இந்தியப் பொருளாதாரத்தின் சமமற்ற வளர்ச்சி

06/06/2022
IiT English Page

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் 15 மாதங்களாக நீடித்த விவசாயிகள் போராட்டத்தின் மைய அமைப்பாக இருந்த சம்யுக்த கிசான் மோர்ச்சா அந்தப் போராட்டத்தை முடித்துக்கொண்டு ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டன. போராடிய விவசாயிகளின் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும், குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதத்திற்கான அவர்களின் கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இந்தப் போராட்டமும் அதன் முடிவும் இந்திய விவசாயத்தின் நீண்டகாலப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவவில்லை. உற்பத்தித் திறனை உயர்த்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், சந்தை உள்கட்டமைப்பை உருவாக்கவும், குறைந்துவரும் மண் வளத்தைச் சீராக்கவும் விவசாயத் துறையில் சீர்திருத்தம் தேவை. இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவில்லை என்றால், சில ஆண்டுகளுக்கு முன் இடஒதுக்கீடு கோரி நிலவுடமை கொண்ட வேளாண் சாதியினர் வீதியில் இறங்கியதைப் போல, கிராமப்புற இந்தியாவில் கொதித்துக்கொண்டிருக்கும் சமூக-பொருளாதார முரண்பாடுகள் கொதிநிலையை எட்டும்.

கடந்த சில பத்தாண்டுகளாகக் கிராமப்புற இந்தியா மாற்றமடைந்துள்ளது. இந்த மாற்றம், விவசாயத்திற்கு அப்பாற்பட்டதும் விவசாயம் அல்லாத பொருளாதார நடவடிக்கைகளை உள்ளடக்கியதுமான புதிய சவால்களைக் கொண்டுவந்திருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம்கூடத் தொலைநோக்கில் இச்சூழலை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. கொள்முதல் விலைக்கான ஆதரவு அதன் எல்லையைத் தாண்டிப் பெரிதாகப் பலனளிக்காது. வேளாண்மைக்கும் வேளாண் அல்லாத பொருளாதாரத்திற்கும் இடையே உற்பத்தித் திறனில் பெரிய வித்தியாசம் இருப்பதும் அது தொடர்ந்து அதிகரித்துவருவதும்தான் அடிப்படையான பிரச்சினை. இந்தியப் பொருளாதாரத்தின் இதர துறைகளுடன் ஒப்பிடும்போது மட்டுமல்ல, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போதும் இந்திய விவசாயத் துறையின் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக உள்ளது. உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் இந்தியப் பொருளாதாரத்தின் கட்டமைப்பு சார்ந்த மாற்றத்தை விரைவுபடுத்துவதற்காகத் தொழிலாளர்களைப் பிற துறைகளுக்கு மடைமாற்றாதவரை, விவசாயிகளின் நிலைமை தொடர்ந்து மோசமாகவே இருக்கும்.

கடினமாகிவரும் வேளாண்மை
2018-19ஆம் ஆண்டில் இந்தியாவில் சராசரி விவசாயக் குடும்பம் ஒன்றின் மாத வருமானம் ரூ. 10,218 என அண்மையில் வெளியான தேசியப் புள்ளிவிவர அலுவலகத்தின் (NSO) தரவுகள் கூறுகின்றன. கிராமப்புற இந்தியாவில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தைவிட இது மிகவும் குறைவு. 54 சதவீத கிராமப்புறக் குடும்பங்கள் விவசாயக் குடும்பங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் குடும்பங்களின் 40 சதவீத வருமானம் விவசாய வேலைகளுக்கான ஊதியத்திலிருந்து வருகிறது. 2013இல் இருந்த ஊதியத்திலிருந்து இது எட்டு சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளது. விவசாயத்திற்கான மறைமுகச் செலவுகளைச் சேர்த்தால், விவசாயக் குடும்பங்களின் சராசரி வருமானத்தில் ஊதியத்தின் அளவு 49 சதவிகிதம்வரை அதிகமாகும். பயிரிடுதல் மூலம் மட்டுமே கிடைக்கும் வருமானத்தின் பங்கு 2013இல் 48 சதவீதத்திலிருந்து 2019இல் 38 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது, சராசரியாகப் பார்த்தால் விவசாயக் குடும்பங்கள் பயிர் உற்பத்தியைவிடவும் கூலி வருமானத்தையே அதிகம் சார்ந்துள்ளன. இது போதாதென்று, கிராமப்புற இந்தியக் குடும்பங்களில் 35 சதவீதம் பேர் கடனில் உள்ளனர் என்றும், சுமார் 44 சதவீதம் பேர் நிறுவனம் சாராத (முறைசாரா) வழிகள் மூலம், 25 சதவீதம்வரை அதிக வட்டி விகிதத்தில் கடன்களைப் பெறுகிறார்கள் என்றும் 2019இல் வெளியான அகில இந்தியக் கடன் மற்றும் முதலீட்டு ஆய்வின் தரவுகள் காட்டுகின்றன. கிராமப்புற நிறுவனங்களின் இத்தகைய ஆழமான போதாமைகளும் விவசாயத்தில் உள்ள தேக்கநிலையும் கிராம-நகர ஏற்றத்தாழ்வுகளை அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன. விவசாயத் துறையின் மொத்தக் காரணிகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலமாகவோ அல்லது உள்ளீடுகளுக்கான உற்பத்தியை அல்லது தொழிலாளர் உற்பத்தித் திறனை, அல்லது இரண்டையும், அதிகரிப்பதன் மூலமாகவோதான் தொழில் மற்றும் சேவைத் துறைகளுடன் விவசாயத் துறை சமநிலையை எட்ட முடியும். ஆனால் இந்த இரண்டிலுமே விவசாயத் துறை தோல்வியடைந்துள்ளது.

