சுந்தரவனத்தில் வணிக இறல் மீன் வளர்ப்பு: வறுமையைப் பயன்படுத்தி வளரும் தொழில்

14/03/2022
IiT English Page

வங்காள விரிகுடாவில் அடிக்கடி ஏற்படும் சூறாவளிகளால் கடல் நீர் பொங்கி அருகிலுள்ள கிராமங்களைச் சின்னாபின்னமாக்குகிறது. இந்தக் கிராமங்கள் வணிக இறால் மீன் வளர்ப்பை விரிவுபடுத்த விரும்பும் தனியார் வணிகர்களை ஈர்க்கும் இடங்களாக மாறிவருகின்றன. சிறிய அளவிலான இறால் வளர்ப்பு பல பதிற்றாண்டுகளாக வங்கத்தின் டெல்டா பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்களுக்கு வருமான ஆதாரமாக இருந்துவருகிறது. வணிக ரீதியான மீன்வளர்ப்புக்கான தற்போதைய விரிவாக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தனியார் உரிமையாளர்கள் சமூக அளவில் ஏற்னெனவே பின்தங்கிய குழுக்களைக் குறிவைக்கிறார்கள். இந்தக் குழுவினர் தாங்கள் படும் துயரத்தின் விளைவாகக் கடல் நீர் மீன் வளர்ப்பிற்காகத் தங்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நெல் சாகுபடியிலிருந்து மீன்வளர்ப்புக்கு மாறும் இந்தப் போக்கு நீண்ட கால பலவீனத்தை மேலும் அதிகரிக்கச் செய்யக்கூடிய முதல் படியாகும். வங்காள விரிகுடாவில் சூறாவளி வீசுவதற்கான வாய்ப்புள்ள பகுதிகளில் இறால் மீன் வளர்ப்பு சூழலுக்கேற்பத் தகவமைத்துக்கொள்ளும் தொழில் உத்தியாக முன்னெடுக்கப்படுகிறது. தீவிர இறால் மீன் வளர்ப்பானது சுற்றுச்சூழலைச் சிதைப்பதுடன் ஏழை நில உரிமையாளர்களை மேலும் துயரத்தில் மூழ்கடிக்க எவ்வாறு வழிவகுக்கிறது என்பதை வங்கதேசம், ஒடிசா ஆகியவற்றின் கடலோர கிராமங்களிலிருந்து கிடைக்கும் சான்றுகள் காட்டுகின்றன.

பேரிடர்களை முன்னறிவித்தல்
இறால் ஏற்றுமதியின் மூலம் நாட்டின் அன்னியச் செலாவணி இருப்பு அதிகரிப்பதுடன், கடலோரப் பகுதிகளில் உள்ள கிராமப்புறச் சமூகங்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில பிரிவினர் பரவலாக இடப்பெயர்வுக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படுகிறது என்பது இறால் வளர்ப்பின் தாக்கங்கள் பற்றி வங்கதேசத்திலும் ஒடிசாவிலும் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளிலும் இது எதிர்மறையான பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. வங்கதேசத்தில் 1986இல்14,773 டன்னாக இருந்த இறால் உற்பத்தி 2016இல் 132,730 டன்னாக உயர்ந்துள்ளது. 1986இல் 272 சதுர மைல்களாக இருந்த இறால் வளர்ப்பின் நிலப்பரப்பு 2016இல் 1,064 சதுர மைல்களாக அதிகரித்துள்ளது. வேகமாக நடந்த இத்தகைய விரிவாக்கம், இறால் வளர்ப்புக்கான சேம்பர்களை உருவாக்குதல் ஆகியவற்றால் சதுப்புநிலக் காடுகளின் பரப்பு குறைந்திருக்கிறது. கடலிலிருந்து வரும் உப்பு நீரைத் தேக்கிவைக்கும் இந்த சேம்பர்கள், கடந்த பல ஆண்டுகளில், மண்ணின் தரம் சீரழிய வழி வகுத்திருப்பதுடன் நிலப் பயன்பாட்டு முறைகளைப் பழைய நிலைக்குக் கொண்டுவர இயலாத அளவில் மாற்றியிருக்கின்றன.

