பட்டியலினப் பழங்குடியினர் அந்தஸ்து: நரிக்குறவர்கள் கடந்து வந்த பாதை

16/01/2023
IiT English Page

2022ஆம் ஆண்டு டிசம்பர் தொடக்கத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நரிக்குறவர், குருவிக்காரர் ஆகிய சமூகங்களுக்குப் பட்டியல் பழங்குடி இனத்தவர் (எஸ்.டி.) என்னும் அந்தஸ்தை வழங்குவதற்கான மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. 2023, ஜனவரி 2 அன்று இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இது தங்களுக்குக் கிடைத்த வெற்றி என நரிக்குறவர் சமூகத்தினர் அறிவித்தார்கள். "இந்திய அரசு எங்கள் கோரிக்கையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றுவது இதுவே முதல் முறை. இதற்கான முயற்சியை மேற்கொண்ட அரசியல்வாதிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். [நரிக்குறவர்] மக்களின் நலனுக்காக இந்த நடவடிக்கை அவசியம் என்பது அனைத்து மக்களாலும் அரசியல்வாதிகளாலும் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது” என்று நரிக்குறவர் சமூகத்தினர் அறிவித்தார்கள்.

நரிக்குறவர்கள் பிரதானமாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பகுதியளவு நாடோடிச் சமூகத்தினர். மணி மாலைகள் செய்வதில் தேர்ச்சி பெற்ற இவர்கள் தாங்கள் செய்யும் மணிகளைக் கோயில்களுக்கு முன்பாகவும் திருவிழாக்களிலும் விற்கிறார்கள். என்றாலும் காடுகளைப் பற்றிய அறிவு, ஆயுதங்களைப் பயன்படுத்துதல், நீண்ட தூரம் பயணிக்கும் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இவர்கள் பெரும்பாலும் வேட்டையாடுபவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் கடந்த காலத்தைப் பற்றிப் பெருமிதம் கொள்கிறார்கள். தங்கள் முன்னோர்கள் இந்தியாவின் வடக்குப் பகுதிகளிலிருந்து தெற்குப் பகுதிகளுக்கு வந்தது பற்றிய கதைகளைச் சொல்கிறார்கள். தென்னகத்தில் இவர்கள் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்தபோதிலும், அவர்கள் தங்கள் நாடோடி வாழ்க்கை முறையையே அங்கும் பின்பற்றினார்கள்.

அவர்களுடைய கடந்த காலம் அன்றாட வாழ்க்கையில் பல சிரமங்களை ஏற்படுத்தியது. நரிக்குறவர்கள் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு, சுகாதாரம், கல்வி, முறையான வேலை வாய்ப்புகள் ஆகியவை போதிய அளவு கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றிப் பொதுச் சமூகத்தில் வரலாற்று ரீதியாக வேரூன்றிய பாரபட்சமான அணுகுமுறைகளால் இவர்களுடைய சமூகப் போராட்டங்கள் அதிகரிக்கின்றன. இந்தச் சூழல் இவர்கள் மேலும் ஓரங்கட்டப்படுவதற்கு வழிவகுக்கிறது.

கடந்த அறுபது ஆண்டுகளாக நரிக்குறவர்கள் வறுமையிலிருந்து மீள்வதற்கும் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குமான வழிவகைகளை உருவகித்துவந்திருக்கிறார்கள். தங்களுக்கான சட்ட அந்தஸ்தைப் பெறுவதைத் தாங்கள் இக்கட்டான நிலையில் இருப்பதாகப் பொதுச் சமூகம் ஒப்புக்கொள்வதற்கான முதல் படியாக அவர்கள் அடையாளம் கண்டனர். இடஒதுக்கீடு முறை அவர்களுக்கான உரிமைகளைப் பெறவும் சமூக-பொருளாதார, அரசியல் ரீதியான முன்னேற்றம் காண்பதற்குமான பாதையைக் காட்டுகிறது.

