இந்திய-ஜப்பான் உறவுகள்: 70ஆம் ஆண்டில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

09/05/2022
IiT English Page

இந்த ஆண்டுடன் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான தூதரக உறவு தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இத்தனை ஆண்டுகளில் இந்நாடுகளுக்கிடையிலான உறவு சீராக முன்னேறிவருகிறது. இந்தியாவும் ஜப்பானும் 2015இல் "வியூக ரீதியிலான, உலகளாவிய சிறப்பு"க் கூட்டாளிகளாக மாறின. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வளர்ந்துவரும் போட்டியால், வேகமாக மாறிவரும் அதிகாரச் சமன்பாடுகளால் இந்தப் பிராந்தியம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியில் ஸ்திரத்தன்மை பேணுவதில் முக்கிய சக்திகளாக இந்தியாவும் ஜப்பானும் இருக்க வேண்டும் என்றால், அவை பாதுகாப்பு சார்ந்த தமது உறவுகளை மேம்படுத்திக்கொள்வது இன்றியமையாதது.

முதலாவதாக, சீனா, அதன் எழுச்சி ஆகியவை தொடர்பான கருத்து, நடவடிக்கை இரண்டிலும் உள்ள குறிப்பிடத்தக்க இடைவெளியைக் கடப்பதற்கும் அந்த இடைவெளியை நிரப்புவதற்கும் இரு நாடுகளும் ஒத்திசைவான கூட்டு வழிகளைக் கண்டறிய வேண்டும். இரண்டாவதாக, பாதுகாப்புத் துறை வர்த்தகம் தொடர்பான தங்களுடைய முதல் ஒப்பந்தம் என்னவாக இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதை அவர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும். இந்த "இயற்கையான பங்காளிகள்" அல்லது சற்று மிகைப்படுத்திக் கூறப்படும் "ஏற்கெனவே ஓரளவு நட்புக் கொண்ட நாடுகள்" அவ்வாறு செய்தால், இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் அதிரடியான நடவடிக்கைகளின் பின்னணியில் அது ஒரு முக்கியமான அரசியல் சமிக்ஞையாக இருக்கும்.

சீனாவின் எழுச்சி: கண்ணோட்டத்திற்கும் செயலுக்குமான இடைவெளி
சீனாவுடன் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் உள்ள வரலாற்று ரீதியான தொடர்புகள் சீனாவின் தற்போதைய எழுச்சியை அந்நாடுகள் எப்படிப் பார்க்கின்றன என்பதைத் தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. உதாரணமாக, இந்திய-சீனா உறவு 1962 போரில் இந்தியா பெற்ற தோல்வியிலிருந்து உருவாகி நீடித்துவரும் அதிகாரச் சமன்பாட்டில் உள்ள வேறுபாட்டால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், சீனாவுடனான ஜப்பானின் கூட்டு என்பது சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார, வரலாற்று உறவுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது (1930களில் சீனாவை இணைத்துக்கொண்டது உட்பட). 1970களிலிருந்து, சீனாவுடனான பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதில் ஜப்பான் உறுதியாக இருந்தது. ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் வலுவான சீன லாபியும் இடம்பெற்றது. சீனாவை முக்கியமான வர்த்தக, பொருளாதாரக் கூட்டாளியாகக் கொண்டிருப்பது, அதன் அதிரடியான எழுச்சியால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்வது போன்ற பொதுவான தன்மைகள் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இருந்தபோதிலும், இரு நாடுகளும் தத்தமது எதிர்வினைகளை வடிவமைத்த விதத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது.

