பல்வேறு அடுக்குகளாலான நிர்வாகத்தையும் சிக்கலான அதிகாரப் பரவலையும் கொண்ட கூட்டாட்சி அமைப்பு நெருக்கடியின்போது முடிவெடுப்பதற்குப் பொருத்தமானதல்ல என்று சில வேளைகளில் கருதப்படுகிறது. நிதி நெருக்கடிகள், உலகப் போர்கள் பெருந்தொற்றுக்கள் ஆகியவை கூட்டாட்சி அமைப்பு வழக்கொழிந்துபோனது என அறிவிப்பதுண்டு. இத்தகைய நெருக்கடிகள் அரசியல் சாசனத்தின் பல திட்டங்களில் முன்கூட்டியே ஊகிக்கப்படாத ஒருங்கிணைப்புப் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. அதிகாரத்தைப் பிரித்து அளித்தல் என்னும் நடப்பிலுள்ள நடைமுறையை நசுக்கிவிட்டு நெருக்கடி கால அதிகாரங்களைக் கைக்கொள்வதை இந்த நெருக்கடிகள் நியாயப்படுத்துகின்றன. “கூட்டாட்சி யுகம் முடிவுக்கு வந்துவிட்டது… மையப்படுத்தப்பட்ட அமைப்பு மட்டுமே புதிய காலத்தின் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும்” என்று 1930களில் அமெரிக்காவைக் குறித்து ஹரால்ட் கஸ்கி எழுதினார். “தொற்று நோயைக் கட்டுப்படுத்த தேசிய அளவிலான ஒருங்கிணைப்பும் அரசுகளுக்கிடையிலன ஒத்துழைப்பும் பெரிய அளவில் தேவை” என்று அண்மையில் ரோஸல்லும் வில்காக்ஸும் குறிப்பிட்டார்கள்.
மத்திய-மாநில உறவுகளின் வழியாகப் பார்க்கையில் இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று என்னும் நாடகம் இரண்டு காட்சிகளைக் கொண்டது. மையப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள், அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தது என்னும் போக்குகள் கொண்ட இந்த இரு காட்சிகளும் இந்தியாவின் ஆளுகை சார்ந்த சவால்களின் ஆதார மையமாக இருந்துவரும் மத்திய-மாநில உறவுகளின் கட்டமைப்பிலுள்ள முக்கியமான பலவீனங்களை அம்பலப்படுத்தியிருக்கின்றன. அளவுக்கதிகமாக மையப்படுத்தப்பட்ட ஒருதரப்பிலான நடவடிக்கைகள் இருந்ததாக விமர்சனம் எழுந்த நிலையிலிருந்து மைய அரசு என்பதே இல்லாத நிலை என்னும் விமர்சனம்வரை இந்தப் போக்கு ஊசலாடுகிறது. முடிவெடுக்கும் நடைமுறையில் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும் அதிகாரப்பரவலும் எந்த அளவு இருக்க வேண்டும் என்னும் விவாதத்தைத் தாண்டி, மத்திய-மாநில அரசுகளுக்கிடையே இருக்க வேண்டிய திறன்மிகு ஒருங்கிணைப்பு இல்லாமல்போனதுதான் பெருந்தொற்றின் இரு கட்டங்களிலும் முக்கியமான பிரச்சினை என்பதைக் காண இந்த விமர்சனங்கள் தவறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.
முதல் அலையின் மையம்சார்ந்த அணுகுமுறை
கோவிட்-19 பெருந்தொற்றுக்கான இந்தியாவின் தொடக்கக் கட்ட எதிர்வினை பெருமளவில் மையப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்பது ஓரளவுக்கு முன்பே தெரிந்ததுதான். 2019 தேர்தலுக்குப் பிறகு நரேந்திர மோடி அரசு தன்னுடைய அரசியல் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியாக, கூட்டாட்சி முறைக்குப் பதில் மையப்படுத்தப்பட்ட “ஒரே நாடு” என்னும் அணுகுமுறையைத் தீவிரப்படுத்தியது.
