கிராமப்புற இந்தியாவின் சிக்கலான சமூக அமைப்பு குறித்து ஓரளவு மட்டுமே அறிந்த தொடக்கநிலை மாணவருக்கு கிராமங்களில் வீடுகள் சாதியாலும் மதத்தாலும் கிட்டத்தட்டக் கச்சிதமாகப் பிரிக்கப்பட்டிருக்கும் தன்மை பல முக்கியமான செய்திகளைச் சொல்லக்கூடும். கிராமப்புற இந்தியாவைப் பற்றிய அறிமுக நிலையிலான பாடங்கள் இடம்சார் பிரிவினை என்பதைக் கிராமியச் சமூக வாழ்வின் ஒரு பகுதி என்பது போல நிரந்தரப்படுத்தி வைத்திருக்கின்றன. இந்திய கிராமங்களை “பாகுபாடுகளின் தொட்டி” என்றும் “குறுகிய கண்ணோட்டம் நிலவும் இடம்” என்றும் அம்பேத்கர் கூறியபோது அவர் இந்திய கிராமப்புறத்தில் நிலவும் இத்தகைய இடம்சார் பிரிவினையையே குறிப்பிட்டார்.

வரைபடம் 1: அம்மினபவி, தார்வாட் மாவட்டம், 1950. (அசல் படம் Spate and Learmonthஇல் (1954, p. 200)உள்ளது. கட்டுரையாசிரியர்கள் அதை டிஜிட்டல் வடிவமாக்கிப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.)
பல்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட இனக்குழு சார் ஆய்வுகள் கிராமப்புற இந்தியாவில் குடியிருப்புக்கான இடம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆவணப்படுத்தியிருக்கின்றன. அது மட்டுமன்றி சாதிக் குழுக்களின் அதிகாரப் படிநிலைகளையும் அவை பிரதிபலிக்கின்றன. முதல் படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வாட் நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அம்மினபவி என்னும் கிராமத்தில் குடியிருப்புகள் பிரிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. 1954இல் ஏ.டி.ஏ. ஸ்பேட், ஓ.ஹெச்.கே. லியர்மோந்த் ஆகியோர் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒப்பிட்டு எழுதிய நூலில் (Spate and Learmonth (1954)) கிராமப்புற இந்தியாவில் இட அமைப்புக்கான எடுத்துக்காட்டாக இது முன்வைக்கப்பட்டது. தலித்துகள் (அசல் படத்தில் “ஹரிஜனங்கள்” என்று குறிப்பிடப்படுபவர்கள்; அப்போது தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சாதி குழுவினர்) எப்படி கிராமத்தின் விளிம்புகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்தப் பெரிய கிராமம் காட்டுகிறது. நிலவுடைமையாளர்கள் ஆதிக்கச் சாதியினர் கிராமத்தின் மையத்தில் வசிக்கிறார்கள். தல்வார், கால்நடை மேய்ப்பவர்கள், துணி வெளுப்பவர்கள் உள்ளிட்ட உழைக்கும் சாதியினரும் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கிராமத்தின் தலைவரும் அவரது உறவினர்களும் கிராமத்தின் ஆகச்சிறந்த பகுதியில் அரண்மனை போன்ற பங்களாவில் வசிக்கிறார்கள்.
இந்தியா முழுவதிலும் உள்ள அம்மினபவி போன்ற கிராமங்கள் குறித்த வரைபடப் பதிவுகள் பெருகிவந்தாலும் கிராமப்புற இந்தியாவில் நிலவும் பிரிவினையின் அளவு குறித்த அமைப்புரீதியான கணக்கீடுகள் நம்மிடையே இல்லை. இத்தகைய முக்கியமானதொரு கூறு விடுபட்டுப்போவதால், கிராமப்புற அரசியல்சார் பொருளாதாரம் குறித்த எண்ணிக்கை ரீதியான ஆய்வுகள் சிக்கலுக்குள்ளாகின்றன. கிராமத்திற்குள் நிலவும் இடம்சார் பிரிவுகள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பது இன்னமும் துல்லியமாகத் தெரியவில்லை. இந்திய தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நாடு முழுவதிலும் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் பல்வேறு கிராமத் தொகுப்புகள் இருப்பதைப் பதிவு செய்திருக்கிறது.
இந்தியாவில் கிராமங்களுக்குள் நிலவும் இடம்சார் பிரிவனைகளின் எண்ணிக்கையை முதல் முறையாக விரிவான அளவில் கணக்கிடுவதற்காகத் தற்போது நடைபெற்றுவரும் ஆய்வுத் திட்டத்தின் தொடக்க நிலைத் தரவுகளிலிருந்து எங்கள் ஆய்வுக்கான சாரத்தைப் பெற்றுள்ளோம். கிராமத்திற்குள் நிலவும் பிரிவுகளைக் கணக்கிடுவதற்காகக் கர்நாடக அரசு மேற்கொண்ட ஆய்விலிருந்து (GOKS - 2015) நுண் தரவுகளைப் பயன்படுத்தியிருக்கிறோம். 1931ஆம் ஆண்டுக்குப் பிறகு சாதி, மதம் குறித்த மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு இணையான விரிவான ஆய்வு இது. கிராமத்திற்குள் நிலவும் இடம்சார் பிரிவுகளை எண்ணிக்கை சார்ந்து மதிப்பிடுவதற்கான நுணுக்கமான புள்ளிவிவரங்களை முதன்முதலாகத் தரும் ஆய்வு இது. கர்நாடக மாநிலத்தில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களில் (சுமார் 3.65 கோடி) பல்வேறு வகைப்பட்ட பிரிவுகளின் விகிதாச்சாரம் குறித்த தகவல்களையும் இது அளிக்கிறது.
