இந்திய அரசியலமைப்பை உருவாக்கியபோது, இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியான மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையிலான சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான விதிகளை வகுப்பதற்காக இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்தில் 29 அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பிரிவு 29இன் கீழ், தனித்துவமான மொழி, எழுத்து அல்லது கலாச்சாரத்தைப் "பாதுகாக்க" உரிமைகள் உள்ளன. பிரிவு 30இன் கீழ், "மதம்" அல்லது "மொழி" அடிப்படையில் அனைத்துச் சிறுபான்மையினருக்கும் அவர்களின் "தேர்வின்படி" கல்வி நிறுவனங்களை நிறுவவும் நிர்வகிக்கவும் உரிமை உள்ளது. முக்கியமான இந்த விவாதங்களின்போது ஒரு சில உறுப்பினர்கள் இந்த உரிமையை "சமூகம்" என்பதன் அடிப்படையில் கிடைக்கச் செய்வதற்கும் குரலெழுப்பினார்கள். சட்டமியற்றுபவர்களில் ஒரு குழுவினர் தங்களின் தனித்துவமான மொழியைப் "பாதுகாப்ப”தில் மட்டும் திருப்தி அடையவில்லை. "வளர்ச்சி" என்ற சொல்லையும் அதில் சேர்க்க விரும்பினார்கள். இருப்பினும், "சமூகம்" அல்லது "வளர்ச்சி" என்ற சொற்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பில் இடம்பெறவில்லை.
சிறுபான்மையினரின் சமகால அரசியலைப் புரிந்துகொள்வதில் இந்த வரலாற்றுப் பின்னணி முக்கியமானது. குறிப்பாக, இந்துக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் மாநிலங்களில் அவர்களைச் சிறுபான்மையினர் என்று அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கையைப் புரிந்துகொள்ள் இது உதவும். இந்தக் கோரிக்கை சிறுபான்மையினர் என்பது குறித்துப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைக்கும், சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் பொறுப்பு பெரும்பான்மையினருக்கு இருக்கிறது என்னும் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் எதிரானது. இந்துக்கள் இந்தியாவின் மக்கள்தொகையில் 85 சதவிகிதமாக இருக்கும் நிலையில் இந்தக் கோரிக்கை மேலே குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கொள்கைகளுடன் முரண்படுகிறது.
அதே நேரத்தில், 2002 டிஎம்ஏ பை வழக்கில் சிறுபான்மையினர் தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கியமான தீர்ப்பின் அடிப்படையில் இந்தக் கோரிக்கைக்குச் சட்ட ரீதியான அடிப்படைகள் உள்ளன. இந்தியாவில் மாநிலங்களை உருவாக்குவதற்கு மொழிகளே அடிப்படையாக இருந்தன; எனவே, அரசியல் சட்டத்தின் 30ஆவது பிரிவின் நோக்கங்களின்படி, "மொழிசார் சிறுபான்மையினர்" என்பதை அந்தந்த மாநிலத்தின் நிலவரத்தை வைத்தே தீர்மானிக்க வேண்டும் என்று அந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டியது.
இதே அடிப்படையில் "மதச் சிறுபான்மை”யினரின் நிலையும் குறிப்பிடப்பட்டது. அனைத்துக் குடிமக்களுக்கும் பொதுவாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளுடன் சிறுபான்மையினருக்குக் கூடுதல் உரிமைகளைத் தர வேண்டும் என்பது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பை வழக்கின் நீதிபதிகளில் ஒருவர், அரசியலமைப்புச் சட்டம் அது உருவாக்கப்பட்ட அரசியல் சூழலையும், "சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட" சிறப்பு உரிமைகளின் அரசியல் உள்ளடக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது என்றும் கூறியிருந்தார். சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைச் சேர்ந்தது. அதைத் திருத்தவோ மாற்றவோ முடியாது. எனவே, மாநில அளவில் தங்கள் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்துக்கள் கோருவதைத் தவிர்க்க முடியாது.
