சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான முறைசார்ந்த சட்டப்பூர்வமான செயல்முறைகளைப் பின்பற்றுவது கடினமாக இருக்கும்போதும் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான வழக்கமான நெறிமுறைகள் முழுமையாக உருவாகாதபோதும் சர்ச்சைகள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன? சில வகையான நிகழ்வுகளை வைத்து அதை விளக்குகிறேன். முறையான நீதிமன்றத்தைப் போலவே அதிகாரப்பூர்வமான நடைமுறைகளைப் பிரதிபலிக்கக்கூடிய முறைசாரா முறைகளில் மக்கள் சர்ச்சையைத் தீர்த்துக்கொள்கிறார்கள். தகராறுகளைத் தீர்த்துக்கொள்ளும் செயல்முறைகளை மக்கள் தாமாகவே உருவாக்கிக்கொள்கிறார்கள். அவை முறையான அமைப்பைப் போலவே வடிவமைக்கப்படுகின்றன. அவற்றின் முழுச் செயல்முறையும் சட்டப்பூர்வமானவைபோலவே செயல்படுகின்றன.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு பின்காலனித்துவச் சமூகங்களில் சர்ச்சைக்கான தீர்வுகளில் முறைசாராத சமூக விதிமுறைகளின் பங்கு என்னும் கருத்தை சட்டப் பன்மைத்துவம் தொடர்பான அறிஞர்கள் விளக்கியுள்ளனர். தங்கள் சமூகங்களில் ஏற்கெனவே முறைசாரா நெறிமுறைகள் எதுவும் இல்லாத நிலையில், தாங்களே உருவாக்கியுள்ள முறைசாராத வழிமுறைகளைப் பின்பற்ற உதவக்கூடிய கட்டமைப்பைச் சட்டம் வழங்குவதை இந்த ஆய்வுகள் குறிப்பிடத் தவறுகின்றன. இந்த அணுகுமுறையைப் புரிந்துகொள்வது, சட்ட உணர்வு பற்றிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தை மக்கள் எவ்வாறு "கற்பித்துக்கொள்கிறார்கள்" என்பதைப் புரிந்துகொள்வதற்கான பயனுள்ள திறப்பை வழங்குகிறது. மணவிலக்குக்கான சட்ட அமைப்பு இவ்விஷயத்தில் பயனுள்ள எடுத்துக்காட்டாக அமையும்.
சேர்ந்து வாழ்வதிலிருந்து தப்பித்தலும் சேர்ந்து வாழ்வதற்கான சட்டங்களிலிருந்து தப்பித்தலும்
இந்தியாவில் மணவிலக்கு விவகாரங்களை எடுத்துக்கொள்வோம். திருமணங்கள் பிரிந்துவிடாமல் தடுக்கும் நோக்கத்துடன்தான் திருமணச் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் இந்தியாவில் மணவிலக்கு நடைமுறைகள் மிகவும் சிக்கலானவையாக இருக்கின்றன. பிரிவது என்று இருவருமே முடிவெடுத்துவிட்டாலும் பிரியும் செயல்பாடு இருவர்மீதும் கணிசமான அளவில் உணர்வுப்பூர்வமான சுமையையும் நிதிச் சுமையையும் ஏற்படுத்துவதாக உள்ளது. மக்கள் நீதிமன்றத்திற்கு வெளியேயும் சட்டப்பூர்வமாக மணவிலக்கு பெற முடியாது. நீதிமன்றத்திலிருந்து விவாகரத்து ஆணை இல்லாமல் பிரிவது சட்டத்தின் பார்வையில் செல்லாது. இந்திய மக்கள் தொகையில் 80 சதவிகிதம் உள்ள இந்துக்களுக்கு மணவிலக்கு தொடர்பாக மதம் சார்ந்த எந்த விதியும் இல்லை. பல்வேறு சமூகங்களும் தத்தமது சொந்த நடைமுறைகள் மூலம் மணவிலக்கைக் கையாண்டுவந்தனர். 1955இல்தான் இந்து திருமணச் சட்டத்தின் (HMA) கீழ் மணவிலக்கு முறைப்படுத்தப்பட்டது.
