இந்தியாவில் பெரும் எண்ணிக்கையில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் கோவிட்-19 பொது முடக்கத்தின்போது மிகுந்த இன்னல்களை அனுபவித்தார்கள். அவர்களில் பலர் வீடு திரும்பவும் அத்தியாவசியமான சேவைகளைப் பெறவும் மிகவும் போராடினார்கள். இந்தியா விரைவாக நகரமயமாகிவரும் போக்கு, வேலை தேடுபவர்கள் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கிப் பெருமளவில் இடம்பெயர வழிவகுத்திருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்த இடப்பெயர்வுக்கு உள்ள முக்கியத்துவம் ஐயத்திற்கு அப்பாற்பட்டது. இருந்தாலும் பெருந்தொற்றின் தொடக்க நாட்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் காட்டப்படும் அலட்சியத்தின் மீதான கவனத்தைக் குவித்தன.
இந்த அலட்சியத்தை விதிவிலக்காகக் கருத இயலாது. 2014ஆம் ஆண்டின் பஸ்பருவா அறிக்கை (2014 Bezbaruah report) வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு முழுவதிலும் உள்ள நகரங்களில் மோசமாக நடத்தப்படுவதை எடுத்துக்காட்டியது. உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும் புதியவர்கள் உள்ளே வருவதைத் தடுக்கவும் மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் முதலான பல மாநிலங்கள் உள்ளூர் மக்களுக்கே வேலை ஒதுக்கீடு (locals-only job quotas) என்னும் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தின. இந்தியாவில் புலம்பெயர் மக்களுக்கு எதிரான “மண்ணின் மைந்தர்கள்” கொள்கை கொண்ட கட்சிகள் குறித்து மேரி கேட்ஸென்டைன், மைரோன் வீனர் (Mary Katzenstein and Myron Weiner) ஆகியோர் 1970களிலேயே விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார்கள்.
இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இவை கவலை தரும் அறிகுறிகள். இவை பல்வேறு முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. இந்தக் கேள்விகளே எங்களை இந்த ஆய்வுத் திட்டத்தில் ஈடுபடத் தூண்டுகிறன. இந்தியாவிற்குள் புலம்பெயர்வோர் எதிர்கொள்ளும் பாகுபாடு எந்த அளவுக்குக் கடுமையானது, அமைப்பு ரீதியானது? புலம்பெயர் தொழிலாளர்களில் எந்த வர்க்கத்தினர் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டதாக உணர்கிறார்கள்? புலம்பெயர்வோர் சமமாக நடத்தப்படாதற்குக் காரணம் என்ன? நிலைமையை மேம்படுத்தக் கொள்கை சார்ந்த எந்தக் கூறுகள் பயன்படுத்தப்பட வேண்டும்?
கோட்பாட்டு ரீதியான முன்அனுமானங்கள்
நாட்டிற்குள் புலம்பெயர்வோர் குறித்துப் பொதுக்கருத்தை உருவாக்குபவர்கள் பற்றிப் புரிந்துகொள்வது எங்களுடைய தொடக்கக் கட்டக் குறிக்கோளாக இருந்தது. புதிதாக வருபர்களை உள்ளூர் மக்கள் ஏன் விரும்புவதில்லை என்பதற்கான இரண்டு விதமான விளக்கங்களை முன்னதாக நடந்துள்ள சமூக அறிவியல் ஆய்வுகள் சுட்டுகின்றன. முதலாவது - அன்னியர்கள் குறித்த அச்சம் - வெளியாட்கள் குறித்த எதிர்மறை எண்ணங்களைக் குறிப்பிடுவது. உள்ளூர் மக்கள் தாங்கள் வசிக்கும் நகர்ப்புறச் சமூகத்தின் இனச் சூழலைப் பாதுகாக்க முனைவதால் புதியவர்கள் வருகையை எதிர்க்கிறார்கள். புலம்பெயர்வோரின் வருகையால் உள்ளூரின் இனம்சார் பண்பாடு “நீர்த்து”ப்போகக்க்கூடும். இரண்டாவது விளக்கம் பொருளாதாரம் சார்ந்த பதற்றங்களைப் பற்றியது. இந்தியாவில் வேலையின்மை மிகவும் அதிகமாக உள்ளது. பிற பகுதிகளிலிருந்து வேலை தேடி வருபவர்கள் உள்ளூரில் ஏற்கெனவே உள்ள சம்பளங்களைக் குறைத்துவிடுவார்கள் அல்லது உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்புகளை ஒட்டுமொத்தமாகப் பறித்துவிடுவார்கள் என்னும் அச்சத்தில் நியாயம் இருக்கிறது. புலம்பெயர்ந்தோர் பெரிதாக வரி எதுவும் கட்டாமல் நகரிலுள்ள சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடும்.
