பணியாளர்களை மையமாகக் கொண்ட இணையவழிச் சேவைப் பொருளாதரம் (பகுதி 1)

25/10/2021
IiT English Page

கோவிட்-19 நெருக்கடி இந்தியாவின் இணைய வழிச் சேவைத் துறையின் பணியாளர்களின் துயரங்கள் மீது கவனத்தைக் குவித்துள்ளது. ஒழுங்குபடுத்தப்பட்ட பணிநேரம், குறைந்தபட்சச் சம்பளம், தகவல் உரிமைகள், சமூகப் பாதுகாப்பு ஆகிய பணியாளர் உரிமைகள் இல்லாத நிலை அவர்களுடைய வேலையின் பலவீனமான நிலையையும் பாதுகாப்பின்மையையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. பெரிய நகரங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது பெருகிவந்த தேவைகளுக்கு எதிர்வினையாக அமேசான், ஊபர் போன்ற இணைய வழிச் சேவைகள் நுகர்வோரின் இருப்பிடம் தேடி வரும் எல்லா விதமான சேவைகளையும் உள்ளடக்கியதாக மாறின. இணைய வழிச் சேவைப் பணியாளர்கள் பல சமயங்களில் முகக்கவசம், கை சானிடைசர்கள் போன்ற பாதுகாப்புக் கருவிகளைத் தங்கள் கைக்காசைப் போட்டு வாங்க வேண்டியிருந்தது. எரிபொருள், வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றையும் அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. தென்னிந்தியாவில் நாங்கள் மேற்கொண்ட களப்பணியில் இவற்றைக் கண்டறிந்தோம். சில சமயம் மருத்துவ ரீதியாகச் சான்றளிக்கப்பட்ட முகக்கவசங்களுக்குப் பதிலாகத் தற்காலிகத் துணிக் கவசங்களை அவர்கள் பயன்படுத்தினார்கள். கையுறைகளை அணியவில்லை. இவர்களுடைய பாதுகாப்புக்கான குறிப்பான கொள்கைகளோ வழிகாட்டு நெறிகளோ இல்லாத நிலையில் சுகாதார இடர் வாய்ப்புகளுக்கு எதிரான ஒருமுறை மட்டும் பணம் செலுத்தும் காப்பீட்டுத் திட்டங்களில் இவர்களுக்காகப் பணம் கட்டுவதற்கான உறுதிமொழி உள்ளிட்ட உதவிகளுக்கான திட்டங்களை வகுத்த இந்திய நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களிடமிருந்து அன்றாடம் கூடுதல் நேரப் பணிகளைத் தொடர்ந்து பெற்றுவந்தன. இந்தப் பணியாளர்கள் பலருக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த வேலையை விடுவதை அவர்களால் நினைத்துப்பார்க்க முடியாத நிலை இருந்தது.  

இத்தகைய கொந்தளிப்பான பின்னணியில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக இணையவழிச் சேவைத் தளங்களின் விரிவாக்கத்தைப் பயன்படுத்திக்கொள்வது தொடர்பான இந்தியாவின் புதிய தொழில்துறை கொள்கை விவாத அறிக்கையின் இலக்குகளை எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையுடன்தான் அலச முடியும். இந்தத் தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அமைப்பு சார்ந்த கட்டுமானம் இன்னமும் உருப்பெறவில்லை என்பது குறித்த கவலை வளர்ந்துவருகிறது. இரு பகுதிகள் கொண்ட இந்தக் கட்டுரைத் தொடரில் இந்தியாவில் இணையவழிச் சேவைத் தளங்கள் தொடர்பான பிரச்சினைகளையும் இந்தத் தளங்களில் பணியாளர் உரிமைகளை உறுதிசெய்வதற்கான ஒழுங்குபடுத்தும் சட்டகத்தின் வகை ஆகியவை குறித்தும் விவாதிக்கிறோம். முதல் பகுதியில் இந்திய இணையவழிச் சேவைத் தளங்களின் பணியாளர்கள் எதிர்கொள்ளும் அமைப்பு சார்ந்த மூன்று முக்கியமான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். இரண்டாம் பகுதி, இணையவழிச் சேவைத் தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டகத்தை உருவாக்குவதில் அமைப்புகளின் பங்கு என்ன என்பது குறித்து ஆராய்கிறது. இந்தச் சட்டகம் பணியாளர்களின் உரிமைகளை விரிவுபடுத்துவதற்கு வழி வகுக்கும்.  

