இந்தியாவின் பின்காலனிய அரசியல் சாசனம் கூட்டாட்சிக்குப் புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தியது. குறைந்த அளவிலான அல்லது “முழுமையற்ற” கூட்டாட்சி என்று அது அப்போது வரையறை செய்யப்பட்டு, இன்றளவிலும் அப்படியே நீடிக்கிறது. மைய அரசும் மாநில அரசுகளும் தம்மளவில் தன்னிச்சையான அதிகாரம் கொண்டவை என்னும் கருத்திலிருந்து விலகி, மாநில அரசு விவகாரங்களில் மைய அரசு தலையிடும் வகையில் இந்தியாவின் கூட்டாட்சி வரையறை செய்யப்பட்டது. 1989-2014 காலகட்டத்தில் மாநிலங்களுக்கான அரசியல் ரீதியான உரிமைகள் வலுப்பெற்றுவந்தன. நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக அரசு தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்த பிறகு இந்திய அரசியல் சாசனத்தின் மையப்படுத்தும் தன்மை மீண்டும் முதன்மை பெற்றது.
இங்கே, வரலாற்றில் இந்தியாவின் தனித்துவமான கூட்டாட்சி முறையின் முன்னுதாரணங்களை நான் ஆராய்கிறேன். மாதவ் கோஸ்லா அண்மையில் எழுதிய கட்டுரையில் வாதிட்டதுபோல், இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியா ஜனநாயகமயமாக்கலுடன் அரசியலமைப்பு சார்ந்த புதுமைகளின் குறிப்பிடத்தக்க பாதையில் அடியெடுத்து வைத்தது. இதன் முக்கியத்துவம் இருபதாம் நூற்றாண்டிற்கு "முன்னுதாரணமாக" இருந்தது. இந்தக் காலகட்டத்தில் வடிவமைக்கப்பட்ட இந்தியக் கூட்டாட்சி மாதிரியின் முக்கியத்துவமும் முன்னுதாரணமாகவே அமைந்தது. வரலாற்றில் இத்தகைய நிகழ்வுகளைத் திரும்பிப் பார்ப்பதன் மூலம், இந்தியக் கூட்டாட்சி என்பது முந்தைய கூட்டாட்சி முறையின் குறைக்கப்பட்ட வடிவம் அல்ல என்பதையும், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற தருணத்தில் இருந்த சவால்களை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் கூடிய புதிய வடிவிலான கூட்டாட்சியாக இருப்பதையும் காணலாம்.
பிரிவினையைத் தொடர்ந்து தேசத்தை ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற அரசியல் நிர்ணய சபையின் கவலையிலிருந்து இந்தியாவின் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை உருவானது என்று அடிக்கடி வாதிடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் மையப்படுத்தும் போக்குகள் ஜனநாயகமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்ததாக கோஸ்லா கூறுகிறார். மையப்படுத்தப்பட்ட வலுவான அதிகாரம் என்பது, உள்ளூரில் நிலவிய ஆதிக்க முறைகளிலிருந்து தனிநபர்களை விடுவிக்கும் திட்டத்திற்கு முக்கியமானது என்றும் அவர் கூறுகிறார். இந்தியாவில் அரசு மற்றும் மக்கள் நலக் கொள்கையின் வரலாறு பற்றிய புத்தகத்திற்கான என்னுடைய ஆராய்ச்சியின் அடிப்படையிலும், இந்தியக் கூட்டாட்சிக் கோட்பாடு பற்றிய என்னுடைய நீண்டகாலப் பணிகளின் அடிப்படையிலும், இந்தியாவில் கூட்டாட்சி வடிவமைப்பைத் தேர்ந்தெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்திய சில அரசியல் பொருளாதாரக் காரணிகளை இங்கு ஆராய்கிறேன். மாகாணங்களுக்கு இடையேயான பொருளாதாரப் போட்டியால் இந்திய அளவிலான தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்படக்கூடிய அபாயங்களைத் தாண்டி தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்னும் விருப்பம் இந்திய மூலதனப் பிரிவினர், தொழிலாளர் தலைவர்கள், தேசியவாத அரசியல்வாதிகள் ஆகியோரிடையே இருந்தது. இந்தியக் கூட்டாட்சியின் தனித்தன்மையான கூறுகள் இந்த