சீனாவை எதிர்கொள்வதற்கு ஜப்பான் ஒப்பீட்டளவில் அதிகத் தயக்கம் காட்டியது. ஏனெனில் அது பொருளாதாரத்திலிருந்து அரசியலைப் பிரித்துப் பார்க்கும் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றுகிறது. இந்திய அரசோ, பாதுகாப்பு தொடர்பான ஜப்பானுடனான ஒத்துழைப்பு "வேறு எந்தவொரு நாட்டிற்கும், குறிப்பாகச் சீனாவிற்குப் பாதிப்பாக" அமைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. எனினும், லடாக்கில் தற்போது உள்ள நெருக்கடியால், சீனா விஷயத்தில் இந்தியா பொறுமையிழந்துவருகிறது. இந்தியாவின் தற்போதைய கதையாடல், எல்லைப் பகுதிகளில் அதிகரித்துள்ள பதற்றங்கள், சீனாவின் எழுச்சியைச் சமன்செய்வது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது.

இந்தப் பின்னணியில், கண்ணோட்டத்திற்கும் செயல்பாடுகளுக்கும் இடையில் உள்ள இந்த இடைவெளியைக் குறைப்பதற்கான பயனுள்ள முதல் வழி, ஏற்கனவே இரு நாடுகளுக்கும் பலன் தந்துவரும் செயல்பாடுகளை மேம்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதாகும். சர்வதேச அளவில் சிறிய அல்லது பலதரப்புக் குழுக்களில் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் உறவு இணக்கமாக உள்ளது. இந்தக் கட்டமைப்புகள் உலகப் போருக்குப் பின்பு பலதரப்பு உறவுகளின்பால் ஜப்பான் காட்டிவரும் சாதகமான போக்கிற்கும் முறையான கூட்டணிகளின் மீதான இந்தியாவின் ஒவ்வாமைக்கும் ஏற்ற வகையில் இருக்கின்றன என்பது இதற்கான காரணமாக இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான குவாட் என்னும் அமைப்பின் அறிக்கைகள் 2017 முதல் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. சீனாவைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்தோ-பசிபிக் பகுதியில் இந்த இரு நாடுகளுக்கும் "பொதுவான பாதுகாப்பு, செழிப்பு" தொடர்பான குறிப்புகள் அழுத்தமாக இருக்கின்றன. அது மட்டுமின்றி, இந்தியா – ஜப்பான் – அமெரிக்கா, இந்தியா - ஜப்பான், ஆஸ்திரேலியா, அண்மையில் தொடங்கப்பட்ட இந்தியா - ஜப்பான் - இத்தாலி போன்ற முத்தரப்புக் கூட்டமைப்புகளும் சீரான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.

இதை அடியொற்றி, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகள் கொண்ட கூட்டமைப்பை உருவாக்க முயல வேண்டும். 2018இல் பிரான்ஸ் தன்னுடைய வெளியுறவுக் கொள்கையில் இந்தோ-பசிபிக் என்ற சொல்லை ஒரு கருத்தாக்கமாகச் சேர்த்தது. இந்தப் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பிரான்ஸ் இராணுவத்தின் இருப்பு உள்ளது. இந்தியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளுடனான கடல்சார் நலன்களையும் பிரான்ஸ் ஒருங்கிணைக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து, இந்தோ-பசிபிக் பாதுகாப்புக் கட்டமைப்பில் பிரான்ஸ் முக்கியப் பங்காளியாகவும் பங்களிப்பாளராகவும் இருக்க முடியும் என்பதை உறுதி செய்கின்றன.

ஜப்பானின் அரசியலமைப்பு வரம்புகள் அதன் கடல்சார் தற்காப்புப் படையைப் பாரம்பரியமான கடற்படையின் பங்கை மேற்கொள்ள முடியாத வகையில் கட்டுப்படுத்துவதால், அவர்களின் கடலோரக் காவல் கூட்டாண்மையை மேம்படுத்துவது இரண்டாவது வழி. ஆயினும், ஜப்பானில் மிகவும் திறமையான கடலோரக் காவல்படை உள்ளது. 2000களின் முற்பகுதியில் இந்தப் படையில் ஏற்பட்ட அதன் மாற்றம் "பனிப்போரின் முடிவுக்குப் பிறகு மிகவும் குறிப்பிடத்தக்க, அதிகம் கவனிக்கப்படாத ஜப்பானிய இராணுவ வளர்ச்சி”யாகக் கருதப்பட்டது. அப்போதிருந்து, ஜப்பான் கடலோரக் காவல்படை சீனாவின் ஆயுத மோதல் அல்லாத, ஆனால் இயல்பான ராஜதந்திர, பொருளாதார மட்டங்களைத் தாண்டிய நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கான கருவியாக இருந்துவருவதுடன், இதர பல்வேறு இராணுவ நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