விவசாயத்திற்கும் விவசாயம் அல்லாத துறைகளுக்கும் இடையிலான வருமான இடைவெளி குறிப்பாக 1990களின் பிற்பகுதியிலிருந்து அதிகரித்துவருகிறது. விவசாயத்திலிருந்து "உபரி" தொழிலாளர்களை ஈர்த்துக்கொள்வதில் தொழில்துறைக்கு உள்ள இயலாமையும் இந்த ஏற்றத்தாழ்வை மோசமாக்கியுள்ளது. விவசாயத்திற்கு வெளியே, 1990க்குப் பிந்தைய வளர்ச்சிக்குச் சேவைத் துறையே முன்னண்ணீயில் இருக்கிறது. இன்று விவசாயத் துறைக்கும் தொழில் துறைக்கும் இடையே உள்ள தொடர்பு பலவீனமாகவே உள்ளது. விவசாயத்தில் லாபமும் உற்பத்தித் திறனும் குறைவதும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன. மறுபுறம், வேளாண்மை அல்லாத சேவைகள் துறையில் உள்ள வாய்ப்புகள் விவசாயத்தின் மீதான ஈர்ப்பை மேலும் குறைத்துவிட்டன.

நகர வாழ்க்கையின் மேம்பட்ட நிலை
1990களிலிருந்து, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகுதியும் நகர்ப்புறத்திற்குச் சார்பாகவே இருந்துவருகிறது. நகர்ப்புற - கிராமப்புறச் செலவினங்களின் விகிதத்தால் அளவிடப்படும் கிராமப்புற-நகர்ப்புற ஏற்றத்தாழ்வு, 1993-94இல் 1.63ஆக இருந்தது. 2017-18இல் இது 2.42ஆக உயர்ந்துள்ளது. இந்திய விவசாயத்தின் வீழ்ச்சியும் நகர்ப்புறத்தை மையமாகக் கொண்ட, சேவைத் துறையை முதன்மையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சியின் எழுச்சியும் கிராமப்புற-நகர்ப்புற வேறுபாடுகள் அதிகரிக்க வழிவகுத்தது. எடுத்துக்காட்டாக, 1993-94இல் நகர்ப்புற - கிராமப்புற செலவினங்களின் விகிதம் 1.63ஆக இருந்தது. 2004-05இல் 1.92ஆக இது அதிகரித்தது. இந்த இடைவெளி 2011-12இல் 1.84 ஆக நிலைபெற்றது. 2011-12க்குப் பிறகு பிரித்துத் தொகுக்கப்பட்ட தரவுகள் இல்லை என்றாலும், பணமதிப்பு நீக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டது போன்ற கொள்கை சார்ந்த அதிர்ச்சிகள், கையில் கிடைக்கும் ஊதியம் குறைந்தது, சர்வதேச அளவில் வேளாண் பொருட்களின் விலையில் ஏற்பட்ட சரிவு போன்றவற்றால் இந்தப் போக்கு 2012க்குப் பிறகு மாறியிருக்க வாய்ப்பில்லை. மாறாக, 2017-18க்கான விகிதம் 2.42ஆக உயர்ந்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO) 75ஆவது சுற்றின் தரவுகள் அண்மையில் கசிந்ததில் தெரியவருகிறது. இன்று ஒரு நகரத்தில் வசிப்பவர் ஒரு கிராமத்தில் உள்ள சராசரி மனிதரைவிட கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகமாக நுகர முடியும் என்பதே இதன் பொருள்.

