முஸ்லிம்களுக்கெதிரான வன்முறை: களத்திலிருந்து ஓர் ஆய்வு

05/12/2022
IiT English Page

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தற்போது வெறுப்பு, வன்முறை, துன்புறுத்தல், மோசமாகச் சித்தரிக்கப்படுதல் ஆகியவற்றை எதிர்கொண்டுவருகிறார்கள். இந்தப் போக்கு முடிவின்றிப் பெருகுவதாகத் தோன்றுகிறது. இந்திய முஸ்லிம்களின் தற்போதைய போராட்டத்தை ஆராய்ந்துபார்க்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் அல்லது சலுகைகளைப் பெறுவோர் என்னும் இரண்டு பொறிகளில் ஏதேனும் ஒன்றில் சிக்கிக்கொள்ளக்கூடிய நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. முந்தையது முஸ்லிம்களுக்கென எந்த முகமையும் இல்லாமல் ஆக்குகிறது. பிந்தையது அவர்களின் நிலையை மகிமைப்படுத்துகிறது. யதார்த்தம் இவை இரண்டுக்கும் நடுவில் உள்ளது. புது தில்லியிலும் கர்நாடகத்திலும் வெவ்வேறு அரசியல் சூழல்களில் நடந்த இரண்டு முஸ்லிம் விரோத நிகழ்வுகள் இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறை திட்டமிட்ட முறையில் நடப்பதைக் காட்டுகின்றன.

தில்லி: வன்முறையே இயல்பாக
2022ஆம் ஆண்டின் ரம்ஜான் இந்திய முஸ்லிம்களுக்கு மிகக் கொடூரமானதும் அடக்குமுறை நிறைந்ததுமான ரம்ஜானாக அமைந்தது. இத்தகைய ரம்ஜானை நீண்டகாலமாக அவர்கள் அனுபவித்ததில்லை. புனித மாதம் தொடங்குவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் தடை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டது. வெறுப்புணர்வு மிகுந்த இந்து மகாபஞ்சாயத்து (மாபெரும் சந்திப்பு) என்னும் கூட்டம் புனித மாதத்தின் முதல் நாளன்று தேசியத் தலைநகரில் நடைபெற்றது. அடுத்தடுத்த நாட்களில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட், புது தில்லி ஆகிய பகுதிகளில் வகுப்புவாத மோதல்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. ஒவ்வொரு மோதலும் இதே பாணியில் நடந்தது: ராம நவமி அல்லது ஹனுமான் ஜெயந்தியை ஒட்டி நடந்த மத ஊர்வலங்கள் வன்முறையாக மாறின. இந்த ஊர்வலங்களில் கலந்துகொண்டவர்கள் வாள்களை ஏந்தியபடி ஆத்திரமூட்டும் கோஷங்களை எழுப்பினார்கள். ஊர்வலங்களின்போது ஏற்பட்ட மோதல்கள் படிப்படியாக முழு அளவிலான வன்முறையாக மாறின. ஊர்வலத்தில் வந்தவர்கள் ஆவேசமாக வாள்களை உயர்த்தியபடி எழுப்பிய முழக்கங்களுக்கு எதிர்வினையாக ஊர்வலங்களின் மீது கல் வீசியதாக முஸ்லிம்கள் குற்றம்சாட்டப்பட்டார்கள். பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள முஸ்லிம் வீடுகளை இடிக்க மாநில அரசு விரைவில் அனுமதி அளித்தது. “எந்த வீடுகளிலிருந்து கற்கள் வீசப்பட்டனவோ அந்த வீடுகளைத் தரைமட்டமாக்குவோம்” என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் நடந்தது சற்று வித்தியாசமானது. "சட்ட விரோத ஆக்கிரமிப்பு” எனக் கூறிக் கடைகளும் வீடுகளும் இடிக்கப்பட்டன. கொடூரமான வகுப்புவாத வன்முறை நிகழ்ந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இயக்கம் நடைபெறுகிறது என்பதை யாரும் கவனிக்கத் தவறவில்லை.

