இந்தியாவில் கடந்த முப்பது ஆண்டுகளாக விரைவான பொருளாதார வளர்ச்சி, கருவுறுதலின் எண்ணிக்கை குறைதல், பெண்களின் கல்வி அதிகரிப்பு ஆகியவை இருந்தபோதிலும், நாட்டில் பெண் தொழிலாளர் பங்கேற்பு (female workforce participation FWFP) விகிதம் (மொத்தப் பெண்களில் வேலை செய்யும் பெண்களின் விகிதம்) தொடர்ந்து குறைவாகவே உள்ளது. 1987இலிருந்தே இது விரைவாகவும் தொடர்ச்சியாகவும் சரிவைக் கண்டுவருகிறது. 1987-2017 முதல் இந்தியாவின் கிராமப்புற (பேனல் ஏ), நகர்ப்புற (பேனல் பி) பகுதிகளில் 25-60 வயதுடைய பெண்கள், ஆண்கள் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களைப் படம் 1 காட்டுகிறது. ஏறக்குறைய அனைவருமே 25 வயதிற்குள் கல்வித் தகுதியை அடைந்துவிடுவதால் இந்த வயதுப் பிரிவினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உயர்கல்வியில் சேர்வது அதிகரிப்பதால் பணிசெய்வதில் உள்ள பங்கேற்பு விகிதங்கள்மீது ஏற்படக்கூடிய நேரடியான விளைவுகளை இந்த அலசல் தவிர்க்கிறது. இரண்டு பேனல்களுக்கு இடையே வகைமைகளும் மட்டங்களும் வேறுபடுவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும், பணிக்களத்தில் ஆண்களின் பங்கேற்பு பெண்களைவிட அதிகமாக உள்ளது. இந்த வயதினரில் ஆண்களின் வேலைவாய்ப்பு விகிதம் கிராமப்புறங்களில் 96 சதவீதத்திலிருந்து 94 சதவீதமாகவும், நகர்ப்புற இந்தியாவில் 94 சதவீதத்திலிருந்து 91 சதவீதமாகவும் குறைந்துள்ளது. நகர்ப்புற இந்தியாவில் பணிக்களத்தில் பெண்களின் பங்கேற்பு 26 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகக் குறைந்துள்ளது. கிராமப்புற இந்தியாவில் பெண் வேலைவாய்ப்பு விகிதம் மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துவருகிறது. கிராமப்புறப் பணிக்களத்தில் 1987இல் 54 சதவீதமாக இருந்த பெண்களின் பங்கேற்பு 2017இல் 31 சதவீதமாகக் குறைந்துள்ளது.
Figure 1
படம் 1: பணியாளர் பங்கேற்பில் பாலின விகிதங்கள்: கிராமப்புற இந்தியா (25-60 வயதினர்)
Source and notes:
ஆதாரமும் குறிப்பும்: NSS (1987, 1999, 2011) 2017ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பு, வேலையின்மை, பணியாளர் எண்ணிக்கை ஆகியவை குறித்த ஆய்வு. ஆய்வுக்கு முந்தைய ஆண்டில் குறைந்தது 30 நாட்கள் ஒருவர் வேலை செய்திருந்தால் அவர் வேலை வாய்ப்புள்ளவர் என்னும் வரையைறையின் அடிப்படையில் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.
வீழ்ச்சிக்கான காரணங்கள்
கிராமப்புறப் பெண்களில் 25-60 வயதுடையவர்களிடையிலும்கூட, திருமணமானவர்கள் பணிக்களனில் பங்கேற்கும் விகிதத்தில் வீழ்ச்சி (கிட்டத்தட்ட 90 சதவீத பெண்களில்) ஏற்பட்டுள்ளதைத் தற்போதைய ஆராய்ச்சி காட்டுகிறது. மக்கள்தொகையின் அம்சங்களில் ஏற்படும் மாற்றம் (திருமணமான பெண்கள், ஆண்களின் கல்வித் தகுதிகள் அதிகரிப்பது), குடும்ப வருமானம் அதிகரிப்பது போன்றவை 1987-99 காலகட்டத்தில் பணிக்களத்தில் பெண்களின் பங்கேற்பு விகிதம் சரிவதன் காரணங்களை விளக்குகின்றன. இது 1999-2011 காலகட்டத்தில் 14 சதவிகிதம்முதல் 50 சதவீதம்வரை குறைந்துள்ளது. கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்பப் பெண்கள் வேலைக்குச் செல்லும் எண்ணிக்கை அதிகரித்துவிடுவதில்லை. அதே சமயம், ஆண் குடும்ப உறுப்பினர்களின் கல்வி அல்லது வருமானம் அதிகரிக்கையில் பெண்கள் வேலைக்குச் செல்வது குறைகிறது. இத்தகைய காரணங்களும் இந்தச் சரிவுக்குக் காரணமாகின்றன.
