தீனதயாள் உபாத்யாயவும் இந்திய அரசியல் பொருளாதாரமும்: நினைவுகளும் வரலாறும் நிகழ்கால அசவுகரியங்களும்

26/09/2022
IiT English Page

"காங்கிரஸ் கட்சிக்கு காந்தி இருந்ததுபோல தீன்தயாள் உபாத்யாய பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பிராண்ட் ஈக்விட்டியாக மாறியுள்ளார்" என்று 2017இல் ஒரு முக்கியமான பாஜக உறுப்பினர் குறிப்பிட்டார். பாஜகவின் முன்னோடியான பாரதிய ஜனசங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளராக (1952-68) இருந்த தீனதயாள் உபாத்யாயவின் நூற்றாண்டு விழா (1916-68) நிறைவடையும் அந்தத் தருணத்தில் இவருடைய கூற்று உண்மைதான் என்று நம்புவதற்குக் காரணம் இருந்தது. 2014ஆம் ஆண்டு இந்தியாவின் மக்களவையில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உபாத்யாயவைத் தேசியத் திருவுக்களில் ஒருவராக உயர்த்த பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் தீனதயாள் உபாத்யாயவின் வாழ்க்கையைப் பற்றிய பெரிய கண்காட்சி ஒன்றை நடத்தியது, அந்த நூலகத்தின் கருத்தரங்கு அறையில் இருந்த நேருவின் உருவப்படத்தைத்  தற்காலிகமாக நீக்கி அங்கே உபாத்யாயவின் படத்தை வைத்தது, ரேஸ் கோர்ஸ் சாலையின் பெயரை மாற்றி செயலூக்கத்தைத் தூண்டுவதற்காக உபாத்யாய கூறிய வாசகமான லோக் கல்யாண் மார்க் (பொது நலப் பாதை) எனப் பெயரிட்டது எனப் பல முயற்சிகளை பாஜக முன்னெடுத்தது. கொள்கையின் களத்தில், பாஜக தலைமையிலான அரசு, கிராமப்புற மின்மயமாக்கல் திட்டத்திற்கு, தீன்தயாள் உபாத்யாயா கிராம ஜோதி யோஜனா (கிராம ஒளித் திட்டம்) எனப் பெயரிட்டது. "ஏகாத்ம மானவவாதம் (ஒருங்கிணைந்த மனிதநேயக் கோட்பாடு)" என்ற பாஜகவின் சித்தாந்தத்தை உருவாக்கியவர் தீனதயாள் உபாத்யாய.

உபாத்யாய தனது வாழ்நாளில் அடையாத முக்கியத்துவத்தை இன்று அடைந்திருக்கிறார். அவரைப் பற்றிப் பலருக்கும் அதிகம் தெரியாது என்ற சூழ்நிலை அவரது நினைவைத் தங்கள் விருப்பப்படி, அவருடைய சித்தாந்தத்தின் உள்ளடக்கம் அதிகம் இல்லாத வகையில், வடிவமைக்கும் வாய்ப்பை பாஜகவுக்கு வழங்கியுள்ளது. அவரது வாழ்வு, சிந்தனை ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க பரிமாணங்கள் இதில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது சங்க பரிவாரத்தில் அல்லது பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்எஸ்எஸ்) இணைந்த குழுக்களில் நிலவும் பதற்றங்களை அம்பலப்படுத்துகிறது.

அர்ப்பணிப்புள்ள ஆர்எஸ்எஸ் தொண்டரான உபாத்யாய, இந்து தேசியத்திற்கான பொருளாதாரச் செயல்திட்டத்தின் அடிப்படைகளை முதன்முதலில் வகுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1958இல் அவர் வெளியிட்ட The Two Plans: Promises, Performance, Prospects and Bharatiya Arthniti: Vikas ki Ek Disha. (இரண்டு திட்டங்கள்: வாக்குறுதிகள், செயல்பாடு, வாய்ப்புகள்; பாரதீய அர்த்தநீதி: உலகுக்கு ஒரு திசைகாட்டி) ஆகிய இரு கட்டுரைகளில் இந்தக் கோட்பாட்டை அவர் முன்வைத்தார். இவை கொள்கை பற்றிய நுட்பமான விவாதங்கள் அல்ல. தாங்கள் ஓரங்கட்டப்பட்டிருந்த அன்றைய சூழலில் மைய நீரோட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளவதற்காக இந்து தேசியவாதிகள் மேற்கொண்ட வழிகளை வெளிப்படுத்தும் முக்கியமான பிரச்சினைகளை இக்கட்டுரைகள் கருத்தில் கொண்டன. ஆர்எஸ்எஸ்ஸின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவர் காந்தியைப் படுகொலை செய்ததையடுத்து ஆர்எஸ்எஸ் சிறிது காலம் தடைசெய்யப்பட்டிருந்த நேரம் அது. அவ்வமைப்பின் மீதான களங்கத்தைப் போக்குவதற்கான முயற்சியில் ஜனசங்கம் ஈடுபட்டிருந்தது. ஜனசங்கம் வட இந்தியாவில் உள்ள நகர்ப்புற வணிகர்களையே பெரிதும் தன் அடிப்படையாகக் கொண்டிருந்தது. எனவே அக்கட்சி தன் ஆதரவுத் தளத்தின் நலன்களுக்கு இடமளிக்கும் வகையிலும் இதர தொழில்முறைப் பிரிவினரிடத்திலும் ஆதரவு பெறும் வகையிலும் தேசியப் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டத்தை வகுக்க முற்பட்டது.

