மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களின் மீது ஜம்மு காஷ்மீரில் நிலவும் தீவிரமான ஈடுபாடு புதிதல்ல. அந்த மாநிலத்தை இந்தியாவுடன் இணைத்தது, பாகிஸ்தான் அதன் சில பகுதிகளை ஆக்கிரமித்தது ஆகிய நிகழ்வுகளைப் போலவே மிகவும் பழையது. மிக அண்மைக் காலத்தில், 2019இல், இந்திய அரசியலமைப்பின் 370ஆவது பிரிவை நீக்கியதன் மூலம் இந்தப் பிரச்சினை மீண்டும் எழுந்தது. இந்த நடவடிக்கை ஜம்மு காஷ்மீருக்கு சுயாதிகாரம் வழங்கும் சட்டங்களை அகற்றியது. ஜம்மு காஷ்மீர் அரசியலில் மக்கள்தொகை தொடர்பான புள்ளிவிவரங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் அதே வேளையில், தரவுகளின் தரம் விவாதத்திற்குரியதாக உள்ளது. இந்தப் பின்னணியில், குறிப்பாக 1991க்கும் 2011க்கும் இடையில் மாறியுள்ள அதன் இயல்பின் பின்னணியில், மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களால் வடிவமைக்கப்படுவதும், அந்தப் புள்ளிவிவரங்களை வடிவமைப்பதுமான எண்களின் அரசியலை உன்னிப்பாக ஆராய வேண்டியிருக்கிறது.
1947க்குப் பிறகு, 1951இலும் 1991இலும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பை இரண்டு முறை தவறவிட்ட இந்தியாவின் ஒரே மாநிலம் ஜம்மு காஷ்மீர். 2001, 2011ஆம் ஆண்டுகளில், இங்கு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் சுதந்திரத்தை விரும்புபவர்கள் இந்திய அரசு எண்களைத் தனக்கேற்ப வரையறை செய்ய விரும்புவதாகக் கருதி இந்த நடவடிக்கையில் குறுக்கிட்டதால் இந்தக் கணக்கெடுப்பு பாதிப்புக்குள்ளானது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று நிர்வாகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, காஷ்மீர் மொழி பேசும் முஸ்லிம்கள் காஷ்மீர் பகுதியிலும், ஒட்டுமொத்த மாநிலத்திலும் பெரும்பான்மையாக உள்ளனர். 1990களின் முற்பகுதியில், ஆயுதமேந்திய கிளர்ச்சியாலும் வகுப்புவாதத் தாக்குதல்களாலும் காஷ்மீர் பகுதியின் பூர்வகுடிகளான இந்துக்கள் பெரும்பாலும் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள். ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அண்மைக் காலங்களில் லடாக்கில் முஸ்லிம்கள் மிகப்பெரிய மதச் சமூகமாக உருவெடுத்திருக்கிறார்கள்.
காஷ்மீரில் மிகப் பெரும்பான்மையாக இருக்கும் காஷ்மீரி மொழி பேசும் சன்னி முஸ்லிம்களுக்கும் ஜம்முவில் பெருமளவில் உள்ள டோக்ரி மொழி பேசும் உயர்சாதி இந்துக்களுக்கும் 1950களிலிருந்து மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லை. அரசின் பொதுச் செலவினங்களிலும் வேலைவாய்ப்புகளிலும் அவர்களுக்குப் பங்கில்லை (கடந்த சில பத்தாண்டுகளில் குஜ்ஜர்கள், பகர்வால்கள், பஹாரிகள் போன்ற பிற சமூகங்களும் பொது வளங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான போட்டியில் சேர்ந்துகொண்டன). இந்தச் சமூகங்கள் ஜம்மு காஷ்மீரின் அரசியல் எதிர்காலம் தொடர்பான மாறுபட்ட விருப்பங்களைக் கொண்டுள்ளன. மாநிலத்தின் எதிர்காலம் யார் கையில் இருக்கும் என்பதை மக்கள்தொகையில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இருக்கும் பங்கு தீர்மானிக்கும் என்று பரவலாக நம்பப்படுவதால் இந்த இரு மதச் சமூகங்களும் தத்தமது எண்ணிக்கை பற்றிக் கவலைப்படுகின்றன. 1948ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஆதரவுடன் பழங்குடியினர் காஷ்மீர் பிரதேசத்தை ஆக்கிரமித்தபோது, இந்தியா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலை (UNSC) அணுகியது. இந்தியாவுடன் இந்த மாநிலம் இணைந்திருப்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என இவ்வமைப்பு அப்போது பரிந்துரைத்தது. இந்த வாக்கெடுப்பும் சாத்தியமில்லாமல்போன சூழ்நிலையும் இந்தக் கவலையில் அடங்கும்.