வன்முறை நடந்த மறுநாள் காலையில், ஷோபா யாத்ரா மத ஊர்வலத்தில் பங்கேற்ற பலரிடம் பேசினேன். வாள் ஏந்திச் சென்றதை யாரும் மறுக்கவில்லை. “ஆம், நாங்கள் வாள்களை ஏந்தியிருந்தோம்… ஆனால் அது வெறும் வேடிக்கைக்காகத்தான். நாங்கள் தீங்கிழைக்க நினைக்கவில்லை. நாங்கள் எங்களுக்குள் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தோம்” என்று இந்தப் பகுதியில் வசிப்பவரும் ஊர்வலத்தில் சென்றவருமான ராகேஷ் சாஹு கூறினார்.

ஆத்திரமூட்டும் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலம் அப்பகுதியில் உள்ள மசூதியைக் கடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. சூரியன் மறையும் நேரத்தில் நோன்பு திறப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு மசூதியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த முழக்கங்களைக் கேட்டு உள்ளே இருந்தவர்கள் ஊர்வலத்தின் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது.

ஊர்வலம் சென்றவர்கள் "ஜெய் ஸ்ரீராம்" என்று எழுதப்பட்ட காவிக்கொடிகளை மசூதிக்குள் ஏற்ற முயன்றதாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினார்கள். இதை இந்துத் தரப்பு மறுக்கிறது. அடுத்த நாள் காலை மசூதிக்குள், நுழைவாயிலுக்கு அருகில் காவிக்கொடிகள் கிடந்ததைக் காண முடிந்தது. அந்த மசூதியின் முன் பாஜக தில்லியின் கோயில் பிரிவுத் தலைவர் உரக்க முழக்கங்களை எழுப்பியதைக் கண்டேன்: தோராயமாக அவற்றின் பொருள் இதுதான்: “நீங்கள் இந்த நாட்டில் வாழ விரும்பினால், ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வேண்டும்.” இது பகிரங்கமான மிரட்டல். வன்முறைக்கான அழைப்பு. காவல் துறையினரின் கண்ணெதிரில் இது நடந்தது.

அதைத் தொடர்ந்து அரசு நடவடிக்கையாகப் பல கடைகள் (முழுமையாக), ஒரு சில வீடுகள் (ஓரளவு), மசூதியின் முன்பகுதி - காவிக்கொடிகளை ஏற்ற முயன்றதாகக் கூறப்படும் வாயில் உட்பட – ஆகியவை இடிக்கப்பட்டன. கடைகளை இடிப்பது மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான நேரடித் தாக்குதலாக இருந்தாலும், மசூதி மீதான தாக்குதல் மிகுதியும் அடையாளபூர்வமானது. ஜஹாங்கிர்புரியில் முழுமையாகவும் முறையாகவும் இயங்கும் ஒரே மசூதி இதுதான். இப்பகுதியில் உள்ள பல முஸ்லிம் இளைஞர்கள் சிறுவயதிலிருந்தே இந்த மசூதிக்குத் தொடர்ந்து சென்றுவருகிறார்கள். மசூதியின் ஒரு பகுதி இடிக்கப்பட்ட பிறகும், பலர் பின்வாசல் வழியாக மசூதிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். "நான் எனது பெரும்பாலான தொழுகைகளுக்கு இந்த மசூதிக்குத்தான் வந்திருக்கிறேன்” என்றார் 16 வயதான சாஜித். “மசூதி என்பது வெறும் கட்டடம் அல்ல என்பதை அவர்கள் உணரவில்லை. அதனுடன் எங்களுக்கு வலுவான உணர்ச்சிப் பிணைப்பு இருக்கிறது. இங்குதான் நாங்கள் வளர்ந்தோம், நிறைய கற்றுக்கொண்டோம்.”

