பரவலக்கப்பட்ட ஜனநாயகத்தில் வாக்காளர்களின் போக்கு

12/04/2021
IiT English Page

மக்களவைக்கான பொதுத் தேர்தலுடன் மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களையும் ஒரே சமயத்தில் நடத்தும் திட்டத்தை இந்திய அரசு முன்வைத்திருக்கிறது. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்னும் இந்தத் திட்டத்தை நிதி ஆயோக், சட்ட ஆணையம் ஆகிய ஒன்றிய அமைப்புகள் ஆதரிக்கின்றன. ஊடகங்களில் இது பெரும் விவாதத்தை எழுப்பியிருக்கிறது. தேர்தல்கள் நடத்துவது அரசுக்குப் பெரும் செலவை ஏற்படுத்துகிறது, தேர்தல் நடக்கும்போது அரசு அதிகாரிகள் தேர்தல் பணிகளில் மூழ்கிவிடுவதால் பல தேர்தல்களை நடத்துவது நிர்வாகத்தைப் பாதிக்கிறது என்பது இந்தத் திட்டத்தின் மையமான வாதங்கள். மக்களவைத் தேர்தல் மாநிலத் தேர்தல்களின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடும் என்பதால் இது கூட்டாட்சி முறையை நீர்த்துப்போகச் செய்துவிடக்கூடும் என்று சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மேலும் அடிப்படையான கேள்வியொன்றை எழுப்புவதன் மூலம் எமது ஆய்வு இந்த விவாதத்திற்குப் பங்களித்துள்ளது: ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது வாக்காளர்களின் தேர்வைப் பாதிக்கிறதா? அப்படிப் பாதிக்கிறது என்றால் தேர்தல் முடிவுகளை அது குறிப்பிடத்தக்க அளவில் மாற்றுகிறதா?

ஒரே சமயத்தில் நடக்கும் மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிக்கும்போது ஒவ்வொரு தேர்தலிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் கடினமான சவாலை வாக்காளர்கள் எதிர்கொள்கிறார்கள். விளைவாக, அவர்கள் வாக்களிக்கும் விதத்தை இது பாதிக்கக்கூடும் என நாங்கள் வாதிடுகிறோம். எடுத்துக்காட்டாக, இரண்டு தேர்தல்களும் ஒன்றாக நடக்கும்போது வாக்காளர் வேட்பாளர்களின் குறிப்பானதொரு அடையாளத்தின் மீது (கட்சி, சாதி/மத அடையாளங்கள் போன்றவை) கவனம் செலுத்தும் வகையில் தன்னுடைய முடிவெடுக்கும் விதத்தை எளிமைப்படுத்திக்கொள்ளக்கூடும். அல்லது தன்னுடைய கொள்கைகளின் எல்லைகளைச் சுருக்கிக்கொள்ளக்கூடும். இரு தேர்தல்களும் ஒன்றாக நடக்கும்போது வாக்காளர்களின் முடிவெடுக்கும் செயல்முறைகளின் மீதான இத்தகைய விளைவுகள் குறிப்பிடத்தகுந்த அளவில் இருந்தால் அது தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கலாம்.

தேசிய, மாநிலத் தேர்தல்களைச் சேர்ந்து நடத்தும்போது தகவல்களை உள்வாங்கும் ஆற்றல் தடைப்பட்ட வாக்காளர்களின் இருப்பும் அதன் தாக்கமும் எப்படி இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக நிலைநாட்ட நாங்கள் முயன்றிருக்கிறோம். 1977 முதல் 2018வரையிலும் தேசிய, மாநில அளவிலான தேர்தல்களை அலசி, இரு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதால் ஏற்படும் விளைவுகளை மதிப்பிட முயன்றுள்ளோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இரு தேர்தல்களையும் ஒன்றாக நடத்தியபோதும் தனித்தனியாக, ஆனால் 180 நாட்கள் இடைவெளிக்குள் இரண்டையும் நடத்தியபோதும் நிலவிய வாக்காளர்களின் போக்குகளை ஒப்பிட்டிருக்கிறோம். இந்த ஒப்பீட்டில் வாக்களிக்கும் விதத்தைப் பாதிக்கக்கூடிய இதர காரணிகளான வேட்பாளர் தேர்வு, அரசியல் கட்சிகளின் பரப்புரை வியூகம் ஆகியவற்றை விலக்கிவிட்டோம். ஏனென்றால் இவை ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடக்கும்போதும் தனித்தனியே நடக்கும்போதும் மாறப்போவதில்லை.

வாக்காளர் நடத்தையை அலச 1996-2018 காலகட்டத்தில் சி.எஸ்.டி.எஸ்.ஸைச் சேர்ந்த லோக்நீதி அமைப்பு மேற்கொண்ட தேசிய, மாநிலத் தேர்தல்களின் தேர்தலுக்குப் பிந்தைய ஆய்வுகளைப் பயன்படுத்தியிருக்கிறோம். தேர்தல் முடிவுகளை அலசத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி சென்டர் ஃபார் பொலிடிகல் டேட்டா (அரசியல் புள்ளிவிவரங்களுக்கான திரிவேதி மையம்) என்னும் பிரிவு இந்தத் தகவல்களைத் தொகுத்து, சரிபார்த்து, பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்கிறது.

