சுயம் தேடும் செல்ஃபி: ஒரு இந்திய அனுபவம்

02/09/2024
IiT English Page

உலகின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே இந்தியாவிலும் மக்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோனை உயர்த்திப் பிடித்துக்கொண்டு ஏதோவொரு இடம் அல்லது நபருக்கு எதிரிலோ அல்லது அவர்களுடனோ தங்களைப் படம்பிடித்துக்கொள்ளும் காட்சி வழக்கமாகிவிட்டது. டிஜிட்டல் முறையில் தன் படங்களைச் சேமிப்பது, ஏதேனும் புவியியல் அல்லது பண்பாட்டு வெளிக்குள் தன்னைப் பொருத்திக்கொள்வது, தான் அடையாளப்படுத்திக்கொள்ளும் சமூகச் சூழலுடனான உறவுகளைக் குறிப்பது முதலான நோக்கங்களைக் கொண்ட சாதாரணமான செயல்தான் இது. எனினும், நமது கைப்பேசிகளிலும் வன்தட்டுக்களிலும் சேமித்துவைக்கும் இந்தப் படங்கள் சமூக வலைதளங்கள், இணையதளங்கள் ஆகியவற்றின் மூலம் பலரும் கண்டறியக்கூடியவையாகவும் கண்காணிக்கக்கூடிவையாகவும் இருக்கின்றன.

இந்த உலகில் நமக்கான இடத்தை உருவாக்கிக்கொள்ள நாம் விரும்புவதுபோலவே செல்ஃபியும் நம்மை உருவாக்கிக்கொள்ளும் முயற்சிதான். “அன்றாடம்” என்பதன் அடிப்படையான சமூகவியல் பொருளில் அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்ட பல்வேறு டிஜிட்டல் கருவிகளில் ஒன்றுதான் செல்ஃபியும் என்றாலும் அரசு கண்காணிப்பு, குடிமக்களுக்கான நலன்களைத் தருதல் ஆகியவற்றிலிருந்து, சொந்தம் கொண்டாடும் உணர்வையும் பண்பாட்டு உறவுகளையும் உருவாக்குவதுவரை நமது சூழலைக் கட்டமைக்கும் பலவிதமான சக்திகளுக்கான அடிப்படையாகவும் செல்ஃபி அமைகிறது. பிறரால் காணப்படுவதற்கான விழைவு, குறிப்பிட்ட காலம், இடம் ஆகியவற்றுடன் அடையாளம் காணப்படுவதற்கான விருப்பம், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கருவிகளின் மூலம் சமகால வாழ்வில் தங்களுடைய தடத்தைப் பதிக்கும் ஆவல் முதலானவை செல்ஃபி எடுப்பதற்கான உந்துதலாக இருக்கின்றன.

ஒருவர் தன்னைப் படம்பிடித்துக்கொண்டு, பயனர்கள் உருவாக்கும் இணைய உள்ளடக்கத்தின் முடிவற்ற நீரோட்டத்தில் இணைப்பதற்கான இந்த விருப்பத்தைச் சிலர் “செல்ஃபி கலாச்சாரம்” என்று இளக்காரமாகக் குறிப்பிடலாம். ஆனால், மனிதர்கள் தங்கள் சுயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீண்ட வரலாற்றை நினைவுகூரும் ஒரு நிகழ்வாக இணைய வெளி அறிஞர்கள் இதை அங்கீகரிக்கிறார்கள். கண்டுபிடிப்பு, செயல்முறை என இரண்டு விதங்களிலும் செல்ஃபி, நமது காலத்து ஊடக நிகழ்வின் மிகக் கச்சிதமான அடையாளமாகக் கருதப்படுகிறது. செல்ஃபி எடுப்பவர், "ஒரு சில கிளிக்குகளில் அந்தத் தருணத்தில் பிறரால் காணப்படத் தகுதியானவராகத் தன்னை அறிவித்துக்கொள்கிறார்" என்று மீடியம் என்னும் இணையதளத்தில் வெளியாகி அதிகம் பேரால் படிக்கப்பட்ட தன்னுடைய கட்டுரையில் ரேச்சல் சைம் குறிப்பிடுகிறார்.