இந்தக் காரணிகள் முக்கியமானவைதாம் என்பதை நாம் பார்க்கவிருக்கிறோம். ஆனால், இவை முழுமையான சித்திரத்தை அளிக்கவில்லை. உள்நாட்டில் புலம்பெயர்வோர் சர்வதேச அளவில் புலம்பெயர்வோரிடமிருந்து முக்கியமான ஒரு விஷயத்தில் மாறுபடுகிறார்கள். உள்நாட்டில் அவர்கள் எங்கு சென்றாலும் அரசியல் சட்டம் அவர்களுக்கு அளித்துள்ள வாக்குரிமை அவர்களிடம் இருக்கும். இந்தியாவின் உயிரோட்டமுள்ள ஜனநாயகத்தில் புலம்பெயர்வோர் வாக்கு வங்கிகளாகச் செயல்பட முடியும். புலம்பெயர்வோரைத் தம்முடன் இணைத்துக்கொள்வதற்கு ஆதரவாகவோ எதிராகவோ குடிமக்களும் அரசியல்வாதிகளும் பணிபுரியத் தூண்டக்கூடிய காரணிகளை இது அடிப்படையிலேயே மாற்றியமைக்கலாம்.
தடயங்களை ஒழுங்குபடுத்துதல்: மாறுபட்ட புலம்பெயர் குழுக்களைப் பற்றி உள்ளூர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
எங்களுடைய முதல் ஆய்வு (Our first study) மும்பையில் கவனம் செலுத்தியது. இந்தியாவில் மண்ணின் மைந்தர் என்னும் கருத்தைக் கொண்ட அரசியலின் மையம் என்று சொல்லத்தக்க மும்பை, சிவ சேனைக் கட்சியும் அதிலிருந்து பிரிந்து வந்த மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவும் மையம் கொண்ட நகரம். பிற இடங்களிலிருந்து அண்மைக் காலத்தில் மும்பைக்கு வந்தவர்கள் குறித்த மும்பைவாசிகளின் மனப்போக்குகளைத் தீர்மானிக்கும் காரணிகள் வெளிப்படும் விதமாக அந்நகரின் ஒட்டுமொத்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய விதமாகச் சிலரைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்தோம். புலம்பெயர் தொழிலாளிக்கான அனுமானச் சித்திரம் ஒன்றை இந்த ஆய்வில் முன்வைத்தோம். அவர் மிகவும் திறன் மிக்கவர் அல்லது அதிகத் திறன் இல்லாதவர். வெளிப்படையாக இந்து அல்லது முஸ்லிம் பெயரைக் கொண்டவர். (1990களின் தொடக்கத்தில் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய கலவரங்களுக்குப் பிறகு மும்பையில் மதம் என்பது பிளவுபடுத்தும் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக உள்ளது.) ஆய்வில் கலந்துகொண்டு பதிலளித்தவர்களிடம், இத்தகைய ஒருவர் உங்கள் நகரத்திற்கு வருவதை நீங்கள் விரும்புவீர்களா, அவர் இங்கே வாக்களிக்க அனுமதிக்கப்படுவதை ஆதரிப்பீர்களா என்ற கேள்விகளை முன்வைத்தோம்.
புலம்பெயர்வோருக்கு எதிரான உணர்வுக்குப் பொருளாதார அடிப்படை உள்ளது என்னும் வாதத்திற்கு இந்த ஆய்வின் முடிவுகள் வலு சேர்க்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தொழிலில் உயர் திறன் கொண்டவர் உயர் திறன் அற்றவரைக் காட்டிலும் அதிகம் விரும்பப்படுகிறார். திறன் குறைவானவர்கள் மீதான விருப்பமின்மை திறன் குறைவானவர்கள் மத்தியில் அதிகம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் சந்தையில் இவர்களுடைய பொருளாதார நிலை நிச்சயமற்றதாக இருக்கிறது. இவர்கள் பெரிதும் அரசுப் பணிகளையே சார்ந்திருக்கிறார்கள். ஆகவே, பொருளியல் சார்ந்த கவலைகள் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கடுமையான உணர்வுக்குக் காரணமாக அமைவதாகத் தெரிகிறது.