தற்போதுள்ள இடப் பிரிவினை ஏற்பாடுகளையும் அத்தகைய பிரிவுகள் இன்றிக் கலவையான முறையில் வீடுகள் அமைந்திருந்தால் எப்படி இருக்கும் என்னும் அனுமானத்தின் அடிப்படையிலான அமைப்பையும் ஒப்பிட்டு, கிராமத்திற்குள் நிலவும் இடம்சார் பிரிவுகளைக் கணக்கிட்டோம். கிராமத்திலிருக்கும் இடப் பகுப்பை எப்படி கணக்கிட்டோம் என்பதைப் படம் 2 காட்டுகிறது. படத்தின் முதல் பிரிவு (Panel A) GOKS புள்ளிவிவரப்படி கிராமங்களில் இடப் பகுப்பு எப்படி அமைந்துள்ளது என்பதை காட்டுகிறது இந்த கிராமத்தில் உள்ள 40 வீடுகள் நான்கு சாதிகளைச் சேர்ந்தவை. இரண்டாம் பிரிவு (Panel B) இதே வீடுகள் கலவையாக அமைந்திருந்தால் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது. கிராமத்திற்குள் அமைந்த இடப் பகுப்பைக் கணக்கிட, ஒரே சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வீடுகள் அடுத்தடுத்து இருப்பதையும் அனுமானத்தின் அடிப்படையில் கலவையாக உள்ள அமைப்பில் அவை பிரிந்திருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தோம்.
நுண்ணிய அளவில் இடப் பாகுபாட்டினை (street-level micro-segregation) கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட “ரன்ஸ் டெஸ்ட்” மெட்ரிக் (“runs test” metric) என்னும் முறையை கிராமத்திலுள்ள பெரும் அளவிலான சாதி, மதக் குழுக்களைப் பற்றி அறியப் பயன்படுத்தினோம். யதார்த்தத்தில் உள்ள கிராமத்திற்கு 9 “ரன்கள்” என்றால், எங்களது அனுமானத்தில் கலவையாக அமைந்த 40 வீடுகள் கொண்ட கிராமத்திற்கு 21 ரன்கள். அனுமானத்தில் சித்தரிக்கப்பட்ட அமைப்புடன் ஒப்பிடுகையில் உண்மையான கிராமத்திற்கு எவ்வளவு குறைவாக ரன்கள் கிடைக்கின்றனவோ அந்த அளவுக்கு இடப் பாகுபாடு அதிகமாக இருப்பதாகப் பொருள்.

படம் 2: நுண்ணிய இடப் பாகுபாடு குறித்த வால்ட்-வுல்ஃபோவிட்ஸ் ரன்ஸ் டெஸ்ட். மூன்றாம் பிரிவு (Panel C) இடம்பெற்றுள்ள அம்மினபவி குறித்த தகவல்கள் சாதி, மதக் குழுக்களுக்கிடையே நடக்கும் அகமணமுறையைக் குறிப்பிட எட்டுப் பிரிவுகள் கொண்ட முறையைப் பயன்படுத்துகிறது. பிரிவு 1, 2இல் (Panels A and B) உள்ள கிராமம் என்னும் அலகு சாதி, மதக் குழுக்களுக்கிடையே நடக்கும் அகமணமுறையைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு சதுரமும் மூன்று பிரிவுகளிலும் உள்ள தனி வீடுகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. அம்மினபவி பகுதியில் இடம்பெற்றுள்ள 2,500 வீடுகள் கிடைமட்ட வரிசைகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவை கட்டுரையாளர்களின் கணக்கீடு (புள்ளிவிவரங்கள் GOKS-இலிருந்து பெறப்பட்டவை).
இரண்டாம் படத்தில் உள்ள மூன்றாம் பிரிவு (Panel C) 2015ஆம் ஆண்டில் அம்மினபவியில் நிலவிய வீடுகளின் இடப் பிரிவினையைக் காட்டுகிறது. இந்தத் தகவல் GOKS-இல் பதிவாகியிருக்கிறது (சாதிகளைச் சுட்ட எட்டுப் பிரிவுகள் கொண்ட வரைபடத்தைக் காட்டியுள்ளோம்). தற்போது “நகரம்” என அறிவிக்கப்படும் நிலையில் உள்ள அம்மினபவி, கிராமப்புற இந்தியாவின் இடம்சார் பிரிவினை அமைப்பின் எடுத்துக்காட்டாக முன்வைக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆகியும் அதன் அமைப்பு மாறாமல் இருக்கிறது.
