இந்தியாவில் அரசியல் ரீதியான மையப்படுத்தலின் வேர்கள்

31/01/2022
IiT English Page

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குன்வர் ரத்தன்ஜித் பிரதாப் நரேன் சிங் (ஆர்.பி.என். சிங்), 2022, ஜனவரியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, அதன் பரம எதிரியான பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) சேர்ந்தார். இவர் சாதாரண கட்சி உறுப்பினர் அல்ல. காங்கிரசின் சார்பில் பல முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அக்கட்சியின் மத்திய அமைச்சராகவும் அதன் இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகவும் கருதப்பட்டார். உலகம் முழுவதும், குறிப்பாக ஒருங்கிணைந்த மேற்கத்திய ஜனநாயக நாடுகளில், ஒரு பெரிய கட்சியின் முக்கிய உறுப்பினர் விலகுவது என்பது அசாதாரணமான வகையில் அரிதானது.

எனினும், இந்த வகையான கட்சித் தாவல் இந்தியாவின் அரசியல் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது. இது "ஆயா ராம் கயா ராம்" அரசியல் என்று பிரபலமாகக் குறிப்பிடப்படுகிறது, இது கயா லால் என்பவர் 1967இல் அடிக்கடி கட்சி மாறியதை ஒட்டி எழுந்த சொலவடை. கடந்த ஐந்து ஆண்டுகளில், 417 எம்.எல்.ஏ.க்கள் அல்லது எம்.பி.க்கள் (இந்தியாவில் உள்ள 4,664 சட்டமன்ற / நாடாளுமன்ற இடங்களில் 9 சதவீதம்) கட்சி மாறித் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டுள்ளனர். இத்தகைய அதிக அளவிலான கட்சித் தாவலும் “அணி மாறல்”களும் வளரும் உலக ஜனநாயக நாடுகளான பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன.

ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், இதர உறுப்பினர்கள் ஆகியோரிடையே உள்ள இந்த விசுவாசமின்மையை இந்தியாவில் கட்சியின்பால் அதன் உறுப்பினர்களுக்கு இருக்கும் பலவீனமான பற்றுதல் என்று நான் குறிப்பிடுகிறேன்.

பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் பொருளாதார, அரசியல் ரீதியான மையப்படுத்தல் நிகழ்வது குறித்து அண்மையில் அறிஞர்களின் கவனம் குவிந்துள்ள நிலையில், அரசியல் மையப்படுத்தல் என்பது இந்திய அரசியலில் கட்சிகளுக்குள் பரவலாக நிலவும் பலவீனமான பற்றுதலுக்கான இயல்பான எதிர்வினை என்பதைக் காட்ட விரும்புகிறேன். குறிப்பாகச் சொல்வதானால், அரசியல் கூறுகளை மையப்படுத்துவதன் மூலம் ஒரு கட்சியின் அரசியல் தலைவருக்கும் வாக்காளர்களுக்கும் இடையே நேரடி அரசியல் தொடர்பை உருவாக்குவது, தேர்தல்களில் கட்சித் தாவல்களின் எதிர்மறையான விளைவுகளைக் குறைக்கிறது. சொல்லப்போனால், இந்தியாவில் உள்ள பிராந்தியக் கட்சிகள்தான் இத்தகைய தீவிரமான அரசியல் மையப்படுத்தலில் முதலில் ஈடுபட்டன. மோடி குஜராத் மாநிலத்தில் வெற்றிகரமான முதல்வராக இருந்தவர். இந்தப் பொருளில், தற்போதைய காலகட்டம் தேசிய அரசியலின் "பிராந்தியமயமாக்கலை"ப் பிரதிபலிக்கிறது. அதாவது, தேசிய அரசியலில் பிராந்தியவாத அரசியலின் அறிமுகம்.