பை வழக்கின் தீர்ப்பு, பல்லடுக்குகள் கொண்ட இந்தியாவின் பன்முகத்தன்மைக்கான அங்கீகாரமாக அமைந்திருக்கிறது என்பதுதான் இதில் சுவாரஸ்யமானது. ஒவ்வொரு நபரும், அவருடைய மொழி, சாதி அல்லது மதம் எதுவாக இருந்தாலும், தனக்கெனத் தனி அடையாளத்தைக் கொண்டிருக்கிறார். அந்த அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த அடையாளங்கள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்படும்போது அது இந்தியாவின் மாறுபட்ட புவியியல் கூறுகளைப் பிரதிபலிக்கும் என்னும் உண்மையை இந்தத் தீர்ப்பு நிறுவியது.
மறுபுறம், முஸ்லிம் சிறுபான்மையினரைப் பொது அமைப்புகளிலிருந்து விலக்கிவைப்பதை உறுதிசெய்து, பெரும்பாலான முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பொது அமைப்புக்குள் வராத வகையில் பல்வேறு வேலைவாய்ப்பு நிபந்தனைகளை விதித்துள்ள பெரும்பான்மைவாத அரசு தற்போது இந்தியாவில் உள்ளது. சிறுபான்மையினரின் உடை, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, மத ஒழுக்கங்கள் ஆகியவை பெரும்பான்மைவாத இயக்கங்களால் நிர்வாக, நிறுவன ஆதரவுடன் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
தற்போதைய அரசாங்கம், பன்முகத்தன்மை என்பதைப் பயனற்ற கோட்பாடாக ஆக்குவதன் மூலம், "தேசியம்" என்பதற்கு இந்துத்துவத்தின் அடிப்படையில் தாங்கள் விரும்பும் வரையறையை அளிப்பதற்காக "ஒருபடித்தானதன்மை" என்னும் கொள்கையை ஆதரிக்கிறது. முஸ்லிம், கிறிஸ்தவர்களின் கலாச்சார நடைமுறைகள், மொழிகள், நம்பிக்கைகள் இந்தியாவிற்கு அந்நியமானவை என்றும் நாட்டின் "தேசிய" சமூக-சமயத் தன்மையை வரையறுக்கையில் அவற்றை விலக்கிவைக்க வேண்டும் என்றும் ஒரு கதையாடலை உருவாக்கி வளர்ப்பதற்கான களத்தை மின்னணு ஊடகங்கள் உருவாக்கியுள்ளன. இத்தகைய தேசியவாதம் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்திற்கான நல்ல அறிகுறி அல்ல.
இந்துக்களைச் சிறுபான்மையினர் என்று பட்டியலிடுவதில் இரண்டு சுவையான கேள்விகள் எழுகின்றன. யார் இந்து என்பது முதல் கேள்வி. இது தொடர்பாக நாடாளுமன்றத்திற்குப் பிரத்யேக அதிகாரம் உள்ளதா, யார் சிறுபான்மையினர் என்பதை மாநிலச் சட்டமன்றங்களால் அறிவிக்க முடியுமா என்பது இரண்டாவது கேள்வி.
1966ஆம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பில், “இந்து மதம் (அல்லது இந்து) குறிப்பிட்ட எந்த ஒரு கடவுளையும் வணங்குவதில்லை; குறிப்பிட்ட எந்த ஒரு கோட்பாட்டையும் சார்ந்திருக்கவில்லை; குறிப்பிட்ட எந்த ஒரு தத்துவக் கருத்தையும் நம்பவில்லை; குறிப்பிட்ட ஒரு மதச் சடங்குகளையோ செயல்முறைகளையோ பின்பற்றுவதில்லை; இது மதம் அல்லது பிரிவு தொடர்பான மரபார்ந்த குறுகிய வரையறைகளுக்கு உட்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இதை ஒரு வாழ்க்கை முறை என்று பொதுவாகக் குறிப்பிடலாம். அதற்கு மேல் எதுவும் இல்லை” என்று தலைமை நீதிபதி பி.பி. கஜேந்திர கட்கர் கூறினார். பிறகு, 1995இல் நீதிபதி ஜே.எஸ். வர்மா இந்த வரையறையை "இந்துத்துவம்" என்ற அரசியல் சொல்லுடன் இணைத்துக் கூறினார். 1995இல் உச்ச நீதிமன்றம் முன்வைத்த இந்த வரையறைக்குப் பிறகு, பெரும்பாலான குடிமக்கள் இயல்பாகவே "இந்துக்கள்" என்று அழைக்கப்பட்டனர்.