1.4 பில்லியன் மக்கள் வசிக்கும் இந்தியாவில், பெரும்பாலானவர்கள் சமூக-கலாச்சார அளவிலும் அரசியல் ரீதியாகவும் பிறரது கண்களில் படாமல் இருக்கும் நிலை உள்ளது. மிகக் குறைந்த சதவீத மக்களுக்கே பிறரால் பார்க்கப்படும், கேட்கப்படும், ஏற்றுக்கொள்ளப்படும் உரிமை கிடைக்கிறது. இப்படிப்பட்ட இடத்தில் செல்ஃபி என்பது என்ன? பாலினம், சாதி, வர்க்கம், பிராந்தியம் ஆகியவற்றால் ஓரங்கட்டப்பட்டவர்களின் முகங்களையும் குரல்களையும் புறக்கணித்து, செல்வந்தர்கள், பிரபலமானவர்கள், சக்திவாய்ந்தவர்கள் ஆகியோர்மீது மட்டுமே பிரதான ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன என்பது பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம். கண்கூடான "இந்தியா", கண்ணுக்குத் தெரியாத "பாரதம்" என இரு பிரிவுகள் இருப்பதாகச் சொல்கிறோம். இந்த இரண்டாவது பிரிவு நவீன ஜனநாயகத்தில் முழுமையாகப் பங்கேற்க முடியாதவர்களைக் கொண்டது.

மலிவான ஸ்மார்ட்ஃபோன்கள், தரவுகள் ஆகியவற்றின் அபரிமிதமான பெருக்கம் (இணையத்தில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருப்பதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது) இணையத்தின் ஒரு மூலையில் உரிமை கோருவதற்கும், பிறரின் கவனத்தைப் பெறுவது தனித்துவமான ஒரு சாத்தியமாக இருக்கும் ஒரு இடத்திற்குள் தன்னைத் தானே உள்ளே நுழைத்துக்கொள்வதற்குமான வழிகளை அளித்துள்ளது. ஆனால் மாறிவரும் பல்வேறு சமூகங்களைப் போலவே, இந்தியாவின் சூழலில் பிறரால் காணப்படுவதற்கான ஆசையும் அதற்கான தேடலும் துயரம் நிறைந்த செயலாக இருக்கக்கூடும். குறிப்பாக, தற்போதைய அரசியல் சூழலில் ஒருவருடைய அடையாளத்தின் சில வெளிப்பாடுகளால் கணிசமான ஆபத்து ஏற்படக்கூடும்.

தனிப்பட்ட வெளிப்பாடு என்ற முறையில் செல்ஃபி, மக்கள் திரளிலிருந்து ஒருவர் தன்னை வேறுபடுத்திக் காட்டிக்கொள்வதற்கான வழியை வழங்கும் அதே வேளையில் பிறருடனான இணைப்பையும் குறிக்கிறது. சமூக ஊடக வெளிகள் பெரும்பாலும் பிரபலமானவர்களுக்கும் பணம் செலுத்துபவர்களுக்கும் சாதகமான இயங்குமுறையால் நிர்வகிக்கப்படுகின்றன. என்றாலும், மக்கள் (தனிநபர்களும் குழுக்களும்) தங்களுக்கும் தாமாகவே ஒழுங்கமைத்துக்கொண்ட குழுக்களுக்கும் தெரியும் வகையில் தமக்கான இடங்களை உருவாக்கிக்கொள்ளவும் சமூக ஊடக வெளிகள் அனுமதித்துள்ளன. சமூக ஊடக வெளி செல்ஃபிக்கான இயற்கையான இடமாக உள்ளது. கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகத்தின் முகங்கள் (FACES) போன்ற முன்முயற்சிகள், இந்தியா எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய பொதுவாக நிலவும் கற்பனையை விரிவுபடுத்த முயற்சிக்கின்றன. ஆனால் தனிநபர்கள் செல்ஃபி எடுக்கும் செயல் இதுபோன்ற குடிமைத் திட்டங்களுடன் தொடர்புடையது என்றாலும் வேறுபட்டது. இது தன்னிச்சையான செயல்பாடு, பிரதிநிதித்துவம் ஆகியவை சார்ந்த உணர்வால் பெரிதும் இயக்கப்படுகிறது. தன்னைத் தானே பிரதிநிதித்துவம் செய்துகொள்ளும் செயல்பாட்டின் மீதான கட்டுப்பாட்டை இந்த உணர்வு வழங்குகிறது.