இதன் விளைவாக, ஒவ்வொரு அரசியல் நகர்வும் நிர்வாகக் கொள்கையும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் எண்ணிக்கை சார்ந்த மேலாதிக்கத்திற்கான தாக்கங்களை மனதில் கொண்டு அலசப்படுகிறது. அதிக எண்ணிக்கை சட்டசபையில் அதிக இடங்களை வழங்குவதுடன் மக்கள்தொகையில் முஸ்லிம் பெரும்பான்மையையும் சாத்தியமாக்கும். ஆனால், எண்களின் அரசியல் கடந்த சில பத்தாண்டுகளாக மாற்றமடைந்துள்ளது. பள்ளத்தாக்கில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கும் பொது வாக்கெடுப்புக்குமிடையிலான பதற்றத்தை வைத்து இதைப் புரிந்துகொள்ளலாம். மாறிவரும் இந்த அரசியலின் திரும்பத் திரும்ப நிகழும் மூன்று நிகழ்வுகளை நாம் ஆராய்வோம்.
1991 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
1991இல் இந்தியாவின் இதர பகுதிகளுடன் சேர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் கணக்கெடுப்பு தொடங்கவிருந்த நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே "கள நிலவரம் சாதகமாக" இல்லை என்பதால் ஜம்மு காஷ்மீரில் அது ரத்து செய்யப்பட்டது. 1990-91இல் பள்ளத்தாக்கில் மட்டுமே கிளர்ச்சி இருந்தது; லடாக்கிலும் ஜம்முவின் பெரும்பாலான மாவட்டங்களிலும் வன்முறை இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆயுதக் கிளர்ச்சி நடந்துகொண்டிருந்த அண்டை மாநிலமான பஞ்சாபைவிட ஜம்மு காஷ்மீரில் இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருந்தது. பஞ்சாபில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் தேர்தலும் நடத்தப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் இரண்டுமே நடக்கவில்லை. காஷ்மீரில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்குக் கிளர்ச்சியாளர்களால் அச்சுறுத்தல் எழுந்தது. ஸ்ரீநகரில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அலுவலகம் எரிக்கப்பட்டது. ஆனால், 1990களின் முற்பகுதியில் அரசு அமைப்புகள் முழுவதுமே தாக்கப்பட்ட நிலையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறிப்பாக இலக்கு வைத்துத் தாக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. கிளர்ச்சியின் தீவிரத்தைவிடவும் பொது நிர்வாகத்தின் குளறுபடிகளே 1991இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு ரத்து செய்யப்பட்டதற்கு முதன்மைக் காரணம் (வன்முறைக் கிளர்ச்சி மிகவும் தீவிரமடைந்த ஆண்டுகளான 2000-01இல் ஜம்மு காஷ்மீரில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது).
1990களின் முற்பகுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சி தேர்தல்களையும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பையும் சீர்குலைத்து நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் ஒன்றிய அரசைச் "சங்கடத்திற்கு உள்ளாக்கியது". எனவே, மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மீண்டும் தொடங்கவும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் கூட்டுச் சித்திரத்தை முன்னிருத்தவும் அரசு உறுதிபூண்டது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தேர்தல் போன்ற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது மதச்சார்பற்ற நவீன ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் படிமத்தை மீட்டெடுப்பதற்கு அவசியமானதாகக் கருதப்பட்டது. எனினும், கிளர்ச்சியும் அதற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளும் (புள்ளிவிவரங்கள் உள்ளிட்ட) பொதுச் சேவைகளை வழங்கும் நிர்வாகச் செயல்பாடுகளைப் பலவீனப்படுத்தியதுடன், பிராந்திய, வகுப்புவாதப் பிளவுகளையும் அதிகரிக்கச்செய்தன. பொதுச் சேவைகளை வழங்குவதில் ஒருமித்த கருத்தை உருவாக்குவது கடினமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த்துவதில் அரசாங்கம் கொண்டிருந்த உறுதி, புள்ளிவிவரங்களின் தரத்தைக் காட்டிலும் அவற்றின் இருப்புக்கே முன்னுரிமை அளித்தது.
