பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டாவது பதவிக் காலத்தின் தொடக்கத்தில், பாதுகாப்புத் துறைச் சீர்திருத்தங்களுக்கான லட்சியத் தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார். பாதுகாப்புப் படைத் தலைவர் (சிடிஎஸ்) பதவியை அரசு உருவாக்கியதன் (இதன் முதல் தலைவராக மறைந்த ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டார்) மூலம், இந்திய இராணுவத்தில் சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆகப்பெரிய மாற்றமாகக் கருதப்படக்கூடிய நடவடிக்கையை அரசாங்கம் தற்போது மேற்கொண்டுவருகிறது. ஆயுதப் படைகளின் ஒருங்கிணைப்பு பற்றிய விவாதம்தான் இந்த முன்னெடுப்பின் மையம். ஒருங்கிணைப்பு என்பது தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளும் தங்கள் தனிச்சேவை அணுகுமுறையைத் துறந்து கூட்டுப் பார்வையை மேற்கொள்ளும் செயல்முறையைக் குறிக்கிறது. இத்தகைய ஒருங்கிணைப்பு அமெரிக்கா, சீனா போன்ற மிகப் பெரிய இராணுவங்களில் நிகழ்ந்துள்ளது. இது போன்ற சிக்கலான செயல்முறையானது பல சவால்களையும் கொண்டிருக்கும். தனிச் சேவை என்னும் அணுகுமுறையிலிருந்து விலகிக் கூட்டு அமைப்பாக இந்தியப் படைகள் மாறுவதே மிக முக்கியமான சவாலாக இருக்கக்கூடும்.
சிடிஎஸ் என்னும் பதவியை உருவாக்கும் மோடியின் முடிவு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் இந்திய இராணுவத்திற்குள் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. சிடிஎஸ்ஸின் பாத்திரம் என்ன என்பது தொடர்பான விவாதம் கூடுதல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய விவாதங்களில் ஒன்று. 2019 டிசம்பரில் வெளியிட்ட குறிப்பொன்றில், "அரசியல் தலைமைக்குப் பக்கச்சார்பற்ற ஆலோசனைகளை வழங்குவதற்காக" இராணுவத் தலைமைப் பதவியை சிடிஎஸ் பயன்படுத்த மாட்டார் என்று அரசாங்கம் தெளிவாகக் குறிப்பிட்டது. அதிகாரச் சங்கிலியின் ஒரு பகுதியாக சிடிஎஸ் இருக்க மாட்டார் என்பதே இதன் பொருள். இந்தச் சங்கிலி, எந்தவொரு இராணுவ அதிகாரப் படிநிலையிலும், தரைப்படையின் ஒரு பட்டாலியன் அல்லது அதற்குச் சமமான படையணி, விமானப் படையில் ஒரு படைப்பிரிவு அல்லது கடற்படையில் உள்ள ஒரு கப்பல் ஆகிவவற்றிலிருந்து உயர்மட்டத்திற்குச் செல்கிறது. இந்தியாவில், இந்தச் சங்கிலி முப்படைத் தலைவர்களின் மட்டத்தில் முடிவடைகிறது. ஆனால், (மூன்று படைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட) ஒருங்கிணைக்கப்பட்ட தலைமையகங்கள் உருவாக்கப்படுவதன் மூலம், எந்த ஒரு தலைவரும் அவற்றின் மீதான அதிகாரம் செலுத்தும் நிலையில் இருக்க முடியாது என்று திட்டமிடப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது. முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிடிஎஸ் இந்தப் படைகளின் மீது இராணுவ அதிகாரத்தைச் செலுத்த முடியாது. நிறுவன ரீதியான இந்த ஏற்பாட்டிற்குள், அரசியல் ரீதியாக முடிவெடுப்பவர்களுடன் இராணுவத் தளபதிகள் எவ்வாறு தொடர்புகொள்வார்கள்?
ஒருங்கிணைந்த இராணுவக் கட்டமைப்பை உருவாக்குவதில் இந்திய இராணுவம் ஒப்பீட்டளவில் தாமதமாகவே செயல்பட்டுள்ளது. முப்படைகளின் அதிகாரத்தை ஒரு தனிநபரிடம் - இந்த விஷயத்தில் சிடிஎஸ் - ஒப்படைப்பது குறித்து ஐயங்கள் உள்ளன. இப்படி ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவாகப் பலமுறை பரிந்துரைகள் செய்யப்பட்டபோதிலும் பல தசாப்தங்களாக அப்படி நியமிக்காமல் இருப்பதில் இந்த ஐயங்கள் முக்கியப் பங்கை வகித்தன. சிடிஎஸ்ஸை நியமித்ததன் மூலம், இந்த அரசாங்கம் இந்த ஆட்சேபணைகளைத் தாண்டிவந்தது. இருப்பினும், சிடிஎஸ்ஸின் செயல்பாட்டுப் பங்கு என்ன என்பது தெளிவாக இல்லை. இது தொடர்பாகத் தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கத்திற்கு இரண்டு முக்கியமான தேர்வுகள் உள்ளன.