சுய உருவப்படத்தை உருவாக்கும் செயலின் மூலம் ஒருவரின் தன்னிலை, நெருக்கம், இடம்சார்ந்த தன்மை, அதிகாரம் முதலானவை குறித்த கருத்துக்களை டிஜிட்டல் சுய வெளிப்பாடு எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை ஆய்வு செய்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நானும் எனது சகாக்களும் இந்தியத் துணைக்கண்டத்தில் செல்ஃபிகள் வெளிப்படும் சூழல்களை ஆய்வு செய்தோம். தனிப்பட்ட முறையில் எடுக்கப்படுபவை, சமூக-கலாச்சார, அரசியல் அமைப்புகள் மற்றும் கட்டமைப்புகளின் தேவைக்காக எடுக்கப்படுபவை ஆகிய இரு விதமான செல்ஃபிகளையும் ஆய்வுசெய்தோம். படைப்பூக்கத்துடன் கூடிய சுய வெளிப்பாடுகளை முன்வைப்பதற்கும் பரிசோதனை செய்வதற்குமான கருவியாக செல்ஃபி இருக்கிறது. எனினும், டிஜிட்டல் முறையிலும் இணையத்திலும் எடுக்கப்படும் படமானது, படச்சுருளை வைத்து எடுக்கும் புகைப்படத்தைப் போலல்லாமல், மனிதர்களின் உளவியல், நடத்தை சார்ந்த தனிப்பட்ட கூறுகளை அடையாளம் காண உதவும் உயிரியளவியல் (Biometrics) கட்டுப்பாட்டுக்கும் தரவு ஆய்வுக்கும் உட்படக்கூடிய தரவுப் புள்ளியாக உள்ளது. டிஜிட்டல் படம் மாறக்கூடியது. உரியவரின் அனுமதியின்றி இதைத் தரவுத் தளங்களில் சேமித்து, மற்ற வகையான மின்னணுத் தகவல்களுடன் இணைத்துவிடலாம். செல்ஃபிக்களைக் கண்மூடித்தனமாகப் பதிவேற்றம் செய்தல் என்று குறிப்பிடப்படும் செயலினால் ஏற்படக்கூடிய கண்காணிப்புக்கான சாத்தியக்கூறுகளை மானுடப் புவியியல் அறிஞர் அயோனா தத்தா சுட்டிக்காட்டுகிறார். இணையத்தில் எந்த அளவுக்கு அதிக இடத்தை நாம் கோருகிறோமோ, அவ்வளவு அதிகமாகப் பிறர் நம்மைப் பார்க்க அனுமதிக்கிறோம். நாம் கண்காணிக்கப்படுவதற்கான வாய்ப்பும் இதனால் அதிகரிக்கிறது.

எடுப்பதும் பகிர்வதுமாக, செல்ஃபி என்னும் செயல்பாட்டை நாம் இயல்பாக்கம் செய்கிறோம். மாறுதல், உரிமை, நிலைத்தன்மை ஆகிய அம்சங்களில் செல்ஃபியின் தன்மையை இது உறுதியற்றதாக ஆக்குகிறது. நமது சமூக ஊடகக் கணக்குகளில் தனியுரிமைக் கட்டுப்பாடுகளை அமைத்து, கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கிடையில் நமது படங்களைத் தேர்ந்தெடுத்துப் பகிர்கிறோம். அதே சமயம், பொதுத் தளங்களில் நாம் இருப்பதைக் குறிப்பதற்காகச் சுய-படத்தைப் பயன்படுத்துவதற்கான வசதியையும் பெற்றுக்கொள்கிறோம். எடுத்துக்காட்டாக, அரசு அண்மையில் அறிமுகப்படுத்திய டிஜி-யாத்ரா செயலியை எடுத்துக்கொள்வோம். இதன் செயல்பாடுகளின் கூறுகள் புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளன. இது விமான நிலையங்களில் பாதுகாப்புச் சோதனையைச் சுருக்கமாக முடிக்க உதவுகிறது. செல்ஃபியைப் பதிவேற்றி, பயோமெட்ரிக் அடையாள ஆவணமான ஆதாரின் மூலம் அதை அங்கீகரிக்க வசதி செய்கிறது. பாதுகாப்புப் பரிசோதனைக்கான நீண்ட வரிசைகளைத் தவிர்பதற்காகப் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் இதன் மூலம் தங்களுடைய தரவுகள் கசியக்கூடிய ஆபத்தையும் எதிர்கொள்கிறார்கள். அமைப்புகளின் செயல்திறன் எனபது அரிதாக இருக்கும் ஒரு நாட்டில், வசதி கருதி மக்கள் செல்ஃபி போன்ற சாதாரணமானதொரு வழிமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதில் வியப்பொன்றுமில்லை. இந்திய அரசாங்கம் அண்மையில் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டம் வழங்கும் பாதுகாப்புகள் உறுதியற்ற தன்மையோடு இருப்பதால், குடிமக்கள் தங்கள் படங்கள் பயன்படுத்தப்படும் விதங்களைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது.