வேலைவாய்ப்பில் ஏற்படும் இந்த மாற்றத்தை வேலை வகைமைகளின் அடிப்படையில் ஆழமாக அலசினால், விவசாயத்தில் மட்டுமே சரிவு ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது. படம் 2, பணிக்களனில் பெண், ஆண் பங்கேற்பை முறையே A, B பேனல்களில் வெவ்வேறு துறைகளிலும் வெவ்வேறு காலகட்டங்களிலுமாகக் கிராமப்புற இந்தியாவில் காட்டுகிறது. விவசாயத்தில் பெண் தொழிலாளர் பங்கேற்பு 1987இல் 46 சதவீதமாக இருந்தது. 2011இல் இது 33 சதவீதமாகக் குறைந்தது. 2017இல் அது மேலும் குறைந்து 23 சதவீதம் ஆனது. உற்பத்தித் துறையிலும் பெண் தொழிலாளர் பங்கேற்பு சிறிதளவு குறைந்துள்ளது (3.5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதம்). கட்டுமானம் மற்றும் சேவைகள் துறை மட்டும் இதற்கு விதிவிலக்கு. இதில் சுமார் 1-1.5 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆண் தொழிலாளர் பங்கேற்பு விவசாயத்தில் 1987இல் 77 சதவீதமாக இருந்தது. அது 2011இல் 64 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தத் துறையில் ஆண் தொழிலாளர் பங்கேற்பு குறைவதைக் காட்டிலும் பெண் தொழிலாளர் பங்கேற்பு அதிகமாகக் குறைவதை இது குறிக்கிறது.
Figure 2
படம் 2: கிராமப்புற இந்தியாவில் தொழில்துறை வாரியாகப் பணியாளர் பங்கேற்பு
Source and notes
ஆதாரமும் குறிப்பும்: NSS (1987, 1999, 2011) 2017ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பு, வேலையின்மை, பணியாளர் எண்ணிக்கை ஆகியவை குறித்த ஆய்வு. வெவ்வேறு துறைகளில் பெண் தொழிலாளர்களின் விகிதம் வழக்கமான நிலையைப் பயன்படுத்திக் கணக்கிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் பெண்களில் சிலர் பல்வேறு துறைகளில் பணிபுரிந்திருக்கக்கூடும் என்பதால் இவற்றின் கூட்டுத் தொகை பெண் தொழிலாளர்களின் மொத்தப் பங்கேற்பு விகிதத்தைக் குறிக்காமல்போகலாம்.