2021ஆம் ஆண்டில், சீனா பிரச்சினைக்குரிய புதிய கடலோரக் காவல் சட்டத்தை நிறைவேற்றியது. சீனக் கடலோரக் காவல்படை எப்போது தன் பலத்தைப் பயன்படுத்தலாம் என்பதையும், சர்ச்சைக்குரிய தீவுகளின் மீதான தன் உரிமைகோரல்களை வலுப்படுத்த சீன அரசை எப்போது அனுமதிக்கலாம் என்பதையும் இந்தச் சட்டம் தெளிவுபடுத்துகிறது. ஜப்பான் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஜப்பான் – இந்தியக் கடலோரக் காவல்படை உறவுகளை வலுப்படுத்துவது நன்மை பயக்கும் என்பதை இது அழுத்தமாக நினைவுபடுத்துகிறது.

ஜப்பான் கடலோரக் காவல்படையும் இந்தியக் கடலோரக் காவல்படையும் இணைந்து கடற்கொள்ளையர் எதிர்ப்பு, கடல்பகுதியில் தேடல், மீட்பு ஆகிய பணிகளை மேற்கொண்டிருந்தாலும், 2006ஆம் ஆண்டு முதல் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தைக் கொண்டிருந்தாலும், இந்தச் சவால்களைச் சமாளிப்பதற்கான ஒத்துழைப்புச் செயல்முறைகளை விரிவுபடுத்துவது முக்கியமானது. எடுத்துக்காட்டாக, ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையையும் கடலோரக் காவல் திறன்களையும் வலுப்படுத்த வேண்டும் என்று லிபரல் டெமாக்ரடிக் கட்சி முன்மொழிந்தது. கடல்சார் தற்காப்புப் படையும் அமெரிக்கப் படைகளும் கூட்டுப் பயிற்சிகளை நடத்தும்போது ஜப்பான் கடலோரக் காவல்படையைச் சேர்க்கவும் வலியுறுத்தியது. இந்தியப் பெருங்கடலுக்குள் சீனக் கடற்படை நுழைவது தொடர்பான கவலைகளைக் கொண்டிருக்கும் இந்தியா, ஜப்பான் கடலோரக் காவல்படையுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதன் மூலம் பயனடையலாம். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா இடையே வருடாந்தர மலபார் கடற்படை பயிற்சியில் ஜப்பான் கடலோரக் காவல்படையையும் சேர்க்கலாம்.

இரு நாடுகளும் தத்தமது நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து சீனாவுடனான நிலப்பரப்பு சார்ந்த முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக வலுவான ஆதரவைப் பகிர்ந்துகொள்வது மூன்றாவது அணுகுமுறை. ஆகஸ்ட் 2017இல் சீனா-இந்தியா இடையே டோக்லமில் ஏற்பட்ட மோதலின்போது ஜப்பான் இதை முன்னெடுத்தது. “நடப்பு நிலையை வலுக்கட்டாயமாக மாற்ற யாரும் முயற்சிக்கக் கூடாது” என்று இந்தியாவில் உள்ள ஜப்பானியத் தூதரகம் ஒரு அறிக்கையின் மூலம் வலியுறுத்தியது. ஜப்பானிய வெளியுறவுக் கொள்கையில் இது குறிப்பிடத்தக்க மாற்றம். அதுவரையிலும் மற்ற நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்சினைகள் குறித்து அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதை ஜப்பான் தவிர்த்துவந்தது.