விருப்பத்திலிருந்து உருவானது என்ற கருத்தை நான் முன்வைக்கிறேன்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பருத்தி ஜவுளி, சணல் உற்பத்தி ஆகியவை இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறைகளாக இருந்தன. ஜவுளித் துறையில் மாகாணங்களுக்கு இடையே நிலவிய போட்டி தொழிலாளருக்கான செலவுகள், பணியிடச் சூழ்நிலை ஆகியவற்றை மிகவும் அடிமட்டத்திற்குத் தள்ளியது. இந்திய ஜவுளித் தொழிலின் மிகப் பழமையான மையமான பம்பாய் நகரத்தில் இந்தத் தொழிலின் செயல்பாடுகள் லாபமற்றதாக மாறின. சம்பளக் குறைப்பு, பணிநீக்கங்கள், இந்தத் துறையை “தர்க்கபூர்வமான” மாற்றங்களுக்கு உட்படுத்தும் முயற்சிகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு எழுந்ததில் இந்தத் தொழில் துறையில் அமைதியின்மை ஏற்பட்டது. சில முதலாளிகள், தொழிலாளர் தலைவர்கள் (பி.ஆர். அம்பேத்கர் உள்ளிட்டோர்), இந்திய தேசிய காங்கிரஸில் உள்ள அரசியல்வாதிகள் சீரழிந்த தொழில்துறை உறவுகளை மேம்படுத்துவதற்கான தீர்வினைப் பல்வேறு வகைகளில் முன்னிறுத்தினார்கள். தொழிலாளர் கொள்கைகளையும் சமூகப் பாதுகாப்பையும் ஒருங்கிணைக்கக்கூடிய மையப்படுத்தப்பட்ட அரசு இருக்க வேண்டும் என்னும் கருத்தை அவர்கள் முன்வைத்தார்கள். சில பகுதிகளில் முதலாளிகள் மீது அதிகச் சுமையைச் செலுத்துவதாகவும் சில பகுதிகளில் அவ்வாறு இல்லாததாகவும் அமையாமல் இந்திய அளவில் ஒரே சீராக இருக்கும் வகையில் இந்த அணுகுமுறை இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கருதினார்கள். புதிய சர்வதேசத் தொழிலாளர் அமைப்பில் உருப்பெற்ற தொழிலாளர்களுக்கான சமூகக் காப்பீடு போன்ற திட்டங்கள் உள்ளூர் முதலாளிகள் மீது கூடுதல் செலவினங்களைச் சுமத்தக்கூடியவை. பம்பாய் போன்ற மாகாணங்கள் இதுபோன்ற பரிசோதனைகளில் ஈடுபடுவதற்கான வழிகளைக் குறைந்த ஊதியம் வழங்கும் பிராந்தியங்களிலிருந்து எழும் போட்டியானது குறைத்துவிட்டது.
இந்திய அரசின் 1919, 1935 ஆண்டின் சட்டங்கள் முறையே சர்வதேசத் தொழிலாளர் அமைப்பும் பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியும் (இந்தியாவின் தேசிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் கருத்துக்களை முன்வைத்து) அளித்த அழுத்தத்தினால் கடைசி நேரத்தில் திருத்தப்பட்டன. அரசியலமைப்பின் மத்திய-மாநிலக் கூட்டுப் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் தொழிலாளர் கொள்கையின் தேசிய ஒருங்கிணைப்புக்கான நோக்கம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆவணக் காப்பகங்களில் நான் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது தெரியவந்தது. தேசியத் தொழில்துறைக் கொள்கைகளையும் தொழிலாளர் கொள்கைகளையும் வகுப்பதைத் தவிர்த்துவந்த காலனித்துவ அதிகாரிகள் எதிர்பாராத வகையில் இது நடந்தது. அவர்கள் மையத்திலிருந்து தலையிடும் அணுகுமுறைக்குப் பதிலாக, அவரவர் விருப்பப்படி செயலாற்ற அனுமதிக்கும் அதிகாரப்பரவலை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையையே விரும்பினார்கள். இந்த அரசியலமைப்பு விதிகள் பிறப்பிக்கப்பட்ட 1940களின் முற்பகுதியில் தேசியத் தொழிலாளர் மாநாடுகள் நிறுவப்பட்டன. தொழில்துறை உறவுகளையும் தொழிலாளர் கொள்கைகளையும் மையத்திலிருந்து தீர்மானிப்பதற்காக நிறுவப்பட்ட முதலாளிகள், தொழிலாளர், மாநிலம் ஆகியவற்றின் முத்தரப்பு நிலைக்குழுவுக்கான முன்னோடியாக இது அமைந்தது.