கூட்டாட்சி முறை நிலவும் பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளின் தேசியவாத மக்கள் தலைவர்கள் பெருந்தொற்றின் முதல் சில மாதங்களில் செயல்பட்ட விதத்திற்கு முரணாக மோடி ஒரே நாளில் உலகின் ஆகக் கடுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்தினார். உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான பொறுப்பை மாநில அரசுகளிடம் விடுவதற்குப் பதிலாக, மத்திய அரசு வேகமான நடவடிக்கை எடுத்ததது என்று பெருமையடித்துக்கொள்ள விழைந்தார். வாக்காளர்களுடன் உணர்வுபூர்வமான தொடர்புகொள்வதில் தனக்கிருக்கும் திறமையை நம்பி, பல்வேறு துன்பங்களையும் மீறிப் பொதுமுடக்கத்தையும் அமல்படுத்தினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும் அவர் இப்படித்தான் அமல்படுத்தினார்.
பெரிதும் மையப்படுத்தப்பட்ட இந்தியாவின் இந்தச் செயல்பாட்டைப் பலரும் விமர்சித்தார்கள். கோவிட்-19இன் தாக்கமும் மருத்துவக் கட்டமைப்பும் மாநிலத்துக்கு மாநிலம் பெருமளவில் வேறுபடும் நிலையில் நாடு முழுமைக்கும் ஒரே தீர்வை அமல்படுத்தக் கூடாது என்றார்கள். கடுமையான பொதுமுடக்கத்தின் சமூக, பொருளாதார பாதிப்புகளை - குறிப்பாக இந்தியாவின் முறைசாராத் துறையைச் சேர்ந்த பெருமளவிலான தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை - எதிர்கொள்வதில் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ள திறனையும் இது கடுமையாகச் சோதித்தது.
இதற்கு முன்பு இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது மாநிலங்களால் தனித்த துணைதேசிய மக்கள் நல அரசுகளாகத் தம்மைக் கட்டமைத்துக்கொள்ள முடிந்தது. ஆனால், கோவிடுக்கு முன்பு நிலவிய மையத்தில் அதிகாரங்களைக் குவிக்கும் போக்கு மாநிலங்களின் நிதி மற்றும் கொள்கை வகுப்புத் தன்னாட்சியைப் பலவீனப்படுத்திவிட்டது. இந்தியாவிலிருந்து கோவிடை அகற்றுதல்: இந்தியாவில் அதிகாரப்பரவலும் கோவிடும் (Decovindia: Decentralisation and COVID-19 in India) என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற கூட்டு ஆய்வு மாநில அரசுகள் மேற்கொண்ட சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள மாறுபாடுகளை வகைப்படுத்த முயன்றது. வெவ்வேறு பிரிவு மக்களுக்கான அவசர கால உதவிகள் குறித்து ஏகப்பட்ட கொள்கை அறிவிப்புகளும் செய்தி அறிக்கைகளும் வெளியானாலும் மாநில அளவில் இவை எந்த அளவுக்குக் கூடுதல் ஆதரவாக அமைந்தன என்பது மாநிலத்துக்கு மாநிலம் பெருமளவில் மாறுபட்டிருந்தது. தாங்கள் தீர்மானகரமாகச் செயல்படுவதாகக் கூறிக்கொள்ள மாநில அரசுகள் விரும்பினாலும் பல வேளைகளில் அவ்வாறு செயல்படுவதற்கான அவற்றின் திறன் குறைவாகவே இருந்தது. பொதுச் சுகாதார வியூகங்களை அடியொற்றி மக்களுக்கான உதவிகளை வேகமாகவும் பயனுள்ள வகையிலும் தருவதற்கு உள்ளூர் சூழல்களுக்கு ஏற்பத் திட்டங்களைத் தகவமைத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது (கேரளத்தில் நடந்ததுபோல – காண்க பிரேரணா சிங்கின் கட்டுரை).
தேசிய அளவிலான பொதுமுடக்கத்தைத் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் திடீரென்று பெருமளவில் மாநிலங்களின் எல்லைகளைத் தாண்டிச் சென்றது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பில் இடம்பெயரும் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக மாநில அரசுகளிடையே எந்த விதமான வலுவான ஒருங்கிணைப்புக் கட்டமைப்பும் இல்லை என்பதைக் காட்டிவிட்டது.