பிற்பகல் தொழுகைக்குப் பிறகு மசூதியை விட்டு வெளியேறுபவர்களின் முகங்களில் நடந்த சம்பவங்கள் குறித்த ஏமாற்றமும் சோகமும் வெளிப்படையாகத் தெரிந்தன. தங்கள் மசூதியின் மீதான தாக்குதலை எதிர்கொண்ட அவர்கள், தங்களில் பலர் தங்கள் முதல் நண்பர்களை உருவாக்கிக்கொண்ட, முதல் நோன்பைக் கடைப்பிடித்த, குர்ஆன் கற்றுக்கொண்ட இடத்தைக் குறிவைக்கும் அரசாங்கத்துடனும் மல்லுக்கு நிற்க வேண்டியிருந்தது.

சுதந்திர இந்தியாவில் பல மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன. 1992இல் பாஜகவின் ஆதரவுடன் இந்துத்துவ தேசியவாதிகள் பாபர் மசூதியைத் தகர்த்தது நிச்சயமாக நாட்டின் மிக முக்கியமான வகுப்புவாதத் தருணங்களில் ஒன்றாகும். ஜஹாங்கிர்புரி மசூதி மீதான தாக்குதல் அதே அளவிலோ, தீவிரத்திலோ இல்லை என்றாலும், ஆக்கிரமிப்பிற்கு எதிரான நடவடிக்கை என்னும் போர்வையில் அரசு வழங்கிய நேரடித் தண்டனை என்பதை ஜீரணித்துக்கொள்வது முஸ்லிம் சமுதாயத்திற்குக் கடினமாக இருந்தது.

ஜஹாங்கிர்புரியில் வசிக்கும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் முறைசாராத் துறையைச் சேர்ந்தவர்கள். முஸ்லிம்களுக்கு எதிரான இந்தத் தாக்குதல்கள், வெறுப்புப் பிரச்சாரங்கள் ஆகியவற்றின்போது இந்தத் துறைதான் அதிகம் பாதிக்கப்படும். கைது நடவடிக்கைகள் முழு வீச்சில் நடந்துகொண்டிருந்த நிலையில், தாங்கள் வாயைத் திறந்தால் நிறைய இழக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தார்கள்.

கர்நாடகம்: வன்முறையே சட்டமாக
ஜஹாங்கிர்புரியின் முஸ்லிம்கள் மிகவும் ஏழைகள்; தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவிலோ பெரிய அளவில் சாதிக்கும் முஸ்லிம் பெண்களுக்க்கு எதிராக அடக்குமுறை ஏவப்படுகிறது. 2021ஆம் ஆண்டு டிசம்பர் பிற்பகுதியில், ஹிஜாப் அணிந்த ஆறு பதின்பருவத்துப் பெண்களிடம், அவர்கள் ஹிஜாப்களை அணிந்துகொண்டு வகுப்பறைக்குள் நுழைய முடியாது என்று பல்கலைக்கழகப் பேராசிரியர் கூறினார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண்கள், தங்கள் வகுப்பறைக்கு வெளியே படிக்கட்டுகளில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பல நாட்களைக் கழித்தனர். வலதுசாரி மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் காவிநிறச் சால்வை அணிந்துகொண்டு எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியபோது நிலைமை மோசமாகியது. ஹிஜாப் அணிந்த பெண்களை வகுப்புக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என அவர்கள் கோரினார்கள். விரைவிலேயே, கர்நாடகம் முழுவதும் பல கல்லூரிகள் ஹிஜாப் தடை விதிகளை விதிக்கத் தொடங்கின. விடாமல் போராடிய சில மாணவிகள் 2022, மார்ச் மாதத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடுத்தார்கள். ஆனால், ஹிஜாப் இஸ்லாத்தின் "அத்தியாவசியமான பகுதி அல்ல" என்றும் பெண்கள் கல்லூரி விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்த மாதத்தின் பிற்பகுதியில் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று, ஹிஜாப் தடையால் பாதிக்கப்பட்ட பல பெண்களைச் சந்தித்தேன். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த இரு பதின்பருவத்துப் பெண்களில் ஒருவரான ஆலியா, மாநில அளவிலான கராத்தே சாம்பியன். இன்னொருவர் வனவிலங்குப் புகைப்படக் கலைஞரான அல்மாஸ். இவருக்குப் பைலட் ஆக வேண்டுமென்று ஆசை. பறக்க வேண்டும் என்னும் தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்வதற்கு முதல் படியாக, மோட்டார் பைக், ஸ்கூட்டர், கார் என்று "தரையில் ஓடும் அனைத்தையும்" ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கிறர்.  