அரசியலை மையப்படுத்துதல்
ஒரு காலத்தில் வலிமையாக இருந்த காங்கிரஸ் கட்சி இயந்திரம் 1990களில் நொறுங்கத் தொடங்கியதும் பல பிராந்தியக் கட்சிகள் தேர்தல் வெற்றியைப் பெறத் தொடங்கின. மாநில அளவில் ஒவ்வொரு கட்சியும் வெற்றி பெற்ற சட்டமன்ற இடங்களின் எண்ணிக்கை 1986இல் இருந்த எண்ணிக்கையைப் போல கிட்டத்தட்ட இரு மடங்காக 1996இல் உயர்ந்தது. மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், திருணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அப்போது பெரிதும் வெற்றிபெற்ற புதிய கட்சிகள். குறிப்பிடத்தக்க வகையில், இந்தப் புதிய பிராந்தியக் கட்சிகளில் பல, அடிப்படையில் "குடும்ப நிறுவனங்க”ளாக இருந்தன. கட்சியின் கட்டுப்பாடு நிறுவனரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் இருந்தது. காங்கிரஸ் கட்சி வலுவிழப்பதன் விளைவாகக் கூடுதலான ஜனநாயக அரசியல் உருவாகியிருக்க வேண்டிய நிலையில் இந்தக் கட்சித் தாவலை எவ்வாறு விளக்குவது?

சட்டமன்ற உறுப்பினர்களாகக்கூடியவர்கள் தங்கள் கட்சியுடன் பலவீனமான பற்றுதலைக் கொண்டிருக்கும்போது, அரசியல் வெளியில் அதிக மதிப்பில்லாத புதிய கட்சிகளிலிருந்து தனிப்பட்ட நபர்கள் கட்சி விலகுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கும். இதன் விளைவாக, தங்களுக்கென்று நிலையான வாக்குப் பங்கீட்டை வளர்த்தெடுக்க விரும்பும் புதிய கட்சிகள், கட்சியிலுள்ள தனிநபர்களின் புகழ் வளர்ச்சி அடைவது குறித்து எச்சரிக்கையாக இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், வாக்காளருக்கும் கட்சியின் தலைவருக்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்கும் வகையிலும். மக்களிடையே கட்சிக்கு இருக்கும் ஆதரவிலும் தேர்தல் முடிவுகளிலும் தனிப்பட்ட வேட்பாளர்கள் செலுத்தும் தாக்கம் குறைவாகவே இருக்கும் வகையிலும் கட்சிக்கான "அரசியல் தன்மையினை" மையப்படுத்துவதே புதிய கட்சிக்கு ஏற்ற வியூகமாக இருக்கும். கட்சியின் தலைவரைத் திருவுருவாக ஆக்குவதற்காகக் கட்சி அமைப்பை வலுப்படுத்துவதுடன், மாநிலங்களிலும் ஊடகங்களிலும் ஆதரவைத் திரட்டுவதன் மூலம் இது பெரும்பாலும் செய்யப்படுகிறது.

மாநில அளவிலான தேர்தல்களில் இது நன்கு நிலைநிறுத்தப்பட்டாலும், பாஜகவும் மோடியும் தேசிய அளவில் இதுபோலச் செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. நான் வேறொரு இடத்தில் வாதிட்டதுபோல, ஒரு அரசியல் கட்சியின் புகழ், அதன் கொள்கை முடிவுகளையும் வாக்குறுதிகளையும் சார்ந்திருப்பதைக் காட்டிலும் மக்களிடையே அதன் தலைவரின் நற்பெயரையே சார்ந்துள்ளது என்பதுதான் இந்த அரசியல் முறையின் முக்கியமான உட்பொருள். எனவே, நாம் காணும் இந்த அரசியல் மையப்படுத்தலின் வடிவமானது, பொருளாதாரச் செயல்திறனின் தரத்திற்குக் குடிமக்கள் தங்கள் நேரடிப் பிரதிநிதியைப் பொறுப்பாகக் கருதும் மாதிரிக்கு எதிரானது.

