ச்சியை முன்னிட்ட இந்த மாற்றம், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் தொழில்நுட்பம்சார்-தொழில்முனைவு அடிப்படையிலான வளர்ச்சியை நோக்கிய திருப்பத்தின் தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. இது ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கையில் தெளிவாகத் தெரிகிறது. 2018க்கும் 2020க்கும் இடையில், விவசாய-தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தளமான ThinkAg தரும் தகவலின்படி, இந்தியாவில் புதிய தொழில்நுட்பம் சார்ந்த விவசாய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1.5 பில்லியன் டாலர் அளவுக்குச் சாதனை அளவிலான மூலதனத்தை ஈர்த்துள்ளன, அவற்றில் பெரும்பாலானவை வெளிநாடுகளிலிருந்து வந்தவை. இப்போது நாடு முழுவதும் உள்ள 600க்கும் மேற்பட்ட வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் சுமார் 14 மில்லியன் விவசாயிகளுடன் தொடர்பில் உள்ளன. கோவிட்-19 காரணமாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த பொதுமுடக்க உத்தரவுகளால் விவசாயிகளின் நடமாட்டம் கடுமையாகக் குறைந்து, அவர்கள் விவசாயத் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகளைச் சார்ந்திருப்பது மேலும் அதிகரித்தது. வயல் வெளிகளிலேயே நேரடியாகக் கொள்முதல் செய்தல், விவசாய இடுபொருட்களை வயல்களுக்கு நேரடியாக எடுத்துச் சென்று தருதல் முதலான நடவடைக்கைகள் அதிகரித்தன. இத்தகைய நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளின் மூலம் வருமானம் ஈட்டி வளர்ச்சி அடைந்ததுடன் புதிய சந்தைகளையும் எட்டின.

இந்த வேளாண் வணிகம் சார்ந்த வளர்ச்சி மாதிரி இந்திய விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்குமா என்பதுதான் கேள்வி. விவசாய எதிர்காலம் பற்றிய எந்தவொரு கருத்தாக்கமும் இயற்கைச் சூழியல் அமைப்புகள் வளங்குன்றாதிருக்கும் வகையில் அவற்றைப் பயன்படுத்துவது எனப் புரிந்துகொள்ளப்படும் சூழியல்சார் அணுகுமுறையிலும் சிக்கனமான பாசன முறைகளிலும் மையம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே விவசாயத் தொழில்துறை பற்றிப் பல பதிற்றாண்டுகளாகக் கற்றறிந்தவர்களின் வாதம். இந்திய விவசாயத்தில் வேளாண் வணிகம் சார்ந்த வளர்ச்சி மாதிரி வளங்குன்றாச் சுற்றுச்சூழலை முன்னெடுக்கக்கூடியதாக உள்ளதா?

2021ஆம் ஆண்டு எனது களப்பணியின்போது, வேளாண் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுடன் பேசினேன். விவசாயத்தை இந்தியப் பொருளாதாரத்தின் பிற துறைகளிலிருந்து அவர்கள் வேறுபடுத்திக் காட்டினார்கள். அதன் கிராமப்புறப் பின்னணி, ஒப்பீட்டளவில் குறைவான வளர்ச்சியடைந்த உள்கட்டமைப்பு (விலை குறைவாக இணையத் தொடர்பு கிடைக்கும் காலத்திலும் சீரற்று இருக்கும் இணைய இணைப்பு உட்பட), வேளாண் உற்பத்திகளையும் சேவைகளையும் பணமாக்குவதற்கான வழிகள் இல்லாமை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, அதன் சூழியல் அடிப்படை காரணமாகவும் அது வித்தியாசமான துறை என்று அவர்கள் கூறினார்கள். எடுத்துக்காட்டாக, விதைப்பதிலிருந்து அறுவடைவரை பயிர்கள் கால அடிப்படையிலான சுழற்சியைக் கொண்டிருக்கின்றன, பெரும்பாலான விவசாயப் பொருட்கள் நீண்ட தொலைவிற்குக் கொண்டு செல்ல முடியாத அளவுக்குக் குறைந்த ஆயுளைக் கொண்டுள்ளன, மேலும் வளங்குன்றா சுற்றுச்சூழலை உறுதி செய்வதற்கான அவசரத் தேவையும் உள்ளது. ஆயினும்கூட, வளர்ந்துவரும் விவசாய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆகப் பெரும்பான்மையானவை, அன்றாடப் பாசனச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக விவசாய ரசாயனப் பொருள்களை விவசாயிகளின் இடத்திற்கே சென்று வழங்குதல், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை இணைப்பை உறுதி செய்தல், விவசாயத்தின் நீடித்த அளவில் நிலைதிருப்பதை உறுதி செய்தல் போன்ற விவசாய விநியோகச் சங்கிலிகளில் கவனம் செலுத்துகின்றன. அவர்கள் விவசாயத்தின் நிலைத்தன்மையைப் பற்றிப் பேசுகையில், அதை நேரடியான தாக்கமாக அல்லாமல் இத்தகைய இடையீடுகளின் துணை விளைபொருளாகப் பார்க்கிறார்கள். எனது களப்பணியின்போது ஒரு வேளாண் தொழில்நுட்ப முதலீட்டாளர் என்னிடம் கூறியதுபோல், "விவசாயம் நீடித்து நிலைப்பது என்பது இந்தத் துறையில் நாம் காணும் புதுமையின் விளைவு. ஆனால், இலக்கை முன்னிட்ட முயற்சிகளின் விளைவு என்பதைக் காட்டிலும் இதை உபரி லாபம் என்றுதான் நான் சொல்வேன்… வளர்ச்சியடையக்கூடிய வணிகத்தைக் கட்டியெழுப்பத்தான் தொழில்முனைவோர் விரும்புவார்கள். முதலீட்டாளர்கள் போட்ட பணம் திரும்பக் கிடைக்க வேண்டுமென எதிர்பார்ப்பார்கள். ஆனால், இதில் தாக்குப்பிடிக்க வேண்டும் என்னும் கண்ணோட்டத்தில் மட்டும் யாரும் முதலீடு செய்வதில்லை என்பதை நான் வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறேன். அதற்கு முற்றிலும் மாறுபட்ட முதலீடு தேவை என்று நினைக்கிறேன். ஏழு ஆண்டுகளில் 30 சதவீத லாபத்தை எதிர்நோக்கும் வெஞ்ச்சர் கேப்பிடல் அல்லது தனியார் முதலீடு அல்ல. இது தாக்குப்பிடிக்கும் தன்மையை உருவாக்கினால் சிறப்பு. உருவாக்காவிட்டாலும் பரவாயில்லை.”

