இந்தியாவில் தன்னிச்சையான போராட்டத்தின் முக்கியத்துவம்

12/10/2020
IiT English Page

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் பல்வேறு போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. மாணவர்களும் பெண்களும் அவற்றின் முன்னணியில் நின்றார்கள். ஜனநாயகத்தின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தும் திறன் கொண்ட படைப்பூக்கம் மிகுந்த அரசியலின் புதிய உதயமாக இந்தப் போராட்டங்கள் விளங்கின. இந்தியக் குடிமைச் சமூகத்தின் உயிர்த் துடிப்பைக் கொண்டாட வேண்டிய தருணம் இது. அண்மைக் காலத்தில் இதுபோன்ற போராட்டங்களை இந்தியா கண்டதில்லை. துரதிருஷ்டவசமாக, கோவிட் -19 நோய்ப்பரவல், அதைப் பின்தொடர்ந்த பொது முடக்கம் ஆகியவற்றின் காரணமாக இந்த எழுச்சி தொடக்க நிலையிலேயே தணிந்துபோனது.

பல இடங்களிலும் தன்னிச்சையாக நிகழ்ந்த இந்தப் போராட்டங்களை எதிர்க்கட்சிகளின் கைவரிசை என்று சொல்வதைக் காட்டிலும் உண்மைக்கு மாறானது வேறு எதுவும் இருக்க முடியாது. குடியுரிமைத் (திருத்தச்) சட்டம் 2019, (சி.ஏ.ஏ.) / தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), மாணவர்கள் மீது காவல் துறையினரால் தொடுக்கப்பட்ட கொடூரமான தாக்குதல் ஆகியவை இந்த எதிர்ப்புப் போராட்டங்களுக்கு உடனடித் தூண்டுதலாக இருந்தன. எனினும், அரசியல் சட்டத்தின் லட்சியங்கள் மீது காட்டப்படும் பெருத்த அவமரியாதை, பொதுவாழ்வு விழுமியங்களின் சீரழிவு, எதிர்ப்புக் குரல்களின் மீதான சகிப்பின்மை, தேர்தல் லாபங்களுக்காகச் சமய உணர்வுகளைப் பொது வெளியில் பயன்படுத்துவது அதிகரித்துவருவது ஆகியவை இந்த எதிர்ப்புக்கான ஆழமான காரணங்களாக அமைந்தன. எதிர்ப்பை உறுதியாக வெளிப்படுத்துவதன் மூலம், இந்திய அரசியல் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள விழுமியங்களை மீட்பதற்கான போராக இந்தப் போராட்டங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அனுதாபம், இரக்கம், கற்பனைத் திறன் ஆகிய பண்புகளைச் சமுதாயத்தில் வளர்ப்பதற்கான செயல்பாடு இது.

அண்மையில் ஷாஹீன் பாகிலிருந்து வந்த போராட்டக்காரர் ஒருவரிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது அவர் முதலில் பிரதமரின் இல்லத்தின் பாதுகாப்பு பற்றி விசாரித்தார். பிரதமரின் இல்லத்தருகே அப்போது சிறிய தீ விபத்தொன்று நிகழ்ந்திருந்தது. பிறகு, “எதிப்பாளர்களை அவர்களுடைய ஆடையை வைத்தே அடையாளம் காணலாம்” என்று பிரதமர் தெரிவித்திருந்த நுண்ணுணர்வற்ற கருத்துக்குத் தன்னுடைய கடும் கண்டனங்களைத் தெரிவித்தார். அதன் பிறகே அவர் சி.ஏ.ஏ. குறித்த தன் கவலைகளை வெளிப்படுத்தினார். தான் பிறந்த மண்ணின் மீதான தன்னுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தினார். ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர் ஒருவரைப் பார்த்து, “ஜாமியா என்பதன் பொருள் உங்களுக்கு என்னவாக இருக்கிறது?” என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். “அது எனக்குத் தேஸாப்பைத் (பண்பாட்டு ரீதியான வளர்ச்சி) தந்திருக்கிறது. சம்விதானைப் (அரசியல் சட்டம்) புரியவைத்திருக்கிறது. படிக்கவும் எழுதவும் சிந்திக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகம் என்னுடைய நாட்டை எனக்குப் புரியவைத்திருக்கிறது. காந்தியின் லட்சியத்தை நிறைவேற்ற நான் என் வாழ்நாள் முழுவதும் பணிபுரிவேன். என்னுடைய மதச்சார்பற்ற இந்தியாவை மீண்டும் பெற விரும்புகிறேன்” என்று பதிலளித்தார் அந்த மாணவர். இந்தப் போராட்டக்காரர்களின் நேர்மையும் உண்மைத்தன்மையும் மக்களால் உயர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள் தந்திர புத்தியுடன் இரக்கமற்ற விதத்தில் விடுக்கும் அறிக்கைகளுக்கு நேர் எதிரானதாக உள்ளன.