நமது டிஜிட்டல் இருப்பைப் போலவே செல்ஃபியும் நமது தனிப்பட்ட விவகாரங்கள், அரசியல், பொது வெளி, தனி வெளி ஆகியவை இணையும் புள்ளியில் உள்ளது. எடுக்கப்படும் சூழலைப் பொறுத்து செல்ஃபி பல பாத்திரங்களை ஏற்கலாம். தில்லியில் விளிம்பு நிலையிலுள்ள இளைஞர்கள் பொதுப் பூங்காக்களிலும் நினைவுச் சின்னங்களிலும் இருந்தபடி தங்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். இடங்களை ஆக்கிரமித்தல், அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளுதல், ஆண்பால் தன்னிலையாக உருமாறுவதில் பங்கேற்றல் ஆகியவற்றுக்கான வழியாக அந்த இளைஞர்கள் இதைப் பயன்படுத்துவதை கேப்ரியல் தத்தாத்ரேயன் என்னும் மானுடவியல் அறிஞர் விவரிக்கிறார். செல்ஃபி என்பது வேலை சார்ந்த ஒழுக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் செயலாக்குவதற்குமான கருவியாகவும் இருக்க முடியும் என்று மார்ட்டின் வெப்பும் அவரது இணை ஆசிரியர்களும் குறிப்பிடுகிறார்கள். வீட்டுப் பராமரிப்புச் சேவைகளை வழங்கும் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் தன்னை அடையாளம் காட்டுவதற்காகக் கையுறையும் முகமூடியும் அணிந்துகொண்டு தன் படத்தைப் பதிவேற்ற வேண்டியிருக்கிறது.

ஆயினும், ஒரு செயல்முறையாகவும் தயாரிப்பாகவும் செல்ஃபி ஊக்கமும் விடுதலையும் அளிக்கிறது. நாம் பன்முகத்தன்மை கொண்டவர்களாகவும் பலவாறாகவும் இருக்க உதவுகிறது. நமது நகரம் அல்லது தேசத்தின் வரைபடத்தில் நம்மைப் பொருத்துகிறது. நமது உடல்கள் நம்மைப் பற்றிப் பேசுவதைப் போலவே நமக்காகப் பேசும் பொருள்களையும் இடங்களையும் நோக்கி நம்மை ஈர்க்கிறது. "குடியரசு தினத்தில் அரசியலமைப்புச் சட்டத்தைப் படிப்பது" போன்ற இன்ஸ்டாகிராம் ரீல்கள் தாராளவாத அரசியலை வெளிப்படுத்துவதுபோல, குடும்ப வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படும் பூஜா செல்ஃபிகள் கலாச்சார அடையாளத்திற்கு உரிமை கோருகின்றன. இவை நல்லொழுக்கத்தைக் காட்டிக்கொள்ளும் செயலாகவும் விமர்சிக்கப்படலாம். குடியுரிமைக்கும் பாரம்பரியத்திற்குமான உரிமைகோரல்கள் கடுமையாக எதிர்கொள்ளப்படும் இன்றைய இந்தியக் குடிமை வாழ்வில் இது மிகவும் முக்கியமானது. இன்ஸ்டாகிராமுக்குப் பொருத்தமான இடங்களில் ஒருவரை உறுதியாகப் பொருத்திக்காட்டும் செல்ஃபிகள் அழகியல் உணர்வைக் கட்டமைத்து வெளிப்படுத்துவதாக Digital Expressions of the Self(ie) என்னும் நூலில் ‘Probing “instaworthiness”’ என்னும் பகுதியை எழுதியிருக்கும் அவிஷேக் ரேயும் நேஹா குப்தாவும் குறிப்பிடுகிறார்கள். இங்கே, செல்ஃபி என்பது இணைய வெளியின் பெரும்பகுதியை இயக்கும் முதலாளித்துவ இயந்திரத்திலும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வணிகப் பொருள்களைப் பரிந்துரைதல், நிகழ்வுகளை ஒருங்கிணைப்பவர்களின் செல்வாக்கு, அரசியல் கதையாடல்களை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு உரமளிக்கக்கூடிய வழிகளில் முன்வைக்கப்படும்போது இது முதலாளித்துவ இயந்திரத்தின் ஒரு பகுதியாகிறது.