சிடிஎஸ் அதிகாரச் சங்கிலியின் ஒரு பகுதியாக இல்லாமல் ஆலோசனை வழங்கும் பாத்திரத்தில் இருக்க வேண்டும் என்பதே முதல் தேர்வு. இவ்விஷயத்தில், உருவாக்கப்படும் மிக உயர்ந்த கூட்டு அமைப்பு (உத்தேசக் கூட்டு அதிகாரம்) பாதுகாப்பு அமைச்சரின் நேரடி அதிகாரத்தின் கீழ் வரும். இது சில வகைகளில், அமெரிக்காவில் உள்ள அரசியல் தலைமை இராணுவத்துடன் தொடர்புகொள்ளும் வழிக்கு ஒப்பானது. இதில் கூட்டுப் பணியாளர்கள் குழுவின் தலைவர் (சிடிஎஸ்ஸுக்கு இணையானவர்) ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைப் பாத்திரத்தை மட்டுமே கொண்டிருப்பார்.
இரண்டாவது தேர்வு, சிடிஎஸ் மற்றும் முப்படைத் தலைவர்களின் குழுவை அதிகாரச் சங்கிலிக்குள் கொண்டுவந்து, சிடிஎஸ்ஸை அதன் தலைவராக ஆக்கி, கூட்டு அதிகார அமைப்பாகச் செயல்பட வேண்டும். இந்தியச் சூழலில் தலைமைப் பணியாளர்கள் குழு (COSC) என்று அழைக்கப்படும் இந்தக் குழு, பின்னர் சிவில் தலைமைக்கும் துணை ராணுவத் தளபதிகளுக்கும் இடையேயான தொடர்புக் கண்ணியாக மாறும். இது சிடிஎஸ்ஸின் அதிகாரம் தெளிவாக வரையறுக்கப்படுவதையும் அந்த அதிகாரத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு அவருக்கு இருப்பதையும் உறுதிசெய்யும். ஆனால், அவ்வாறு செய்வது 2019ஆம் ஆண்டு டிசம்பரில் அரசாங்கம் வழங்கிய வழிகாட்டுதலுக்கு முரணானது (இது திருத்தப்பட வேண்டியிருக்கும்).
இரண்டு காரணங்களுக்காக, சிடிஎஸ் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட COSC இந்தியாவிற்கு - குறைந்தது உடனடி எதிர்காலத்திலாவது - மிகவும் பொருத்தமானதாக இருக்கும். முதலாவதாக, தற்போதைய ஒருங்கிணைப்புச் செயல்முறையானது, முறைப்படுத்தப்பட்டு நிலைபெறுவதற்கு முன்பு சில முரண்பாடுகளை ஏற்படுத்தும். கடந்த காலத்தில் இருந்ததைவிடவும் ஒரு தொழில்முறை அமைப்பின் கூடுதல் மேற்பார்வை இதற்குத் தேவைப்படும். இறுதியில், புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டமைப்புகள் முழுமைபெற்ற பிறகு சிடிஎஸ்ஸுக்கும் COSCக்கும் ஒருங்கிணைப்பு, ஆலோசனை ஆகிய பணிகளை வழங்குவதைப் பரிசீலிக்கலாம். இரண்டாவதாக, இத்தகைய படிப்படியான அணுகுமுறை, குறிப்பாக பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினைகளில் இந்தியா கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் காலகட்டத்தில், மாற்றத்தைச் சிக்கலில்லாத முறையில் கொண்டுவரும்.