சிறிய குக்கிராமங்களில், திருமணமானவர்கள் பிரிந்து செல்ல விரும்பினால், தங்கள் பிரிவைப் பற்றிக் கிராமங்களில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்திப் பிரிந்து செல்லலாம். அவர்களுடைய வாழ்க்கை அவர்களின் சமூகங்களைச் சுற்றி மட்டுமே சுழன்றுகொண்டிருக்கும்வரை, முறையான நீதிமன்றத்தின் "பொதுவான" ஆணை தேவையில்லை. மணவிலக்குக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, அவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள நகரத்தில் உள்ள நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. பல மாதங்கள், ஏன் பல ஆண்டுகள்வரை மிகவும் சிக்கலான மணவிலக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. அத்தகைய செயல்முறைக்கு உட்படுவதற்கான ஊக்கம் குறைவாக இருப்பதாகவே தெரிகிறது.
சட்டத்தைப் போன்ற தோற்றம்
நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட மணவிலக்குகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியவை என்பதைச் சட்டம் இப்போது கட்டாயமாக்கியுள்ளது. நீதிமன்ற நடைமுறைகளிலிருந்து தப்பிக்க விரும்பும் தம்பதிகள் எப்படி மணவிலக்கு அல்லது முறையான பிரிவினையை மேற்கொள்ள முடியும்? சட்டம் எப்படிச் செயல்படுகிறது, பிரிவினையை செயல்படுத்தும்போது முறையான நிறுவனம் எப்படிச் செயல்படுகிறது என்பவற்றைக் கவனித்து அவற்றைப் போலவே பிரிவுக்கான நடைமுறைகளை உருவாக்கலாம். இதைச் "சட்டம்போன்ற தோற்றம்" என்று அழைக்கிறோம். மக்கள் தங்கள் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள முறையான சட்டங்களைப் போன்ற நடைமுறைகளை உருவாக்கி, அதன் மூலம் முறையான சட்டங்களைப் பின்பற்றுவதைத் தவிர்க்கும் வழி இது. சட்ட நடைமுறைகளை அப்படியே நகல்செய்வது அதன் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. அப்பாவி வாடிக்கையாளர்களை ஏமாற்றச் சில சமயங்களில் வழக்கறிஞர்கள் இதை மேற்கொள்ளலாம். இதுபோன்ற செயல்முறைகள் சட்டம்போன்ற தோற்றம் மட்டுமே; "உண்மையான சட்டம்" அல்ல என்பது பெரும்பாலும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமலேயே செய்யப்படுகின்றன.
மணவிலக்கு விவகாரங்களில் சட்டம்போன்ற தோற்றங்கள் அதிகமாக இருப்பதை நான்கு இந்திய மாநிலங்களில் உள்ள வழக்கறிஞர்களிடையே மேற்கொண்ட ஆய்வின் மூலமாகவும், மூன்று வழக்குகளில் மணவிலக்கு நடவடிக்கைகளை நேரடியாகக் கவனித்ததன் மூலமாகவும் நான் கண்டறிந்தேன். பிரமாணப் பத்திரங்கள், நோட்டரி சான்றிதழ் பெற்ற நீதித்துறை முத்திரைத் தாள்கள், துல்லியமான சட்ட நடைமுறைகளின் பாணியிலான முறைசாராப் பிரிவினை ஒப்பந்தங்களின் வரைவு ஆகியவற்றின் மூலம் இணையர்களும் வழக்கறிஞர்களும் இந்தச் செயல்முறையில் ஈடுபடுகிறார்கள். வழக்கறிஞர்களின் அறைகளில் இதுபோன்ற சட்டப்பூர்வமான தோற்றங்களைக் காண முடியும். சட்ட ஆலோசனைகளை வழங்கும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களைக் கொண்ட Kaanoon, Lawrato, iPleaders, Advocatekhoj அல்லது Vidhikarya போன்ற சட்ட ஆலோசனை இணையதளங்களில் இவை மேலும் வெளிப்படையாகச் செயல்படுகின்றன. இந்த வழக்கறிஞர்களில் சிலர், நீதிமன்றத்திற்கு வெளியே மணவிலக்குகளை எப்படிப் பெறுவது என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், பல்வேறு ஆலோசனைகளுடன், "பிரிவு ஒப்பந்த”ங்களை மேற்கொள்வதன் மூலம் நீதித்துறை நடைமுறைகளைக் "கையாளலாம்" எனப் பரிந்துரைக்கிறார்கள். இந்த ஒப்பந்தங்கள் சட்டப்பூர்வமானவை என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தையும் அதற்கான முறையான படிவங்களையும் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த இணையப் பக்கங்கள் ஆயிரக்கணக்கான பார்வைகளைக் கொண்டுள்ளன.