இந்துத் திருமணச் சட்டம் போன்ற சட்டங்கள் முஸ்லிம், கிறிஸ்தவர், பார்சி அல்லது யூதர் அல்லாத அனைவருக்கும் இந்துச் சட்டம் பொருந்தும் என்று கூறுகிறது. இங்கும், இந்த நான்கு மதங்களுக்குள் வராத அனைவரும் "இந்து" என்ற கருத்து வெளிப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் 29, 30ஆவது பிரிவுகளின் கீழ் பாதுகாப்புப் பெறக்கூடிய "சிறுபான்மையினர்" என்ற வரையறையில் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரும் ஒரு சமூகம் குறித்து இத்தகைய தளர்வான வரையறையை நாம் இனிமேலும் வைத்துக்கொள்ள முடியுமா என்பதுதான் இப்போது கேள்வி. அதே சமயம், சிறுபான்மையினர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள பட்டியலில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்பதற்கான பல்வேறு சமூகங்களின் உரிமைகோரல்களை ஊக்குவிக்க வேண்டாம் என்று சிறுபான்மையினருக்கான ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பட்டியலைப் படிப்படியாகக் குறைத்துக் காலப்போக்கில் அதை முழுவதுமாக நீக்குவதற்கான சமூகச் சூழ்நிலைகளை உருவாக்க உதவும் வழிகளைப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்துக்களைச் சிறுபான்மையினர் என அறிவிக்க நாடளுமன்றம் அல்லது மாநிலச் சட்டமன்றங்களுக்கு உரிமை இருக்கிறதா என்னும் கேள்வியைப் பொறுத்தவரை, இந்திய அரசியலமைப்பு பகுதி-கூட்டாட்சிக் கட்டமைப்பைக் கொண்டது. இதன்படி, தன்னுடைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சமூகங்களின் மொழி, மதம் ஆகியவற்றின் பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் உள்ளது. இவ்விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு தெளிவற்றதாகவும், சந்தர்ப்பவாத அணுகுமுறையைக் கொண்டதாகவும் தோற்றமளிக்கிறது. மொழி, மதம் சார்ந்த பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் விஷயத்தில் நாடாளுமன்றத்திற்கும் மாநிலச் சட்டமன்றங்களுக்கும் அதிகாரம் உள்ளது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு முதலில் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தது. ஆனால், அதே வழக்கின் விசாரணையின்போது பின்னாளில், சிறுபான்மையினர் யார் என அறிவிக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்று ஒரு பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு கூறியது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு கூட்டாட்சிக் கட்டமைப்பிற்குள் உரசலை உருவாக்கும். மாநில மொழிகள் மாநிலச் சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவை என்பதைச் சொல்லத் தேவையில்லை.
மத உரிமைகளைப் பாதிக்கும் அனைத்துச் சட்டங்களும் பொது ஒழுங்கு சுகாதாரம் ஆகியவற்றோடு தொடர்புடையவை. அவை மாநிலச் சட்டமன்றங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. "சிறுபான்மையினரை" நிர்ணயம் செய்வதற்கான இரண்டு அடிப்படைப் புள்ளிகளான மொழியும் மதமும் மத்திய, மாநில அரசுகளின் பொது அதிகார வரம்புகளுக்குள் உள்ளன. இந்நிலையில், "சிறுபான்மையினர்" என்று அறிவிக்கும் அதிகாரத்திலிருந்து மாநிலங்களை விலக்கிவிட முடியுமா?