இதுவரை நரிக்குறவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக  அங்கீகரிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் இதன் மூலம் அவர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் போதிய இடம் கிடைக்கவில்லை. "நரிக்குறவர் என்பது அவர்கள் எங்களுக்கு வைத்த பெயர்" என்கிறார் நன்கு படித்தவரான நரிக்குறவர் தலைவர் ராஜசேகரன் (33). இவர் தனது சமூகத்தினரின் வாழ்க்கை மேம்பட அவர்களுடன் இணைந்து அயராது உழைக்கிறார். கல்வியினால் ஏற்படும் நன்மைகளை அவர் தன் சொந்த அனுபவத்தின் மூலம் அறிவார். புதிய தலைமுறை நரிக்குறவர்கள் முறை சார்ந்த கல்வியைப் பெறும்போது அவர்களால் தங்கள் சமூகத்தின் தலைவிதியை மாற்ற முடியும் என இவர் உறுதியாக நம்புகிறார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்னும் வகையின் கீழ் தங்களுக்கான வள ஆதாரங்களையும் ஒதுக்கப்பட்ட இடங்களையும் பெறுவதற்காகத் தங்களைக் காட்டிலும் வலிமை வாய்ந்த, கூடுதல் திறன் கொண்ட சமூகங்களுடன் இவர்கள் போட்டியிட வேண்டியிருக்கிறது. இது நியாயமற்ற போட்டி என்கிறார் ராஜசேகரன். தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மற்ற சமூகங்கள் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட குழுக்களாக இருக்கிறார்கள். அவர்கள் கல்வியறிவு பெற்றவர்கள். கூடுதலான சமூக-பொருளாதார வளங்களைக் கொண்டவர்கள். இவர்களே உரிமைகளைப் பெறுகிறார்கள். எனவே, ராஜசேகரனும் அவரது சமூகமும் தங்கள் சட்ட அந்தஸ்தைப் பட்டியல் பழங்குடியினர் என மாற்றுவதற்காகத் தீவிரமாகப் போராடினார்கள்.

நரிக்குறவர் சமூகம் என்பது பட்டியல் பழங்குடியினர் என்னும் வகைப்பாட்டின் கீழ் இயல்பாக வரக்கூடிய ஆதிவாசிக் குழு அல்ல. பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்தைக் கோரும் பிற சமூகங்களைப் போல அல்லாமல், நரிக்குறவர்கள் பொதுவானதொரு மூதாதையர் நிலத்தைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் நாடோடிகளாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, வரலாற்று ரீதியாகக் குற்றப்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். அளவில் சிறிய இந்தச் சமூகத்தை முக்கியமான வாக்களிக்கும் பிரிவினராக அரசியல்வாதிகள் கருதுவதில்லை என்பதால் அவர்களுடைய ஆதரவு இவர்களுக்குப் பெரும்பாலும் கிடைப்பதில்லை. குறைவான வள ஆதாரங்களையும் ஒதுக்கப்பட்ட இடங்களையும் ஏற்கெனவே பலருடன் பகிர்ந்துகொள்ளும் பட்டியல் பழங்குடிச் சமூகத்தினர் மேலும் ஒரு பிரிவினருடன் அவற்றை பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை என்பதால் அவர்கள் நரிக்குறவர் சமூகத்தைப் போட்டியாகவே கருதுகிறார்கள். ஆனால் “எங்களுக்கு இது தேவை. எங்கள் சமூகம் மிகவும் பாதிக்கப்படுகிறது” என்றே இது குறித்த விவாதங்களின்போது நரிக்குறவர்கள் சொல்கிறார்கள்.

பட்டியல் பழங்குடியினர் என்னும் அந்தஸ்தை அடைவதற்கு நரிக்குறவர்கள் அரசியல் ரீதியாகப் பல்வேறு வழிகளில் பயணித்தார்கள். “அறுபது வருடங்களாக இது எங்கள் கனவு” என்றார் ராஜசேகரன். இந்தக் கனவு சட்ட அங்கீகாரமாக மாறுவதற்கான அரசியல் பாதை பல படிகளைக் கொண்டது. அந்தப் படிகள் எல்லாமே இனிமையானவையோ எளிதானவையோ அல்ல. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நரிக்குறவர் தலைவர்கள் தமிழ்நாட்டு அரசிடம் மனு அளித்தபோது அவர்களுடைய இந்த முயற்சி அரசியல் வடிவம் எடுக்கத் தொடங்கியது. பல அரசியல்வாதிகள் அவர்களின் கோரிக்கைக்கு அனுதாபத்துடன் செவிமடுத்தார்கள். ஆனால், தமிழக அரசியலும் பிற மாநிலங்களின் அரசியலைப் போலவே நிலையற்றது. ஆட்சி மாறியதும் நரிக்குறவர்கள் தங்கள் ஆதரவை இழந்தார்கள். ஆனால் அவர்கள் சளைக்கவில்லை. புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களை அணுகி மனு கொடுத்தார்கள். பல கடிதங்களை எழுதினார்கள். அவற்றில் பெரும்பாலானவற்றுக்குப் பதில் கிடைக்கவில்லை.

பதில்கள் கிடைக்கவில்லை, கதவுகள் திறக்கவில்லை. எனவே நரிக்குறவர்கள் மாற்று வழிகளைத் தேடினார்கள். மாநில அரசு போதிய ஆதரவு அளிக்காத நிலையில், தேசிய அளவில் கவனம் செலுத்தினார்கள். நரிக்குறவர்கள் 2016முதல் திட்டமிட்ட வகையில் தில்லிக்குப் பயணங்களை மேற்கொண்டுவருகிறார்கள். கடினமான வானிலை, தங்குவதில் சிரமங்கள், இதர வசதிக் குறைவுகள் ஆகியவற்றை அவர்கள் தில்லியில் எதிர்கொண்டார்கள். ஜந்தர்மந்தரில் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினார்கள். ஊடகங்கள் தங்களைக் கண்டுகொள்ளாதபோதும் அயராமல் தமது முயற்சிகளைத் தொடர்ந்தார்கள்.

