“பெண் தொழில்முனைவோர்” குறித்த பிரச்சினை

06/12/2021
IiT English Page

உலகின் "பின்கள" தொழில்நுட்பப் பணிகளுக்குப் பேர்போன நகரமான பெங்களூரைத் தொழில்முனைவுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்குமான புதிய ஸ்டார்ட்அப் மையமாகத் தொழில்முனைவோரும் அரசு அதிகாரிகளும் மாற்றிவருகின்றனர். இந்த "ஸ்டார்ட்அப் நகர"த்தை உருவாக்கிவரும் பல்வேறு மையங்களையும் செயல்பாடுகளையும் 2012முதல் நான் கவனித்து வருகிறேன். பெண்களைத் தொழில்முனைவோராக ஆக்குவதில் குறிப்பான கவனம் செலுத்தும் நடைமுறை என்பது குடிமக்களைத் தொழில்முனைவோராக மாற்றுவதில் முக்கியமானதொரு முயற்சியாக உள்ளது. பெண் தொழில்முனைவோருக்கான நெட்வொர்க்கிங் நிகழ்வுகள், தொழில்நுட்பம் குறித்து கூகுள் ஏற்பாடு செய்யும் சிறப்பு அமர்வுகள், இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (பெங்களூரு) பயிற்சித் திட்டம், தொழிலுக்கு வழிகாட்டுதலுக்கான முறைசாராக் குழுக்கள் ஆகியவை இதில் பங்களிக்கின்றன. அப்படி இருக்க, நான் சந்தித்த பெண் தொழில்முனைவோர் பலருக்கு ஏன் போதுமான நிதியுதவி கிடைக்கவில்லை அல்லது தொழில்முனைவோராக அவர்கள் ஏன் அங்கீகரிக்கப்படவில்லை?

புத்தாயிரத்தில் "வளர்ச்சியின் பாலினச் சமன்பாடு" பற்றி எழுதுகையில், யூசிஎல்ஏ (UCLA) பேராசிரியை அனன்யா ராய், நவதாராளவாதக் கோட்பாடுகளும் சிக்கனமான அரசியலும் ஏழ்மையைக் கண்டுணர்ந்து அது குறித்துச் செயலாற்ற விரும்பும் தாராளவாத சுயத்திற்கு இடமளித்துள்ளன என்று குறிப்பிடுகிறார். லாப நோக்கற்ற நிறுவனங்களின் விளம்பரச் சிற்றேடுகளின் அட்டைகளில் இடம்பெற்றிருந்த பரிதாபகரமான மூன்றாம் உலகப் பெண்ணின் உருவத்திற்குப் பதிலாக உலகளாவிய வளர்ச்சியின் அடையாளமாக இருக்கும் பெண்ணின் வெற்றிகரமான தோற்றம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெண் தொழில்முனைவு நாட்டம் கொண்டவர். மாற்றங்களைக் கொண்டுவருபவர். தனது சமூகத்தின் முன்னேற்றத்திற்காகக் கடன் வாங்கித் தொழில் நடத்த அவரால் முடியும். உலகளாவிய மைக்ரோஃபைனான்ஸ் குழுவான கிவா (Kiva) இணையதளத்திலும் அவர் தன்னுடைய திட்டங்களைச் சிறந்த முறையில் முன்வைக்கலாம். தொழில்முனைவோராக மாறுவதற்கும், மதிப்பை உருவாக்குவதற்கும், வறுமையைப் போக்குவதற்கும் பெண்கள் மீது செலுத்தப்படும் இந்த கவனம், கொள்கை வகுப்பு பெண்ணியமயமாகியுள்ளதைக் குறிக்கிறது. உலகளாவிய வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இந்தத் திருப்பம் "சமூக மறுவுருவாக்கத்தின் மரபார்ந்த பாலினம்சார் பாத்திரங்களைத் தொடர்ந்து தக்கவைக்கப் பெண்களை மையமாகக் கொண்ட கொள்கைகள் மூலம் வளர்ச்சி செயல்படும் வழிகளை"க் குறிக்கிறது என்று ராய் எழுதுகிறார்.