2023இன் பிற்பகுதியில், நாடு முழுவதும், ரயில் நிலையங்களுக்கும் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களுக்கும் வெளியே (பொதுப் பல்கலைக்கழகங்கள் உட்பட), பிரதமர் நரேந்திர மோடியின் வானளாவிய படங்களுக்கு அருகே, பல “3டி செல்ஃபி பாயிண்ட்கள்” (செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கான இடங்கள்) அமைக்கப்பட்டன. அரசு உத்தரவின் பேரில் இவ்வாறு அமைக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. பல்வேறு தேசிய சாதனைகளைக் குறிக்கும் பல்வேறு பின்னணிகளுடன் பிரதமரின் பெரிய கட்-அவுட்கள், வழிப்போக்கர்களை அங்கே நின்று செல்ஃபி எடுத்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தன. செல்ஃபி எடுத்துக்கொள்வதில் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பயன்படுத்திக்கொண்ட நிகழ்வு இது. 2024ஆம் ஆண்டு ஏப்ரலில், ஹைதராபாத்தில் உள்ள ஒரு கேபிள் பாலத்தில் செல்ஃபி எடுக்க போஸ் கொடுத்த இருவர்மீது வேகமாக வந்த கார் மோதியது. செல்ஃபி மோகம் என்று சொல்லப்படும் பழக்கத்தின் தீமைகள் பற்றிய விவாதத்தை இது தூண்டியது.

செல்ஃபி தனிப்பட்ட சுயத்தை வெளிப்படுத்திக்கொள்வதற்கான சாளரத்தை வழங்குகிறது. ஆனால் அதன் திட்டமிட்ட அல்லது தற்செயலான இடப்பொருத்தத்தின் மூலம், கலாச்சார, குடிமை, சமூக, அரசியல் வாழ்வின் தருணங்களைத் திறக்க வழிசெய்கிறது. மொபைலின் மூலம் இயங்கும் செல்ஃபி என்பது ஒரு அறிக்கையாகவும் தூண்டலாகவும் உள்ளது. விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட இந்திய இளைஞர் ஒருவருக்கு, ஒரு மாலின் ஒளிரும் விளக்குகளுக்கு முன்பு போஸ் கொடுப்பதன் மூலம் தன்னுடைய அடையாளத்தைப் பொது வெளியில் பதிக்க இது உதவுகிறது. அவரை விலக்கிவைக்கும் அனைத்து அம்சங்களையும் கொண்ட பின்னணி அது. பழமைவாதக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ண்ணுக்கு வசீகரமும் தடைசெய்யப்பட்ட ஒன்றைச் செய்யும் கிளர்ச்சியும் கொண்ட உணர்வுடன் தன்னைப் படம்பிடித்துக் கொள்ளுவதற்கான சட்டகத்தை இது அளிக்கிறது. ஒரு தொழிலாளி, நாட்டின் தலைவரின் உருவத்துடன் தன்னை இணைத்துக்கொள்வதற்காகத் தனது தொலைபேசியை உயrத்தும்போது அவர் பெரிய ஆறுதலையும் தன்னுடைய குடியுரிமை தொடர்பான பெருமிதத்தையும் உணர்கிறார். அல்லது அவ்வாறு நம்புகிறார்.

சயனிகா சக்சேனா

Author

சயனிகா சக்சேனா பிக் டெக் அமைப்பின் உளவுத்துறை ஆலோசகர். அவர் முன்வைப்பவை அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள். 

(Tamil Translation by Aravindan D.I.) 
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்