நான்கு அம்சங்கள் குறிப்பான கவனத்துக்கு உரியவை. முதலாவதாக, இந்திய அரசின் மதச்சார்பற்ற தன்மையின் மீது சி.ஏ.ஏ. நேரடியாகத் தாக்குதல் தொடுத்தபோது, காந்தி முன்மொழிந்த மதச்சார்பின்மை என்னும் கருத்தியலைப் பாதுகாப்பதற்காக இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவை நிர்மாணித்த சிற்பிகள் குடியுரிமை வழங்குவதற்கு மதத்தை அடிப்படையாகக் கொள்வதை ஏற்பவில்லை. மதத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதை அங்கீகரிக்கும் சி.ஏ.ஏ., அரசியல் சட்டத்தில் உருவகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை என்னும் கருத்தைச் சீர்குலைக்கிறது. மாறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் அமைதியான சகவாழ்வை மேற்கொள்வது இந்திய நெறிமுறைகளின் பிரிக்க முடியாத பகுதி என்று காந்தி நம்பினார். எனினும் அன்று நிலவிய சூழலில், 1931இல் கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் அமர்வில், “நமது அன்றாட விவகாரங்களில் நடுநிலைமை என்னும் கோட்பாட்டினைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று அரசை அவர் கேட்டுக்கொண்டார். வகுப்புவாத அரசியல் சமுதாயத்தில் அமைதியைக் குலைத்தபோது அரசின் துணையை அவர் நாடினார். வகுப்புவாதத்தன்மை கொண்ட அரசின் கருவிகள் நடுநிலைமையோடு நடந்துகொள்வதற்குப் பதிலாக ஆட்சி அதிகாரத்தின் செயல்திட்டத்திற்குத் துணைபோகின்றன. ஜாமியா மில்லியாவிலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் அண்மையில் நடைபெற்ற மாணவர் கிளர்ச்சியின்போது காவல் துறையினரின் செயல்பாடு அல்லது செயலின்மை இதை உணர்த்தியது.

இரண்டாவதாக, போராட்டக்காரர்கள் காந்திய தார்மிக உணர்வினின்றும் உத்வேகம் பெற்றிருந்தார்கள். சமூக ரீதியாக முறையற்றதாக இருக்கக்கூடிய சட்டங்களை அமைதியான வழியில் எதிர்ப்பது குடிமக்களின் கடமை என்னும் தார்மிகக் கடமையை அவர்கள் கடைப்பிடித்தார்கள். சத்தியமே தன்னுடைய போராட்டங்களின் அடிப்படையாக இருக்க வேண்டும் – சத்தியாக்கிரகம் – என்று காந்தி வலியுறுத்தினார். “சரியானதைச் செய்வதுதான் விரும்பத்தக்கது; சட்டத்திற்கான மரியாதையை வளர்த்தெடுப்பது அல்ல” என்று ‘மக்கள் ஒத்துழையாமையின் கடமை’ (The Duty of Civil Disobedience) என்னும் நூலில் ஹென்றி தோரே குறிப்பிட்ட கருத்திலிருந்து காந்தி உத்வேகம் பெற்றிருந்தார். 1922இல் புரூம்ஃபீல்ட் நீதிமன்றத்தில் காந்திக்கு எதிராக நடைபெற்ற விசாரணையும் அவருடைய தண்டி யாத்திரையும் மேலான தார்மிகக் கோட்பாடுகளுக்காக அநீதியான சட்டங்களை மீறுவதற்கான கச்சிதமான எடுத்துக்காட்டுக்கள். கூடுதலான சமத்துவம் நிலவும் சமுதாயத்தை முன்னெடுப்பதற்கான போராட்டங்களில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியருக்கும் நெல்சன் மண்டேலாவுக்கும் காந்தியின் கருத்துக்கள் உத்வேகமூட்டின. அதே வழியில் இந்தியாவின் இளைஞர்களும் பெண்களும் பாரபட்சமானவை என்றும் அநீதியானவை என்றும் தாங்கள் கருதும் சட்டங்களை எதிர்த்து அமைதி வழியில் போராடினார்கள்.  