தொழில்நுட்ப மாற்றம், நலப்பணிசார் கொள்கைகள், அரசியல் தன்மையை மையப்படுத்துதல்
குடிமக்களுக்கான சலுகைகளை அவர்களுக்கு நேரடியாக வழங்குவதன் மூலம் அரசியல் தன்மையை மையப்படுத்துவதற்குத் தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க அளவில் உதவுகிறது. நலத்திட்டங்கள் தொடர்பான இந்தப் புதிய கட்டமைப்பு, நலத்திட்டங்களின் பலன்கள் குடிமக்களுக்கு நேரடியாகப் போய்ச் சேர வகை செய்கிறது. நலத்திட்டங்களை வழங்குதல் என்னும் செயல்பாட்டின் பெருமையை உள்ளூர்த் தலைவர்களுக்குப் பதிலாகக் கட்சியின் அரசியல் தலைவருக்கு வழங்குவதன் மூலம் அரசியலை மையப்படுத்தும் வேலை எளிதாகிவிடுகிறது.

இந்தியாவில் முக்கியமான இரண்டு கொள்கை, மாற்றங்களாலும் தொழில்நுட்ப மாற்றங்களாலும் இது நிகழ்ந்திருக்கிறது. முதலாவதாக, இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கும் திட்டமும் இந்திய மக்களை முறையான வங்கி அமைப்பில் ஒருங்கிணைப்பதற்கான ஜன்தன் வங்கிக் கணக்குகளின் பெருக்கமும் அரசாங்கத் திட்டங்கள் தொடர்பான பணத்தை மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தக்கூடிய அமைப்பை உருவாக்க உதவி செய்துள்ளன. இந்த அமைப்பு உள்ளூர் இடைத்தரகர்களையும் மக்களுடன் தொடர்புகொள்ளக்கூடிய உள்ளூர்ப் பிரமுகர்களையும் நலத்திட்டங்களின் செயல்முறையிலிருந்து விலக்கிவிட்டது. அரசின் நலத்திட்டங்கள் உரியவர்களை நேரடியாகச் சென்றடைவதில் செலுத்தப்படும் கூடுதலான கவனம் அரவிந்த் சுப்ரமணியன் குறிப்பிட்ட, "தனியாருக்கான அத்தியாவசியமான பொருட்களையும் சேவைகளையும் பொதுவாக வழங்குதல்" என்னும் செயல்முறையின் ஆதாரமான கூறாகும். இரண்டாவதாக, கவனமாக வடிவமைக்கப்பட்ட விளம்பரம் மூலம் திட்டங்களைப் புதுமையான முறையில் முன்னிறுத்துதல், ஊடக மேலாண்மை, கட்சி அமைப்பின் மீதான கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம், கட்சித் தலைவர் நலத்திடங்களை மக்களுக்கு அளிப்பதற்கான நன்மதிப்பை முன்பை விடவும் மிகவும் கூடுதலாகப் பெற முடியும்.

குடிமக்கள் சார்பாக அரசை அணுகுவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்கும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் துடிப்பான அமைப்புக்கு இணையாக இந்த மையப்படுத்தல் நிகழ்கிறது என்பதுதான் இதில் சுவாரஸ்யம். இந்த வெளிப்படையான முரண்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு, இந்தியாவின் அரசியல் சூழல் "பலவீனமான, நிறுவனமயமாக்கப்பட்ட கட்சி அமைப்பாக"ப் பரவலாகக் கருதப்படுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்த அமைப்பில் வாக்காளர்களுக்கும் கட்சிக்கும் இடையே உள்ள தொடர்புகளின் அடிப்படையானது கருத்தியல் சார்ந்த வலிமை கொண்டது அல்ல. மாறாக, பொருளாதார விநியோகத்தில் அது வேரூன்றியுள்ளது. இந்திய அரசியலில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் கருத்தியல் பரிமாணங்கள் இல்லை என்று இதற்கு அர்த்தமல்ல. இந்தக் கருத்தியல் பிளவுகள் கட்சிகளின் போட்டியையோ வேட்பாளர் தேர்வையோ தீர்மானிப்பதாக இருப்பதில்லை. பட்ஜெட், நலத்திட்டங்கள் ஆகியவை சார்ந்த ஒதுக்கீடுகள் இந்தியாவில் கட்சியாலும் அரசாங்கத் தலைமையாலும் மையப்படுத்தப்பட்ட முறையில் தீர்மானிக்கப்படுகின்றன. தொழில்நுட்ப ரீதியான இந்தப் புதுமைகள் நிதி ஒதுக்கீடுகள் சார்ந்த முடிவுகளுக்கும் அவற்றின் பெருமைகளுக்கான உரிமைகோரலுக்கும் இடையே நெருக்கமான உறவை உருவாக்கி, கூடுதலாக மையப்படுத்தப்பட்ட அரசியல் தன்மைகளை உருவாக்குகிறது.