வங்கதேசத்தில் வணிக இறால் உற்பத்தியை ஊக்குவித்ததன் பின்னணியில் சர்வதேச வங்கிகளும் வளர்ச்சித் துறைசார் நிறுவனங்களும் இருந்ததை ஷபன் அத்னான் (Shapan Adnan) விளக்கிக் கூறுகிறார். வணிக இறால் உற்பத்தியால் ஏழை விவசாயிகளை வெளியேற்றும் நில அபகரிப்புகளும் நிகழ்ந்திருக்கின்றன. சூழலுக்கு ஏற்பத் தகவைத்துக்கொள்ளும் உத்தியாக வணிக இறால் மீன் வளர்ப்பு முன்வைக்கப்படுவதில் நன்கொடையாளர்கள், பொதுத்துறை-தனியார் துறை கூட்டுச் செயல்பாடுகளின் இத்தகைய ஆதரவு வெளிப்படுகிறது. "வளர்ந்துவரும் கடலோர பாதிப்பு, மண்ணில் அதிகரித்துவரும் உப்புத்தன்மையின் அபாயங்கள் ஆகியவற்றைச் சந்தை வளர்ச்சி, ஏற்றுமதியால் கிடைக்கும் வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்றுவது"தான் இந்தத் தொழிலின் அடிப்படைத் தர்க்கம் என்று காசியா பாப்ரோக்கி, சலீமுல் ஹக் (Kasia Paprocki and Saleemul Huq) ஆகியோர் எழுதுகிறார்கள்.

வசுதா சோத்ரேயும் ஜோ ஹில்லும் (Vasudha Chhotray and Joe Hill) அண்மையில் ஒடிசாவில் மேற்கொண்ட ஆய்வு இந்தத் தொழில் உருவாக்கும் துயரங்களின் கதையை அம்பலப்படுத்துகிறது. சந்தை வளர்ச்சி, லாபத்தால் உருவாகும் வளர்ச்சி ஆகியவற்றின் கதையானது இந்த உண்மையை மறைக்கிறது. 1999இல் எர்சமா என்ற மாபெரும் சூறாவளிக்குப் பிறகு மீண்டு வருவதைப் பற்றிய அவர்களின் ஆய்வு, மீன் வளர்ப்பு ஒரு மோசமான தகவமைப்பு உத்தி மட்டுமல்ல என்பதையும், உண்மையில் அது பேரிடருக்குக் காரணமாவதுடன் பேரிடரின் அபாயங்களையும் அதிகரிக்கச் செய்கிறது என்பதையும் காட்டுகிறது. சூறாவளிகள், புயல்கள், வெள்ளம் ஆகியவற்றின்போது அதிக அளவு பெருக்கெடுக்கும் உப்பு நீர் இறால் லார்வாக்களை அழிக்கிறது. வைரஸ் தொற்றுப் பரவல்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள், மண், நீர் சுத்திகரிப்பு இரசாயனங்கள், நோய் எதிர்ப்பொருள்கள் ஆகியவற்றின் விளைவுகள் உடல்நல, சுற்றுச்சூழல் சார்ந்த பல அபாயங்களைக் கொண்டுள்ளன. பாக்டீரியாக்களாலும் வைரஸ்களாலும் ஏற்படும் தொற்றுப் பரவல்கள் விவசாயிகளை உலக மூலதனத்தின் ஏற்ற இறக்கங்களின் தயவில் இருக்கச்செய்வதுடன், பண்ணைகளையும் பழைய வளமான நிலத்தைக் கைவிடும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் நிலைமையை அலசும் சோட்ரேயும் ஹில்லும் மீன் வளர்ப்புப் பண்ணைகளை நோக்கி அரசு முன்னெடுக்கும் வளர்ச்சி எவ்வாறு வறுமையின் சுழற்சியை உருவாக்குகிறது என்பதைக் காட்டுகிறார்கள். உற்பத்தித் திறனற்றதாகக் கருதப்படும் நிலப்பரப்புகளை இது எவ்வாறு காலியாக்கி உற்பத்தித் திறனின்மையை மேலும் அதிகப்படுத்துகிறது என்பதையும் விவரிக்கிறார்கள். சந்தையால் முன்னெடுக்கப்படும் தகவமைத்தல் குறித்த கதையாடல்கள் மக்களின் துயரங்களையும் வறுமையையும் அதிகரிக்கச்செய்வதை மறைக்கும் போர்வையாகும். கார்ப்பரேட் நலன்களுக்காக வணிக மீன் வளர்ப்பைக் கைக்கொள்வதன் மூலம் விவசாயிகளின் வறுமைக்கும் கடற்கரையின் சீரழிவுக்கும் அரசு மறைமுகமாகக் காரணமாக உள்ளது. மேற்கு வங்கத்தின் எடுத்துக்காட்டுகளும் பேரழிவுகளை முன்னறிவிக்கின்றன. மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், பல மீன் வளர்ப்புப் பண்ணைகள், உலகச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், நோய்ப் பரவல்கள், விலை ஏற்ற இறக்கங்கள் காரணமாகச் செங்கல் சூளைகளாக மாற்றப்பட்டுள்ளன. இது மேலும் கடுமையான சுற்றுச்சூழல் சேதங்களுக்கு வழிவகுப்பதுடன் பழைய நிலைக்குத் திருப்பவே முடியாத அளவில் நிலப் பயன்பாட்டு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.