(a)    கட்சிகளின் முக்கியத்துவமும் தேர்தல் முடிவும் 
(b)    தேர்தல்கள் ஒரே சமயத்தில் -  தனித்தனியாக

வரைபடம் 1: ஒரே சமயத்தில் நடக்கும் தேர்தல்களும் கட்சிகளின் முக்கியத்துவமும்

வாக்காளர்கள் சிந்திக்கும் விதம் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைச் சுட்டும் தடயங்களை முன்வைப்பதன் மூலம் நாங்கள் இந்த அலசலைத் தொடங்குகிறோம். வரைபடம் 1: இடது புறம் (Panel (a)) உள்ள பகுதியில் வாக்களிக்கும்போது கட்சிக்குத்தான் முக்கியத்துவம் அளித்தோம் என்று சொன்னவர்களின் அளவு, மக்களவைத் தொகுதியிலும் அதனுள் அடங்கும் சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்சி வெல்வதற்கான நிகழ்தகவின் சராசரியில் எவ்வளவு என்பதைக் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த இரு மாறிகளும் ஒன்றுடன் ஒன்று வலுவாகத் தொடர்புகொண்டுள்ளன. மக்களவை, சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே சமயத்தில் நடந்தால் கட்சியின் முக்கியத்துவமே வாக்களிக்கும் விதத்தில் முதன்மை பெறுகிறது என்பதை இது காட்டுகிறது.

ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்துவது வாக்காளர்கள் மீது சிந்தனை அளவில் குறிப்பிடத்தக்க சுமையை ஏற்படுத்திவிடுகிறது என்பதைத் தேர்தலுக்குப் பிந்தைய ஆய்வுகளைப் பயன்படுத்தி நாங்கள் நிரூபித்திருக்கிறோம். தேர்தலில் முக்கியப் பிரச்சினையாக எதை நினைக்கிறீர்கள் என்னும் கேள்விக்கு, 180 நாட்கள் இடைவெளியில் தனித்தனியாகத் தேசிய, மாநிலத் தேர்தல்கள் நடந்தபோது வாக்களித்தவர்களில் “தெரியாது” என்று பதில் சொன்னவர்களைக் காட்டிலும் ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடந்தபோது வாக்களித்தவர்களில் “தெரியாது” என்று சொன்னவர்கள் இரண்டு மடங்காக இருந்தனர். இரண்டு விதமான தேர்தல்களுக்கும் ஒரே சமயத்தில் பிரச்சாரம் நடந்ததன் விளைவாக இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். எனினும், தேர்தல்களில் அதிக அனுபவம் அற்ற வாக்காளர்களிடையே இத்தகைய குழப்பம் அதிகம் ஏற்பட்டிருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். கல்வி, வயது ஆகிய வேற்றுமைகளைத் தாண்டி இந்தக் குழப்பம் வாக்காளர்களிடையே ஒன்றுபோல இருப்பதையும் கண்டறிந்துள்ளோம். சிந்தனை அளவில் சுமை கூடிவிடும் என்னும் எங்கள் கருதுகோளுக்கு இது வலு சேர்க்கிறது.

வாக்களிப்பதில் கட்சிதான் முக்கிக் காரணி என்று சொன்னவர்கள் குறித்த விவரம் வரைபடம் 1இன் Panel (b)இல் உள்ளது. “Sync = 1” என்பது ஒரே சமயத்தில் நட்ந்த தேர்தல்களையும் “Sync = 0” என்பது தனித்தனியாக நடந்த தேர்தல்களையும் குறிக்கின்றன. தேர்தல்கள் ஒன்றாக நடக்கும்போது கட்சிதான் முக்கியம் என்று கருதுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காணலாம். Panel (a)வில் காணப்படும் போக்கை வைத்துப் பார்க்கும்போது ஒரே சமயத்தில் நடக்கும் தேர்தல்களின்போது தேசிய, மாநிலத் தேர்தல் முடிவுகள் ஒன்றுபோல இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று கருதுகிறோம்.

இதைச் சோதிப்பதற்காகத் தேர்தல் முடிவுகளின் மொத்தமாகத் தொகுத்து, ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடக்கும்போது மக்களவைத் தொகுதியில் வெற்றிபெறும் ஒரு கட்சி, அதே தொகுதிக்குள் இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுகிறதா என்னும் கேள்வியை எழுப்பினோம். இதற்கான விடைகளை இந்திய வரைபடத்தைப் பயன்படுத்தி வரைபடம் 2இல் அளித்திருக்கிறோம். இடது புறம் (Sync = 0) தனித்தனியாகத் தேர்தல்கள் நடக்கும்போது இந்தியா முழுவதிலும் உள்ள தொகுதிகளில் கிடைத்த முடிவுகளைக் காட்டுகிறது. வலது புறம் (Sync = 1) ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடக்கும்போது கிடைத்த முடிவுகளைக் காட்டுகிறது. சில மாநிலங்களில் 1977-2018 காலகட்டத்தில் ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடக்கவில்லை. எனவே அவற்றை இந்த அலசலில் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. இவை வரைபடம் 2இல் வெள்ளை நிறத்தில் குறிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு வரைபடங்களையும் ஒப்பிடுகையில் ஒரே நாளில் இரண்டு தேர்தல்களும் நடக்கும்போது ஒரே கட்சி அதிகத் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது தெளிவாகத் தெரிகிறது. வலது புறம் (ஒரே சமயத்தில் நடக்கும் தேர்தல்கள்) கணிசமான தொகுதிகள் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருக்கின்றன. ஒரே கட்சி அதிகத் தொகுதிகளில் வெல்வதற்கான நிகழ்தகவு மிக அதிகமாக [0.66,1] இருப்பதை இது காட்டுகிறது. இந்தப் போக்கு இந்தியா முழுவதும் ஒரே சீராக உள்ளது. அதாவது, ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதன் விளைவு சில பகுதிகளுக்கு மட்டுமானதல்ல. 