2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
விரிவான இந்தப் பின்னணியில்தான் ஹிஸ்புல் முஜாஹிதீன் (எச்எம்) போன்ற ஆயுதமேந்திய தீவிரவாத அமைப்புகள் 2000ஆம் ஆண்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்தன. கணக்கெடுப்பை நடத்த வேண்டாம் என அதிகாரிகளை அவை எச்சரித்தன. தங்கள் பாதுகாப்பு குறித்த தெளிவு ஏற்படும்வரை கணக்கெடுப்புப் பணிகளைத் தவிர்க்குமாறு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஒருவர் சங்கத்தின் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். 2000ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி ஜம்மு காஷ்மீரின் 2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான குறிப்புத் தேதி. பள்ளத்தாக்கு முழுவதிலும் ஜம்முவின் தோடா மாவட்டத்திலும் புறக்கணிப்பு அழைப்பு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கடுமையாகச் சீர்குலைத்ததன் காரணமாக இந்தத் தேதி எல்லா மாவட்டங்களிலும் ஒத்திவைக்கப்பட்டது.
பிரிவினைவாதக் கிளர்ச்சியின் மற்றொரு விளைவு என இந்தப் புறக்கணிப்பு கருதப்பட்டது. ஹிஸ்புல் முஜாஹிதீனின் புறக்கணிப்பு அழைப்பைப் பல்வேறு கோணங்களில் அணுகலாம். முதலாவதாக, காஷ்மீர் மீதான தனது இறையாண்மைக்கான இந்திய அரசின் உரிமைகோரலை இயல்பாக்கும் நடவடிக்கைகளுக்கு இணங்க மறுப்பதாகக் காணலாம். இரண்டாவதாக, ஜம்மு காஷ்மீரின் முஸ்லிம் பெரும்பான்மை நிலையை அழிக்கக்கூடிய மாற்றம் குறித்துப் பள்ளத்தாக்கில் நிலவும் கவலையை இது பிரதிபலிக்கிறது. நீண்டகாலமாக நிலவிவரும் இந்தப் பெருங்கவலைகளைப் புறக்கணிப்பிற்கான காரணமாகக் கொள்ள முடியும் என்றாலும், புறக்கணிப்பைத் தூண்டிய, அதைச் செயல்படுத்திய காரணிகளை இவற்றின் மூலம் புரிந்துகொள்ள இயலாது. இங்குதான் மூன்றாவது கோணம் தேவைப்படுகிறது. காஷ்மீருக்குச் சுதந்திரம் கோரும் குழுக்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே உருவாகிவரும் தொடர்பாடல்களின் நிழலின் கீழ், சுதந்திரம் கோரும் குழுக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நடக்கும் போட்டி 2001ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அரசியல்மயமாக்கலை நன்கு புரிந்துகொள்ள உதவும்.
ஹிஸ்புல் முஜாஹிதீனின் ஒரு பிரிவுக்கும் ஒன்றிய அரசாங்கத்திற்கும் இடையே நேரடித் தொடர்பு ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் கண்டு ஹூரியத் மாநாடு என்னும் அமைப்பு எச்சரிக்கை அடைந்தது. காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் அரசியல் மற்றும் மதம் சார்ந்த அமைப்புகளின் வெளிப்படையான கூட்டணிதான் ஹூரியத் மாநாடு. பள்ளத்தாக்கின் உண்மையான பிரதிநிதி என்று இது தன்னைக் கூறிக்கொண்டது. ஹிஸ்புல் முஜாஹிதீனும் ஹுரியத் மாநாடு அமைப்பும் தங்களிடையே இடையே கடுமையான சொற்களை பரிமாறிக்கொண்டன. போர்நிறுத்தத்திற்கான முயற்சிகளைத் தாக்குவதை விட்டுவிட்டு, "முஸ்லிம்களுக்கு எதிராகத் தீட்டப்படும் சதிகளின்" மீது கவனம் செலுத்துமாறு ஹுரியத்துக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் அறிவுறுத்தியது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்தி ஜம்மு காஷ்மீரின் மக்கள்தொகை விகிதாச்சாரத்தை மாற்றக்கூடிய சாத்தியப்பாடு ஹிஸ்புல் முஜாஹிதீன் குறிப்பிட்ட சதிகளில் ஒன்று. இந்த இரு தரப்பினரும் விரைவிலேயே சமரசத்துக்கு வந்துவிட்டாலும், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அரசியல்மயமாக்கலும் வகுப்புவாதமயமாக்கலும் மாற்ற முடியாதவையாகிவிட்டன.