ஹிஜாப் அல்லது புர்கா அணிந்த பெண் எப்படித் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்கான வகைமாதிரியை இந்தப் பெண்கள் மீற வேண்டும் என்று கலாச்சாரம் கட்டளையிடலாம். ஆனால், இந்த உடனடி "ஹிஜாப்தன்மையை"த் தாண்டி இந்தப் பெண்களின் வாழ்வில் நிறைய இருக்கின்றன. தற்போதைய சமூக அமைப்பில் அவர்கள் விதிவிலக்கல்ல. கல்லூரிக்கு வெளியே வலதுசாரி ஆண்களால் துன்புறுத்தப்பட்ட 19 வயதான ஹிபா ஷேக், அவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவுசெய்யும்வரை நடந்ததைப் பற்றித் தன் பெற்றோரிடம் சொல்லவில்லை. "அவர்களைக் கேட்டுக்கொண்டு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார் ஹிபா. சில ஆண்டுகளாக இந்திய மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுக்குத் தயாராகிவரும் ஹிபா, காவல் துறை அதிகாரியாக வேண்டும் என்று விரும்புகிறார். "நாட்டில் வன்புணர்வுகள் மிகவும் பரவலாக உள்ளன. மக்களுக்கு நீதி கிடைக்க நான் உதவ விரும்புகிறேன்" என்று அவர் கூறினார். உயர்ந்த அபிலாஷைகளும் கனவுகளும் கொண்ட இந்தப் பெண்களிடமிருந்து கல்வி பறிக்கப்படும்போது, அது அவர்களின் மேல்நோக்கிய இயக்கத்தை மட்டுமன்றி அவர்களின் சுயம் குறித்த உணர்வையும் முகமையையும் தாக்குகிறது. இந்தக் காரணத்திற்காகப் பல இளம் பெண்கள் வகுப்பறைக்குச் செல்லவும் பரீட்சை எழுதுவதற்காகவும் சில மாதங்கள் ஹிஜாபைத் துறக்க முடிவுசெய்தார்கள். "நான் மனம் உடைந்துபோனேன். ஆனால் கல்விக்காகவே இதைச் செய்கிறேன்" என்று தேர்வுக்குப் பிறகு சஃப்ரீனா என்னிடம் கூறினார். தன் வகுப்புத் தோழர்கள் ஹிஜாப் அணியாமல் தன்னை  முதல் முறையாகப் பார்த்ததாகவும், முதலில் அவர்களுக்குத் தன்னை அடையாளம் தெரியவே இல்லை என்றும் அவர் கூறினார். "நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன்" என்றார் அவர். இது அரசு வலுக்கட்டாயமாக ஆடைகளைக் களைவதற்குச் சமமானது.