இந்தியாவின் கிராமப்புறங்களில், பஞ்சாயத்துக் குழுக்கள் மூலம் நடக்கும் மணவிலக்குகளில் சட்டப்பூர்வமான தோற்றங்கள் வெளிப்படுகின்றன. கிராம சபைகள், சட்டப்பூர்வமான தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் சாட்சிகள், கிராமவாசிகள் முன்னிலையில் நீதிமன்றம்போலவே வழக்கை நடத்தி, முறைசாரா மணவிலக்கு ஆணைகளை வழங்குகின்றன. இறுதியில் முறையான நீதிமன்ற வழக்குகளுக்குச் செல்லும் சில தீர்ப்புகளில் சட்டரீதியான தோற்றம் வெளிப்படையாகத் தெரிகிறது. அத்தகைய ஒரு வழக்கில், முறையான நீதிமன்றம் இந்த மணவிலக்கை ரத்துசெய்தது. அந்தத் தீர்ப்பிலிருந்து சில விவரங்களை நாம் பெறலாம். "மத்தியஸ்தர்களின் முன்னிலையிலும் நடுவர்களின் வழிகாட்டுதலின்படியும்” முறைசாரா மணவிலக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “மரணமடைந்த கோவிந்தராஜ் பிரதிவாதிக்கு ரூ. 7,000 வழங்கினார். மணவிலக்குப் பத்திரம் எழுதப்பட்டு, கோவிந்தராஜும் பிரதிவாதியும் 24.7.1978 அன்று பந்தல்குடி துணைப் பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்திட்டார்கள்” என அந்தத் தீர்ப்பில் இருந்தது. முறைசாராத் தீர்ப்பில் அரசு அதிகாரம், அதாவது துணைப் பதிவாளர் அலுவலகத்தின் பங்கும் இருப்பதைக் கவனியுங்கள். ஆவணப்படுத்தல், எழுதுதல் போன்ற சட்டப்பூர்வமான அம்சங்கள் இந்த நடைமுறை அதிகாரப்பூர்வமாக நடைபெறுவதுபோன்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன.