நிறுவனமயமாதலும் பொதுக் கொள்கையும்
இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்க விவசாயத் துறை சென்ற பாதையைப் பின்பற்றுவதன் மூலம் இந்திய விவசாயத் துறையைத் தொழில்மயமாக்க (அதாவது பெருநிறுவனமயமாக்க) முயற்சிக்கின்றனர். அமெரிக்காவில் பெரிய அளவிலான பண்ணைகள், பெரிய நிறுவனங்களின் உற்பத்திப் பெருக்கம், அதிகரித்த உள்ளீடுகள் மற்றும் சேவைகள் கொண்ட சந்தை ஊடுருவல், விவசாயம் அல்லாத துறைகளுடன் விவசாயச் சந்தைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவை கொண்ட சூழ்நிலைகள் விவசாயத் தொழில்மயமாக்கலுக்கு உதவின. அத்தகைய சுழ்நிலைகள் இந்தியாவில் இல்லை. அது மட்டுமல்ல. இந்தியாவின் நிதி நிலைமையை வைத்துப் பார்க்கும்போது, வேளாண் துறைக்கு அமெரிக்கா அளித்ததற்கு இணையான ஆதரவை இந்தியாவால் வழங்கவோ அல்லது அமெரிக்கா செய்ததைப் போல விவசாயத்திலிருந்து தொழிலாளர்களை உற்பத்தித் துறைக்கு மாற்றவோ முடியாது. தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக அமெரிக்க வேளாண் துறையில் உள்ளதைப் போலப் பெரிய அளவிலான இயந்திரமயமாக்கலைப் பின்பற்றுவதற்கான வளங்கள் அல்லது திறன்கள் இந்தியாவிடம் இல்லை. உண்மையில், இந்தியா விவசாயத் துறையில் தேவைக்கும் அதிகமான தொழிலாளர்களின் இருப்பால் பாதிக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்க அனுபவம் இந்தியாவுக்குச் சரிப்பட்டுவராது,

தெற்குலகின் “மாற்றமடைந்துவரும்” பொருளாதாரங்கள் இந்தியாவுடன் ஒப்பிடத் தகுந்தவை. இந்திய கிராமப்புறங்கள் சிறிய அளவிலான வேளாண்மையும் அபரிமிதமான தொழிலாளர்களும் கொண்டவை. உற்பத்தித் திறனில் வேளாண் துறைக்கும் இதர துறைகளுக்குமான இடைவெளி தொடர்ந்து நீடிக்கிறது. கிராம, நகரப் பகுதிகளுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவருகின்றன. இந்தியாவோடு ஒப்பிடுகையில் சீனா தன்னுடைய வேளாண் உற்பத்தித் திறனை அதிகரித்திருக்கிறது. அதே சமயம் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் செலவை அதிகரித்ததுடன், உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்ததன் மூலம் விவசாயிகள் இதர துறைகளுக்கு மாற வகைசெய்திருக்கிறது. வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது.

இந்தியாவில் விவசாய நிலங்களின் அளவு குறைந்துவருகிறது. ஒவ்வொரு விவசாயியும் சராசரியாக 1.2 ஹெக்டேர் (3 ஏக்கர்) நிலம் வைத்திருக்கிறார். சீனாவில் இது 0.6 ஹெக்டேர் (1.5 ஏக்கர்). ஆனால், சீனாவைக் காட்டிலும் இந்தியாவின் விவசாய உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. 1961, 2019 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவிலும் சீனாவிலும் முக்கியமான உணவுப் பயிர் வகைகளின் விளைச்சலை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியாவைக் காட்டிலும் சீனா தன் விவசாய உற்பத்தித் திறனைத் தொடர்ந்து மேம்படுத்தியுள்ளது தெரியவருகிறது. இந்தியாவில் ஒரு ஹெக்டேருக்கு நெல் விளைச்சல் 40,577 ஹெக்டோகிராம் (hg/ha). சீனாவில் இது 70,601. கோதுமை மகசூல் இந்தியாவில் ஒரு ஹெக்டேருக்கு 35,334 ஹெக்டோகிராம் (hg/ha); சீனாவில் 56,298. உற்பத்தித் திறனில் உள்ள வேறுபாட்டுக்குக் காரணம் வேளாண் பருவ நிலைகளின் விளைவு அல்ல. ஏனெனில், இரு நாடுகளிலும் இது ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.  விவசாயத்தில் பயன்படுத்தப்படும் முறைகள், தொழில்நுட்பங்கள் ஆகியவையும் கொள்கை சார்ந்த காரணிகளும் சீனாவின் உற்பத்தித் திறன் அதிகரிப்புக்குக் காரணமாகும். எடுத்துக்காட்டாக, சீனாவின் நீர்த் திறன் (பயிர்களுக்குப் பாய்ச்சும் தண்ணீர், பயிர்கள் எடுத்துக்கொள்ளும் தண்ணீர் ஆகியவற்றின் சதவீதம்) 53 சதவீதம். இந்தியாவில் இது 30 சதவீதம். வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குறிப்பான்களின்படி (ASTI), விவசாய ஆராய்ச்சிக்கான இந்தியாவின் செலவு விவசாயத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.30 சதவீதம். இது சீனா செலவழிக்கும் விகிதத்தில் (0.61 சதவீதம்) பாதி. விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, அதன் தொழிலாளர்களைப் பிற துறைகளுக்கு மடைமாற்றுவது ஆகிய இரண்டிலும் இந்தியா சீனாவைவிடப் பின்தங்கியுள்ளது.