இன அடையாளம் குறித்த முடிவுகள் சமச்சீரற்றவையாக உள்ளன. ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த இந்துக்கள், பிற இடங்களிலிருந்து இந்துக்கள் வருவதை ஆதரிக்கவில்லை. புலம்பெயர்ந்தோரின் மத அடையாளம் குறித்து அவர்களுக்குப் பெரிதாக அக்கறை இல்லை. அதே சமயம், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் பிற ஊர்களிலிருந்து முஸ்லிம்கள் வருவதை வலுவாக ஆதரிக்கிறார்கள். மும்பையில் நெடுங்காலமாக வசித்துவரும் முஸ்லிம்கள் புலம்பெயர்ந்த இந்துக்களை மதிப்பிடும்போது அவர்களுடைய திறனைத்தான் கவனிக்கிறார்கள். ஆனால், புலம்பெயர்ந்த முஸ்லிம்களின் திறன் அவர்களுக்கு முக்கியமாகப் படவில்லை.
ஆய்வில் கிடைத்த புள்ளிவிவரங்களை ஆழமாகப் பார்க்கும்போது, குழுவாகத் திரளக்கூடிய வாக்காளர்கள் என்னும் வலிமை குறித்த கவனமான பரிசீலனைகள் பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையில் அணுகுமுறைகளில் காணப்படும் வேறுபாட்டை விளக்க உதவுகின்றன. அரசியல் ரீதியாகத் துடிப்பாக இருக்கும் முஸ்லிம்களிடையே தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவான உணர்வு மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. அது மட்டுமல்ல, புலம்பெயர்ந்த முஸ்லிம்களை (புலம்பெயர்ந்த இந்துக்களைவிடவும்) வாக்காளர் பட்டியலில் முழுமையாகச் சேர்ப்பதற்கு இவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். மும்பையில் முஸ்லிம்களின் பலவீனமான நிலையை - நிர்வாகம், ஆளுகை ஆகியவற்றின் ஒவ்வொரு பிரிவிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது – வைத்துப் பார்க்கையில் முஸ்லிம்கள் புலம்பெயர்ந்து வருவது “பாதுகாப்பான எண்ணிக்கை”யைப் பெறுவதற்கான வழியாகப் பார்க்கப்படுவதாகத் தோன்றுகிறது.
புலம்பெயர்வோருக்கு எதிரான பாகுபாட்டை அரசியல்வாதிகளும் காட்டுகிறார்களா?
உள்ளூர் மக்கள் புலம்பெயர்ந்தோர் வருகையின் புதிய அலைகளுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதை எம்முடைய மும்பை ஆய்வு எடுத்துக் காட்டுகிறது. எனினும், மக்கள் கருத்தின் மாதிரி என்பது, புலம்பெயர்ந்தோரைத் தவிர்க்கும் மனநிலையை உருவாக்கும் காரண காரியச் சங்கிலியின் ஒரு இணைப்புதான். அதிகாரம் கொண்ட அரசியல்வாதிகளின் போக்குகளும் அதே அளவுக்கு முக்கியமானவை. நகர்ப்புறக் குடிமக்களுக்குச் சேவைகளை வழங்கும் பணியில் இருப்பவர்கள் கையிருப்பு குறைவாக உள்ள பொருட்களைப் புலம்பெயர்ந்தவர்களுக்குத் தருவதைவிடவும் அதிகமாக நகரில் நெடுங்காலமாக வசிப்பவர்களுக்கு வினியோகிக்கிறார்களா என்பதையும் அறிய விரும்பினோம். அவர்கள் அப்படிச் செய்யக்கூடும் என்பதைக் காட்டும் வலுவான தர்க்கம் உள்ளது.
உள்ளூர் மக்களைப் போலவே அரசியல்வாதிகளும் வெளியாட்கள் தொடர்பான பாகுபாட்டைக் கொண்டிருக்க முடியும். நெடுநாட்களாக வசித்துவருபவர்களின் சமூக-பொருளாதார விருப்பங்களையும் அவர்கள் வெளிப்படுத்தக்கூடும். இந்தக் கணக்கில் அரசியல் வியூகங்களும் இருக்கின்றன. புலம்பெயர்ந்தோர் குறித்த அரசியல்வாதிகளின் தங்களது எண்ணங்கள் எப்படி இருந்தாலும், புலம்பெயர்ந்தோரின் குடியுரிமை கோரிக்கைகளுக்கு உதவுவதால் ஏற்படக்கூடிய லாப நஷ்டங்கள் குறித்து அவர்கள் ஆராய்கிறார்கள் என நாங்கள் அனுமானிக்கிறோம். இந்த உதவி தங்களுக்கான வாக்குகளாக மாறித் தங்களுடைய பிரதான குறிக்கோள் - மீண்டும் தேர்தலில் வெற்றிபெறுவது – நிறைவேற உதவுமா என்பதைக் குறித்து அவர்கள் யோசிக்கிறார்கள். புலம்பெயர்ந்தோர் பெரிய அளவில் வருவது சில சமயங்களில் மட்டுமே நடக்கும் என்பதாலும், வந்த இடங்களில் வாக்காளர்களாகப் பதிவுசெய்துகொள்வது சிக்கலான நடைமுறை என்பதாலும் நகரத்தில் நடக்கும் தேர்தல்களில் உள்ளூர் மக்களைக் காட்டிலும் புலம்பெயர்ந்தோர் பங்குபெறுவது குறைவாக இருக்கும் என்ற முடிவுக்கு அரசியல்வாதிகள் வரக்கூடும். இந்நிலையில் உள்ளூர் அரசியல்வாதிகளின் உதவியைப் பெறுவது புலம்பெயர்ந்தோருக்குக் கடினமானதாகவே இருக்கும்.