மேலும், தேர்தலில் நிற்பதற்கான கட்சி டிக்கெட்டுகள் மிகவும் மையப்படுத்தப்பட்ட முறையில் கட்சித் தலைமையால் வினியோகிக்கப்படுகின்றன (ஒரு கட்சியின் வேட்பாளர் யார் என்பதை மக்களின் வாக்களிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் முதல்நிலைத் தேர்தல் முறை எந்தப் ஒரு பெரிய கட்சியிலும் இல்லை). எனவே, வேட்பாளர்களை மீண்டும் நிறுத்துவது என்பது கட்சித் தலைமை கொண்டிருக்கும் பெரிய இலக்குகளைப் பொறுத்தது. இதன் விளைவாக, "குறைந்த அளவில் உள்கட்சி ஜனநாயகம்" கொண்ட மையப்படுத்தப்பட்ட கட்சிகள், வேட்பாளர்களின் உள்ளூர் செயல்திறன் எப்படி இருந்தாலும், உள்ளூரில் அவர்களுடைய அதிகாரம் வலுவாக வேரூன்றுவதைத் தடுக்க அதே வேட்பாளரை மீண்டும் நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. மோடி ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில், அப்போது பதவியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மீண்டும் தேர்தலில் நிற்கக்கூடிய வாய்ப்பு 53 விழுக்காடாக மட்டுமே இருந்தது. பதவியில் இருப்பவர்களில் 27 விழுக்காட்டினர் மட்டுமே மீண்டும் போட்டியிடத் தேர்வுபெற்ற நிலையில், ஒருவர் மறு வாய்ப்பு பெற்றாலும் அவர் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 50 விழுக்காடாகவே இருந்தது.

இந்த வகைமாதிரி மாநில அளவிலும் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், 1977முதல் ஒவ்வொரு தேர்தலிலும் முதல் முறை எம்.எல்.ஏ.க்களின் விகிதம் குறைந்தது 60 விழுக்காடாக உள்ளது. அண்மையில் நடந்த மாநிலத் தேர்தல்களில் 78 சதவீத எம்.எல்.ஏ.க்கள் முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இந்தச் செயல்முறைகள் உள்ளூர் தலைவர்களால் மத்தியத் தலைவரிடமிருந்து அரசியல் கூறுகளை திசை திருப்ப முடியாது என்பதை உறுதி செய்கின்றன.

இவை எதுவுமே இந்தியாவில் அரசியல் மையப்படுத்தலில் இந்து தேசியவாதம், பாஜகவின் கட்சி அமைப்பு, நரேந்திர மோடியின் செல்வாக்கு ஆகியவற்றின் தனித்துவமான பங்கை மறுக்கக்கூடியவை அல்ல. எனினும், மையத்தில் தற்போது நிகழும் அரசியல் ரீதியான மையப்படுத்தல், இந்தியாவில் மாநில அளவில் செழித்துவரும் அமைப்பிலிருந்து உள்வாங்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.

அரசியல் மையப்படுத்தல் என்பது ஒரு தலைவர் அல்லது ஒரு கட்சி என்பதைத் தண்டியது என்பதையும், இது இந்தியாவில் பரவலாகக் காணப்படும் கட்டமைப்பு சார்ந்த நிகழ்வு என்பதையும் உணர்த்துவதே என் நோக்கம்.

நீலாஞ்சன் சிர்க்கார்

Author

நிலஞ்சன் சிர்கார் புது தில்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தில் மூத்த உறுப்பினராகவும், CASI-யில் வசிக்காத வருகை தரும் அறிஞராகவும் இருந்தார்.

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்