1950களில் மூலதனத்தை மையமாகக் கொண்ட, மையப்படுத்தப்பட்ட திட்டமிடலைக் கொண்ட பொருளாதாரத் திட்டம் அமலில் இருந்தது. அதற்கு மாறாக, பரவலாக்கப்பட்ட, உழைப்பை மையமாகக் கொண்ட தொழில்மயமாக்கல் யோசனையை உபாத்யாய முன்வைத்தார். இந்தியப் பொருளாதாரக் கொள்கையின் முடிவெடுக்கும் உச்ச அமைப்பான திட்டக் கமிஷனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். சிறு தொழில்துறை உற்பத்தி, சிறு முதலீடு (சோட்டே உத்யோக், சோட்டி புஞ்சி), சிறு வர்த்தகம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே அவரது மாற்றுப் பொருளாதாரம். இதன் மூலம், ஜனசங்கத்த்தின் ஆதரவுத் தளத்தின் முதன்மையைத் தக்கவைத்துக்கொண்டே ஒட்டுமொத்த உற்பத்தியின் அளவையும் உயர்த்த முடியும். இந்தக் கவனக் குவிப்பிற்கு இசைவான வகையில் உள்நாட்டு நீர்வழிகளையும் சாலைகளையும் மேம்படுத்தப் போக்குவரத்து முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று உபாத்யாய பரிந்துரைத்தார். இது உள்நாட்டு வர்த்தகத்தைத் தடங்கலின்றி இயங்கவைப்பதுடன் நகரங்களில் மக்கள்தொகை குவிவதைத் தவிர்க்கும். வேலைக்காகக் குடும்பங்கள் நகர்ப்புறத்திற்கு ஒட்டுமொத்தமாக இடம்பெயர்ந்தது விழுமியங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்றும் உபாத்யாய கூறினார்.

உபாத்யாய தனது மாற்றுப் பொருளாதாரத் திட்டத்தை உள்ளூர்க் கலாச்சாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக வடிவமைக்க முயன்றார். இது நீண்ட விவாதத்திற்கும் பொருள் சார்ந்த தேர்வுகளுக்கும் வழிவகுத்தது. பாரதீய அர்த்தநீதி என்னும் கட்டுரை சமஸ்கிருதமயமான இந்தி மொழியில் எழுதப்பட்டது. இதில் வேதங்கள் போன்ற இந்து சமய நூல்களின் மேற்கோள்கள் அதிகம் இடம்பெற்றிருந்தன. வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணித்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதைக் குறிக்கும் சுதேசி போன்ற தேசியவாத இயக்கத்தின் மொழியையும் இது தன்வயப்படுத்திக்கொண்டது. ஆனால், இது காந்தியப் பார்வையிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் இது இயந்திரங்களுக்கு எதிரானதல்ல. மாறாக, சிறு தொழில்துறை உற்பத்தியை நவீனமயமாக்கவும், அந்த யுகத்தின் அடையாளமான பிரம்மாண்டத்தைத் தவிர்க்கவும், அதன் மூலம் சிறு வணிகர்களைத் திருப்திப்படுத்தவும் வளர்ச்சிக்கான முழுமையான பார்வையை வழங்கவும் இந்த அணுகுமுறை முனைந்தது. வெளிநாட்டு வர்த்தகத்தை ஐயத்துடன் அணுக வேண்டும் என்பதாகவும், ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு மிகவும் அத்தியாவசியமான வெளிநாட்டு உதவியும் வல்லரசுகளின் நிபுணத்துவமும் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பவை என்பதாகவும் இந்த உள்ளூர்த்தன்மையின் பார்வை நீட்சி அடைந்தது.