நரிக்குறவர்களைக் குருவிக்காரர் சமூகத்துடன் சேர்த்துப் பட்டியல் பழங்குடியினர் வகைமையில் சேர்க்கும் மசோதா பலமுறை மக்களவையில் பரிசீலனைக்கு வந்துள்ளது. 2016ஆம் ஆண்டில் ஒருமுறை இது அவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவிருந்தது. ஆனால், அதே நாளில் பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை அதிரடியாக அறிவித்தார். அதையொட்டிய விவாதங்களால் நாடே பற்றி எரிந்தது. இந்நிலையில் நரிக்குறவர்களின் பட்டியல் பழங்குடியின அந்தஸ்து தொடர்பான மசோதாவை மீண்டும் சமர்ப்பிக்க யாரும் முன்வரவில்லை.

இந்த பின்னடைவையும் மீறி, நரிக்குறவர்கள் மீண்டும் தங்கள் சமூகத்தினரிடம் சென்று, பல்வேறு தகவல்களை முன்வைத்து, பட்டியல் பழங்குடியினர் என்னும் அந்தஸ்தைப் பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்கள். இம்முறை அவர்களின் அரசியல் முயற்சிகள் சர்வதேச கவனத்தைப் பெற்றன. வெகுமக்கள் ஊடகங்களின் உதவியுடன், நரிக்குறவர்கள் சர்வதேச ஆதரவைக் கோரினார்கள். உலகளாவிய அறிஞர்களுடனும் சர்வதேச அமைப்புகளுடன் தொடர்ந்து இது குறித்து உரையாடிவந்தார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் தங்களுக்கென வித்தியாசமான பெயரை உருவாக்கிக்கொண்டார்கள். பிறர் தங்கள் மீது திணித்த பெயரை விடுத்து தங்களுக்கான பெயரை அவர்களாகவே உருவாக்கிக்கொண்டார்கள்.

பல்வேறு கூட்டு முயற்சிகளின் விளைவாகத் தாங்கள் பெற்ற பட்டியல் பழங்குடியினர் என்னும் அந்தஸ்தை (மிக அதிகமான எதிர்பார்ப்புகளுடன்) நரிக்குறவர் சமூகம் கொண்டாடுகிறது. "பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்திருக்கும் இந்த அந்தஸ்தின் மூலம் கல்வி, வேலை வாய்ப்புகள், வாழ்வாதாரம், வளர்ச்சி, முக்கியமான இதர தேவைகள் ஆகியவற்றில் முன்னேற்றங்களைக் காணலாம்” என்று பழங்குடியினர் சங்கத்தின் செயலாளர் அனுராதா (53) கூறினார்.

நரிக்குறவர்கள் தற்போது பெற்றுள்ல வெற்றி சமூக நீதியைப் பெறுவதற்கான அவர்களின் முன்னோக்கிய பாதையில் முக்கியமான படி. ஒரு சமூகம் பன்முக உத்திகளை வகுத்துப் பல்வேறு அரசியல் மட்டங்களில் இடையறாமல் முனைந்து வேலைசெய்தால் வெற்றி பெறலாம் என்பதை நிரூபிப்பதாக இது அமைந்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம்தான். இந்தியாவில் இடஒதுக்கீடு முறையை அரசியல் அரங்கின் பல்வேறு தரப்பினரும் அவ்வப்போது விமர்சிக்கிறார்கள். அதை ஒழிக்கவோ விரிவுபடுத்தவோ குரல் கொடுக்கிறார்கள். எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீடு என்னும் ஏற்பாட்டில் இன்றைய இந்தியாவின் ஆற்றலைப் பிரதிபலிக்கும் வகையில் சீர்திருத்தங்களும் மாற்றங்களும் தேவைப்படுகின்றன என்பது தெளிவு. அத்தகைய முயற்சி பெரும் சவால்களை எதிர்கொள்வதுடன், பின்தங்கிய குழுக்களின் சமூக, பொருளாதார அரசியல் முன்னேற்றத்திற்கான பாதையை வழங்குவதில் இட ஒதுக்கீடு பெற்றுள்ள வெற்றிகளை ஒப்புக்கொள்வதாகவும் அமையும்.

கிறிஸ்டினா-லோவனா டிரகோமிர்

Author

கிறிஸ்டினா-லோவனா டிரகோமிர் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் லிபரல் ஸ்டடீஸ் துறையில் கிளினிகல் துணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். “Power on the Move: Adivasi and Roma Accessing Social Justice” (2022) என்னும் நூலின் ஆசிரியர். 2016ஆம் ஆண்டில் CASIயில் வருகைதரு கல்வியாளராக இருந்துள்ளார். 

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்