சரிவும் சந்தையின் தேவைகளும்
1999-2011 காலகட்டத்தில் பணிக்களத்தில் பெண்களின் பங்கேற்பு குறைந்தது ஏன் என்பதைப் போதிய பணியார்கள் இன்மை தொடர்பான காரணிகளை வைத்து விளக்க இயலவில்லை. விவசாயத்தில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு விவசாயத் துறையில் தேவை சார்ந்த காரணிகள் பங்களித்திருக்கலாம். இந்தியாவில் விவசாய நடவடிக்கைகளில் தொழிலாளர்களிடையே பாலினம் சார்ந்த பிரிவு உள்ளது. உடல் வலிமை (உழவு) தேவைப்படும் செயல்பாடுகளில் பெண்கள் பயன்படுத்தப்படுவது குறைவாக உள்ளது. துல்லியம் தேவைப்படும் பணிகளில் (விதைத்தல், நடவு செய்தல் மற்றும் களையெடுத்தல்) பெண்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். இதனால் ஆண்கள் செய்யும் வேலைகளைப் பெண்களும் பெண்கள் செய்யும் வேலைகளை ஆண்களும் மாற்றிக்கொண்டு செய்வதற்கான சாத்தியம் குறைந்துவிடுகிறது. ஆண் – பெண் வேலைகளைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள இயலாத நிலையில் விவசாயப் பணிகளின் இயந்திரமயமாக்கல் போன்ற தொழில்நுட்ப மாற்றம் தொழிலாளர்களின் பாலின விகிதாச்சாரங்களில் தாக்கங்களை ஏற்படுத்தலாம். விவசாய இயந்திரமயமாக்கல் (முதன்மையாக நிலத்தை உழுவதில்) 1999-2011 காலகட்டத்தில் மூன்று மடங்கு அதிகரித்ததுள்ளது. இயந்திரமயமாக்கலின் மூலம் உழவில் ஆண்களின் உழைப்பை இயந்திரங்களின் மூலம் நேரடியாகப் பதிலீடு செய்யலாம். இயந்திர உழவு மூலம் களைகள் குறைவதால் களை எடுக்கும் பெண் தொழிலாளர்களின் தேவையும் குறைந்துவிடுகிறது.
1999-2011 காலகட்டத்தில் இந்திய விளைநிலங்களில் நிகழ்ந்த இயந்திரமயமாக்கலால் ஆண்களின் பங்கேற்பைக் காட்டிலும் பெண்களின் பங்கேற்பு கணிசமாகக் குறைந்துள்ளது என்பதை நானும் எனது சக ஆசிரியர்களும் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் காட்டியிருக்கிறோம். இயந்திரமயமாக்கலுக்கு மிகவும் பொருத்தமான பகுதிகளில் ஆண், பெண் தொழிலாளர் பங்கேற்பில் ஏற்படும் மாற்றங்களை இயந்திரமயமாக்கலுக்கு அதிகம் பொருத்தமற்ற பகுதிகளுடன் ஒப்பிடுவதன் மூலம் இதை நாங்கள் நிறுவினோம். இயந்திரமயமாக்கலைத் தூண்டும் காரணிகளில் கவனத்திற்கு வராத காரணிகளால் எங்கள் முடிவுகள் பாதிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக, களிமண் கலந்த மண்ணின் பரப்பளவில் வெளிப்புற மாறுபாட்டைப் பயன்படுத்துகிறோம். ஆழ உழுதலில் களிமண்ணைக் காட்டிலும் களிமண் கலந்த மண் கூடுதலாக நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருக்கும். எனவே இது முதன்மை உழவுக்கு டிராக்டரைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். இயந்திரமயமாக்கப்பட்ட உழவு 10 சதவிகிதம் அதிகரிப்பது பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 5 சதவிகித வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. விவசாயம் அல்லாத வேலைகளில் அவர்களுடைய பங்கேற்பு அதிகரிக்கவும் இல்லை. 1999-2011 காலகட்டத்தில் இயந்திரமயமாக்கல் 32 சதவிகிதம் அதிகரித்ததால் இந்தக் காலகட்டத்தில் விவசாயத்தில் பெண் தொழிலாளர் பயன்பாட்டில் ஏற்பட்ட சரிவை இயந்திரமயமாக்கலின் அதிகரிப்பின் மூலம் விளக்க முடியும் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன. களையெடுப்பதில் தொழிலாளர்களுக்கான தேவை குறைவதால் இந்தச் சரிவு ஏற்படுகிறது. இது பெரும்பாலும் பெண்களால் மேற்கொள்ளப்படும் பணி.