இந்து சமூக ஒற்றுமை என்பது இந்து தேசியவாதத்தின் தூண். இது பல்வேறு கொள்கைகள் தொடர்பான உபாத்யாயவின் பார்வைகளில் தாக்கங்களை ஏற்படுத்தியது. இக்கருத்திலிருந்துதான், உழைப்பு பிளவுபடுத்தும் வர்க்க அரசியலைக் கைக்கொண்டு சமூகத்தைத் துண்டாடக் கூடாது; மாறாக, சாதி அடிப்படையிலான பிரிவுகளுடன் கூடிய, தர்மத்தால் நிர்வகிக்கப்படும் ஒருங்கிணைந்த முழு சமூகத்தின் வளர்ச்சியைத் தொடர வேண்டும் என்று அவர் வாதிட்டார். ஒற்றுமையின் மீதான இந்த அழுத்தம், சொத்துக்களைத் துண்டாடும் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் எதிர்க்க வைத்தது.

இந்தத் திட்டத்தை உருவாக்குகையில் உபாத்யாயா நன்கு அறியப்பட்ட இரண்டு பொருளாதாரச் சிந்தனையாளர்களைக் குறிப்பிட்டார். அவர்கள் ஜப்பானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, முதல் உலகப் போருக்கு முந்தைய தொழில்மயமாக்கல் வியூகத்தினாலும் ‘ஃபுகோகு கியோஹெய்’ (பணக்கார நாடு, வலிமையான இராணுவம்) என்ற அந்நாட்டின் சொலவடையாலும் ஈர்க்கப்பட்டவர்கள். சோவியத் ஒன்றியம், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவற்றுடன் பிரத்தியேகமாக இணைக்கப்பட்டிருந்த இந்தியாவிற்கான பொருளாதாரச் சிந்தனையின் மாற்று மரபுவழியை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். கனரகத் தொழில்துறை, மூலதனப் பொருட்கள் ஆகியவற்றைப் பிரதானமாகக் கொண்ட சோவியத் மாதிரிக்கு நேர்மாறாக, ஆரம்பகால ஜப்பானிய அணுகுமுறை, விவசாயத்தை ஓரங்கட்டாமல் சிறு தொழில்துறை உற்பத்தியை இயந்திரமயமாக்குவதில் கவனம் செலுத்தியது. பம்பாய் பணப் பொருளாதார நிபுணர் சி.என். வக்கீல், ஆரம்பகால ஜப்பானிய மாதிரியின் அடிப்படையில், மூலதனப் பொருட்களை மையமாகக் கொண்ட பொருளாதார மாதிரிக்கு மாற்றாக வளர்ச்சிக்கான ஊதியம்-பொருட்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாதிரியைக் கோட்பாடாக முன்வைத்தார். ஊதியம்-பொருட்கள் ஆகியவற்றை மையப்படுத்தும் பொருளாதார மாதிரிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்றும் அது இந்தியாவை வளர்ச்சிக்கான நிலையான பாதையில் செலுத்தும் என்றும் சி.என்.வக்கீல் வாதிட்டார். கூலிப் பொருட்களின் சந்தைப்படுத்தக்கூடிய உபரியை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம், நுகர்வைப் பெருகச்செய்வதற்கான தர்க்க ரீதியான காரணங்கள் ஆகியவை குறித்துப் பேசுகையில் உபாத்யாய தன் கட்டுரைகளில் வக்கீலை மேற்கோள் காட்டினார். மைசூர் பொறியாளரும் இந்தியத் திட்டமிடுதலின் தந்தையுமான விஸ்வேஸ்வரயாவிடமிருந்து தொழிலாளர் மேலாண்மை பற்றிய கருத்தை உபாத்யாய எடுத்துக்கொண்டார். விஸ்வேஸ்வரய்யா, உழைப்பை ஒழுங்குபடுத்துவதில் ஜப்பானியர்களின் திறனால் ஈர்க்கப்பட்டவர். கட்டாயப் பணிகளால் மாவட்ட அளவிலான வளர்ச்சி நடைபெற வேண்டும் என்று கருதியவர்.

