கடந்த சில மாதங்கள் இந்தியாவில் பெரும் மாற்றங்களைக் கண்ட காலகட்டம். பொருளாதார மந்த நிலையும் கோவிட்-19 நெருக்கடியும் முக்கியக் குவிமையங்களாக இருந்த இந்தக் காலகட்டத்தில் வேகமாகக் கடந்து செல்லும் செய்திகளுக்கிடையே வெளிப்பார்வைக்குத் தொடர்பற்றவையாகத் தோன்றும் இரண்டு செய்திகள் வெளியாயின. பெண்களின் சட்டபூர்வமான திருமண வயதை 21ஆக உயர்த்துதல், கிழக்கு இந்தியாவில் வெள்ளம் ஆகியவையே அவை. குழந்தைத் திருமணச் சட்டம் (2006) அமலாக்கப்பட்ட பத்து ஆண்டுகளில் குழந்தைத் திருமணங்கள் 38.69இலிருந்து 16.1ஆகக் குறைந்துவிட்டது என்றாலும் கிழக்கு இந்தியாவில் இந்தப் பழக்கம் இன்னமும் தொடர்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த குழந்தைத் திருமணங்களில் கிட்டத்தட்ட 30 விழுக்காடு இந்தப் பகுதியில் இருக்கும் நான்கு மாநிலங்களில் (பிகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம்) நடக்கின்றன. திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது குறித்த சட்டம் இந்தப் பகுதியில் குறைந்த வயதுடையோர் திருமணம் செய்துகொள்வதைப் பெரிதாகத் தடுத்துவிடவில்லை. அதுபோலவே, வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. மழையால் வெள்ளம் பெருக்கெடுக்கும் நிகழ்வுகளின் எண்ணிக்கையும் தீவிரத்தன்மையும் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது.
உரிய வயதுக்கு முன்பே திருமணம் செய்துவிடும் பழக்கம் இந்தப் பகுதியில் தொடர்வதற்குக் காரணம் என்ன? அண்மையில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் உரிய வயதுக்கு முன்பு நடக்கும் திருமணங்களுக்கும் இயற்கைப் பேரிடர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்திருக்கிறோம். இயற்கைப் பேரிடர்களால் உருவாகும் பொருளாதாரச் சீரழிவால் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்ககூடும் என்று அதில் வாதிட்டிருக்கிறோம். இரண்டுக்குமிடையிலான காரண – காரியத் தொடர்பை வெளிப்படுத்துவதற்காக 2008ஆம் ஆண்டு பிற்பகுதியில் பிகாரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் மீது கவனம் செலுத்தியிருக்கிறோம். இந்த வெள்ளம் இப்பகுதியில் பெரும் பொருளாதார அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2008 ஆகஸ்ட் 18 அன்று நேபாளத்தில் உள்ள சுன்சாரி மாவட்டத்தைச் சேர்ந்த குசாஹா என்னும் கிராமத்தில் கோசி ஆற்றின் தடுப்புச் சுவர் உடைந்ததையடுத்து அந்த ஆறு 200 ஆண்டுகளுக்கு முன் தான் கைவிட்ட பாதையில் பாய்ந்தது. தனது பாதையிலிருந்து 100 கிலோமீட்டர் தள்ளி இந்த ஆறு பாய்ந்ததில் வடக்கு பிகாரில் பல பகுதிகள் நீரில் மூழ்கின. அராரியா, மாதேபுரா, சஹர்சா, சுபால், புர்னியா ஆகிய இடங்களில் உள்ள சுமார் ஆயிரம் கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 10 லட்சம் பேர் தற்காலிகமாக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டி இருந்தது. மேலும் 20 லட்சம் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள். அரசு விரைவாக நடவடிக்கை எடுத்தது என்றாலும், பல குடும்பங்கள் வெள்ளப் பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகளைத் தாங்களே செய்துகொள்ள வேண்டியிருந்தது. 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் நான்கு மாதங்களுக்கு தங்கியிருந்தார்கள். 2008 டிசம்பர் மாதத்தில்தான் அவர்கள் வீடு திரும்ப முடிந்தது. உயிரிழப்பு குறைவாக இருந்தாலும் (577 பேர் - பிகார் மக்கள்தொகையில் இது 0.005 விழுக்காடு) வெள்ளத்தால் பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இழப்பு ரூ. 5935 மில்லியன் ($134.9) என மதிப்பிடப்பட்டது. இது அந்த ஆண்டு மாநிலத்தின் நிகர உற்பத்தியில் 0.5 விழுக்காடு. அப்போதைய பிரதம மன்மோகன் இந்த வெள்ளப்பெருக்கை “தேசியப் பேரிடர்” என அறிவித்தார்.