பெங்களூரில் எனது களப்பணியின்போது, இந்த "வளர்ச்சிக்கான பாலினச் சமன்பாடு" எப்படி ஸ்டார்ட்அப் முதலாளித்துவத்தின் போட்டியுணர்வு கொண்ட தொழில்முனைவோர் உலகை வடிவமைக்கிறது என்பதை நேரில் கண்டேன். வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும், சாதியையும் வர்க்கத்தையும் மறுவுருவாக்கம் செய்ய வேண்டும், பள்ளிக்கும் வேலைக்கும் குடும்பத்தினரைத் தயார் செய்ய வேண்டும் என்று தங்களிடம் இன்னும் எதிர்பார்க்கும் சமூக அமைப்பிற்குள்தான் பெண்கள் தொழில்முனைவோராக மாற வேண்டியிருக்கிறது.

ஆண் தன்மை கொண்ட கட்டமைப்பிற்குள் பெண்களைப் பொருத்துதல்
பரந்துபட்ட சமூகக் கட்டமைப்பை மாற்றாமல் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறைந்தது இரண்டு வழிகளில் தொழிற்படுகிறது. முதலாவதாக, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஸ்டார்ட்அப் உலகங்களில் பெண்கள் நிதியுதவிக்காகப் போட்டியிடும் கட்டாயம் ஏற்பட்டது. எடுத்துக்காட்டாக, பெங்களூரில் நடந்த ஸ்டார்ட்அப் திருவிழா ஒன்றில், தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களைப் பற்றியும் திட்டங்களையுப் பற்றியும் நிதியளிப்பவர்கள் குழுவிடம் சுருக்கமாக விவரித்த ஒரு அமர்வில் கலந்துகொண்டேன். பெண்கள் தங்கள் நிறுவனங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். குழந்தைகளுக்கான கணித விளையாட்டு, பணியிடத்தில் மீண்டும் நுழைய விரும்புவோருக்கான மனிதவள ஆலோசனை, பார்ட்டிகளின்போது ஈடுபடக்கூடிய விளையாட்டுகளுக்கான யோசனை என்று அவர்களுடைய திட்டங்கள் அமைந்திருந்தன. நிதியளிப்புக் குழுவிடமிருந்து உற்சாகமான பதில்கள் வரவில்லை. “ஏற்கெனவே இருக்கும் தேவைக்காகத் திட்டங்களை உருவாக்காதீர்கள். தேவைகளையும் விருப்பகளையும் புதிதாக உருவாக்குங்கள்” என்று கூறினார்கள். ஏற்கனவே உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக, தங்களுக்கான சொந்த சந்தைகளை உருவாக்கக்கூடிய, மிகப்பெரிய வெற்றியைப் பெறக்கூடியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடியதுமான திட்டங்களையே நிதியளிப்பவர்கள் தேடுகின்றனர்.