அமெரிக்கா உள்ளிட்ட பல இடங்களில் தொழில்நுட்ப-தொழில்முனைவோரின் தலையீட்டின் விளைவாக விவசாயம் டிஜிடல்மயமாக்கப்பட்டுவருகிறது. இந்த மாற்றம் குறித்த அண்மைக் கால ஆய்வுகள், விவசாயத்தில் அண்மைக் காலத்தில் உருவாகியுள்ள தொழில்நுட்ப, முறையியல் மாற்றங்கள் சுற்றுப்புறசூழல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக இன்னும் தீவிரமாக ஆக்கிவிடும் என்று கூறுகின்றன; இதனால் நில அபகரிப்புடன் தகவல் அபகரிப்பும் நிகழக்கூடும். இதை மீறி இந்திய அரசு தொடர்ந்து விவசாயத்தில் தொழில்நுட்ப-தொழில்முனைவோரின் தலையீட்டைத் தீவிரமாக ஆதரித்துவருகிறது. எடுத்துக்காட்டாக, இந்திய விவசாய டிஜிடல்மயமாக்கலை மேம்படுத்த ‘விவசாயத்திற்கான இந்திய டிஜிடல் சுற்றுச்சூழல் அமைப்பு (IDEA) என்ற பெயரில் விவசாய அமைச்சகம் வரைவுக் கட்டமைப்பொன்றை வெளியிட்டுள்ளது. இது ஏன் வெளியிடப்பட்டது?

முதலாவதாக, தொழில்நுட்ப-தொழில்முனைவு அணுகுமுறையானது எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சி, நவதாராளவாதம் ஆகிய சித்தாந்தங்களால் இயக்கப்படுகிறது. 1990களில் தொடங்கிய இந்திய விவசாயத்தில் தாராளமயமாக்கலின் முழுமையற்ற செயல்முறை குறித்துக் கொள்கை வகுப்பாளர்கள், செல்வாக்கு மிகுந்த விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் ஆகியோர் மத்தியில் வெளிப்படையான விரக்தி நிலவுவதை எனது களப்பணியின்போது தொடர்ந்து கவனித்திருக்கிறேன். 1991இல் நிகழ்ந்த சீர்திருத்தச் செயல்திட்டத்தில் விடுபட்டுப்போன விவசாயத் துறையில், விவசாயிகள் பொருளாதார மேம்பாடு பெற வேண்டுமென்றால், "முன்மாதிரியாகக் கருதத்தக்க மாற்றம்" தேவை என்று நிதி ஆயோக்கைச் சேர்ந்த விவசாயப் பொருளாதார நிபுணர் ரமேஷ் சந்த், டிசம்பர் 2019இல் வாதிட்டார். இதற்கு, "அறிவியல்-அடிப்படையிலான தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், அறுவடைக்கு முந்தைய, பிந்தைய நிலைகளில் தனியார் துறையின் கூடுதல் பங்கு, தாராளமயமாக்கப்பட்ட வெளியீட்டுச் சந்தை, செயல்பாட்டில் உள்ள நிலக் குத்தகைச் சந்தை, செயல்திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தேவை" என்கிறார் சந்த். இந்திய விவசாயத்தின் "திறனையும் உற்பத்தித் திறனையும் மேலான நிலைகளுக்கு" உயர்த்துவதற்கு டிஜிட்டல்மயமாக்கல் முக்கியமானது என்றும் IDEA ஆவணம் கூறுகிறது. இந்திய விவசாயம் திறமையற்றது என்பதே இந்த அறிக்கைகளின் அடிப்படைக் கருத்து. தனியார் துறையின் பங்கேற்பை அதிகரித்தல், ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியவையே அதிக செயல்திறனைக் கொண்டு வரும் என இந்த அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால், விவசாயத்தில் தடையற்ற சந்தைகள் பல காரணங்களால் பலன் தருவதில்லை என்பதை இந்த அறிக்கைகள் உணரத் தவறுகின்றன. வளர்ந்த நாடுகளில் விவசாயத்திற்கு அதிக அளவில் மானியம் வழங்கப்பட்டதன் விளைவாக உலகளாவிய விவசாய சந்தைகள் தம் இயல்பிலிருந்து திசைமாறியுள்ளன என்பது இந்தக் காரணங்களில் ஒன்று. மேலும், கடந்த காலத்தின் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிகள் இன்று இந்திய விவசாயம் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளான மண் சிதைவு, நிலத்தடி நீர் குறைதல், பூச்சித் தாக்குதல் நிகழ்வுகள் அதிகரிப்ப்பு ஆகியவவற்றுக்கு வழிவகுத்தது என்பதையும் இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் உணரவில்லை.