விவசாயத் துறையிலிருந்து பிற துறைகளுக்கான மாற்றம் வெற்றிகரமாக நடந்தால் வேளாண் துறையிலும் இதர துறைகளிலும் அதிக உற்பத்தி, நகர்ப்புற மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், தொழில் துறைகளில் முதலீடு செய்வதற்கு வேளாண் உபரி மூலதனத்தை வழங்குதல் ஆகிய விளைவுகள் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர் சி. பீட்டர் டிம்மர் வாதிடுகிறார். அத்தகைய மாற்றத்திற்கான மேலும் சில நிபந்தனைகளையும் அவர் சேர்க்கிறார். விவசாயத்திற்கும் தொழில்துறைக்கும் இடையேயான கட்டமைப்பு சார்ந்த உறவைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் ஒருங்கிணைந்த தொழில்துறைக் கொள்கை இருக்க வேண்டும் என்கிறார். அது நகர்ப்புற உள்கட்டமைப்பு, சமூக அளவிலான ஆதரவு (குறிப்பாக கல்வி, சுகாதாரத் துறைகளில் முதலீடுகளைச் செய்யும் வகையில்) ஆகியவற்றையும் வழங்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

மாறாக, இந்தியாவிலோ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாய உற்பத்தியின் பங்கு குறைந்தது; விவசாயத் துறையில் அதன் முதலீட்டின் அளவைத் தக்கவைக்க முடியவில்லை. பொதுச் சுகாதாரம், கல்வி சார்ந்த உள்கட்டமைப்பையும் போதிய அளவில் மேம்படுத்த முடியவில்லை. 1990களிலிருந்து நீர்ப்பாசனம், ஆராய்ச்சி, கல்வி ஆகியவற்றில் பொது முதலீடும் குறைந்துவருகிறது. விவசாயத்தில் நடக்கும் பெரும்பாலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் தேவையற்றதாகிவிட்டன அல்லது அவற்றில் அடிப்படைக் கட்டமைப்பு வசதி இல்லாமல் போனது.

இந்நிலையில், கிராமப்புற அமைதியின்மையின் மற்றொரு வடிவத்தை நாம் காண்பதில் வியப்பதற்கொன்றுமில்லை. விவசாயத்தை அதிகமாகச் சார்ந்திருக்கும் சாதிகளான ஜாட்கள் (ஹரியானா, பஞ்சாப்), மராத்தாக்கள் (மகாராஷ்டிரம்), படேல்கள் (குஜராத்தில்) ஆகியோர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். நகர்ப்புறங்களில் நீண்ட காலமாக வசித்துவரும் உயர் சாதியினர், ஆதிக்கம் செலுத்திவரும் முறைசார் நவீனத் துறைகளில் தங்கள் சாதியினருக்கு உயர் கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர். இந்தக் குழுக்களைப் போலவே, விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பலருக்கும் நவீன சேவைகள் துறையால் வழிநடத்தப்படும் பொருளாதாரத்தில் பங்கேற்கும் திறன்களைப் பெறுவதற்கான போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. விவசாயத்தில் ஒப்பீட்டளவில் வருமானம் குறைவாக இருப்பதுடன் இத்தகைய பிரச்சினைகளும் சேர்ந்துகொள்வது இவர்களுக்கு விரக்தியளிக்கிறது. விவசாயத்தின் எதிர்காலம் இருண்டதாகத் தெரிகிறது. நவீனப் பணிகள் சார்ந்த உலகமோ எட்டாக்கனியாகத் தோற்றமளிக்கிறது. தெற்குலகில் நமக்குக் கிடைக்கும் சான்றுகள் சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் மனித மூலதனத்தை உருவாக்குவதன் மூலமும் விவசாய உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலமும் விவசாயத் துறையின் மாற்றம் சிறந்த முறையில் நடைபெறுகிறது என்பதை உணர்த்துகின்றன. எனவே, தரமான கல்வியும் சுகாதாரமும் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்னும் கோரிக்கை, இந்தியாவில் விவசாயச் சீர்திருத்தத்திற்குத் துணைபுரியும் அம்சமாக இருக்க வேண்டும்.

ஆ. கலையரசன்

Author

கலையரசன்பிரவுன் பல்கலைக்கழகத்தின் சமகாலத் தெற்காசிய மையத்தின் ஆய்வாளர்சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் துணைப் பேராசிரியர்

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்