அமைப்புசார் நிலவரங்களைப் புரிந்துகொள்ளுதல்
சேவை வழங்குநர்கள், நுகர்வோர், பணியாளர்கள் ஆகியோரைப் பொதுவான கருவிகள் மூலம் ஒன்றிணைத்து, தேவையையும் வினியோகத்தையும் சிறப்பான முறையில் இணைக்கும் பன்முகம் கொண்ட சந்தைகள் என்று இணையவழிச் சேவைத் தளங்களைப் பற்றித் தன்னுடைய பிளாட்ஃபார்ம் கேப்பிடலிசம் (Platform Capitalism) என்னும் நூலில் நிக் ஸ்ரீனிசெக் வரையறுக்கிறார். இந்திய அரசு முதல்முறையாக சமூகப் பாதுகாப்பு விதிமுறைச் சட்டம் 2020-இன் கீழ் இணையவழிச் சேவைத் தளப் பணியாளர்களையும் சேவை வழங்குநர்களையும் வரையறுத்திருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தின் அமைப்புசார் நிலவரங்கள் இணையவழிச் சேவைத் தளங்களின் இயல்பிலேயே இருக்கும் பிரச்சினைகளை மேலும் மோசமாக்குகின்றன. சராசரி இந்திய நிறுவனம் 40 ஆண்டுகள் கடந்த பிறகும் 5 ஆண்டுகளின் முடிவில் இருந்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 40 விழுக்காடு மட்டுமே கூடுதல் பணியாளர்களை நியமிக்கிறது என்று 2018-19 பொருளாதார ஆய்வு (Economic Survey 2018-19) சுட்டுகிறது. இரண்டாவதாக, முறைசாராப் பணிகளில் ஆபத்தும் பாதுகாப்பின்மையும் உச்ச அளவில் இருக்கிறது.  இந்தியப் பணியாளர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் என்ற அதிக அளவில் வேலைசெய்தாலும் அவர்களில் 77 விழுக்காட்டினர் பணிப் பாதுகாப்பு அற்றவர்களாக இருக்கிறார்கள் என்று சர்வதேசப் பணியாளர்கள் அமைப்பு (International Labour Organization - ILO) பணிகளின் எதிர்காலம் குறித்த தன்னுடைய ஆய்வில் (Inclusive Future of Work (2019))   இந்தியாவைப் பற்றிய பகுதியில் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், இந்தியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட 92 விழுக்காட்டினர் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமோ சமூகப் பாதுகாப்போ அற்ற முறைசாராப் பணிகளில் இருப்பதாகவும் அது குறிப்பிடுகிறது.

இந்தப் பின்னணியில் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் “இந்தியாவின் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்” என்னும் அறிக்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் செய்யப்படும் முதலீடு பொருளாதார வளர்ச்சிக்கான ஆதார வளமாக இருக்கும் என்றும் இந்தத் துறை 2025க்குள் 1 ட்ரிலியன் டாலர் வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகளையும் 6.5 கோடி வேலைவாய்ப்புகளையும் உருவாக்கக்கூடிய துறையாகவும் இருக்கும் என்று அடையாளம் கண்டுள்ளது. 1.5 கோடி தன்னார்வச் சேவை வழங்குநர்களைக் கொண்டுள்ள இணையவழிச் சேவைத் துறை இத்தகைய வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாக அசோசியேடட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி ஆஃப் இந்தியா அமைப்பு இணையவழிச் சேவைப் பொருளாதாரம் குறித்த தேசியக் கருத்தரங்கு ஒன்றிற்காகத் தயாரித்த பின்புலத் தகவல் அறிக்கை குறிப்பிடுகிறது. உலகம் எங்கிலும் உள்ள இந்தத் துறையின் பணியாளர்களைப் போலவே இந்தியப் பணியாளர்களும் கணினிசார் கணக்கீடுகளால் தங்கள் வேலை கட்டுப்படுத்தப்படுவது, கூட்டாகப் பேரம் பேசுவதற்கான வாய்ப்பற்ற நிலை, குறைந்தபட்ச ஊதியம், வேலை நேரம், சமூகப் பாதுகாப்பு ஆகிய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். ஒழுங்குமுறைக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இந்தியாவின் இணையவழிச் சேவைத் தளங்கள் மூன்று முக்கியமான அமைப்புசார் பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன.