உழைப்பு குறித்த உபாத்யாயவின் அணுகுமுறை, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான எதிர்ப்பு ஆகியவற்றை ஆர்எஸ்எஸ்ஸின் இரண்டு துணை அமைப்புகள் தமது கொள்கையாக ஏற்றுக்கொண்டு முன்னெடுத்துச் சென்றன. பாரதீய மஸ்தூர் சங்கம் (இந்திய தொழிலாளர் அமைப்பு - பிஎம்எஸ்), சுதேசி ஜாக்ரண் மஞ்ச் (சுதேசி விழிப்புணர்வு இயக்கம்) ஆகியவையே அந்த இரு இயக்கக்கள். 1955இல் நிறுவப்பட்ட பிஎம்எஸ், இந்தியாவின் மிகப் பெரிய தொழிலாளர் சங்கமாக இப்போது வளர்ந்துள்ளது. கம்யூனிச எதிர்ப்புத் தொழிற்சங்கமான இது, வர்க்க மோதலைக் கட்டுப்படுத்த முயல்கிறது. சிறிய அளவிலான உற்பத்திக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை பிஎம்எஸ் ஏற்றுக்கொண்டது. தொழிலாளர்களைப் பதிலீடு செய்யும் வெளிநாட்டு இயந்திரங்களை நிராகரிக்கும்படி பிரச்சாரம் செய்தது. இச்சங்கம் பொதுவாகப் பெரிய தொழிற்சாலை நிறுவனங்களுடன் தொடர்புடையது. இதன் நிறுவனர் தத்தோபந்த் தெங்கடி உபாத்யாயவுடன் நேரடியாகத் தொடர்புகொண்டவர். உபாத்யாய முன்வைத்த ஒருங்கிணைந்த மனிதநேயம் என்னும் கோட்பாட்டை பிஎம்எஸ்ஸின் தத்துவமாக தெங்கடி ஏற்றுக்கொண்டார் உபாத்யாயவைப் பற்றி இரண்டு புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.

இந்தியப் பொருளாதாரத்தின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு 1991ஆம் ஆண்டில் தெங்கடியும் அவருடைய சகாக்கள் நால்வரும் இணைந்து சுதேசி ஜாக்ரண் மஞ்ச்சை (சுதேசி விழிப்புணர்வு இயக்கம்) நிறுவினார்கள். வெளிநாட்டுப் போட்டியிலிருந்து உள்நாட்டு வணிகத்தின் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அமைப்பு இது. அன்னியப் பொருட்கள் புறக்கணிப்பு, தடையற்ற வர்த்தகத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் இவ்வமைப்பு ஈடுபட்டது. காப்புரிமை பெற்ற பொருட்களின் மீது, குறிப்பாக விவசாயத் துறையில், வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏகபோக உரிமையை வழங்கும் வகையில் இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களையும் இது எதிர்த்தது. இது இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு எதிரான தீவிரமான அமைப்பாகும்.

உபாத்யாய ஜனசங்கத்திற்கென ஒரு பொருளாதாரத் தளத்தை உருவாக்க முயன்று அரை நூற்றாண்டுக்கு மேல் ஆன நிலையில், 2014 தேர்தலில் பாஜக தனது இனப் பெரும்பான்மை என்னும் செயல்திட்டத்திற்குத் துணையாக விகாஸ் (வளர்ச்சி) என்ற மிகவும் வித்தியாசமான தளத்தில் பிரச்சாரம் செய்தது. இந்தியாவிற்கு வெளிநாட்டு வணிக முதலீடுகளை ஈர்ப்பது, பொருளாதாரத்தை நவீனமயமாக்குவது போன்ற வாக்குறுதிகளால் இந்தப் பிரச்சாரம் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தது. சில்லறை வணிகம் போன்ற துறைகள் இப்போது அந்நிய முதலீட்டுக்கு மிகவும் இசைவாக உள்ளன. வேலைவாய்ப்பைப் பெருக்காத உற்பத்தி வளர்ச்சி என்பது சேவைத் துறையில் அதிகரித்துள்ளது. மையப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இவையே கடந்த எட்டு ஆண்டுகளின் அடையாளங்கள். உள்நாட்டு உற்பத்தி, அதிகாரப் பரவலாக்கம், தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்பு ஆகியவையே  உபாத்யாயவின் லட்சிய நோக்கின் குவிமையம். இவற்றைத் தமது அடிப்படையாகக் கொண்டுள்ள சங்கப் பரிவார அமைப்புகளுக்குள் தற்போதைய பொருளாதார அணுகுமுறை பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இணக்கமான, தொன்மத்தின் தன்மையைக் கொண்ட உபாத்யாய என்னும் ஆளுமைக்கு பாஜக புத்துயிர் கொடுத்துள்ளதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். உபாத்தியாய என்னும் வரலாற்று ஆளுமையைப் பின்பற்றுவது மிகவும் கடினமானதாக இருக்கும். வேலையில்லாத உழைக்கும் மக்கள் எண்ணிக்கையில் வளர்ந்துவரும் நிலையில், மாநில அரசாங்கங்கள் தங்கள் வளங்களை வற்றச்செய்யும் சக்தியாகவே மையத்தைக் காண்கின்றன. வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்துவருவதால், பிஎம்எஸ், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஆகியவற்றின் குரல்களோடு மேலும் சில குரல்கள் இணைந்துகொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

ஆதித்ய பாலசுப்பிரமணியன்

Author

ஆதித்ய பாலசுப்பிரமணியன் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் பொருளாதார வரலாற்றுத் துறையில் மூத்த விரிவுரையாளராக உள்ளார்.

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்