திருமண வயதின் மீது கோசி ஏற்படுத்திய காரண – காரிய விளைவை அறிவதற்காக தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் நான்காம் பகுதியைப் பயன்படுத்திக்கொண்டோம். வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலுள்ள இடம் சார்ந்த மாறுபாடுகளையும், திருமண வயதில் ஏற்பட்ட தற்காலிக மாறுபாடுகளையும் பயன்படுத்திக்கொண்டோம். வேறுபாடுகளில் உள்ள வேறுபாடுகள் என்னும் சட்டகத்திற்குள் இவற்றைப் பொருத்திப் பார்த்தோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2001 முதல் 2008 ஜூலை வரை (இரு விதமான மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்படாத காலகட்டம்) நடந்த திருமணங்களில் குழந்தைத் திருமணங்களின் விகிதத்தையும் 2008 செப்டம்பர் முதல் 2015 வரை (வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பொருளாதாரப் பேரிழப்பை எதிர்கொண்ட காலகட்டம்) நடந்த திருமணங்களில் குழந்தைத் திருமணங்களின் விகிதத்தையும் ஒப்பிடுவதன் மூலம் திருமண வயதின் மீது வெள்ளம் ஏற்படுத்திய தாக்கத்தைக் கணக்கிடும் வழிமுறை இது. வெள்ளம் ஏற்படாதபோது நடந்த திருமணங்களில் நிகழ்ந்த குழந்தைத் திருமணங்கள், வெள்ளம் ஏற்பட்டபோது நடந்த திருமணங்களில் நிகழ்ந்த குழந்தைத் திருமணங்கள் ஆகியவற்றிடையே இருந்த மாறுபாடுகளின் மூலம் திருமண வயதின் மீது கோசி வெள்ளம் ஏற்படுத்திய தாக்கத்தை அறிந்துகொள்ள முடியும்.
18,797 பெண்களும் 3030 ஆண்களும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் 2001- 2016க்கு இடையில் திருமணம் செய்துகொண்டவர்கள். வெள்ளத்திற்கு முந்தைய ஏழு ஆண்டுகளும் பிந்தைய ஏழு ஆண்டுகளும் அடங்கிய காலகட்டம் இது. தேசிய தேசியக் குடும்ப சுகாதார ஆய்வு இதில் 15 விழுக்காட்டு அளவிலான மக்களை மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தியது. அதுவும் சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமணமான ஆண்களை ஆண்களிடையே மட்டுமே அந்த ஆய்வு நடத்தப்பட்டது. 1950களில் ஆற்றின் இரு புறங்களிலும் தடுப்புச் சுவர் எழுபப்பட்டதையடுத்துப் பல பத்தாண்டுகள் இந்தப் பகுதியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது இல்லை என்பது கோசி வெள்ளத்திற்கும் திருமண வயதிற்கும் இடையிலான காரண-காரியத் தொடர்பை நிரூபிகிறது. 2008இல் பிகாரில் பருவமழையின் அளவு இயல்பாகவே இருந்தது. பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களின் மக்கள் வெள்ளம் வரும் என்று துளிக்கூட எதிர்பார்க்கவில்லை.