சீனாவுடன் ஜப்பான் கொண்டுள்ள சென்காகு தீவுகள் குறித்த பிரச்சினையில் இந்தியா தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வது நல்லது. ஜப்பான் தனக்குச் "சொந்தமான பிரதேசமாக" கருதும் இந்தத் தீவுகள் குறித்த எந்த அறிக்கையையும் இந்தியா இப்போதுவரை கவனமாகத் தவிர்த்துவருகிறது. அவ்வாறு செய்த ஒரே நாடு அமெரிக்காதான். இந்தப் பிராந்தியத்தில் கூடுதலான வலிமையைப் பெற இந்தியா முயல்வதால் அது விரைவில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருக்கும்.

ஆயுதங்கள் விற்பனை
உலகப் போருக்குப் போருக்குப் பின்பு ஜப்பான் அமைதி காக்கும் அணுகுமுறையைக் கடைப்பிடித்துவந்தது. ஆயுதங்கள் ஏற்றுமதியையும் விற்பனையையும் இந்தக் கொள்கை தடுத்தது. இந்த அணுகுமுறையிலிருந்து ஜப்பான் 2014ஆம் ஆண்டில் விலகியது. தன் 1967ஆம் ஆண்டின் ஆயுத ஏற்றுமதித் தடையை நீக்கியது. அதன் பிறகு, ஜப்பான் இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்க அவ்வப்போது விருப்பம் தெரிவித்தது. இரு நாடுகளும் நெருங்கி வந்தபோதிலும், யுஎஸ்-2 ஷின்மேவா தேடுதல் மற்றும் மீட்பு விமானத்தின் விற்பனை குறித்து நீண்டகாலமாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன. இப்போதைக்கு இந்த ஒப்பந்தம் பரிசீலனையில் இருப்பதாகத் தெரியவில்லை. 2017ஆம் ஆண்டில், இந்தியக் கடற்படை, தன் ப்ராஜெக்ட் 75(I) என்னும் முன்முயற்சிக்காக, ஆறு மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான தகவல்களைப் பெறுவதற்கான கோரிக்கையை அனுப்பியது. இதுவும் தவறவிடப்பட்ட இன்னொரு வாய்ப்பாகும். முன்னணிப் போட்டியாளர்களாகக் கருதப்பட்ட ஜப்பானின் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ், கவாசாகி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கவில்லை, ஏனெனில் இரு அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்திலேயே ஜப்பான் ஆர்வம் காட்டியது.

மேலும், தொழில்நுட்பப் பரிமாற்றம் குறித்த ஜப்பானின் தயக்கங்களும் விலை விஷயத்தில் இந்தியாவின் கவலைகளும் இரு நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாமல் இருப்பதற்கான முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. சவூதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளர் இந்தியா. இந்நிலையில் இந்திய ஆயுதச் சந்தை ஜப்பானுக்கு மிகவும் லாபகரமானதாக இருக்கும். இந்தியா வளர்ந்துவரும் சக்தியாக உள்ளதால் ஆயுத நுகர்வுக்கான அதன் தேவை இன்னும் வளரத்தான் செய்யும். இரு நாடுகளுக்குமிடையில் உருவாகக்கூடிய இத்தகைய வாய்ப்புகள் இரு தரப்பிலும் இருக்கும் கவலைகளையும் தடைகளையும் கடக்க உதவிசெய்ய வேண்டும்.

இத்துடன், இந்தியாவின் மேக் இன் இந்தியா முன்முயற்சியுடன் ஜப்பானியத் தொழில்நுட்பப் பரிமாற்றத்தையும் ஆயுத விற்பனை மற்றும்/அல்லது உற்பத்தியை எவ்வாறு இணைக்கலாம் என்பதையும் இரு நாடுகளும் கருத்தில் கொள்வது பயன் தரும். இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் தெளிவாக உள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஏற்கனவே இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இந்நிலையில், இந்தியாவுக்கு ஜப்பான் ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்த முன்முயற்சி இந்தியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்குமான எண்ணற்ற வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. "பல நிறுவனங்கள் உற்பத்தி குறித்து நம்பிக்கையற்று இருப்பதால்" ஜப்பானின் பாதுகாப்புத் தொழில்துறை பலவீனமாக இருக்கிறது. எனவே, ஜப்பான் இந்தத் துறையைப் புதுப்பிப்பதற்கான அவசர உணர்வுடன் செயல்பட வேண்டியிருக்கிகிறது.