வறுமையைச் சுரண்டும் போக்கு
மேற்கு வங்கத்தின் தெற்கே உள்ள பெரும்பாலான கடற்கரை கிராமங்களில், இறால் மீன் வளர்ப்புடன் மற்றொரு ஆபத்தான போக்கும் சேர்ந்துகொள்கிறது. 2021 மார்ச்சில் தெற்கு 24 பர்கானாஸில் உள்ள ஒரு கடலோரக் கிராமத்திற்குச் சென்றபோது, மிகவும் பின்தங்கிய குடும்பங்கள், இறால் வளர்ப்பிற்காகத் தங்கள் நிலங்களைக் குத்தகைக்கு விட ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தேன். காளிதாஸ்பூர் – கிராமத்தின் பெயரும் நான் சந்தித்த நபர்களின் பெயர்களும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக மாற்றப்பட்டுள்ளன - கோசாபா பகுதியில் உள்ள ஒரு தீவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இடமாகும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நெல் சாகுபடி செய்துவரும் நடுத்தர வயது மனிதரான இட்ரிஸ் ஷேக்கைச் சந்தித்தேன். கடுமையான அரிப்பை எதிர்கொள்ளும் ஒரு தீவின் பக்கத்தில் அவரது பண்ணையுடன் கூடிய வீடு அமைந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் வீசிய மாபெரும் சூறாவளியான ஆம்பனுக்குப் பிறகு கரையில் ஏற்பட்ட உடைப்பினால் உப்பு நீர் உட்புகுந்தது. ஆம்பனால் ஏற்பட்ட அழிவுக்குக் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு அவரை நான் சந்தித்தேன்.

அவர் தனது நிலத்தை இறால் மீன் வளர்ப்பிற்காகத் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். "சிலிகுரியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர்" வன்னாமி இறால்களை வளர்ப்பதற்காகக் இவருடைய நிலத்தை (அருகிலுள்ள பல வீட்டுப் பண்ணைகளுடன் சேர்த்து) குத்தகைக்கு எடுக்கப் பலமுறை அணுகினார். சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட இறால் வகை இது. சிலிகுரியைச் சேர்ந்த நபர் 100 பிகாக்களை (20 ஏக்கர்) தேடிக்கொண்டிருந்தார். குத்தகைக் காலம் முதலில் ஐந்தாண்டுகள் எனத் தொடங்கும். பிறகு நீட்டிக்கப்படலாம். தனது விவசாய நிலத்திலும் வீட்டு நிலத்திலும் உள்ள சுவையான இனிப்பு நீர் கொண்ட குளத்தை உப்பு நீர் நிரம்பிய அறைகளாக மாற்ற முடியுமா என்னும் ஐயம் ஷேக்குக்கு இருந்தது. சூறாவளிக்குப் பிறகு உப்புநீர் உட்புகுந்ததால் அவரது நிலத்தின் உற்பத்தித்திறன் ஏற்கனவே குறைந்துவிட்ட நிலையில், அவரது நிலத்தை மீன் வளர்ப்புக்குக் குத்தகைக்கு விடுவதால், நெல் அல்லது வேறு எந்தக் காய்கறியையும் பயிரிட முடியாது.

வன்னாமி இறால் உலகளாவிய வடக்கு நாடுகளுக்கு - அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகள் – ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நாடுகளில் இது மிகவும் விரும்பப்படுகிறது. ஆனால் இது உள்ளூர் உணவு முறைகளில் சேரவில்லை. கிராமப்புற ஏழைகள் உட்கொள்ளும் ஊட்டச்சத்தை மேம்படுத்தவுமில்லை. இந்த ஒற்றை உற்பத்திச் செயல்பாடும் ஒரே ஒரு வகை இறால் இனத்தை மட்டும் இனப்பெருக்கம் செய்வதும் கடலோரச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் தன்மைக்கும் மாறும் சூழல்களுக்கேற்பத் தகவமைத்துக்கொள்ளும் தன்மைக்கும் நீண்ட கால நோக்கில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஷேக் அந்த நபரின் கோரிக்கையை மறுத்துவிட்டார். ஒரு பிகாவிற்கு மாதம் ரூ. 4,000 தருவதாக அப்போது அவர் கூறியிருந்தார். ஒரு வருடம் கழித்து, சிலிகுரி தொழிலதிபர் திரும்பி வந்து பிகா ஒன்றுக்கு ரூ. 6,000 தருவதாகச் சொன்னார். வன்னாமி சாகுபடியால் நீண்டகால நோக்கில் தீமைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருந்தபோதிலும், அடுத்தடுத்த சூறாவளிகளால் ஏற்பட்ட துயரங்களாலும் கோவிட்-19ஆல் ஏற்பட்ட பொதுமுடக்கங்களால் உருவான நிச்சயமற்ற சூழலாலும் ஷேக், அவரது சகோதரர்கள், அக்கம்பக்கத்து வீட்டினர் ஆகியோரால் இந்தக் கோரிக்கையை மறுக்க முடியாமல்போனது.