அனுபவத்தின் அடிப்படையிலான இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி ஆண், பெண்களின் திருமண வயது குறைந்திருப்பதை நாங்கள் காட்டியிருக்கிறோம். உரிய வயதுக்கு முன் திருமணம் செய்துகொண்ட ஆண்களின் எண்ணிக்கை 6.9 விழுக்காடும் பெண்களின் எண்ணிக்கை 3.6 விழுக்காடும் அதிகரித்திருக்கின்றன. கிடைத்துள்ள புள்ளிவிவரங்களில் 3030 இணையர் குறித்த தகவல்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் குழந்தைத் திருமணங்கள் 7.1 விழுக்காடு புள்ளிகள் (நிகழ்தகவு மதிப்பு 0.13) அதிகரித்திருப்பதை அறிய முடிகிறது. இது குறைந்த வயதில் திருமணம் செய்து கொண்ட ஆண்களின் விழுக்காடு எந்த அளவு அதிகரித்திருக்கிறதோ அதற்கு இணையாக உள்ளது. வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட இரண்டரை ஆண்டுகளில் நடந்த திருமணங்கள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதையும் கண்டறிந்தோம். சொத்து இழப்பு அதிகமாக இருந்த மாவட்டங்களில் வெள்ளத்தால் திருமண வயதில் ஏற்பட்ட விளைவு அதிகமாக உள்ளது.
கோசி வெள்ளத்திற்கும் குழந்தைத் திருமணங்களுக்கும் இடையே உள்ள இந்தத் தொடர்பு எதை உணர்த்துகிறது? பொருளாதார அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காக இளம் ஆண்கள் உள்ள குடும்பங்கள் வரதட்சணையை மனதில் கொண்டு அவர்களுக்கு விரைவிலேயே திருமணம் செய்து வைத்துவிடக்கூடும். ஏற்கனவே வறுமையில் உள்ள குடும்பங்கள் இப்படிச் செய்வதற்கான வாய்ப்பு அதிகம். ஆண்கள் பொதுவாகத் தங்களை காட்டிலும் காட்டிலும் வயதில் குறைந்த பெண்களை மணம் புரிந்துகொள்கிறார்கள் என்பதால் அந்தப் பெண்களுக்கும் மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்துவிடுகிறது. திருமணம் ஆகும் வயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் முறையே 10 மாதங்களும் நான்கரை மாதங்களும் குறைகிறது. திருமணமாகும் வயது குறைவது என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமமாகத்தான் இருக்கும் என்பதில்லை. திருமண வயது குறையும் அளவானது பெண்கள் விஷயத்தில் சற்றுக் குறைவாகவே இருப்பதால் திருமணம் செய்துகொள்ளும் இணையர் இடையேயான வயது வித்தியாசம் குறைவாக இருக்கும் என்ற முடிவுக்கு நாம் வரலாம். இது குறையத்தான் செய்கிறது என்றாலும் ஆண்களுக்கும் பெண்களுக்குமான தகவல்களைக் கொண்ட குறைந்த அளவிலான மாதிரியில் தான் நாம் இதை கணக்கிட முடிகிறது என்பதால் இதைத் துல்லியமாகக் கணக்கிட முடியாது. வெள்ளத்தின் பாதிப்புகள் ஆண்களிடையே அதிகம் இருப்பதால் மணமகன்களைக் கொண்ட குடும்பங்களின் செயல்பாடே இந்த போக்கைத் தீர்மானிக்க வாய்ப்புள்ளது.