அவர்கள் சொன்னதையெல்லாம் பெண்கள் சிரத்தையுடன் குறிப்பெடுத்துக்கொண்டு, தங்கள் நிறுவனத்தை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பதைப் பற்றிச் சிந்தித்தார்கள். ஆனால் பிரச்சினை அவர்களுடைய திட்டம் அல்ல; ஸ்டார்ட்அப் தொழில்முனைவு என்பது ஆண்களின் வெளி என்பதுதான் பிரச்சினை. ஸ்டார்ட்அப் உலகம் என்பது புதுமை, நெட்வொர்க்கிங், பொழுதுபோக்கு ஆகியவற்றால் ஆனது. ஸ்டார்ட்அப் துறையில் நுழைய வேண்டுமானால், இவற்றுக்குள் புழங்க வேண்டும். புதுமையான திட்டங்களை ஆய்வு செய்யும் கூட்டங்கள் அல்லது நிறுவனங்களை முன்னிறுத்தும் அமர்வுகளில், ஒரு திட்டம் பெரிய அளவிலான தொழிலாக வளருமா என்பதையும் தொழில்முனைவோர் தங்கள் வணிகத்திற்காக தினமும் எத்தனை மணிநேரங்களைச் செலவிடுவார்கள் என்பதையும் நிதியளிப்பவர்கள் அறிய விரும்பினார்கள். இந்த இரண்டு அம்சங்களிலும் பெண் தொழில்முனைவோரின் எல்லைகள் சுருங்கியிருக்கின்றன. அவர்களில் பலர், மாலையில் நடக்கும் நெட்வொர்க்கிங் நிகழ்வு தொடங்குவதற்கு முன், குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்காக வீட்டிற்கு விரைந்தார்கள். ஆண் - பெண் உறவு என்னும் கட்டமைப்பைக் கொண்ட, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தங்கள் சிறிய குடும்பத்தைப் பராமரிக்கும் வேலைகளுக்கு இடமளிப்பதற்காக அவர்கள் வழக்கமல்லாத நேரங்களில் எல்லாம் வேலை செய்ய வேண்டியிருந்தது.

இந்தப் பின்புலத்தில் "பெண்களின் தொழில்முனைவு" வெளிப்படும்போது அது, பெண்களின் நேரத்தையும் ஆற்றலையும் கோரும் சமூகக் கட்டமைப்புகளை மாற்றுவதில்லை. ஓய்வின்றிப் பல மணிநேரங்கள் வேலை செய்வது, தொழில்முனைவுத் தளங்களுக்கிடையேயான நடமாட்டம், வணிகத்தை வளர்க்க வரம்பற்ற நேர அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கோரும் ஆண்களின் உலகில் இது அவர்களைப் பொருத்த முயற்சிக்கிறது. சதுர வடிவிலான பொருளை வட்ட வடிவிலான துளைக்குள் பொருத்த முயற்சிப்பது போன்றது இது. பெண்களின் தொழில்முனைவு மதிப்புமிக்கதாக அங்கீகரிக்கப்படவில்லை. ஏனெனில் பெண்கள் தொழில்முனைவுக்கான இயல்பு கொண்டோராக அங்கீகரிக்கப்படவில்லை. வீட்டு விவகாரங்களைக் கவனிப்பதை முதன்மையாகக் கொண்ட இல்லத்தரசிகளாகவே அவர்களை நிதி வழங்குபவர்கள் பார்க்கிறார்கள்.

தனிநபருக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்துதல்
ஆழ்ந்த பயிற்சி, வழிகாட்டுதல் ஆகியவற்றின் மூலம் ‘பெண் தொழில்முனைவு’ என்ற பொதுப் பிரச்சினை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளப்பட்டது பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திற்கான இரண்டாவது வழியாகும். எடுத்துக்காட்டாக, புகழ்பெற்ற இந்திய மேலாண்மைக் கழகம் (IIM) பெண் தொழில் முனைவோருக்கெனவே பயிற்சித் திட்டங்களை உருவாக்கியுள்ளது. “நடைமுறை சார்ந்த கருவிகள், அறிவு ஆகியவை மூலம் தொழிலை வெற்றிகரமாக வளர்த்தெடுக்கும்” திறனைப் பெண்களுக்குத் தர கோல்ட்மேன் சாக்ஸ் என்னும் அமைப்பு உலகளாவிய திட்டத்தை வைத்திருக்கிறது. இது இணையம் வழியாகத் தரப்படும் பயிற்சி. புதிதாகத் திறன்களைக் கற்பது, இருக்கும் திறன்களை மெருகேற்றுதல் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு தொழில்முனைவோருக்கு இங்கு உள்ளது; எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் சந்தை நிலவரத்திற்கு ஏற்றாற்போல் நம்மைத் தயார்படுத்திக்கொள்ளத் தேவையான நவதாராளவாதப் பொருளாதாரத்தின் முக்கியமானதொரு பகுதி இது.