இந்தத் தீவில் உள்ள வறுமையான பகுதிகளில் ஒன்று காளிதாஸ்பூர். அக்கம்பக்கத்தில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகளின் சமூக அளவிலான குறிப்பான்கள் கவலை தரும் போக்கை வெளிப்படுத்துகின்றன. அவர்களில் முப்பத்து நான்கு பேர் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் வாழ்கின்றனர். அதில் அவர்களுக்குக் குடியேற்ற உரிமை (காஸ் ஜமீன்) உள்ளது. பன்னிரண்டு குடும்பங்கள் நில உரிமை (ரியோட்டி ஜமீன்) கொண்டுள்ளன. எட்டுக் குடும்பங்கள் பட்டியலின மீனவச் சமூகங்களைச் சேர்ந்தவை (ஜிலே பாக்டி, டெதுல் பாக்டி).

சுந்தரவனத் தீவுகள் முழுவதிலும் உள்ளதுபோல் காளிதாஸ்பூரில் உள்ள முஸ்லிம் குடும்பங்களுக்குச் "சிறுபான்மை அந்தஸ்து" உள்ளது, ஆனால் அவர்கள் எஸ்.சி. பிரிவில் சேர்க்கப்படவில்லை. மிகவும் மோசமான சமூக-பொருளாதார நிலையில் இருந்தபோதிலும், பிற பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்படும் எந்த நலத்திட்ட உதவிகளும் இந்தக் குடும்பங்களுக்குக் கிடைப்பதில்லை. இவர்களுடைய வறுமையும் சூறாவளி, புயல் ஆகியவற்றால் ஏற்படும் அழிவுகளும் சேர்ந்து தனியார் வணிகர்கள் இவர்களுக்கு வலைவிரிக்க வழி வகுக்கின்றன. ஷேக்கும் அவருடைய அக்கம்பக்கத்தினரும் விரக்தியில் இருப்பதால் வணிகர்கள் அவர்களின் நிலத்தை உப்பு நீர் சேம்பர்களாக மாற்ற அவர்களை ஒப்புக்கொள்ள வைப்பது எளிதாகிறது.

மேற்கு வங்கத்தின் வேகமாக மாறிவரும் நிலப்பரப்பிற்குக் காளிதாஸ்பூர் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய சில சமூகங்கள் ஏற்கெனவே அனுபவித்துவரும் துயரங்களால் வணிகர்கள் அவர்களை எளிதாகப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. பேரழிவு முதலாளித்துவத்தின் ஒரு வடிவம் இது.

இறால் மீன் வளர்ப்பு குறுகிய காலத் தகவமைப்பு உத்தியாக இருக்கலாம். ஆனால், நிலத்தடி நீரில் உப்புத்தன்மை கலந்து குடிநீர் ஆதாரங்களை மாசுபடுத்துவது, மீன் வளர்ப்புடன் கூடிய பல்வேறு சுற்றுச்சூழல் ஆபத்துகள் போன்ற நீண்டகால பாதகமான விளைவுகள் இதனால் ஏற்படும். மக்களின் வறுமையும் துயரமும் அதிகரிக்க இது வழிவகுக்கும். வங்த்தின் டெல்டா பகுதிகளில் சூறாவளி, புயல் ஆகியவற்றுடன், வறுமையையும் பலவீனமான நிலைமையையும் பயன்படுத்திக்கொள்ளும் இலாபம் சார்ந்த வணிக விவசாயம், சூழலுக்கேற்பத் தகவமைப்பு என்னும் வடிவில் நடைமுறைக்கு வருவது மேலும் அழிவையே ஏற்படுத்தும்.

மேக்னா மேத்தா

Author

மேக்னா மேத்தா புது தில்லியில் இருக்கும் எம்.எஸ். மெரியன் – ஆர். தாகூர் இன்டர்நேஷனல் சென்டர் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் “மெட்டமார்ஃபாசிஸ் ஆஃப் தி பொலிடிகல்” (ICAS:MP) அமைப்பில் ஃபெலோவாகப் பணிபுரிகிறார்.

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்