பணியாளர்களின் பிரச்சினைகள்
இந்தத் துறையில் முதலீட்டை ஒழுங்குபடுத்துவது முதல் பிரச்சினை. நன்கு வரையறுக்கப்பட்ட சீரான வழிகாட்டு நெறிகளின்படி இந்திய இணையவழிச் சேவைத் தளங்கள் ஒழுங்குபடுத்தப்படவில்லை. உள்ளூரில் வேலைவாய்பை வழங்கும் சில்லறை விற்பனைக் கடைகளைப் பாதுகாப்பதற்காக இந்தியா உள்ளூர் நிறுவனங்களையும் அயல்நாட்டு நிறுவனங்களையும் மாறுபட்ட முறையில் கையாள்வதுபோலவே இணைய வர்த்தகத்தையும் நேரடி வர்த்தகத்தையும் கையாள்கிறது. இது இணையவழிச் சேவைத் தளங்களை ஒருங்கிணைப்பதைப் பாதிக்கிறது. இது பொருட்களைச் சேமிப்பில் வைத்துக்கொள்வதையும், தொலைவிலுள்ள இடங்களுக்குப் பொருள்களும் சேவைகளும் கிடைப்பதையும் பாதிக்கிறது. இணையச் சந்தைகளுடன் சிறிய வணிகர்களை இணைப்பதையும் இது தாமதப்படுத்தியிருக்கிறது. நிறுவனத்தின் உட்புறக் உள்கட்டமைப்பு தொடர்பான முதலீடு சார்ந்த சரியான ஒழுங்குமுறை நடவடிக்கைகள், வேலைவாய்ப்பு உருவாக்கம், தகவல் பாதுகாப்பு ஆகியவை டிஜிட்டல் பொருளாதாரத்தில் பதில் சொல்லும் பொறுப்புடன் கூடிய சமமான போட்டிச் சூழலை முன்னெடுக்கக்கூடும். தேசிய இணைய வணிகக் கொள்கை வரைவு இந்தத் திசையில் எடுக்கப்பட்டுள்ள சரியான நடவடிக்கை. ஆனால், உள்ளூர் தொழில்முனைவோர்களையும் உள்ளூர் நலன்களையும் காப்பாற்றும் அதே சமயத்தில் இந்தியா சர்வதேச நிறுவனங்களையும் தன் திட்டத்தில் உள்ளடக்கும் விதமாகச் சிந்திக்க வேண்டும்.

பணியாளர்களுக்கான திறன்களைக் கூட்டுவது இரண்டாவது பிரச்சினை. இணையவழிச் சேவைத் தளங்கள் துறைக்கான உலகளாவிய பணியாளர் எண்ணிக்கையில் 20 விழுக்காடு பங்கு வகிக்கும் இந்தியா இந்தத் துறைக்கான பணியாளர்களை அதிகமாக வழங்கக்கூடிய நாடு என்று சர்வதேசப் பணியாளர் அமைப்பின் “உலக வேலைவாய்ப்பும் சமூகக் கண்ணோட்டமும் - 2021” என்னும் தலைப்பிட்ட அறிக்கை (World Employment and Social Outlook 2021) அடையாளம் கண்டுள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதாரங்களிலிருந்து பெறும் அயலாக்கப் பணிகளில் இந்தியப் பணியாளர்கள் மென்பொருள், பல்லூடகத் துறைகளில் தகவல்கள் உள்ளீடு, பொதுவான தொழில் சேவைகள் போன்ற பணிகளையே அதிகம் பெறுகிறார்கள். இவை குறைந்த அளவிலான திறன் தேவைப்படும் பணிகள் என்பதோடு, இவை தானியங்கிகளால் மேற்கொள்ளப்படும் சாத்தியமும் கொண்டவை. அயல்பணிகள் அல்லாத பணிகளில் பெரும்பாலான இணையவழிச் சேவைத் தள பணியாளர்கள் வாடகைக் கார், டெலிவரி ஆகிய பணிகளில் ஈடுபடுகிறார்கள். மிக முக்கியமாக, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இணையத்தை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் சேவைத் துறைகள், பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் எழுத்து, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகள் உள்பட எல்லாத் தொழில் பிரிவுகளிலும் பெண்கள் குறைவான வேலைவாய்ப்பையே பெறுகிறார்கள். இணையவழிச் சேவைத் தளங்கள் சமத்துவம் கொண்ட, நல்ல ஊதியம் வழங்கக்கூடிய, பாதுகாப்பான வேலைகளுக்கான ஆதார வளமாகத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் பணியாளர்களின் திறன்களை மெருகேற்றி மேம்படுத்துவது, பெண்கள் போன்ற குறிப்பான பிரிவினரை உள்ளடக்குவதை இலக்காகக் கொள்வது ஆகிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பது தெளிவு. பணியாளர்களின் திறன் வளர்ப்பு, திறன் கூட்டுதல் ஆகியவற்றுடன் பணியாளர்களுக்கான தொழில்சார் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் ஆகியவை இணையவழிச் சேவைத் தளங்களின் உயர் சாத்தியங்களைப் பயன்படுத்திக்கொள்ள இன்றியமையாதவையாகும். 

