ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியப் பொருளாதாரம் அடுத்தடுத்து மூன்று பெரிய அதிர்ச்சிகளுக்கு உள்ளாகியிருக்கிறது. உயர் மதிப்பு கொண்ட ரொக்கப் பண நோட்டுக்களைச் செல்லாததாக அறிவித்த பணமதிப்பிழப்பு (2016) தவறாகக் கையாளப்பட்ட பொருள்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பு (2017), கோவிட் – 19 பெருந் தொற்று (2020) ஆகியவையே அந்த அதிர்ச்சிகள். இந்த மூன்று நிகழ்வுகளிலும் நம்பத்தகுந்த புள்ளிவிவரங்களைச் சரியான நேரத்தில் பெற முடியாமல் இருந்தது கொள்கை வகுப்பாளர்களின் செயல்பாட்டை முடக்கியதுடன். அதிகாரபூர்வத் தகவல் அமைப்பு முறையில் உள்ள முக்கியமான இடைவெளிகளை இது அம்பலப்படுத்தியது. மிக அண்மைக் காலத்தில் கோவிட் - 19 குறித்த அரசின் அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் விமர்சனத்திற்கு உள்ளாயின. புள்ளிவிவரங்கள் கிடைக்கத் தாமதமானது, நோய்த்தொற்று, மரணங்களின் எண்ணிக்கைகள் குறைவாகப் பதிவானது ஆகியவை விமர்சிக்கப்பட்டன. அரசின் திறனற்ற எதிர்வினைகளுக்கு மத்தியில் இடப்பெயர்வு, பொருளாதாரதம் குறித்த புள்ளிவிவரங்கள் மோசமான நிலையில் இருப்பதும் விமர்சிக்கப்பட்டது.
பொதுவிவாதங்கள் உடனடி நெருக்கடிகள் மீதே பொதுவாகக் கவனம் செலுத்துகின்றன. இந்தியாவில் புள்ளிவிவரப் பற்றாக்குறை அதிகரித்துவருவது என்னும் விரிவான பின்புலம் பற்றி அது கண்டுகொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, கோவிட் - 19 பற்றிய புள்ளிவிவரங்களின் தரம் பற்றிய கேள்விகள் வெற்றிடத்திலிருந்து எழுந்தன. அதாவது, மக்கள்தொகை கணக்கீடு, தேசிய மாதிரி ஆய்வு (என்.எஸ்.எஸ்.), தேசியக் கணக்குப் பதிவியல் முதலான பல்வேறு தகவல் ஆதாரங்களில் உள்ள புள்ளிவிவரப் பற்றாக்குறை என்னும் பெரிய பிரச்சினையோடு இணைத்துப் பேசப்படாமல் அவை பற்றிய கேள்விகள் தனித்து எழுப்பப்பட்டன.