அதிக விலை கொண்ட பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது ஜப்பானின் இலக்காக இருக்க வேண்டும் என்றாலும், சிறிய பொருட்களை ஏற்றுமதி செய்வது சாத்தியமான தொடக்கப் புள்ளியாக இருக்கலாம். ஜப்பானிய கண்காணிப்பு ரேடார்கள், தகவல் தொடர்பு, மின்னணுப் போர் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை இந்தியா பரிசீலிக்க வேண்டும். மேலும், ஜப்பான் தென்கிழக்கு ஆசியா தொடர்பில் பயன்படுத்திய உத்தியை இந்தியாவும் பயன்படுத்தலாம். அங்கு வணிக ஒப்பந்தங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தைக் காட்டிலும் வெளிநாட்டு மேம்பாட்டு உதவி (ODA) பரிமாற்றங்கள் மூலம் நடைபெற்ற ஜப்பானின் ஆயுத ஏற்றுமதிகள் வெற்றிகரமாக உள்ளன. வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் நலன்களையும் மேம்படுத்த ஜப்பானின் ODA பயன்படுத்தப்பட்டது. 2014ஆம் ஆண்டில், அப்போதைய ஜப்பானியப் பிரதமர் அபே, ஒரு புதிய மேம்பாட்டு ஒத்துழைப்பு சாசனத்தை அறிவித்தார். இது ODAக்கு "வியூக முக்கியத்துவம் வாய்ந்த சாதக”த்தை வழங்கியது. ஆயுதம் தொடர்பான அமைப்புமுறைகளை மாற்றுவதையும் உள்ளடக்கிய சாசனம் இது. எடுத்துக்காட்டாக, 2014-2020 க்கு இடையில் ஜப்பானிடமிருந்து பிலிப்பைன்ஸ் பெற்ற ODAஇல் 12.2 சதவிகிதம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் நிதியுதவியுடன் பத்து 40-மீட்டர் மல்டி-ரோல் ரெஸ்பான்ஸ் கப்பல்கள் கட்டுமானம் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டது. 2003இல் சீனாவை விஞ்சி ஜப்பானின் ஓவர்சீஸ் ODAஐப் பெற்ற இந்தியா இப்போது இதைக் கருத்தில் கொள்ளலாம்.

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய அவசர உணர்வு - குறிப்பாக சீனாவைக் கையாள்வதில் - கடந்த பத்தாண்டுகளில் அபேயும் மோடியும் இணைந்து முன்னெடுத்த பிணைப்புகளையும் பார்வையையும் புதுப்பிக்க வேண்டும். இந்தியா-ஜப்பான் கூட்டாண்மை இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்தியப் பாதுகாப்பையும் செழுமையையும் உண்மையிலேயே மேம்படுத்த வேண்டும் என்றால், அதற்கு இதுவே சரியான நேரம். இல்லையெனில், இந்த இரு நாடுகளிடையேயான கூட்டாண்மை விரைவிலேயே தேக்கமடையலாம் அல்லது முழுமைபெறாத முயற்சியாகவே இருந்துவிடலாம்.

விந்து மயி சோடானி

Author

விந்து மயி சோடானி மெய்ஜி பல்கலைக்கழகத்திலும் ரிட்சுமேக்கன் ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்திலும்  துணை விரிவுரையாளர். இவர் 2022 செப்டம்பர் மாதம் இண்டர்நேஷனல் கிறிஸ்டியன் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பொறுப்பேற்கவிருக்கிறார். 

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்