அரசியல் நிர்ணய சபை அரசியல் சாசனத்திற்கான வரைவை உருவாக்கியபோது அதிலுள்ள அதிகாரப் பகிர்வுகளை இந்திய அரசாங்கச் சட்டம், 1935இன் அடிப்படையில் அமைத்தது. இது காலனிய அரசியல் சட்டத்தின் வார்ப்பை அப்படியே உள்வாங்கிக்கொண்டதாகவோ அல்லது ஏற்கெனவே நிலவிய கூட்டாட்சி அமைப்பின் குறைவுபட்ட வடிவமாகவோ அமையவில்லை. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தாங்கள் எதிர்கொண்ட அரசியல், பொருளாதார நிலைமைகளுக்குப் பொருத்தமான மாறுபட்ட கூட்டாட்சி முறையை இந்தியாவின் அரசியலமைப்புச் சிற்பிகள் விரும்பி ஏற்றுக்கொண்டனர். அமெரிக்கா அல்லது கனடா போன்ற பரவலாக்கப்பட்ட கூட்டாட்சி அமைப்புகளில் எழுந்த கூட்டு நடவடிக்கைச் சிக்கல்கள் சிலவற்றை முன்கூட்டியே உணர்ந்து தவிர்க்க விரும்பிய இந்தியா, மையப்படுத்தப்பட்ட கூட்டாட்சி வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்தது. அந்த நாடுகளில் விரிவான முறையில் மக்கள் நல அரசுகள் அமைவதற்கான அழுத்தம் அதிகரித்தபடி இருந்தது. ஆனால் வேலையின்மைக்கான காப்பீடு அல்லது ஓய்வூதியங்கள் போன்ற கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில் மாநிலங்களுக்கிடையேயான போட்டி தடையாக இருந்தது. இதுபோன்ற நடவடிக்கைகள் இதர பிராந்தியங்களைக் காட்டிலும் ஒரு பிராந்தியத்தில் தொழிலாளர்களுக்கான செலவுகளை அதிகரிக்கச் செய்துவிடும்.
இந்தியக் கூட்டாட்சியில் மையத்தில் அதிகாரக்குவிப்பு அல்லது மையப்படுத்தும் அணுகுமுறையின் முன்னிகழ்வுகள் வெறும் வரலாற்று விவாதத்திற்கு உரியவை அல்ல. தேசிய, மாநில அரசியல் அதிகாரத்தையும் கொள்கை வகுக்கும் அதிகாரத்தையும் நிலைநிறுத்திக்கொள்வதற்கான போட்டி நிலவும் சூழலைத் தொடர்ந்து வடிவமைப்பதால் அவை இன்றும் முக்கியமானவையாக இருக்கின்றன. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், மையப்படுத்தப்படும் அதிகாரம் என்னும் அணுகுமுறையை அனைத்திந்திய அளவில் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் சக்தியாகச் சில வழிகளில் மாற்றியுள்ளதும் ஒரு நகைமுரண்தான். தேசிய அளவில் தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்திற்குப் பல பதிற்றாண்டுகளாக நீடித்துவந்த தடைகளைக் கடக்கும் வழிமுறையாக, சிறிய ஆனால் அரசியல் ரீதியாக அணிதிரட்டப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட துறையை நிர்வகிக்கும் மத்திய தொழிலாளர் சட்டங்களை கட்டுப்படுத்தவும் திருத்தவும் மாநில அரசுகளை மோடி அரசாங்கம் ஊக்குவித்துள்ளது. அதே நேரத்தில், மக்கள் நலப் பணிகள், அமைப்புசாரா துறைக்கான நேரடிப் பலன்களை வழங்கும் திட்டங்கள் ஆகியவற்றுக்கான வடிவமைப்பையும் அவற்றின் நன்மைகளுக்கான பெருமைகளையும் மத்திய அரசு தன்வசப்படுத்தியுள்ளது. இவற்றை வடிவமைத்துச் செயல்படுத்துவதில் முன்பு மாநில அரசுகள் முக்கியப் பங்காற்றிவந்தன. இத்தகைய இரட்டை அணுகுமுறை மாநிலங்களிடையே நிலவும் போட்டி காரனமாகத் தொழிலாளர்களின் நலன்களை அடிமட்டத்திற்குக் கொண்டுசெல்லும் சூழ்நிலையைத் தடுப்பதில் மத்திய அரசுக்கு உள்ள கட்டுப்படுத்தும் பங்களிப்பைப் பலவீனப்படுத்துகிறது. அதே நேரத்தில் அமைப்புசாரா துறைக்கான நலத்திட்டங்களின் அமலாக்கத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசுடன் ஒத்துழைத்து செயல்படுவதற்கான மாநில அரசுகளின் (குறிப்பாக எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் அரசுகளின்) ஊக்கத்தையும் திறனையும் குறைக்கிறது. ஆனால், மக்கள் நலத் திட்டங்கள் என்னும் துறையில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நிலவும் சிக்கல்களின் யதார்த்தங்கள், இந்திய அரசியலமைப்பின் சிற்பிகளின் விரும்பிச் செய்த தேர்வுகளைப் பிரதிபலிக்கின்றன. அவர்கள் மக்கள் நலத் திட்டங்கள் என்பது மத்திய அரசு அல்லது மாநில அரசின் தனிப் பொறுப்பில் இருக்கக் கூடாது என்று கருதினார்கள்.