இரண்டாவதாக, தொலைத்தொடர்பு, விண்வெளி போன்ற பிற துறைகளின் வளர்ச்சியின் தொடர்ச்சியாக விவசாய வளர்ச்சியைப் புரிந்துகொள்வதற்கான மனச்சாய்வும் காணப்படுகிறது. டிஜிட்டல்மயமாக்கல் மற்ற துறைகளைப் போலவே விவசாயத்தையும் மாற்றும் என்று கருதப்படுகிறது. வேளாண்-தொழில்நுட்பம் சார்ந்து செயல்படுபவர்கள் விவசாயத்தின் சூழலியல் அடிப்படையை அங்கீகரிப்பது அதிகரித்துவந்தாலும், விவசாயத்தில் ஆண் தன்மை கொண்ட தொழில்நுட்ப-அறிவியல் அணுகுமுறை தொடர்கிறது; இந்தத் தீர்வுகள் கற்பனைக்கு எட்டாத வழிகளில் பொருள் சார்ந்த உலகத்தை மாற்றக்கூடிய தங்களின் சொந்த ஆற்றலைப் பற்றி அறியாமல் இருக்கின்றன என்பதையும், உலகம் முழுவதிலும் தொழில்துறை விவசாயத்தின் வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்தபடி இவை எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்

இறுதியாக, வலிமை பொருந்திய தொழில்துறை சமூக-தொழில்நுட்பத் துறையானது, சீர்திருத்தங்கள் ("இயற்கை விவசாயம்" போன்றவை) பற்றிய மாற்றுப் புரிதலை நோக்கிய எந்த நகர்வையும் கடுமையாக எதிர்க்கிறது என்பதை அண்மையில் ஆந்திரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு காட்டுகிறது. சமீபத்தில், ஆந்திரப் பிரதேசத்தில் வளங்குன்றா விவசாய முறைகளுக்கு மாறுவதற்கான உலகின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்று, "தேசிய வேளாண் அறிவியல் அகாடமி மற்றும் தொழில்துறை உள்ளீடுகள் (விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள்) சப்ளையர்களால் தூண்டிவிடப்பட்ட விமர்சனங்களின் இலக்காக" மாறியது. நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் "பிற்போக்கு நடவடிக்கை" என்று அது விமர்சிக்கப்பட்டது. தொழில்நுட்பத்தையும் முன்னேற்றத்தையும் சார்ந்து உருவாக்கப்படும் குறைகள் நிரம்பிய கட்டமைப்புகளை இயற்கை விவசாயம் போன்ற மாற்று வழிகளால் எதிர்க்க வேண்டும். இது விவசாயத் துறைசார் அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்த சிலருக்கு, அறிவியலுக்கும் வளர்ச்சிக்கும் முரணானதாகத் தோன்றலாம். எனினும், வளங்குன்றாச் சூழியலை உறுதிசெய்வதற்கான விவசாயத்தின் எதிர்காலம் குறித்த மாற்றுச் சிந்தனைகளில் முதலீடு செய்யாமல் இது எப்படி நடக்கும் என்பது விடையற்ற கேள்வியாகவே உள்ளது. இந்திய விவசாயம் பற்றி அண்மையில் வெளியான அறிக்கையைத் தயாரிப்பதில் என்னுடைய பங்களிப்பு  இருந்தது. அந்த அறிக்கையில் (report) குறிப்பிட்டிருப்பதுபோல, விவசாயிகள் குறைந்தபட்ச விலைக்கான கோரிக்கைகளை மாற்று விவசாய எதிர்காலத்துடன் இணைத்து முன்னெடுப்பது விவசாய முறையை அர்த்தமுள்ள வகையில் மாற்றியமைப்பதற்கான சாத்தியமான வழிகளில் ஒன்று.

நிகித் குமார் அகர்வால்

Author

நிகித் குமார் அகர்வால் யு.எல்.சி.ஏ.வில் மானுடவியல் ஆய்வாளர்

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்