Figure 3
படம் 2: வேலை நடைபெறும் விதம் (எந்த ஆற்றலின் மூலம் நடக்கிறது)
Source and notes
ஆதாரமும் குறிப்பும்: வேளாண் பணி கணக்கெடுப்பு (1999, 2007, 2011) கைகள், விலங்குகள், மின்சாரம் ஆகிய எதைப் பயன்படுத்தி வேலை நடக்கிறது என்பதற்கான கணக்கீடு. 1999இல் இருந்த நிலையை 100 எனக் கொண்டு அதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. மின்சாரம் என்பது இயந்திரங்களின் பயன்பாட்டைக் குறிக்கிறது.
கட்டமைப்பு சார்ந்த மாற்றமும் பெண்களும்
பெண் பணியாளர்களின் பங்கேற்பின் ஒட்டுமொத்தப் போக்கும் துறைகள் வாரியான போக்குகளும் - விவசாயத்தில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது - இந்தியாவிற்குக் கவலை தரகூடிய எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. கட்டமைப்பு சார்ந்த மாற்றத்தில் பெண்கள் தங்களுக்கான இடத்தை இழப்பதை இது காட்டுகிறது. விவசாயத்தை விட்டு வெளியேறிய ஆண்களுக்கு மற்ற துறைகளில் (குறிப்பாகக் கட்டுமானம் மற்றும் சேவைகள்) வேலை கிடைப்பதுபோலப் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. வீட்டிற்கு அருகிலேயே வேலை கிடைக்காதது விவசாயத்திற்கு வெளியே வேலைவாய்ப்பைப் பெறுவதில் பெண்கள் எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க இடையூறுகளில் ஒன்று என்பதைத் தேசிய மாதிரி ஆய்வுகளின் சான்றுகள் காட்டுகின்றன. விவசாயத் துறைக்கு வெளியே கட்டுமானத் துறை, குறைந்த திறன் மட்டுமே தேவைப்படும் சேவைகள் ஆகியவற்றில் கிடைக்கும் வேலைகள் பொதுவாகக் கிராமத்திலிருந்து வெகு தொலைவில் அமைந்திருப்பது பெண்கள் இந்தப் பணிகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகளை மட்டுப்படுத்துகிறது.
32 சதவீத ஆண்கள் கிராமத்திற்கு வெளியே வேலை செய்வதாகவும் 5 சதவீதப் பெண்கள் மட்டுமே அவ்வாறு செய்வதாகவும் பகுதியளவு வறண்ட வெப்பமண்டலத்திற்கான சர்வதேசப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (International Crops Research Institute for the Semi-Arid Tropics - ICRISAT) மேற்கொண்ட ஆய்வுகளின் வேலைவாய்ப்பு குறித்த தரவுகள் கூறுகின்றன. பெண்கள் பட்டப்படிப்புக்குக் குறைவான அளவிலேயே கல்வி பெறுவதும் உயர் திறன் தேவைப்படும் சேவைத் துறை வேலைகளைப் பெறுவதற்குத் தடையாக இருக்கிறது. பெண்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது விவசாயம் அல்லாத வேலைகளைப் பெறுவதற்குத் தடையாக இருக்கிறது. இது வருமானத்தைப் பெருமளவு பாதிக்கக்கூடிய வறட்சி போன்ற அதிர்ச்சிகளைச் சமாளிப்பதில் பெண்களின் திறனைக் குறைத்துவிடுகிறது. வறட்சியின்போது பெண்களின் வேலைநாட்கள் ஆண்களின் வேலைநாட்களைவிட 19 சதவீதம் குறைவாக இருப்பதாக எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது. விவசாயம் அல்லாத துறைகளில் அவர்களுக்கு வேலை கிடைக்காததே இதற்குக் காரணமாக அமைகிறது.