மூன்றாவதாக, இந்தியக் குடியரசின் வரலாற்றில் முதல் முறையாக அரசியல் சட்டம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாகத் தோன்றுகிறது. போராட்டம் நடந்த பெரும்பாலான இடங்களில் அரசியல் சட்டத்தின் முன்னுரை கூட்டாக வாசிக்கப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட பதாகைகளிலும்  எழுப்பப்பட்ட முழக்கங்களிலும் அரசியல் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள விழுமியங்கள் பிரதிபலித்தன. அதிகாரத்தில் உள்ளோர் கடைப்பிடிக்கும் பிளவுபடுத்தும் தந்திரங்களைப் பரிகசிக்கும் வாசகங்களும் காணப்பட்டன. மூவர்ணக் கொடிகள் பறந்தன. மகாத்மா காந்தி, பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் உருவப்படங்கள் தென்பட்டன. புனேயில் நடைபெற்ற மாணவர் போராட்டமொன்றில் இப்படி ஒரு முழக்கம் ஒலித்தது: “மோடி-ஷா சாவ்தான், ஹம் லேகே ஆயே ஹை சம்விதான்” (மோடி-ஷா எச்சரிக்கையாக இருங்கள், நாங்கள் அரசியல் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறோம்). நீதி, விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களைக் குறிக்கும் இந்தச் செயல்பாடுகள், அரசியல் சட்டத்தின் அடிப்படைச் சட்டகத்தில் கைவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்னும் செய்தியைத் தெரிவித்தன. விடுதலைப் போராட்டத்தின்போது அனைவரையும் உள்ளடக்கும் சமுதாயம் குறித்த சித்திரம் இந்த நாட்டின் சாமானிய மக்கள், இளைஞர்களின் கூட்டுப் பிரக்ஞையில் உருப்பெற்றது. அந்தச் சமுதாயத்தின் மீதான விருப்பத்தையும் இந்தச் செயல்பாடுகள் குறித்தன.

இறுதியாக, அமித் சௌதுரி பொருத்தமாகக் குறிப்பிட்டதுபோல, இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்ற ஆவணம் மட்டுமல்ல; “அது தேசியவாத ஆவணம் என்பதைக் காட்டிலும் மனிதநேய ஆவணம்.” நம்முடைய கூட்டுச் சமூக இருப்பின் மனிதநேய அம்சத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டார்கள். சீக்கியர்கள் ஷாஹீன் பாகிற்குச் சென்று தங்களுடைய இஸ்லாமியச் சகோதரிகளுக்கு லங்கர் (சீக்கியக் கோயில்களின் பொதுச் சமையலறைகளில் சமைத்துப் பரிமாறப்படும் உணவு) செய்து தந்தார்கள். இந்தச் செயல் நம்முடைய கூட்டுப் பண்பாடு, ஒத்திசைவு கொண்ட மரபு ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியது. “ஆட்சியாளர்களின் சூழ்ச்சியால் நம்முடைய சகோதரத்துவம் உடைந்துபோக நாங்கள் விட மாட்டோம்” என்று ஷாஹீன் பாகிற்கு வந்த சீக்கியர் ஒருவர் உணர்ச்சிகரமாகக் கூறினார்.