ஹிஜாப் அணிவதற்காகக் கல்வியை இழக்க நேரிடும் பெண்களுக்குச் சமரசத்தைத் தவிர வேறு வழியில்லை. “எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள்; அவள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறாள். கல்லூரியில் மீதியிருக்கும் ஒரு வருடத்தை நான் எப்படியோ சமாளித்துக்கொள்வேன்.  ஆனால் அவளுடைய கல்வி முடிய இன்னும் நிறைய ஆண்டுகள் இருக்கின்றன. இப்போது நாம் சமரசம் செய்துகொண்டால் நமது இளைய தலைமுறை இன்னும் பல கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும்” என்று ஹிஜாபி மாணவி அஃப்ஷீன் என்னிடம் கூறினார். தனது பொறுப்பைப் பற்றி அஃப்ஷீன் மிகவும் யதார்த்தமாகப் பேசினாலும், தனக்குப் பின் வரும் தலைமுறையைப் பாதுகாப்பதைப் பற்றி 17 வயதுப் பெண் யோசிப்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், கர்நாடக மாநிலத்தில் அஃப்ஷீன், அல்மாஸ், ஹிபா போன்ற பல இளம் பெண்கள் இந்தச் சுமையைத் தங்கள் இளம் தோள்களில் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.

பிழைத்திருப்பதற்கான முஸ்லிம்களின் எதிர்வினைகள்
டெல்லி ஜஹாங்கிர்புரியில் வசிப்பவர்களின் போராட்டம் கர்நாடகத்தில் உள்ள முஸ்லிம் பெண்களின் போராட்டத்திலிருந்து வேறுபட்டது. என்றாலும், குடிநபர் என்ற முறையில் உங்கள் உரிமைகள் எல்லாப் பக்ங்களிலிருந்தும் தாக்கப்படுவது, முன்னறிவிப்போ அல்லது நீங்கள் குற்றமிழைத்தது குறித்த தகவலோ இன்றி உங்கள் வீடு இடித்துத் தள்ளப்படுவது, உங்கள் மத நம்பிக்கையையும் நீங்கள் தேர்வுசெய்யும் உடையையும் காரணம்காட்டிக் கல்விக்கான உங்களின் அடிப்படை உரிமை உங்களிடமிருந்து பறிக்கப்படுவது ஆகியவை இந்த இரண்டு இடங்களில் நடப்பவற்றுக்குமிடையே இருக்கும் பொதுவான கூறுகள்.

ஊர்வலம் சென்றவர்கள் வசிக்கும் அதே இடத்தில்தான் தாங்களும் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதை ஜஹாங்கிர்புரியின் முஸ்லிம்கள், நன்கு அறிவார்கள். தங்களைத் தீயசக்தியாகச் சித்தரிப்பதை எதிர்த்தாலும் அவர்கள் வலுக்கட்டாயமாக மௌனம் சாதிப்பார்கள். கர்நாடகத்தில் உள்ள முஸ்லிம் பெண்களின் நிலையும் இதுதான். காவி சால்வை அணிந்த போராட்டக்காரர்கள் பலர் அவர்களுடைய வகுப்புத் தோழர்கள், (முன்னாள்) நண்பர்கள். இந்தப் பெண்களில் சிலரால் தங்கள் கல்லூரிகளை விட்டு வெளியேறித் தனியார் கல்வியைத் தேர்வுசெய்துகொள்ள முடியும். பலருக்கு அது சாத்தியமில்லை. எனவே அவர்கள் நீதிமன்றங்களிலும் வீதிகளிலும் அடக்குமுறையை எதிர்த்துப் போராட முடிவுசெய்கிறார்கள். வன்முறையை இயல்பாக்கம் செய்வதால் முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை முன்பைவிடவும் பரவாயில்லை என்று ஆகிவிடாது. தற்போதைய நெருக்கடிகளுடன் கூடியவரையிலும் சிறந்த முறையில் அவர்கள் சமரசம் செய்துகொள்ளவும், முடிந்தவரையில் தங்கள் இழப்புகளைக் குறைத்துக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. காலம் கனியும்வரை அவர்கள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.  

பாத்திமா கான்

Author

ஃபாத்திமா கான் புது தில்லியிலிருந்து வெளியாகும் தி குவின்ட் இதழின் முதுநிலைச் செய்தியாளர்.

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்