வரைபடம் 2: நிகழ்தகவு (ஒரே கட்சி இரண்டிலும் வெல்வது)

மேலும், மாநில அரசுப் பொறுப்பில் இருக்கும் கட்சிகள் இதில் அதிகப் பலன் பெறுகின்றன. ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடக்கும்போது மாநில அரசியல் பிரச்சினைகள் கூடுதலான முக்கியத்துவம் கொண்ட பங்கை ஆற்றுகின்றன என்பதையும் இந்த முடிவுகள் காட்டுகின்றன. ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடக்கும்போது வாக்குப் பதிவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவும் வாக்களிப்பவர்களின் வகைமை மாறுவதற்கும் வய்ப்பு இருக்கிறதா என்பதைத் தீவிரமாக ஆராய்ந்து, இறுதியில் அப்படி இல்லை என்னும் முடிவுக்கு வந்தோம். ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடக்கும்போது மாநிலத் தேர்தல்களில் வாக்குப் பதிவு மாறுவதில்லை. ஆனால், தேசியத் தேர்தல்களின் வாக்குப் பதிவு கூடுகிறது. வயது, பாலினம், சாதி, கல்வி முதலான வாக்காளர்களின் வகைமையில் குறிப்பிடத்தக்க அளவில் ஒருமித்த தன்மை இருப்பதாகத் தெரியவில்லை. தேர்தல்களைச் சேர்த்து நடத்துவதால் வாக்காளர்களின் வகைமை பெரிதாக மாறிவிடுவதில்லை என்பதை இது காட்டுகிறது. மேலும், வாக்குப் பதிவு அதிகரிக்கும் தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் மாறிவிடவில்லை. வாக்குப் பதிவு எண்ணிக்கைக்கும் நம்முடைய முடிவுகளுக்கும் தொடர்பில்லை என்பதை இது காட்டுகிறது. மேலும் பல வழிமுறைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இதை ஆராய்ந்து பார்த்தோம். அப்படியும் இத்தகைய தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

தேசியக் கட்சிகளைக் காட்டிலும் மாநிலக் கட்சிகளே இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கின்றன என்பதுதான் இதில் ஆர்வமூட்டக்கூடிய செய்தி. நாங்கள் கண்டறிந்துள்ள முடிவுகள் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்னும் திட்டத்தை அரசு கைக்கொண்டால் அதனால் ஏற்படக்கூடிய முக்கிய விளைவுகளைக் காட்டுகின்றன. தேர்தல் நடத்துவதில் ஏற்படும் செலவைக் குறைத்தல் என்பதோடு இந்த மாற்றம் நின்றுவிடாது. குடிமக்கள் வாக்களிக்கும் விதத்தையும் இது மாற்றும். வாக்காளர்கள் தங்கள் மாநில, தேசிய அளவிலான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதைத் தனித்தனியே பிரித்து வைப்பதன் மூலம் கூட்டாட்சிக் கட்டமைப்பு நன்கு அமல்படுத்தப்படுகிறது. ஒரே சமயத்தில் மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களை நடத்தும்போது வாக்காளர்கள் இரண்டிற்குமான தங்கள் முடிவுகளை ஒரே விதமாக ஆக்கிக்கொள்ளத் தலைப்படுகிறார்கள். இது இந்தியக் குடியரசின் கூட்டாட்சித் தத்துவத்தைக் கடுமையாகப் பாதித்து, அதன் பலன்களைக் குறைத்து, அதிகாரப்பரவலைப் பலவீனமாக்கிவிடக்கூடும். 

விமல் பாலசுப்பிரமணியம்

Author

விமல் பாலசுப்பிரமணியம் இங்கிலாந்தில் உள்ள குயின் மேரி யுனிவர்சிட்டி ஆஃப் லண்டனில் பொருளியல் துறையின் துணைப் பேராசிரியர்.

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன் 

அபூரவ் யஷ் பாட்டியா

Author

அபூரவ் யஷ் பாட்டியா இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் பொருளியல் ஆய்வு மாணவர் 

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன் 

சப்யசாசி தாஸ்

Author

சப்யசாசி தாஸ் ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் துணைப் பேராசியர்

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்