மோசமாகிவரும் நோய்ப்பரவல், பெருகிவரும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு மத்தியில் கடந்த சில வாரங்களில் இந்தியச் சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரால் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டுள்ள இரண்டு வேளாண் மசோதாக்களை எதிர்த்து ஹரியானாவிலும் பஞ்சாபிலும் உள்ள விவசாயிகள் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். இந்த மசோதாக்களை அவர்கள் “விவசாயிகளுக்கு எதிரானவை” எனக் கூறியிருக்கிறார்கள். இந்த மசோதாக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதித்துப் பெருநிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் ஆகியவற்றின் நலன்களையே பெருகச்செய்யும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

கடந்த செப்டம்பர் 17 அன்று பிரதமர் மோடியின் 70ஆவது பிறந்த நாள். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதை ‘ராஷ்ட்ரீய பேரோஜ்கார் திவஸ்’ஆகக் (தேசிய வேலைவாய்ப்பின்மை தினம்) கடைப்பிடித்தார்கள். செப்டம்பர் 9ஆம் தேதியன்று இரவு 9.09 மணிக்கு கைபேசி விளக்குகளையும் டார்ச் விளக்குகளையும் ஏற்றியும், பாத்திரங்களைத் தட்டி ஓசையெழுப்பியும் வேலையின்மைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தார்கள். ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில இந்திய ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பு, தேசிய ரயில்வே மஸ்தூர் சங்கம் ஆகிய அமைப்புகள் செப்டம்பர் 14 முதல் 19வரை ஒரு வார காலப் போராட்டத்தை நடத்தின. ரயில்வேயைத் தனியார்மயமாக்குவது ரயில்வே ஊழியர்களை மட்டுமின்றிச் சாதாரணப் பயணிகளையும் பாதிக்கும் என்று ரயில்வே சங்கங்கள் கருதுகின்றன. எனவே அரசின் யோசனையால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் ஆதரவைத் திரட்டுவதும் இவர்களுடைய போராட்டத்தின் நோக்கங்களாக இருந்தன.

How to Save a Constitutional Democracy (அரசியல் சட்ட ரீதியிலான ஜனநாயகத்தைப் பாதுகாப்பது எப்படி) என்னும் நூலில் டாம் கின்ஸ்பர்க், அஜிஸ் இஸட் ஆகியோர் பிரதிநிதித்துவத் தேர்தல் ஜனநாயகத்தின் நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதில் பொதுச்  செயல்பாடுகள், மக்கள் திரளைத் திரட்டுதல் ஆகியவற்றுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கியிருக்கிறார்கள். குடிமக்களின் விழிப்புணர்வுதான் அரசின் ஜனநாயகத்தன்மையை உறுதிசெய்வதற்காகச் சமுதாயம் கொடுக்க வேண்டிய விலை. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் போராட்டக் கலாச்சாரத்திற்கும் மக்களின் செயல்பாடுகளுக்கும் புத்துயிர் தந்த கிளர்ச்சிகள் மதச்சார்பின்மை, சமூக மாற்றத்திற்காக அமைதி வழியிலான அரசியல் போராட்டம் ஆகியவை குறித்த காந்தியக் கருத்தின் மீதான நம்பிக்கை மறுஉறுதி செய்யப்படுவதைக் குறிக்கின்றன. இந்தப் போராட்டங்கள் அரசியல் சட்டத்தின் விழுமியங்களை மக்களிடையே பரவச்செய்து, மனிதநேயம், அனைவரையும் அரவணைத்தல் ஆகிய நம்முடைய நாகரிக விழுமியங்களை மறுஉறுதி செய்திருக்கின்றன. துயரமான சூழல்களில் பொதுப் பிரச்சினைகளில் ஈடுபடுவதற்கும் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் பதில் சொல்லும் பொறுப்பைக் கோருவதற்குமான விழிப்புணர்வு இந்திய மக்களுக்கு இருப்பதை அண்மைக்காலப் போராட்டங்கள் காட்டுகின்றன.

கணேஷ்தத்தா பொடார்

Author

(கணேஷ்தத்தா பொட்டார் பிளேம் பல்கலைக்கழகத்தின் (புனே) அசோசியேட் பேராசிரியர்)

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்