சமூக வழக்கமாக நிலவும் மணவிலக்கு வடிவங்கள் இந்துத் திருமணச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இப்படி அனுமதிக்கப்படும் முறைசாராத் திருமண முறிவு உண்மையிலேயே ஒரு சமூக வழக்கம்தான் என்பதை நிரூபிக்க வேண்டும். "வழக்கம்" என்ற வார்த்தைக்குச் சட்டத்தில் குறிப்பிட்ட வரையறை உள்ளது. இந்த முத்திரையைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் செயல்களைச் சட்டப்பூர்வமானது என நிரூபிக்க விரும்புபவர்களுக்குக் கடுமையான தடையை இது விதிக்கிறது. எடுத்துக்காட்டாக, 2019ஆம் ஆண்டு வழக்கில் ‘ஃபர்கடினாமா’ (fargatinama) அல்லது 2007ஆம் ஆண்டு வழக்கில் ‘சுட்டா சுட்டி’ (chutta chutti) ஆகியவை "சமூக வழக்கம்" என்று சம்பந்தப்பட்ட தரப்பினரால் அறிவிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் செயல்முறைகள். நீதிமன்றம் இவற்றை அங்கீகரிக்கவில்லை. 2016இல் வெளியான மற்றொரு தீர்ப்பில், ஒரு குறிப்பிட்ட பஞ்சாயத்து தீர்ப்பளித்த மணவிலக்கு வழக்கில் சட்டப்பூர்வமான தோற்றம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. பஞ்சாயத்தின் ஒன்பது உறுப்பினர்களில் ஐந்து பேர் பங்கேற்றுக் கையொப்பமிட்டிருந்தனர். இருப்பினும் அந்தப் பஞ்சாயத்து தீர்ப்பளித்த மணவிலக்கிற்கு ஆதாரமான சமூக வழக்கம் அங்கே பின்பற்றப்பட்டதற்கான வரலாற்றுப் பதிவு எதுவும் இல்லை என்பதை நீதிபதிகள் கண்டறிந்தார்கள். பஞ்சாயத்து விவாகரத்துகள் செல்லாது என்று நீதிமன்றங்கள் பலமுறை அறிவித்திருந்தது 1980முதல் 2019வரையிலான எங்கள் விரிவான ஆய்வில் தெரியவந்தது. இருப்பினும் அவை 1980முதல் 2019வரையிலான வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது சட்டப்பூர்வமான தோற்றங்களுக்கான தூண்டுதலை மேலும் வலுப்படுத்துகிறது.
சட்டப்பூர்வமான பிரிவுகளுக்குச் சட்டம் விதிக்கும் கட்டுப்பாடுகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், சட்டப்பூர்வமான தோற்றங்களை ஆய்வுசெய்ய மணவிலக்கு விவகாரங்கள் பயனுள்ளவையாக இருக்கும். இந்தியாவில், அதிகாரப்பூர்வமாக "மணவிலக்கு" பெற்றவர்களைவிட அத்தகைய அங்கீகாரம் பெறாமல் "பிரிந்தவர்கள்" மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறார்கள். பிரிய விரும்பும் இணையர்மீது நீதிமன்ற நடவடிக்கைகள் சுமத்தும் ஆழ்ந்த கவலைகளை இது பிரதிபலிக்கிறது. சட்டப்பூர்வமானதைப் போலவே தோற்றம் கொண்ட இத்தகைய முயற்சிகள் இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை. கத்தோலிக்க மரபில் ஆழமாக வேரூன்றிய பல நாடுகள் சட்டப்பூர்வமான மணவிலக்கை அண்மையில்தான் அங்கீகரித்துள்ளன. எடுத்துக்காட்டாக சிலி 2004ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான் அதை அங்கீகரித்தது. அதற்கு முன் சிலி மக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்கள் சட்டரீதியான தந்திரங்களைப் பயன்படுத்தியது தெரியவந்திருக்கிறது. குடிமைச் சமூகமே திருமணத்தை ரத்துசெய்யும் நடைமுறை அங்கே இருந்தது. பிரிய விரும்பும் பெண்கள் சட்ட எந்திரத்தைப் பயன்படுத்தி, திருமணமே நடக்கவில்லை என்று காட்டுவது அல்லது கணவர் காணாமல்போனதாகக் காட்டுவது, கணவர் தன்னை விட்டுச் சென்றுவிட்டார் அல்லது இறந்துவிட்டார் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் செய்வது ஆகியவை அங்கே கடைப்பிடிக்கப்பட்ட தந்திரங்களில் சில. அதேபோல வங்கதேசத்தில், இந்துக்களிடையே மணவிலக்குச் சட்டங்கள் இல்லாத நிலையில், இணையர்கள் பிரமாணப் பத்திரத்தில் சத்தியம் செய்து அல்லது எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுப் பிரிந்துவிடுகிறார்கள்.
சட்டப்பூர்வமான தோற்றங்கள் எந்த அளவுக்குப் பரவலாக உள்ளன?