அரசின் புள்ளி விவர அமைப்புகளை அவற்றின் பரந்துபட்ட அரசியல், பொருளாதாரப் பின்புலங்களில் வைத்துப் பார்ப்பதன் மூலம், நம்பகமான தகவல்களைத் திரட்டுவதில் அரசுக்கு உள்ள திறனைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் முதல் மிஜோரம் வரையிலும் விரிந்திருக்கும் எல்லையோர மாநிலங்கள் நான்கு புறமும் பிற நாடுகளால் சூழப்பட்ட நிலப்பரப்புகளைக் கொண்டவை. கொந்தளிப்பான சூழல் கொண்டவை. புள்ளிவிவரங்களின் தரம் எந்த அளவிற்குப் பின்புலத்தைச் சார்ந்திருக்கிறது என்பதை இந்த மாநிலங்களின் நிலவரம் பொருத்தமாக எடுத்துக் காட்டுகிறது. பெரும்பாலான எல்லையோர மாநிலங்கள் அணுகுவதற்குக் கடினமான நிலப்பகுதிகள், அடர்த்தியான வனப்பகுதிகள், நேரடித் தொடர்பற்ற நிலை ஆகியவை உள்ளிட்ட இடம் சார்ந்த குறைபாடுகள் கொண்டவையாக உள்ளன. இந்தக் குறைபாடுகள் அரசின் வளர்ச்சித் திட்டங்கள் இந்த இடங்களைச் சென்றடையத் தடையாக இருக்கின்றன. கல்வி, மருத்துவ வசதிகள், சந்தைகள் ஆகியவற்றை மக்கள் அடைய விடாமலும் இவை தடுக்கின்றன. அமைப்பு சார்ந்த இத்தகைய எதிர்மறைக் கூறுகளாலும் இவ்விடங்களில் வரி வசூலுக்கான அடிப்படைகள் குறுகியவையாக இருப்பதாலும் இந்த மாநிலங்கள் மைய அரசின் உதவிகளைப் பெறக்கூடிய சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மாநிலங்கள் பல பதிற்றாண்டுகளாக இத்தகைய சலுகைகளைப் பெற்றுவந்துள்ளபோதிலும் இவை குறைவான வளர்ச்சி கொண்ட பகுதிகளாகவே இருந்துவருகின்றன. வளர்ச்சிப் பணிகள் குறித்த மத்திய அரசின் அணுகுமுறை மேலிருந்து கீழே தன் அதிகாரத்தைச் செலுத்துவதாகவே இருக்கிறது. இந்த அணுகுமுறை பருண்மையான உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதில் அதீத கவனம் செலுத்துகிறது. இது நிர்வாக ரீதியான அளவுக்கதிகமான மேல் செலவுகளால் ஊழலைப் பெருக்குவதுடன் உள்ளூரில் தொழில்முனைவையும். இந்த மாநிலங்கள் தொலைவில் இருப்பதாலும் இங்கே நடைபெறும் கிளர்ச்சிகளாலும் இவ்விடங்களில் ஏற்கனவே தொழில்முனைவு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த மாநிலங்களின் வரி வசூலுக்கான அடிப்படைகள் குறுகியவையாக உள்ளன. இதனால் மத்திய அரசின் நிதி உதவிகளையும் வீங்கிப் பருத்த பொதுத்துறை நிறுவனங்களின் ஆதரவையும் இவை நம்பியிருக்கின்றன. பொதுத்துறைக்கு வெளியே வாய்ப்புகள் இல்லாத நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்த மாநில அரசுகளை நிர்ப்பந்திக்கின்றன. இதனால் மத்திய அரசின் நிதி உதவியை மேலும் அதிகமாகச் சார்ந்திருக்கும் நிலை உருவாகிறது. பெருமளவில் கூடுதல் பணியாளர்களைக் கொண்டிருந்தாலும் பெருகிவரும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பைப் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்க முடியவில்லை.