இந்த நேரத்தில், ஆளும் தேசிய மாநாடு 2002 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஆட்சிக்கு எதிரான மக்கள் உணர்வுகளைச் சமாளிக்க வேண்டியதாகிறது. ஐந்தாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அது அமல்படுத்தியதன் மூலம் இரட்டை அழுத்தங்கள் உருவாயின. ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியது மாநிலத்தின் நிதிநிலையை மோசமாக்கியதுடன் வளர்ச்சிக்கான முன்முயற்சிகளுக்குத் தேவையான நிதி இருப்பையும் சுருக்கிவிட்டது. காஷ்மீருக்குச் சுதந்திரம் கோரும் குழுக்களை மத்திய அரசு அணுகியதும் மாநில அரசின் பாரபட்சமான சுயாதிகார அறிக்கையை நிராகரித்ததும் இவற்றுடன் சேர்ந்துகொண்டது. இவற்றுக்கு மத்தியில் தன் அரசியல் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள தேசிய மாநாடு கட்சி போராடியது. சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியின் சட்டமன்றக் கொறடா உத்தரவை மீறியதற்காக தேசிய மாநாடு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சைஃபுதீன் சோஸ், தன்னை காஷ்மீரின் உண்மையான குரலாகக் காட்டிக்கொள்வதற்காக மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் பாரபட்சமற்ற தன்மையைக் கேள்விக்குட்படுத்தினார். கணக்கெடுப்பைப் புறக்கணிக்குமாறு தேசிய மாநாடு அழைப்பு விடுத்த பிறகு, காஷ்மீரின் மக்கள்தொகை விகிதாச்சாரம் மாற்றப்படும் என்னும் அச்சுறுத்தலை விவரித்து இரண்டு ஊடக அறிக்கைகளை சோஸ் வெளியிட்டார்.
அமைதிக்கான புதிய முயற்சிகளால் உருவாக்கப்பட்ட நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், மைய நீரோட்ட அரசியல் கட்சிகளையும் சுதந்திரம் கோரும் முகாமையும் சேர்ந்த பல்வேறு பிரிவினரும், மாநிலத்தின் மக்கள்தொகை விகிதாச்சாரத்தை மாற்றக்கூடிய அபாயம் குறித்த குற்றச்சாட்டுக்களால் எழுந்த இனவாத உணர்வுகளைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் தங்கள் ஆதரவு தளத்தைப் பாதுகாத்துக்கொள்ள முயன்றனர்.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான நீண்ட முயற்சிகளில் 1980களையும் 1990களையும் நினைவூட்டும் வகையில் மக்கள்தொகை விகிதாச்சாரம் குறித்த சர்ச்சைகள் நிறைந்திருந்தன. எனினும், காஷ்மீருக்குச் சுதந்திரம் கோரும் குழுக்கள் காஷ்மீர் மக்கள்தொகையில் பெரும்பான்மையின் மதிப்பைக் குறைப்பதற்கான முயற்சிகளைத் தடுக்கவும், மாநில சட்டமன்றத்திலும் வளர்ச்சிக்கான நிதியிலும் தங்களுக்கான பங்கைப் பெறுவதற்காகவும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் (தேர்தல்களிலும்) பங்கேற்க அழைப்பு விடுத்தன. இதை திடீர் மாற்றமாகப் பார்க்கக் கூடாது.