பங்கேற்பாளர்கள் தமது பயிற்சித் திட்டத்தைத் தேர்ந்தெடுத்ததும் தமது குறிப்பிட்ட சூழலுக்கும் திட்டங்களுக்கும் ஏற்பக் கற்றலைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் அவர்களுக்குத் தரப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ‘உங்களது தொழிலை முன்னேற்றுங்கள்’ என்ற திட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்கள் (பதிவு இலவசம்) நல்ல வாய்ப்பை அடையாளம் காண்பது எப்படி, வளரும் வாய்ப்பைத் தேர்ந்தெடுப்பது எப்படி, தங்களது இடத்திற்கருகே இருப்பது யார் என்பதை அறிந்துகொள்ளுதல் ஆகியவற்றைக் கற்கலாம். கற்றுக்கொள்வோர் புதிய கருத்தாக்கங்களைக் கற்றுக்கொண்டு அதைத் தங்களுடைய புதிய திட்டங்களில் பயன்படுத்திப் பார்க்க ஒவ்வொரு பயிற்சித் திட்டமும் உதவுகிறது.

கடும் போட்டியும் ஆணாதிக்கமும் நிறைந்த ஸ்டார்ட்-அப் முதலாளித்துவ உலகம் பெண்களைத் தொழில் முனைவோராக அங்கீகரிக்காத நிலையில், பெண்கள் மட்டுமே அடங்கிய குழுக்களின் குறிப்பான முயற்சிகள், பெண்களுக்கு ஆதரவளித்து அவர்களைத் தொழில்முனைவோராக அங்கீகரித்தல் அல்லது நிதியுதவி அளித்தல் ஆகியவற்றைச் செய்யக்கூடிய பரந்துபட்ட கட்டமைப்புகளைத் தவிர்த்துவிட்டு, தனிப்பட்ட பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகின்றன. பெண்கள் தங்களுக்குள் இணைப்பில் இருப்பதையும் முன்னேறத் துடிக்கும் ஒரு பெண்ணுக்கு மற்ற பெண்கள் உதவுவதை உறுதிசெய்வதும் பெண்கள் மட்டும் அடங்கிய குழுக்கள் முன்னெடுக்கும் திட்டங்களின் நோக்கம்.

பெங்களூரில் களப்பணி ஆற்றியபோது, தங்களுக்குள் பரஸ்பரம் பயிற்சிகளை அளித்துக்கொண்ட முறைசாரா பெண்கள் நெட்வொர்கிங் குழு ஒன்றைச் சார்ந்த பெண்களை நான் சந்தித்தேன். அத்தகைய பயிற்சி ஒன்றில், காலை உணவு அமர்வில் ஸ்ப்ரெட்ஷீட்டை உருவாக்குவது எப்படி என்று ஒரு பெண் ஒரு குழுவுக்குக் கற்றுத்தந்தார். வேறொரு பயிற்சியில் உள்ளூர்ப் பெண்களால் நடத்தப்படும் தொழில் மையம் குறிப்பிட்ட ஓரிடத்தில் நுகர்வைப் பெருக்குவது குறித்த ஒரு நாள் நிகவுகளை நடத்தியது. விருந்து, டிஸ்கோ இரவுகள் உள்ளிட்ட சமூக நிகழ்வுகள் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளாகவும் செயலாற்றின. எங்கு பார்த்தாலும், வேலையை ஒரு பண்டமாக மாற்றுவதற்காகப் பொழுதுபோக்கும் வேலையும் ஒன்றோடொன்று கலந்து, பெண் தொழில்முனைவோரை அவளது வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தொழில்முனைவோராகவே இருக்கச் செய்துகொண்டிருக்கின்றன.