வரதட்சணை அதிகமாக இருக்கும் இந்துக் குடும்பங்களிலும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலமற்ற குடும்பங்கள் மீதும் கோசி வெள்ளத்தின் பாதிப்பு அதிகம் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். மேலே கூறப்பட்டுள்ள விளக்கத்திற்கு இது வலு சேர்க்கிறது. பள்ளிக்கூடங்களின் உள்கட்டமைப்பையும் மாணவர் சேர்க்கையிலும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பு மாறுபட்டதாக இல்லை என்பதையும் நாங்கள் காட்டியிருக்கிறோம். பள்ளி இடைநிற்றல் குழந்தைத் திருமணங்களின் அதிகரிப்புக்குக் காரணம் இல்லை என்பதை இது உறுதிப்படுத்துகிறது. கோசி வெள்ளத்தால் ஆண், பெண் விகிதாச்சாரம் மாறியிருப்பதற்கான தடயம் எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே இதுவும் குழந்தைத் திருமணங்களுக்குக் காரணமாக இராது என்னும் முடிவுக்கு வந்தோம். திருமணத்தால் குடிபெயர்வது என்பது குறைந்த தொலைவிற்குள்ளாகவே, பெரும்பாலும் அதே மாவட்டத்திற்குள், நடந்திருந்தாலும் கோசி மாவட்டத்தில் உள்ள பெண்கள் பக்கத்தில் உள்ள மாவட்டங்களில் உள்ள ஆண்களை மணந்திருக்கவும் கோசிக்கு அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள பெண்கள் கோசி மாவட்டத்து ஆண்களை மணந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இயற்கைப் பேரிடர்களின் எதிர்வினையாக, அதன் இழப்பைச் சமாளிப்பதற்கான வழியாகக் குழந்தைத் திருமணங்கள் நடக்கக்கூடும் என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. முடிவெடுக்கும் இடத்தில் உள்ள பெற்றோர் தங்கள் முடிவின் நீண்ட கால நோக்கிலான விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படுவதால் குழந்தைத் திருமணங்கள் குடும்ப நலன்களைப் பாதிக்கின்றன. உயர்நிலைக் கல்வியை முடிக்கும் திருமணமான ஆண்கள், பெண்களின் எண்ணிக்கையைக் கோசி வெள்ளம் குறைத்துவிட்டது. பெண்கள் வேலைக்குச் செல்வது குறைவாக இருப்பதுடன் அவர்களிடம் சொந்தப் பணம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் இடங்களில் அவர்களுடைய பொருளாதாரத்தில் வெள்ளம் ஏற்படுத்தும் எதிர்மறை பாதிப்புகளையும் நாங்கள் ஆவணப்படுத்தியிருக்கிறோம். பெண்கள் விரைவிலேயே திருமணம் செய்துகொள்வதால் கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்பு, அவர்களுடைய குழந்தைகளின் திறன் வளர்ச்சி முதலான கூறுகளில் பாதிப்பு ஏற்படுவதைக் காட்டும் ஆவணங்களுக்கு நாங்கள் கண்டறிந்த இந்தப் போக்குகள் வலு சேர்க்கின்றன. ஆகவே, பொருளாதார அதிர்ச்சியை எதிர்கொள்ளக் குழந்தைத் திருமணங்கள் உதவுவதாகப் பெற்றோருக்குத் தோன்றினாலும் அவை இளம் இளைஞர் வாழ்வில், குறிப்பாகப் பெண்களின் வாழ்வில், தொலைநோக்கிலான இழப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன.
இயற்கைப் பேரிடர்கள் திருமணம் என்னும் நிறுவனத்தின் மூலமாகப் பெண்கள் மீது நீடித்து நிலைக்கக்கூடிய தாக்கத்தைச் செலுத்தக்கூடும் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. கிழக்கு இந்தியா முன்பை விடவும் விட அதிகமாக வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் குழந்தைத் திருமணங்களுக்கும் இயற்கைப் பேரிடர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை அறுப்பதற்கான கொள்கைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது இன்று மிகவும் அவசியமாகிறது. கோவிட் -19 பெருந்தொற்றின்போது வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்ட இழப்பும் பல இளைஞர்களை உரிய வயதுக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளத் தூண்டக்கூடும். குறிப்பாக ஏற்கெனவே வறுமையில் உள்ள குடும்பங்களில் இது நடக்கலாம். கடந்த சில மாதங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. அரசின் கொள்கை சார்ந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, பேரிடர் காப்பீடு அல்லது குறைந்த வட்டியில் கடன் எளிதில் கிடைக்கும்படி செய்தால், பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் பொருளாதார அதிர்ச்சி அதிர்ச்சியிலிருந்து மீள வரதட்சணையைத் தவிர்த்த வேறு வழிகள் இருக்கும் என்பதை அரசு உணர வேண்டியது முக்கியம். இதன் மூலம் இயற்கைப் பேரிடர்களுக்கும் குழந்தைத் திருமணங்களுக்கும் இடையிலான தொடர்பை வலுவிழக்கச் செய்யலாம்.