இரண்டாம் அலை: முன்னணியில் மாநிலங்கள்
இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலையின் கடுமையான தாக்கத்தின்போது அதற்கான மத்திய அரசின் எதிர்வினையில் மாற்றம் தெரிகிறது. மத்திய அரசு நேரடியாகச் செயல்படாமல் தடுப்பூசி கொள்முதல், வினியோகம் முதலான முக்கியமான நடவடிக்கைகளுக்கான பொறுப்பை மாநில அரசுகளுக்கு அளித்திருக்கிறது. இரண்டாம் அலையின்போது இந்திய மைய அரசின் எதிர்வினை முதல் அலையின்போது அமெரிக்காவும் பிரேசிலும் செயல்பட்ட விதத்தையே பெரிதும் ஒத்திருக்கிறது.
இரண்டாம் அலையில் தேசிய அளவில் பொதுமுடக்கம் இல்லை. ஆனால், உள்ளூர் அளவில் பொதுமுடக்கமும் ஊரடங்கும் தொடர்கின்றன. மத்திய அரசு “செயல்படாமல்” இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இரண்டாம் அலைக்கான தடயங்கள் உருவானபோது மக்கள் பெருந்திரளாகக் கூடுவதைத் தடுப்பதில் அது மந்தமாகச் செயல்பட்டது. முக்கியத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை மாநிலங்களுக்கு வினியோகிக்கும் பணியை மேற்பார்வையிடும் பொறுப்பை நீதிமன்றங்களுக்கும் சமூக வலைதளங்கள் வாயிலாகச் செயல்படும் சமூகச் செயல்பாட்டாளர்களுக்கும் அது விட்டுக்கொடுத்துவிட்டது. தடுப்பூசிப் பற்றாக்குறைக்காக மாநில அரசுகளின் கடும் கண்டனத்திற்கு ஆளான மைய அரசு, 45 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசிக் கொள்முதல், வினியோகம் ஆகிய பொறுப்புகளை மாநில அரசுகளுக்கு அளித்துவிட்டது. நிர்வாகக் கோளாறுகளுக்கான பழியை மைய அரசு மாநிலங்களின் பக்கம் தள்ளிவிடுவதையும் இரண்டாம் அலையின்போது காண முடிகிறது. இது மத்திய-மாநில அரசுகளின் மோதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
தடுப்பூசிக் கொள்முதலையும் வினியோகத்தையும் திடீரென்று மாநிலங்களின் பொறுப்பில் விட்டுவிட்ட மத்திய அரசை ஆளும் பாஜக, ஏப்ரல் மாத இறுதியில் மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல் பிரச்சரத்தின்போது, அந்த மாநிலத்தில் தாங்கள் வெற்றிபெற்றால் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்துவோம் என்று வாக்குறுதி அளிக்கும் அளவுக்குச் சென்றது. அதாவது, மத்திய – மாநில அரசுகள் ஒன்றாக இருந்தால்தான் மாநிலத்தில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்ய முடியும் என்று பாஜக குறிப்புணர்த்தியது.
தடுப்பூசிக் கொள்முதலின் பொறுப்பை மாநில அரசுகளுக்கு வழங்குவது, தடுப்பூசி விற்பனையின் மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்துவது ஆகிய முடிவுகள், ஆக்சிஜன் உற்பத்தியையும் மாநிலங்களுக்கிடையே அதை வினியோகம் செய்வதையும் ஒருங்கிணைப்பதற்கான உள்கட்டமைப்பை உருவாக்கத் தவறியது ஆகியவை மாநிலங்கள் தங்களுக்குள் போட்டியிட்டுக்கொள்ளும் அபாயத்தை உருவாக்கின. இந்தக் களத்தில் மைய அரசு நடுவராக இல்லாமல் அதுவும் ஒரு பங்கேற்பாளராக இருந்தது.
கூட்டாட்சி அணுகுமுறைகளின் வகைமைகள்
ஐரோப்பியக் கூட்டாட்சி நாடுகள் கோவிட்-19ஐக் கையாள்வது தொடர்பான முடிவெடுத்தலில் கூட்டாட்சி அணுகுமுறைகளை வகைப்படுத்துவதற்காக ஹீகலியும் ஷ்னாபெல்லும் உருவாக்கிய பகுப்பாய்வின் அடிப்படையில் பார்க்கும்போது, முதல் அலையின்போது ஒருதரப்பிலான, மையப்படுத்தப்பட்ட முடிவெடுக்கும் அணுகுமுறையைக் கொண்டிருந்த இந்தியா இரண்டாம் அலையின்போது தன்னிச்சையான அதிகாரப்பரவல் அணுகுமுறைக்குத் தானாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம்.