சட்டப்பூர்வமான தோற்றங்களின் செயல்பாடுகள் மணவிலக்குகளோடு மட்டும் மட்டும் முடிந்துவிடவில்லை. அவை சில வகையான நில ஒருங்கிணைப்புச் செயல்முறைகளில் (வட இந்தியாவில் ‘சக்பந்தி’ என இவை அழைக்கப்படுகின்றன) காணப்படுகின்றன. இரண்டு விவசாயிகளின் எடுத்துக்காட்டைப் பாருங்கள். கிராமத்தில் அவர்களுக்கு இருக்கும் நிலங்களிருந்து தனியாகப் பிரிந்துள்ள இரண்டு துண்டு நிலங்கள் அவர்கள் இருவருக்கும் உள்ளன. இவர்கள் தத்தமது துண்டு நிலங்களைப் பரிமாறிக்கொண்டால் இருவரும் தத்தமது நிலப்பகுதிகளை விரிவுபடுத்திக்கொள்ளலாம். நிலங்களை ஒருங்கிணைப்பதற்கான சீரான செயல்முறை இருக்க வேண்டும் என்று இதற்கான சட்டம் சொல்கிறது. ஆனால் அந்தச் செயல்முறை கடினமானது; அதிக காலத்தை எடுத்துக்கொள்ளக்கூடியது. இந்தச் செயல்முறைகளுக்கு அஞ்சி விவசாயிகள் பஞ்சாயத்தை அணுகுகிறார்கள். விண்ணப்பதாரரின் பெயருக்கு நிலத்தை மாற்றவும், இருவரின் நிலங்களை ஒருங்கிணைக்கவும் சட்டப்பூர்வமானதைப் போலத் தோற்றமளிக்கும் உத்தரவைப் பஞ்சாயத்து பிறப்பிக்கிறது. ஆனால் இது இது சட்டப்பூர்வமாகச் செல்லாது. நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகளிடம் நிலங்களைக் குத்தகைக்கு எடுக்கும் விவசாயிகளும் சில வகையான (சட்டப்பூர்வமற்ற) ஆவணங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். குத்தகைச் செயல்முறைக்கு இதன் மூலம் முறை சார்ந்த வடிவத்தை அளிக்கிறார்கள். என்றாலும் இது அடிப்படையில் வெறும் ஒப்பனை மட்டுமே.
சட்ட, சமூக அறிஞர்கள் மக்களிடையே எழும் தகராறுகளைத் தீர்க்க் முறைசாரா வழிமுறைகளைப் புரிந்துகொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கினாலும், சட்டப்பூர்வமான தோற்றங்களின் நிகழ்வு அவர்களுடைய ஆய்வுக்குள் சிக்குவதில்லை. சட்டங்கள் துன்பம் தரக்கூடியதாகவோ கடினமானதாகவோ இருக்கலாம். ஆனால் மக்கள் புத்திசாலித்தனமாக அவற்றைக் கையாளலாம். முறைசாராப் பரிவர்த்தனை செய்ய முடியாதபோது, அவர்கள் முறையாகப் பரிவர்த்தனை செய்வதுபோல் செய்யலாம். சட்டப்பூர்வமான செயல்முறையைப் போலவே இருக்கும் நகல்கள் அசல்களைப் போலவே வலுவாகவும் இருக்கலாம். சமூகம் சட்டங்களை எவ்வாறு "பயன்படுத்துகிறது" என்பது சமூகத்தைப் பற்றிய ஆழமான புரிதலைத் தருகிறது. ஆக, சட்டப்பூர்வமான தோற்றங்கள் சட்டங்கள் பயன்படுத்தப்படுவதன் தனித்துவமான வழிகள் என்று சொல்லலாம். நகல் சட்டத்தின் பயன்பாடுகள் சட்டம் குறித்த பிரக்ஞையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. சட்டப் பன்மைத்துவத்தின் கட்டமைப்பையும் விரிவுபடுத்துகின்றன. கற்பனையான சமூகத்தை மனதில் கொண்டு சட்டங்கள் கட்டமைக்கப்படலாம் என்றால், கற்பனைச் சட்டத்தை மனதில் கொண்டு சமூகமும் உருவாகலாம்.