இந்த மாநிலங்களில் ஜனநாயகத்தின் போதாமையும் நிலவுகிறது. இதன் விளைவாக அரசின் அதிகாரத்தை எதிர்த்துக் கிளர்ச்சிகள் உருவாகின்றன. மக்களின் எதிர்ப்பையும் அரசால் நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளையும் மீறி ஆயுதம் தாங்கிய படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் இன்னமும் இவ்விடங்களில் அமலில் இருக்கிறது. சட்டத்திற்குப் புறம்பான கொலைகளில் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளே ஈடுபடுகின்றன. தகவல்கள் நீண்டகாலத்திற்கு இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. ராணுவம், துணை ராணுவம், காவல்துறை, அரசு அதிகார வர்க்கம் ஆகியவற்றில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற, உள்நாட்டுப் பாதுகாப்பு விவகாரங்களில் அனுபவம் கொண்டவர்கள் இம்மாநிலங்களில் ஆளுநர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
மேலும், புள்ளிவிவரங்களில் மோசடிகள், தவறான கணக்குகள், மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளையும் மதிப்பாய்வுகளையும் ரத்து செய்தல் ஆகியனவும் இம்மாநிலங்களில் நடக்கின்றன. இந்த மாநிலங்கள் பலவற்றில் நில அளவீடு, வரைபடம் சார்ந்த முறையான ஆய்வுகள் இதுவரை நடக்கவில்லை. அரசியல் ஸ்திரமின்மை (ஜம்மு காஷ்மீர் - 1951), உள்ளூர் கலவரம் (அசாம் - 1981), ஆயுதப் போராட்டம் (ஜம்மு காஷ்மீர் - 1991) ஆகியவற்றால் இந்த மாநிலங்களில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவ்வப்போது நிறுத்திவைக்கப்பட்டது. இந்தியக் குடும்பங்கள் குறித்த புள்ளிவிவரங்களுக்கான மிக முக்கியமான ஆதாரமான என்.எஸ்.எஸ். ஆய்வு மூலம் ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து போன்ற மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் அடிப்படையான சமூக, பொருளாதாரக் குறிப்பான்களைப் பிரதிநிதித்துவம் செய்யககூடிய மதிப்பீடுகளைக்கூடத் திரட்ட முடியாத நிலை உள்ளது. புவியியல்சார் புள்ளிவிவரங்களின் வாய்ப்புகள் பல சமயம் அரசியல் கொந்தளிப்புகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த மாநிலங்கள் நாட்டின் மக்கள் தொகையில் ஐந்து விழுக்காடு மட்டுமே கொண்டவை. கடந்த காலத்தில் என்.எஸ்.எஸ்.ஸின் வரையெல்லைக்குள் வர இயலாத பிரிவுகளில் பாதிக்கும் மேல் இந்த மாநிலங்களே இருந்தன.
அரசின் புள்ளிவிவரங்களில் தில்லுமுல்லுகள் செய்வது புள்ளிவிவரப் பற்றாக்குறை பிரச்சினையின் கூறுகளில் ஒன்று. பொது வள ஆதாரங்களையே பெரிதும் நம்பியிருக்கும் மக்கள் பலருக்கும் தெரியாதது இது. பதிவுபெற்ற எண்ணிக்கைகள், கணக்கிடப்பட்ட எதிர்மறைக் கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வள ஆதாரங்களை வினியோகிக்கும் பொது அமைப்புகளின் மீது நம்பிக்கை இல்லாததால் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் இனக்குழுசார் புள்ளிவிவரங்களைத் திரிக்கும் முனைப்பு என்று சொல்லப்படும் போக்கு (Ethno-statistical entrepreneurship) உருவாகியிருக்கிறது. அண்மைக் காலங்களில் நாகலாந்து, காஷ்மீர், மணிப்பூரின் சில பகுதிகளில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பரவலான தில்லுமுல்லுகள் நடந்திருக்கின்றன. சட்டமன்றத்தில் அதிகப் பிரதிநிதித்துவத்தையும் பொதுப் பணத்தில் அதிகப் பங்கையும் பெறுவதற்காக இப்படி நடக்கிறது.
புள்ளிவிவரம் திரட்டும் அமைப்பு முறைகளில் முதலீடு செய்வதற்கான அரசின் திறனை வளர்ச்சியின்மை கட்டுப்படுத்துவதால், பொது வள ஆதாரங்களில் பெரும்பங்கினைப் பெறுவதற்காக எண்களைத் திரிக்க மக்களைத் தூண்டுகிறது. இதன் விளைவாகப் புள்ளிவிவரங்களின் தரம் பாதிக்கப்படுகிறது. இது கொள்கை வகுப்பையும் பாதித்து, மேலும் வளர்ச்சியின்மைக்குக் காரணமாக அமைகிறது. வளர்ச்சியின்மையால் அரசியல் கொந்தளிப்புகள் உருவாகி, (முறைசார்) ஜனநாயக அமைப்புகளைப் பலவீனமடையச் செய்கின்றன. அரசியல் கொந்தளிப்புகள், கணக்கெடுப்புக்கான ஆய்வுகளை நேரடியாகத் தடுப்பதன் மூலம் புள்ளிவிவரம் சேகரிப்பதைப் பாதிக்கின்றன. அரசின் புள்ளிவிவரங்கள் அரசின் பொதுச் சேவைகளின் மதிப்பைக் குறைக்கின்றன. புள்ளிவிவரப் பற்றாக்குறை, புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அதிகாரத்தையும் வள ஆதாரங்களையும் பகிர்ந்தளிக்கும் பொது நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கிறது. இதனால் அரசியல் ரீதியான கிளர்ச்சிகள் அதிகரிக்கின்றன.