எப்படிப்பட்ட அணுகுமுறையையும் (அதிகாரக்குவிப்பு, அல்லது அதிகாரப்பரவல்) தன்னிச்சையாக எடுப்பதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் இது “ஒரே விஷயத்தை இரு தரப்பினரும் செய்வது, முரண்பாடுகள் மோதல்கள்” ஆகியவற்றை உருவாக்கிவிடக்கூடும் என்று ஹீகலியும் ஷ்னாபெல்லும் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவுக்குத் ஒருதரப்பிலான அதிகாரக்குவிப்பு, அதிகாரப்பரவல் ஆகியவற்றுக்கு மாற்றாக, தேசியக் கொள்கைக் கட்டமைப்பிற்குள் கூடுதலான மத்திய-மாநில ஒருங்கிணைப்பு தேவை என்று வாதிடலாம். உள்ளூர் அளவிலான புதுமைகளுக்கும் தகவமைத்தல்களுக்கும் இடமளிக்கும் வகையில் இந்தக் கட்டமைப்பு இருக்க வேண்டும்.
ஒருங்கிணைப்பு என்பதில் குறைந்தபட்சமாக, மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலும் மாநில அரசுகளுக்கிடையிலும் தகவல் தொடர்பு, தகவல் பரிமாற்றம், விவாதித்தல் ஆகியவை இருக்க வேண்டும். செயலற்று இருக்கும் மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில், நிதி ஆயோக் (திட்டக் கமிஷனைக் கலைத்துவிட்டு “கூட்டுறவுக் கூட்டாட்சி”யை முன்னெடுத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்டது) ஆகிய முறைசார்ந்த அரசு அமைப்புகளின் மூலமாகவோ அல்லது முறைசாராத ஏற்பாடுகள் மூலமாகவோ இந்தப் பரிமாற்றங்கள் நிகழ வேண்டும்.
ஒருங்கிணைப்பு என்பது மைய அரசின் மேற்பார்வை தேவைப்படும் அம்சங்களில் கீழிருந்து மேலே வரும் தகவல்களின் அடிப்படையில் முடிவெடுத்தலையும் வள ஆதாரங்களை ஒதுக்குதலையும் மைய அரசு மேற்பார்வையிடுவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் பல்வேறு தரப்பினரும் ஒரே சமயத்தில் ஆளுக்கு ஒரு திசையில் செயல்படுவதால் உண்டாகும் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்தல், ஆக்சிஜன் போன்ற மிக முக்கியமான பொருள்களை மாநிலங்களுக்கிடையே பிரித்து அளித்தல், மையப்படுத்தப்பட்ட தடுப்பூசிக் கொள்முதல் ஆகிய செயல்கள் இதில் அடங்கும். அதே வேளையில், முடிவெடுத்தல், கொள்கைசார் எதிர்வினைகள் ஆகியவற்றை உள்ளூர்ச் சூழல்களுக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்வதற்கான வழியும் மாநிலங்களுக்கு இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, மக்கள் நலத் திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்துவதில் இத்தகைய வாய்ப்பு இருக்க வேண்டும். பழைய கூட்டாட்சி அமைப்புகளைப் போல அல்லாமல், மையப்படுத்தப்பட்ட கூட்டாட்சி அமைப்பிற்குள் இதேபோன்ற ஒருங்கிணைப்பு மாதிரியைத்தான் இந்தியாவின் அரசியல் சட்டச் சிற்பிகள் உருவாக்க முனைந்தார்கள்.
மைய அரசு சமூக, பொருளாதாரத் துறைகளில் கொள்கைகளை வகுக்க வழிசெய்யும் வகையில் இந்தியக் கூட்டாட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பை மாநில அரசுகளிடம் கொடுத்தால் அது நெறிமுறைகளற்ற போட்டிக்கு வழிவகுத்துவிடக்கூடும். கோவிட்-19 இரண்டாம் அலையைச் சமாளிப்பதும் அதிலிருந்து மீண்டெழுந்து இனி வரக்கூடிய அலைகளை எதிர்கொள்வதற்கான திறனை வளர்ப்பதற்கும் அரசியல் சட்டத்தின் இந்த உணர்வை நாம் மீட்டெடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.