வசிப்பிட நீதிக்கான புதிய மொழி?

03/07/2023
IiT English Page

நீங்கள் இந்தியாவில் செய்திகளைத் தொடர்ந்து கவனிப்பவராக இருந்தால், தற்போது நடந்துவரும் கட்டிட இடிப்புகளை நீங்கள் தவறவிட்டிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. பெரும்பான்மையின் பார்வையிலான "நீதி"யை வழங்குவதற்காக அரசு கட்டிட இடிப்புகளைப் இடிபாடுகளைப் பயன்படுத்தும் போக்கு 2022இல் வேகமெடுத்தது. உத்தரப் பிரதேசத்தில் அவை ஒரு குறிப்பிட்ட வடிவத்தை எடுத்தன. அதே வழிமுறைகள் தில்லி, உத்தராகண்ட், ஜம்மு, காஷ்மீர், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருபுறம், "சட்ட விரோதக் கட்டுமானம்" என்ற குற்றச்சாட்டை முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக நேரடியாகப் பயன்படுத்தி அவர்களின் உரிமைகள் மேலும் பறிக்கப்படுகின்றன. மறுபுறம், உள்கட்டமைப்பு வளர்ச்சியின் பொறுப்பற்ற வேகம் நகர்ப்புறத்தின் பசுமையையும் நகர்ப்புற ஏழைகளையும் அச்சுறுத்துகிறது.

ஆனால், இந்த இடிப்புகள் நரேந்திர மோடி ஆட்சியில் தொடங்கவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். நவீன நகர்ப்புறத் திட்டமிடல் உருவானதிலிருந்தே, அழகற்றதாகக் கருதப்படும் கட்டுமானங்களும் திட்டமிடுபவர்களின் திட்டங்களுக்கு மாறாக உள்ளவையும் இடிக்கப்படுகின்றன. பாரிஸில் உள்ள பரோன் ஹவுஸ்மான் முதல் தில்லியில் உள்ள ஜக்மோகன்வரை, "திட்டத்தின்" அடிப்படையில் நகரத்தை மறுவுருவாக்கம் செய்வதற்கான இரக்கமற்ற முயற்சிகள் அனைத்தும் எப்போதும் மரணத்தையும் அழிவையுமே ஏற்படுத்துகின்றன.

வசிப்பிடம் சார்ந்த பிரச்சினை இந்தியாவில் ஏன் காலூன்றவில்லை? இதுபோன்ற இடிப்பு ஜஹாங்கிர்புரியில் முதலில் நிகழ்ந்தபோது அது வகுப்புவாத நடவடிக்கையாகக் கருதப்பட்டது. இந்தச் சம்பவம் குடிமைச் சமூகத்தின் கோபத்தைத் தூண்டியது. ஆனால் பல மாதங்கள் கடந்த பின்னும் இந்த இடிப்புகள் குறையவில்லை. தில்லியில் உள்ள துக்ளகாபாதிலும் அஸ்ஸாமின் சோனித்பூரிலும் வசிப்பவர்கள் இடிப்புகளின் விளைவுகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இடப்பெயர்வை எதிர்கொள்ளும் தொழிலாளர் வர்க்கம் ஏழை முஸ்லிம்கள் மட்டுமல்ல. இடிப்புகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவரும் நிலையில், கடந்த ஆண்டு வெடித்த பொதுமக்களின் கோபம் தற்போது மிகவும் அடங்கி, மறைந்துவிட்டதாகத் தெரிகிறது. தொற்றுநோய்க் காலத்துப் பொதுமுடக்கத்தின் தொடக்கத்தில் நூறாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்வதற்காகக் கால்நடையாகச் சாலையில் செல்லும் காட்சி திகிலூட்டுவதாக இருந்தது. அதே நேரத்தில் குழப்பமாகவும் இருந்தது. பொதுமுடக்கத்தின்போது அமெரிக்க நகரங்களில் வாடகையை ரத்துசெய்வதற்கான போராட்டங்கள் எழுந்தன. ஆனால், வேலை இழப்புகளால் பாதிக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்தினர் வாடகையை ரத்து செய்ய வேண்டியதன் அவசியத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. கொள்கை வகுப்பாளர்கள் முதல் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள்வரையிலான பரந்துபட்ட குடிமைச் சமூகம், மறுவாழ்வுத் திட்டங்கள், நலப்பணிகள் ஆகியவற்றுக்கு அப்பால் எதுவும் பேசவில்லை.