இந்தக் கூற்றுகளை மதிப்பிடுவதற்கான பரிசோதனையை (audit experiment) மேற்கொண்டோம். 28 நகரங்களில் உள்ள நகராட்சி கவுன்சிலர்களுக்கு 2,933 கடிதங்களை எழுதி அனுப்பினோம். கவுன்சிலர்கள் பொதுவாக வழங்கும் சேவைகள் குறித்த கடிதங்கள் அவை. எடுத்துக்காட்டாக, பழுதடைந்த தெரு விளக்கைச் சீராக்குதல், வருமானச் சான்றிதழ் பெறுதல் முதலான சேவைகள். (கற்பனையான) குடிமக்கள் முன்வைக்கக்கூடிய கோரிக்கைகளை அடையாளம் காண்பதற்கான பல்வேறு தகவல்கள் அந்தக் கடிதங்களில் இருந்தன. மிகவும் முக்கியமானது என்னவென்றால், பாதிக் கடிதங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த நகரில் வசித்துவரும் “உள்ளூர்” மக்களுடைய கடிதங்கள்போல அனுப்பப்பட்டன. மறு பாதி “இந்தியாவின் வேறொரு மாநிலத்திலிருந்து அண்மையில் குடிபெயர்ந்தவர்”களின் கடிதங்களாக அனுப்பப்பட்டன. கடிதத்தின் முடிவில் தொடர்புகொள்வதற்கான தொலைபேசி எண்ணும் தரப்பட்டிருந்தது.
உத்தேசமான உள்ளூர்வாசிகளுக்கு வந்ததைக் காட்டிலும் உத்தேசமான புலம்பெயர் மக்களுக்குக் குறைவாகவே தொலைபேசி அழைப்புகள் வந்தன – 24 சதவீத வித்தியாசம். புலம்பெயர்ந்தோரை ஒதுக்குவது என்பது இந்தியாவில் அமைப்பு ரீதியான போக்கு என்றும் புலம்பெயர்ந்தோர் பிரச்சினை அரசியல் களத்தில் அதிகம் கவனம் அளிக்கப்படாதது என்றும் தோன்றுகிறது. ஆனால், அரசியல்வாதிகள் புலம்பெயர்ந்தோர் மீது தனிப்பட்ட விரோதம் பாராட்டுகிறார்கள் என்று சொல்லப்படுவதை ஆய்வு முடிவுகள் நிரூபிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. புலம்பெயர்ந்தோர் விஷயத்தில் அரசியல்வாதிகள் உள்ளூர் மக்களின் விருப்பங்களையும் எதிரொலிக்கவில்லை.
மாறாக, ஆய்வில் கிடைத்த தடயம் தேர்தல் தொடர்பான விளக்கங்களையே பிரதிபலித்தது. கடிதங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் தொடர்ச்சியாகக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. இந்த முறை உள்ளூர்வாசிகள்/புலம்பெயர்ந்தோர் நிலையை மட்டுமின்றி அவர்களுடைய அரசியல் சார்புகளையும் மாற்றிக் குறிப்பிட்டோம். அது மட்டுமல்ல, அவர்கள் உள்ளூரில் வாக்காளர்களாகப் பதிவுசெய்துகொண்டிருக்கிறார்களா என்னும் தகவலும் சேர்க்கப்பட்டது. இந்தத் தகவல் அரசியல்வாதிகளின் பதில்களில் பெரிய தாக்கத்தைச் செலுத்தியது. வாக்காளராகப் “பதிவுசெய்துகொள்ளாத” புலம்பெயர்ந்தோரைக் காட்டிலும் வாக்காளராகப் “பதிவுசெய்துகொண்ட” புலம்பெயர்ந்தோர் அதிக பதில்களைப் பெற்றார்கள். வாக்காளராகப் “பதிவுசெய்துகொண்ட” உள்ளூர்வாசிகளுக்கு இணையாக அவர்களும் பதில் பெற்றார்கள். அதாவது, வாக்காளராகப் பதிவுசெய்துகொண்ட தகவல் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வு மறைவதற்குக் காரணமாக அமைந்தது.