வேலைக்கென்றே முழுமையாக அளிக்கப்படும் நேரம், ஆற்றல், தொழிலை வளர்ப்பதற்கான திறமை ஆகியவை தேவைப்படும் விரிவானதொரு தொழில்முனைவு உலகிற்குள் நுழைவதற்கான தன்மைகள் இதுபோன்ற முறை சார்ந்த, முறைசாராத் திட்டங்களில் பங்கேற்கும் பெண்களிடம் ஏற்கெனவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய திறன்களைப் பெறும் தனிநபர்கள் பிறரும் அதைப் பெற உதவுகிறார்கள். பொருளாதார மதிப்பை உற்பத்தி செய்யக்கூடிய திறன் நம் அனைவரின் உள்ளும் வெளிப்படாத நிலையில் இருப்பதாக நம்பப்படுகிறது என்று நவதாராளவாத பொருளாதாரங்களுக்குள் இருக்கும் தொழில்முனைவு பற்றி எழுதும்போது டொரான்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் பணியாற்றும் மிஷெல் மர்ஃபி குறிப்பிடுகிறார்.

பெண்களின் வீட்டு வேலை (சமூக மறுவுருவாக்கத்திற்கான பணி) அங்கீகரிக்கப்பட்டு, அவர்களது உழைப்பிற்கான இழப்பீடு கிடைக்காதவரை பொருளாதாரத்திற்கான மதிப்பை உற்பத்தி செய்வதற்காகப் பயிற்றுவிக்கப்பட வேண்டிய, வெளிப்படாத தொழில் ஆற்றலாக மட்டுமே பெண்கள் கருதப்படுவார்கள். பெண்களின் தொழில்முனைவுத் திறனை வளர்ப்பதற்கான முயற்சிகளைத் தற்போதுள்ள பல்வேறு பணி வடிவங்களை – அக்கறையோடு கவனித்துக்கொள்ளுதல், உறவினருக்கான பணிகள், சமூக மறுவுவாக்கம் – மதிப்பிடும் விதமாகத் திசை திருப்பினால் என்ன ஆகும்? இந்தப் பணிகள் அனைத்தும் பாலினப் பாகுபாட்டு அமைப்பினுள் ஆழமாக வேரூன்றியிருப்பதை கோவிட்-19 பெருந்தொற்றுக் காலம் தெளிவாகக் காட்டிவிட்டது அல்லவா? பாலின அடிப்படையிலான பணிப் பங்கீடுகளின் கட்டமைப்பு பல்வேறு விதங்களில், சில தொழில்முனைவோர்கள் உலகையே மாற்றக்கூடிய புதிய திட்டம் பற்றிக் கனவு காணும் திறனைப் பெற உதவுகிறது; மற்றவர்களை இதர வேலைகளை மேற்கொண்டு அந்த முயற்சிகளுக்குத் துணை நிற்கும்படி ஆக்கிவிடுகிறது என்பது என் ஆராய்ச்சியில் தெரியவந்தது.

சாத்தியமற்ற இந்தப் பொருளாதாரத்தில் போட்டியிடப் பெண்களுக்குப் பயிற்றுவித்து அவர்களை நோகடிப்பது, பெண்களை மட்டும் கொண்ட குழுக்களுக்குள் அவர்களைப் பிரித்துவைப்பது ஆகியவற்றுக்குப் பதில், வெவ்வேறு வகையான வேலைகளுக்கு எவ்வாறு மதிப்பை வழங்குகிறோம் என்பதை நாம் மறு மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கிறது. ஒருவர் தான் விரும்புவதைச் செய்வதற்கான தேவைகளைச் சந்தைப் பரிமாற்றத்திற்கு வெளியே எப்படி நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதையும் ஆராய வேண்டும்.

ஹேமாங்கனி குப்தா

Author

ஹேமாங்கினி குப்தா மிடில்பரி கல்லூரியின் பாலினம், பால்தன்மை, பெண்ணிய ஆய்வுகள் துறையில் வருகைதரு துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்