இவ்வாறாக, புள்ளிவிவரம் - வளர்ச்சி - ஜனநாயகம் ஆகிய பற்றாக்குறைகளின் வலையில் எல்லையோர மாநிலங்கள் சிக்கிக்கொள்கின்றன. வெளிப்புற எல்லைகளால் மட்டுமின்றி, குடிசைப் பகுதிகள், மத்திய இந்தியாவிலுள்ள பழங்குடியினரின் வாழ்விடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உட்புற எல்லைகளாலும் அரசின் புள்ளி விவரங்கள் இதேபோன்ற பிரச்சினைகளால் பீடிக்கப்படுவதைக் காணலாம். இந்த இடங்கள் நாட்டின் கணிசமான பகுதிகளையும் நிலப்பரப்பையும் மக்கள் தொகையையும் கொண்டவை.
ஆதாரங்களின் அடிப்படையிலான கொள்கை வகுப்பு தேவை என்னும் வலுவான கோரிக்கை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகரித்துவருகிறது. ஆனால் அரசின் புள்ளிவிவரங்களின் தரம் மோசமாக இருப்பதை இந்தக் கோரிக்கை பார்க்கத் தவறுகிறது. புள்ளிவிவரங்களைத் திரட்டும் வழிமுறைகளையும் தரவுகளை அலசி முடிவுகாணும் வழிமுறைகளையும் மேம்படுத்துவதன் மூலம் புள்ளிவிவரங்களின் தரத்தைச் சீரமைக்கும் முயற்சிகள் மட்டுமே பயன்தராது. ஏனென்றால் புள்ளிவிவரப் பற்றாக்குறை என்பது ஜனநாயகம், வளர்ச்சி ஆகியவற்றின் பற்றாக்குறைகளோடு தொடர்புகொண்டது.
மரபார்ந்த புள்ளிவிவரப் பதிவுகள் எந்தக் கூறுகளில் முழுமையற்றவையாகவும் குறைபட்டவையாகவும் உள்ளனவோ அதே கூறுகளில் இந்திய அரசின் இணையப் புள்ளிவிவரப் பதிவுகளும் குறைபட்டவையாக உள்ளன என்பது தற்செயலானதல்ல. ஆகவே, ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தி, வளர்ச்சிப் பற்றாக்குறையைச் சீரமைக்காமல் புள்ளிவிவரங்களின் குறைகளைச் சீர்திருத்துவதற்குத் தொழில்நுட்ப, சட்ட, நிர்வாக ரீதியான தீர்வுகளை நாடினால் அவை வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. தகவல் பெறும் உரிமையை வலுப்படுத்துதல், நீதித்துறை, ஊடகங்கள், தலைமைக் கணக்குத் தணிக்கை ஆகிய அமைப்புகளின் சுயாதிகாரத்தை மீண்டும் கட்டி எழுப்புதல் ஆகியவற்றுக்கான இடைக்கால, நீண்டகாலச் சீர்திருத்தங்கள் தேவை. அரசின் புள்ளிவிவர நிர்வாகத்தின் செயல்முறையைப் பயனுள்ள வகையில் மேற்பார்வை செய்வதற்கு இவை தேவை.