இறுதியாக, புலம்பெயர்ந்தோர் மத்தியில் தேர்தலில் பங்கு பெறுவோர் விகிதம் குறைவாக இருப்பது புலம்பெயர்ந்தோர் குறித்த அரசியல்வாதிகளின் அலட்சியத்திற்குக் காரணமாக இருக்கிறதா என்பதையும் அறிவதற்காக அரசியல்வாதிகளிடமே சிறிய பரப்பாய்வை மேற்கொண்டோம். உள்ளூர் அல்லது புலம்பெயர்ந்த ஒருவரைப் பற்றிய அனுமானச் சித்திரத்தை அரசியல்வாதிகளிடம் முன்வைத்தோம். அத்தகைய குடிநபர் அவருடைய தொகுதியில் வாக்காளராகப் பதிவுசெய்துகொள்வதற்கான வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டோம். அரசியல்வாதிகளின் பார்வையில் புலம்பெயர்ந்தவர் வாக்காளராகப் பதிவுசெய்துகொள்வதற்கான வாய்ப்பைக் காட்டிலும் உள்ளூரில் நெடுங்காலம் வசிப்பவர் வாக்காளராகப் பதிவுசெய்துகொள்வதற்கான வாய்ப்பு சராசரியாக 46 சதவீதப் புள்ளிகள் அதிகமாக இருந்தது. புலம்பெயர்ந்தோர் விஷயத்தில் அரசியல்வாதிகளின் அணுகுமுறை தேர்தல் சார்ந்தது என்னும் கருத்தை இது மேலும் வலுப்படுத்தியது.

அடுத்து என்ன?
கோட்பாடு சார்ந்த தெளிவான சில அறிகுறிகள் கிடைத்திருக்கின்றன. புலம்பெயர்ந்தோர் குறைவான எண்ணிக்கையில் வாக்களிப்பது அவர்களுடைய நலன்களுக்குக் குந்தகமாக அமையும் என்பது குறித்து புலம்பெயர்ந்தோரும் அவர்களுக்காக வாதாடுபவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நகரில் நடக்கும் தேர்தல்களில் புலம்பெயர்ந்தோர் கூட்டாகச் சென்று வாக்களிப்பது, அப்படி நடந்ததை விளம்பரப்படுத்துவது ஆகியவை புலம்பெயர்ந்தோர் நலனுக்குப் பெரிதும் உதவிபுரியும். புலம்பெயர்ந்தோர் வாக்காளராகப் பதிவுசெய்துகொள்வதற்கான நடைமுறைகளை எளிமையாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படலாம். வேலைவாய்ப்பு நிலவரத்தின் மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். புலம்பெயர்ந்தோர் அதிகம் வரக்கூடிய நகரங்களில் உள்ளூர் மக்களிடையே – குறிப்பாக அதிகத் திறன் அற்றவர்களிடையே – நிலவும் ஆழமான பாதுகாப்பற்ற உணர்வின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். நகரங்களில் நெடுங்காலமாக வசிக்கும் மக்களுக்கான வேலை வாய்ப்புகள் பெருமளவில் அதிகரிக்காதவரை புலம்பெயர்ந்தோருக்கான சூழ்நிலை மேம்படாது.
எங்களுடைய ஆய்வு முடிவுகள் வேறு ஆய்வுகளுடன் பொருந்துகின்றன என்பது முக்கியமானது. நகர்ப்புற முறைசாராத் தொழில்கள் (எடுத்துக்காட்டு: ஆடம் ஆர்பாக், தாரிக் தாச்சில் ஆகியோரின் ஆய்வு), அரசிடம் குடிமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் (ஜெனிஃபர் புஸல், கேப்ரியேல் க்ரூக்ஸ்-வெய்ஸ்னர்), இந்தியாவில் வாக்காளர்களைச் சேர்க்கும் நடைமுறையை வலுப்படுத்தும் வழிகள் முதலான பொருள்களில் பெரும் உண்மைகளை வெளிப்படுத்திய ஆய்வுகளுடன் இவை பொருந்திப்போகின்றன. ஜனநாயகமும் இடப்பெயர்வும் எப்படி ஒன்றுடன் ஒன்று ஊடாடுகின்றன என்பது குறித்த எங்களுடைய அறிதலை அதிகரிக்கச் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.