மூன்றாவது பிரச்சினை சமூகப் பாதுகாப்பு. இந்தியா அண்மையில் பணியாளர்கள் தொடர்பான 44 சட்டங்களைப் பணியாளர்களுக்கான நான்கு வழிகாட்டு நெறிகளாகச் சுருக்கிவிட்டது. இந்த வழிகாட்டு நெறிகளில் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 தொடர்பான வழிகாட்டு நெறிகள் இணையவழிச் சேவை என்னும் பணியை வேலைவாய்ப்பு என்னும் வகைமையாக அடையாளம் காண்கிறது. இணைய வழிச் சேவை நிறுவனங்கள் தமது ஆண்டு மொத்த வருமானத்தில் 1-2 விழுக்காடு வரை அல்லது நிறுவனம் தரும் ஊதியத்தின் 5 விழுக்காடு (எது குறைவாக உள்ளதோ அது) அரசு நிறுவும் தொழிலாளர் சமூகப் பதுகாப்பு நிதிக்கு வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. “இணையவழிச் சேவை நிறுவனங்களின் பணியாளர்களுக்கான பாதுகாப்பான எதிர்காலம்” (A Secure Future for Platform Workers) என்னும் கட்டுரையில் இந்த மசோதா பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பை நிறுவனங்களுக்கும் தேசிய அரசுக்கும் இடையில் பகிர்ந்தளிக்கிறது என்றும், ஆனால் இதை எப்படி வழங்குவது என்பது குறித்த தெளிவு மசோதாவில் இல்லை என்றும் லட்சுமி ஷர்மா குறிப்பிட்டிருக்கிறார். அது மட்டுமல்ல. இந்த நிறுவனங்கள் தங்களிடம் வேலைக்கு வரக்கூடியவர்களுக்கு இந்த வேலையோடு தொடர்புடைய பொருட்களில் முதலீடு செய்யக் கடன் வழங்குகின்றன. இது அவர்களைக் கடன் பொறியில் சிக்கவைத்துவிடுகிறது. இந்த நிறுவனங்களை ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரும் செயல்முறை சமூகப் பாதுகாப்பு, கடன் பெறுதல் ஆகியவற்றை ஒன்றோடொன்று தொடர்புடைய செயல்முறைகளாகக் காண வேண்டும்.

இந்தியப் பொருளாதாரம் அமைப்பு சார்ந்த மாற்றங்களுக்கு ஆளாகிவரும் நிலையில் இணைய வழிச் சேவைகள் துறையில் எத்தகைய வளர்ச்சியையும் எப்படிப்பட்ட வேலைகளையும் நாம் எதிர்பார்க்கிறோம் என்னும் பெரியதொரு கேள்வி எழுகிறது. வளர்ந்துவரும் நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தினருக்கான சேவைகளை வழங்குவதுடன் நகர்ப்புற ஏழைகளுக்கான தரமான வேலைவாய்ப்புக்கான சீரான ஆதார வளமாக இந்தத் துறை வளர்ந்துவருமா? முதலீட்டை ஒழுங்குபடுத்துவது, தனியார் துறையை ஈடுபடுத்திப் பணியாளர்களின் திறனைக் கூட்டுவது, கடன் பெறுதல், சமூகப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாகப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றைப் பொறுத்தே இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அமையும்.

ஃபிரான்சிஸ் குரியாகோஸ்

Author

ஃபிரான்சிஸ் குரியாகோஸ் கோயம்புத்தூரில் (தென்னிந்தியா) உள்ள குமரகுரு கலை அறிவியல் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் டெவலப்மெண்ட் இனிஷியேட்டிவ் அமைப்பின் ஆலோசகராகவும் செயல்படுகிறார்.

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன் 

தீபா கைலாசம் அய்யர்

Author

தீபா கைலாசம் அய்யர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கேம்பிரிட்ஜ் டிரஸ்ட்-காமன்வெல்த் ஆய்வாளர். 

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்