இன்னொரு மட்டத்தில் கிளர்ச்சிகளுக்கு அமைதி வழியில் தீர்வுகாணுதல், புள்ளிவிவர நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தக்கூடிய நிர்வாகச் சீர்திருத்தங்களை முன்னெடுத்தல், அரசு அமைப்புகள் மீதான நம்பிக்கையை மீளமைக்கக்கூடிய தேர்தல் சீர்திருத்தங்கள், நிதி மற்றும் அரசியல் ரீதியான அதிகாரப்பரவல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாகுபாடுகள் அற்ற நடுவாண்மை அமைப்புகள் வலுவாக இருந்தால்தான் அரசு அமைப்புகள் மீதான நம்பிக்கை வலுப்பெறும். அரசு ஆழமும் விரிவும் கொண்ட சீர்திருத்தங்களை முன்னெடுத்துவருகிறது. அதே சமயம், பன்முகத்தன்மை கொண்டதும் படிப்படியாக அதிகரிக்கக்கூடிய புள்ளிவிவரச் சீர்திருத்தங்களையும் அது அறிமுகப்படுத்த வேண்டும். புள்ளிவிவரத் தணிக்கையின் ஆதரவு அதற்கு இருக்க வேண்டும். ஏனென்றால், வள ஆதாரங்கள் பற்றாக்குறை காரணமாக, நடப்பிலுள்ள புள்ளிவிவர அமைப்புகளைப் பெருமளவில் மாற்றியமைப்பது என்பது கடினமான செயலாக இருக்கும்.
முதலாவதாக, அரசின் புள்ளியியல் வல்லுநர்கள் கோட்பாட்டு ரீதியாக விரும்பக்கூடிய மாறத்தக்க கூறுகள் அல்லது கல்விப் புலத்திற்குப் பயனளிக்கக்கூடிய மாறத்தக்க கூறுகளைத் திரட்டும் பணியில் ஈடுபடுவதைக் காட்டிலும், அரசியல் சட்டம், புள்ளியியல், அரசின் கொள்கை ஆகியவை சார்ந்த தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதுடன் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, அரசின் புள்ளியியல் வல்லுநர்கள் முறைசார்ந்ததும் விளக்கங்களைக் கொண்டதுமான விரிவான அறிக்கைகளை வெளியிடும் பழைய செயல்முறையை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இது புள்ளிவிவரத்தின் பரந்துபட்ட பின்புலத்தைப் புரிந்துகொள்ள உதவும். மூன்றாவதாக, அரசின் புள்ளியியல் வல்லுநர்கள், திட்டங்கள் குறித்த அட்டவணையையும் புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும் தேதிகளையும் முன்கூட்டியே வெளியிட வேண்டும். தங்களுக்குச் சாதகமல்லாத புள்ளிவிவரங்களை வெளியிடுவதைத் தாமதிக்கும் அரசியல் தலையீடுகள் அதிகரித்துவருகின்றன. இத்தகைய முன்னறிவிப்புகள் இதுபோன்ற தலையீடுகளைக் குறைக்கும்.
இறுதியாக, அரசின் புள்ளியியல் வல்லுநர்களுக்கும் புள்ளிவிவரவியல் துறையைச் சேர்ந்த பல்வேறு பயனுரிமையாளர்களுக்குமிடையே மேலதிகத் தொடர்புகளும் பரிமாற்றங்களும் நடைபெற வேண்டிய தேவை உள்ளது. அனைவரையும் உள்ளடக்கும் வகையில் தொடர்புகளை விரிவுபடுத்துவது களத்தில் ஆய்வுகளுக்குப் பதிலளிக்காமல் இருத்தல் அல்லது அவற்றைத் தடுத்தல் ஆகிய பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் என்பதுடன் பிரசுரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களைப் பலரும் ஏற்றுக்கொள்ளும் போக்கையும் அதிகரிக்கச்செய்யும்.