அப்படி மாற்றினால் அது மத்திய அரசிடம் அதிகாரத்தைக் குவிக்க மட்டுமே உதவும். முடிவெடுக்கும் செயல்பாட்டில் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல்போவது போன்ற பலதரப்பட்ட சிக்கல்களுக்கும் இது வழிவகுக்கும். நமது அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களில் ஒன்று “கூட்டாட்சி”க் கட்டமைப்பு. அதை மாற்ற முடியாது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்திய மக்களின் பன்முகத்தன்மையை உள்ளூர் அளவில் அங்கீகரிப்பதே கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான உறுதிப்பாட்டிற்கான சிறந்த வழியாகும்.
சட்டமன்றங்களால் உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை விதிகளுக்கு வருவோம். 1992இல் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியது. சிறுபான்மையினரின் முன்னேற்றத்தையும் மேம்பாட்டையும் மதிப்பிடுவதற்கும், சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசியல் சாசனத்தில் உள்ள ஏற்பாடுகளைக் கண்காணிக்கவும் இந்தச் சட்டத்தின்படி தேசிய சிறுபான்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் காலப்போக்கில் சிறுபான்மையினரின் நலன்களைத் திறம்படப் பாதுகாப்பதற்குப் பதிலாக, வெறும் பெயரளவிலான அமைப்பாகவே தங்கிவிட்டது. கூருணர்வற்ற அதன் செயல்பாடு, முன்பு இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியின் தலைமையில் இருந்து, தற்போது உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியின் தலைமையில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் போன்ற ஆணையங்களிலிருந்து மாறுபட்டதாக இல்லை. சிறுபான்மைச் சமூகங்களின் பட்டியலில் நாட்டின் ஆகப் பெரும்பான்மை சமூகம் சேர்க்கப்பட்ட பிறகு இந்தச் சிறுபான்மை ஆணையம் அதன் செயல்பாட்டை மாற்றிக்கொள்ளுமா என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் தங்களைச் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களாக அங்கீகரிக்கும்படி கோர வகை செய்வதற்காக 2004ஆம் ஆண்டில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் யார் "சிறுபான்மையினர்" என்பதை அறிவிக்கும் மத்திய அரசின் அதிகாரத்துடன் உருவாக்கப்பட்டது. அது சிறுபான்மையினர் யார் என்பதைத் தீர்மானிப்பதை அவர்களின் அகவயமான விருப்பத்திற்கே விட்டுவிட்டது. அதன்படி, மத்திய அரசு ஆறு மத, மொழிச் சமூகங்களைச் சிறுபான்மையினராக அறிவித்தது (பை வழக்கில் முன்வைக்கப்பட்ட கொள்கையின் பிரதிபலிப்பு இல்லாமல்).
அரசியல் சாசனப் பிரிவுகள் 29, 30 ஆகியவை மதப் பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே சமநிலையை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்குப் பெரும்பான்மையினரால் பாகுபாடு காட்டப்படாமல் இருப்பதற்கான உத்தரவாதம் தேவைப்பட்டது. இந்த ஏற்பாடு சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய அரசியல் சட்டப் பிரிவுகளுடன் இயைந்துபோகிறது. இந்திய அரசியல் சட்டத்தில் வேறு இடத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு இணையானது இது.
சிறுபான்மையினர் யார் என்பதை மாநில அளவில் தீர்மானிக்க வேண்டும் என்னும் கோரிக்கை வெற்றிபெற்றால், மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மாபெரும் வலிமை பெற்ற சமூகத்திற்கும் பெரும்பான்மைவாதத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான அரசியல் சட்டப் பாதுகாப்புகளின் - சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாகப் பலவீனமாக உள்ள சமூகங்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ஏற்பாடுகள் அவை - உதவி தேவை என்பதற்கான உலகளாவிய எடுத்துக்காட்டாக இந்தியா மாறும்.