கிராமத்துக்குள் நிலவும் இடப் பாகுபாட்டை 0-1 என்னும் அலகில் அளவிட்டிருக்கிறோம். 0 என்பது முழுமையான ஒற்றுமை. 1 என்பது முழுமையான பிரிவினை. மூன்றாவது படம் கர்நாடகம் முழுவதிலும் உள்ள எல்லா கிராமங்களிலும் நிலவும் சாதி, மக்கள்தொகைக் குழுக்கள், மதம் ஆகியவை சார்ந்த (நுண்) பிரிவுகளின் வகைப்பாடுகளைக் காட்டுகிறது. “தீண்டத்தகாத“வர்களுக்கும் “மற்றவர்”களுக்கும் இடையிலான வித்தியாசம் அழுத்தமாக உள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும் மற்றவர்களுக்கும் (மக்கள்தொகைக் குழுக்கள்) இடையில் உள்ள பிரிவு பெரிய அளவில் இருப்பதைக் காணலாம் படம் 3இல் அம்மினபவியின் நுண் பிரிவினையின் மதிப்பு சுமார் 0.55 ஆக இருப்பதைக் கவனிக்க வேண்டும். கர்நாடக கிராமத்திற்குள் நிலவும் பிரிவினையின் அளவு தென் அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கும் கறுப்பு இனத்தவர்களுக்கும் இடையே உள்ள பிரிவினையின் அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. இன்றளவிலும் குடியிருப்பு வகைகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் கூறு இது.
படம் 3: கர்நாடக கிராமங்களில் நிலவும் சாதி, மக்கள்தொகைக் குழுக்கள், மதம் ஆகியவை சார்ந்த (நுண்) பிரிவுகளின் வகைப்பாடுகளைக் காட்டுகிறது. 0 என்பது முழுமையான ஒற்றுமை. 1 என்பது முழுமையான பிரிவினை.
மக்களின் பன்முகத்தன்மை முதலானவற்றைக் கணக்கிடுவதற்கான அலகுகளுடன் கிராமத்தில் நிலவும் இடம்சார் பிரிவினையின் வீச்சுக்குத் தொடர்பு இல்லை என்பதையும் எங்கள் அலசல் காட்டுகிறது. எனவே, இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறினால் கிராமப்புற அரசியல்சார் பொருளாதாரத்தின் எண்ணிக்கை சார்ந்த தன்மைகளை அறிவதில் பக்கச் சார்புகள் உருவாகிவிடும். இந்தியாவின் கிராமிய அரசியல்சார் பொருளாதாரத்தின் தன்மையை வரையறுப்பதற்கு கிராமத்தில் நிலவும் இடம்சார் பிரிவினையைக் கணக்கிடுவது முக்கியமானது என்பதை நமக்கு கிடைக்கும் தடயம் காட்டுகிறது. கிராமத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான நிறுவனங்களையும் வசதிகளையும் எங்கே அமைப்பது அல்லது நிலத்தடி நீர் விநியோகத்தை எப்படி மேற்கொள்வது ஆகியவை இடப் பிரிவினையுடன் தொடர்பு கொண்டவை.
கிராமப்புற இந்தியாவின் அரசியல்சார் பொருளாதாரத்திற்கு அப்பால் “சமூக இடைவெளி” என்பதைக் கணக்கிடுவது நவீன சமூக அறிவியல் துறையின் மைய ஊற்றுக்களில் ஒன்றாக இருந்துவருகிறது. எடுத்துக்காட்டாக அன்னியர் என்பவர் வெளிப்படையாக இடம் சார்ந்து வரையறுக்கப்படும் சமூக இடைவெளிகளின் விளைவாக உருவாகுபவர் என்று ஜார்ஜ் சிம்மல் வாதிட்டார். சமூகப் படிநிலைகள் வரையறுக்கப்பட்டுள்ள சமூகங்களில் தொடர்புக்கும் பாரபட்சத்திற்குமான உறவு சிம்மலின் மேற்படிக் கோட்பாட்டின் அடிப்படையில் உருப்பெறுகிறது. குழுக்களுக்கிடையே நிலவும் ஒற்றுமையானது குழுக்களுக்கு இடையேயான தொடர்போடு இணைக்கப்பட்டிருந்தால் இடம்சார் பிரிவினை இந்தத் தொடர்பு உருவாவதற்கான மிக முக்கியமான தடைக்கல்லாக இருக்கும் என்பதை எங்கள் அலசல் காட்டுகிறது.
இந்தக் கட்டுரை Contemporary South Asiaவின் அடுத்த இதழில் வெளியாகவிருக்கும் “நிரந்தரமான பாதுகாப்புக் கேடயம்: கிராமத்திற்குள் நிலவும் இடம்சார் பிரிவினையும் இந்தியாவில் சமூக இடைவெளியும்” கட்டுரையை அடிப்படையாக கொண்டது