முதலாவதாக, 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதுகூட, காஷ்மீரில் உள்ள சில சமூகங்கள் அதற்கு ஆதரவாக இருந்தன. ஜம்மு காஷ்மீரின் மூன்றாவது பெரிய மக்கள்தொகைக் குழுவை உள்ளடக்கிய குஜ்ஜர், பகர்வால் பழங்குடியினர் காஷ்மீரில் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறார்கள். வளர்ச்சியின் செயல்முறையில் ஈடுபடுவதற்கு அவசியமானதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அவர்கள் கருதியதால் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பங்குபெறுவதில் அசாதாரணமான ஆர்வம் காட்டினார்கள். தற்போதைய நடைமுறையின்படி (கணக்கெடுக்கும் காலத்தில் தனிநபர்கள் அவர்கள் பொதுவாக வசிக்கும் இடத்தைச் சேர்ந்தவர்களாகக் கணக்கில் சேர்க்கப்படுகிறார்கள்) தங்கள் சமூகத்தில் நாடோடிகளாக இருக்கும் பிரிவினர் எண்ணிக்கையில் குறைவாகக் கணக்கிடப்படுவது பற்றிய கவலைகளைப் போக்குவதற்கான நடவடிக்கைகளையும் அவர்கள் கோரினார்கள்.
இரண்டாவதாக, 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் மீதான ஹிஸ்புல் முஜாஹிதீனின் எதிர்ப்புகளும் புள்ளியியல் (புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் குறைவாகக் கணக்கிடுவது பற்றிய கவலைகள்), வளர்ச்சி (காஷ்மீர் பெரும்பான்மையை இழந்தால் "முஸ்லிம்களின் வளர்ச்சிக்கான வழிகள்" தடைப்படும் என்ற அச்சம்) ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருந்தன. காஷ்மீரில் இந்திய அரசின் சட்டபூர்வமான உரிமை பற்றிய அதன் பழைய கவலைகளுடன் இவையும் இணைந்துகொண்டன.
மூன்றாவதாக, மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான வன்மையான எதிர்ப்பு, அரசியல்ரீதியாகக் கொந்தளிப்பில் இருந்த இனம்-புவியியல் சார்ந்த பகுதிகளில் பொதுத் திட்டங்களின் பெரும்பங்கைப் பெறும் வகையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்திக்கொள்வது என்பதாக மாறியது. 2001இல் நாகாலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் இந்த அணுகுமுறை காணப்பட்டது. 1990களின் முற்பகுதியில் வடகிழக்கு மாநிலங்களில் தோன்றிய இரட்டை வளர்ச்சி என்னும் கண்ணோட்டத்திலிருந்து இந்த மாற்றத்தைக் காணலாம். ஒருபுறம், பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு, தேசியவாதக் கிளர்ச்சிகள் வளைங்களின் பகிர்மானம் தொடர்பான துணை-தேசியவாத மோதல்களாகச் சுருங்கிவிட்டன. மறுபுறம், பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு அரசு பொருளாதாரச் செயல்பாடுகளிலிருந்து பின்வாங்கியது, பொது நிறுவனங்களின் பாரபட்சமற்ற தன்மையில் அதிக நம்பிக்கை நம்பிக்கையற்ற, பொருளாதார ரீதியாகத் தேக்கநிலையில் உள்ள வடகிழக்குப் பகுதிகளில் பொது வளங்களைக் கைப்பற்றுவதற்கான அவசரத்தைக் கூட்டியது. எனவே, வடகிழக்குப் பகுதிகளில் தரவுப் பற்றாக்குறை அதன் ஜனநாயகத்துடனும் வளர்ச்சிக் குறைபாடுகளுடனும் பின்னிப் பிணைந்துள்ளது.
1991-2011ஆம் ஆண்டுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளைச் சுற்றி மாறிவந்த அரசியலை, மைய நீரோட்ட அரசியல் சக்திகளுக்கும் காஷ்மீருக்குச் சுதந்திரம் கோரும் குழுக்களுக்கும் இடையேயான போட்டியால் விளைந்தது எனக் கூறலாம். பொருளாதார தாராளமயமாக்கலாலும் விதிகளை மாற்றியமைத்த பனிப்போரின் முடிவினாலும் வரையறுக்கப்பட்ட அரசியல்-பொருளாதரக் களம் என்னும் விரிவான பின்புலத்திற்குள் உருவான மாற்றம் இது. மக்கள்தொகை விகிதாச்சாரத்துடன் தொடர்பற்ற இந்த மாற்றங்கள் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களின் தரத்தின் மீதும் பொதுக் கொள்கையின் மீதும் ஏற்படுத்திய தாக்கம் வேறொரு விவாதத்திற்கான கருப்பொருள்.