நகர்ப்புற நிலவரம்
இந்தியாவில் நகர்ப்புறங்களில் பெண் தொழிலாலர் பங்கேற்பில் சிறிய சரிவு மட்டுமே இருந்தபோதிலும், தொழிலாளர் சந்தையில் நகர்ப்புறப் பெண்களின் ஒட்டுமொத்தப் பங்கேற்பு குறைவாகவே உள்ளது (ஆண்கள் 90 சதவீதம்; பெண்கள் 24 சதவீதம்). தேவை சார்ந்த காரணிகளே இதற்குக் காரணம் என்று இது குறித்த ஆய்வு காட்டுகிறது. வீட்டு வேலைகளில் பாலினப் பிரிவு சார்ந்த சமூக நெறிமுறைகள், பெண் வேலைக்குப் போனால் குடும்ப நிலை என்ன ஆகுமோ என்பது குறித்த கவலைகள், கல்வி கற்ற பெண்களின் பணிக்களன் சார்ந்த உற்பத்தித்திறனைக் காட்டிலும் வீட்டு வேலைகளில் அவர்களுடைய உற்பத்தித்திறன் அதிகரிப்பது, வீடுகளுக்கு அருகில் வேலை வாய்ப்புகள் இன்மை உள்ளிட்ட காரணிகளால் தொழிலாளர் சந்தையில் நகர்ப்புறப் பெண்களின் பங்கேற்பு குறைவாக உள்ளது.
அது மட்டுமின்றி, இந்தியாவில் வேலை செய்யும் பெண்கள் திருமணச் சந்தையில் இடையூறுகளை எதிர்கொள்கிறார்கள். இந்தியாவில் வேலைக்குப் போகும் பெண்கள் தங்களுக்குப் பொருத்தமான வரன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இதர பெண்களுக்கான வாய்ப்புகளைக் காட்டிலும் 14முதல் 20 சதவீதம்வரை குறைவாக இருப்பதாக அண்மையில் நடந்த ஆராய்ச்சி காட்டுகிறது. குறிப்பாகப் பாலின நெறிமுறைகளில் ஆணாதிக்கப் போக்கு கூடுதலாக இருக்கும் வட இந்திய உயர் சாதியினரிடையே இத்தகைய இடையூறுகள் அதிகமாக உள்ளன.
1.5 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டின் உழைக்கும் வயதுடைய மக்களில் 40 சதவீதம் பேர் உற்பத்தி சார்ந்த வேலைகளில் ஈடுபடவில்லை என்றால், அதன் பொருளாதார, சமூகத் திறன்களின் பலனை எவ்வாறு முழுமையாகப் பெற முடியும்? வீட்டு வேலைகளில் நிலவும் பாலினப் பிரிவு, அந்தஸ்து குறித்த கவலை ஆகியவை சார்ந்த சமூக நெறிமுறைகள் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. விவசாயத்தில் பெண்களின் பங்கேற்பு குறைந்துவருவதும் அவர்கள் பிற துறைகளுக்கு மாற முடியாமல் இருப்பதும் அவர்களுடைய நடமாட்டத்தில் உள்ள பிரச்சினைகள், திறன்களில் உள்ள போதாமைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகின்றன. பெண்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதற்கும் குடும்பப் பொறுப்புகள் தொடர்பான சமூக நெறிமுறைகள் காரணமாக இருக்கலாம் (பெண்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது 7 மணிநேரம் வீட்டு வேலைகளுக்காகச் செலவிடுகிறார்கள்; ஆண்களோ ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறார்கள்).
சமூக நெறிமுறைகளை மாற்றுவது மெதுவாவே நடைபெறக்கூடிய செயல்முறை. ஆனால் பெண்களுக்குப் பாதுகாப்பானதும் எளிதில் அணுகக்கூடியதுமான போக்குவரத்தை வழங்குவது போன்ற செயல்பாடுகள் மூலம் மேலும் அதிகப் பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கலாம். தொழிலாளர் சந்தையில் உள்ள தேவைகளுக்கு ஏற்பப் பெண்களுக்குத் திறன்களை வழங்குவது இந்தியாவில் பெண் வேலைவாய்ப்பு விகிதங்களை மேம்படுத்துவதற்கான மற்றொரு வழி. தற்போதைய நிலையில், இந்தியாவில் பெண் வேலை வாய்ப்பு விகிதம் குறைவாக உள்ளது; தொடர்ந்து அது குறைந்துவருகிறது. இது குடும்பத்திற்குள் பெண்களின் குரலை மட்டுப்படுத்தி, அவர்களுடைய பேரம் பேசும் ஆற்றலைக் குறைப்பதோடு, நாட்டின் வருமானத்திற்கும் சமூக வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.