சிடிஎஸ் தலைமையிலான COSC அதிகாரப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டால், முப்படைகள் இத்தனை ஆண்டுகளாகப் பேணி, பேரார்வத்துடன் பாதுகாத்துவரும் அவற்றின் தனித்துவம் சிறப்பாக ஒருங்கிணைக்கப்படுவது இன்னும் முக்கியமானதாகிவிடும். இது மிக அடிப்படையான சிப்பாய்களிலிருந்து தொடங்கிச் செயல்பாட்டுக் களம்வரை பல மட்டங்களில் செயல்படுகிறது. தரைப் படை வீரர்கள், மாலுமிகள் விமானப் படையினர் ஆகியோரின் கல்வி நிலைகளிலிருந்தே முப்படைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் தொடங்கிவிடுகின்றன. 10ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தரைப்படையில் சேர முடியும். கடற்படை, விமானப்படையில் சேர விரும்புபவர்கள் 12ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைப் படித்துத் தேறியிருக்க வேண்டும். படைக்குள்ளும் இத்தகைய வேறுபாடுகள் தொடர்கின்றன. எடுத்துக்காட்டாக, கப்பல்களில் கட்டளைகள் ஆங்கிலத்தில் அனுப்பப்படுகின்றன (பல்வேறு நடவடிக்கைகளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பச் சொற்கள் உட்பட). தரைப்படையில் பரந்த அளவில் மொழி வேறுபாடுகள் இருந்தபோதிலும், வீரர்களுடன் தொடர்பு கொள்ளும்போது இந்தியே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
அது மட்டுமின்றிப் பல ஆண்டுகளாக, ஒவ்வொரு படையும் தன்னுடைய நிலைமைகளுக்கு ஏற்றவாறு தன் மனித வளத்திற்கான அளவீடுகளை உருவாக்கியுள்ளது. விமானப் படை போர் விமானிகள் 54 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். கடற்படை அதிகாரிகள் 56 வயதிலும், தரைப்படை அதிகாரிகள் 54 வயதிலும் ஓய்வு பெறுகிறார்கள். அதன் பிறகு நான்கு ஆண்டுகளுக்கு மீண்டும் பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. கேப்டனாகப் (தரைப்படையில் கர்னலுக்குச் சமமானவர்) பதவி உயர்வு பெறும் கடற்படை அதிகாரிகள் கமோடோர்களாக (தரைப்படையில் பிரிகேடியர்களுக்குச் சமமானவர்கள்) அடுத்த நிலைக்குப் பதவி உயர்வு பெறத் தகுதி பெறுகிறார்கள். ஆனால், மற்ற இரு படைகளில் இந்த வழக்கம் பின்பற்றப்படுவதில்லை. மூன்று படைகளின் வருடாந்தர ரகசிய அறிக்கைகள் வெவ்வேறு வடிவங்களையும் மாறுபட்ட தரநிலை அளவீடுகளையும் பின்பற்றுகின்றன. ஒரு படையில் சிறந்ததாகக் கருதப்படும் தரவரிசை மற்றொன்றில் அதிகம் மதிக்கப்படுவதில்லை.
இவற்றையும் இன்னும் பல அம்சங்களையும் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சியின் மூலம் சமாளிக்க முடியும் என்றாலும், முப்படைகளை உண்மையில் வேறுபடுத்துவது அவற்றின் தனித்துவமான பணிக் கலாச்சாரமாகும். குறிப்பிட்ட பொறுப்புகளின் தொடர்பில் இது புரிந்துகொள்ளக்கூடியதாகவும் விரும்பத்தக்கதாகவும் இருந்தாலும், கலாச்சார வேறுபாடுகள் முன்னிலை பெறும்போது இராணுவ நடவடிக்கைகளில் இது தெளிவாக வெளிப்பட வாய்ப்புள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் தெளிவற்ற சூழலில் செயல்படும் ஒரு சிப்பாய், அமைதிக் காலத்தில் விதிகளைப் பின்பற்றிப் பணிபுரிபவரைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமாகச் சிந்தித்துச் செயலாற்றுவார். அமைதிக் காலப் பணியில் சரி, தவறு ஆகியவை தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இத்தகைய போக்கு காலப்போக்கில் அதிகாரிகளின் குணாம்சமாகவும் மாறுகிறது. இது, முப்படைகளின் அதிகாரிகள் களத்தில் எடுக்கும் நடவடிக்கைகளையும் அமைதிக் காலப் பணிகளையும் மாறுபட்ட முறையில் பார்க்கச் செய்கிறது. கட்டமைப்பு சார்ந்த ஒருங்கிணைப்பும், அதைவிட முக்கியமாக, மனங்களும் சிந்தனைகளும் இணைந்து செல்வதும் சாத்தியமற்றவை என்று இதற்குப் பொருளல்ல. மாறாக, முடிவெடுப்பவர்களும் முப்படையினரும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்போது இந்த அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்தச் சவால்கள் பரிந்துரைக்கின்றன.
சிடிஎஸ் என்னும் பதவியை உருவாக்கியதன் மூலம், இந்தியா ஆயுதப் படைகளையும் பாதுகாப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் செயல்முறையை மிகவும் தாமதமாகத் தொடங்கியது. இந்த முன்முயற்சியின் வெற்றியானது, பெருமளவிற்கு, சிடிஎஸ்ஸின் அதிகார வரம்புக்ளையும் பொறுப்புகளையும் தெளிவுபடுத்துவதையும் முப்படைகளின் சேவைகள் சார்ந்த தனித்த கண்ணோட்டங்களை ஒதுக்கிவைத்துவிட்டுத் தன்னுடைய தொழில்முறைப் பொறுப்புகளுக்கெனத் தனி அணுகுமுறையை வரையறுப்பதில் இராணுவத்தின் திறனையும் சார்ந்துள்ளது. சிடிஎஸ் நியமனத்தையும் அதனுடன் தொடர்புடைய பிற சீர்திருத்தங்களையும் இராணுவத்தின் மாற்றத்தை நோக்கிய முடிவான நடவடிக்கையாக அல்லாமல் முதல் படியாக அரசியல்வாதிகள் கருத வேண்டும். இந்தச் செயல்முறையிலிருந்து பெறகூடிய மாபெரும் சாதகமாக இது இருக்கக்கூடும்.