இப்படிச் சொல்வதன் நோக்கம் வசிப்பிட உரிமைக்காகப் போராடும் சமூக ஆர்வலர்களின் பணியை விமர்சிப்பதல்ல. கடினமான சூழலில் அவர்கள் பணிபுரிகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்வது. இந்தியாவில் வசிப்பிட உரிமைகள் அரசியலமைப்பு உரிமையாக ஒருபோதும் ஒப்புக் கொள்ளப்படவில்லை. (1980களில், வசிப்பிட உரிமைகளுக்கான தேசிய இயக்கம் என்னும் அமைப்பின் கீழ் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து வசிப்பிட உரிமைகளுக்கான மசோதாவை உருவாக்குவதற்கான பலவீனமான முயற்சி மேற்கொண்டதைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை). வசிப்பிட உரிமைகளுக்கான சொல்லாடல்களை உருவாக்குவதில் நீதிமன்றங்களும் போதிய அளவு சாதகமான முறையில் நடந்துகொள்ளவில்லை. கட்டிடங்களின் மீதான தாக்குதல்கள் மேலும் பல இடங்களிலும் பரவிவருவதால், மக்களை ஒன்று திரட்டிப் போராடுவது கடினமாகிவருகிறது. அரசு மட்டுமே அதிகாரத்தின் ஒரே மையமாக இல்லை என்பதும் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. இந்தியாவில் வசிப்பிட உரிமைகள் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக மாற்ற முடியவில்லை. 1968இல் நடைபெற்ற பாரிஸ் இயக்கத்தின்போது பிரெஞ்சு தத்துவவியளார் ஹென்றி லெபெப்வ்ரே "நகரத்திற்கான உரிமை" என்னும் கருத்தை முன்வைத்தார்.  உலகெங்கிலும் உள்ள நகர்ப்புற இயக்கங்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றாக இது ஆகியிருக்கிறது. "உரிமைகள்" என்றால் என்ன என்பதை உள்ளூர்ச் சூழல்கள் தீர்மானிக்க இந்தக் கருத்து வழிவகுக்கிறது. இதன் விளைவாக, மலிவு விலையில் வீடுகள், உரிய ஆவணங்களற்ற தொழிலாளர்களுக்கான உரிமைகள் உள்ளிட்ட பலவற்றைக் கோருவதற்கு "நகரத்திற்கான உரிமை" என்னும் கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது. "நகரத்திற்கான உரிமை" இந்தியச் சூழலில் ஐ.நா வாழ்விட உரிமை அமைப்பாலும் (UN Habitat) ஆக்‌ஷன் எய்ட் (Action Aid) போன்ற அமைப்புகளாலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் "நகரத்திற்கான உரிமை"க்கும் அதன் நீட்சியாக வீட்டு வசதிக்குமான கோரிக்கை அரசின் திறன், பொறுப்புக்கூறல் ஆகியவற்றுடன் மிக முக்கியமாகத் தனிப்பட்ட முறையிலான உரிமை ஆகியவற்றின் வாயிலாக வெளிப்படத் தொடங்குகிறது.

இந்த வேறுபாட்டின் வரலாற்று வேர்கள் என்ன? அமெரிக்காவில் வீட்டு வசதி என்னும் பிரச்சினை 1960களிலிருந்து குடிமை உரிமைகள் இயக்கத்தின் மையமாக இருந்துவருகிறது. இந்தியாவில் உருவான அரசியல் இயக்கங்கள் வீட்டு வசதியை அரசியல் விவகாரமாகக் கருதவில்லை. வீட்டு வசதி இந்தியாவில் தொழிலாளர், சாதி ஆகிய இரண்டின் மையமாக உள்ளது. தொழிலாளர் இயக்கங்களும் சாதி இயக்கங்களும் உழைக்கும் வர்க்கத்தினரின் வசிப்பிடங்களைப் “பணிக்கான இடம்” என்பதாகவே பார்த்துவருகின்றன. இயக்கத்தின் “மையப் பொருளாக” அது இல்லை. 1970களில் தொழிலாளர் இயக்கங்களும் தலித் இயக்கங்களும் வெவ்வேறு அளவுகளில் வீட்டு வசதியின்பால் ஓரளவு கவனம் செலுத்தியதுபோன்ற சில நிகழ்வுகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், வீட்டு வசதிப் பிரச்சினை அரசியல் களத்திற்கு வெளியிலேயே இருக்கிறது. எனவே, இந்தியாவில் வீட்டு வசதிப் பிரச்சினை, சமூக இயக்கங்களின் பிளவுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது. சமூக நீதி அரங்கில் சர்வதேச நிறுவனங்கள் நுழைந்ததில் அரசியல் நிலப்பரப்பு மாறியிருந்த 1990களில் வீட்டு வசதிப் பிரச்சினை இந்தியாவில் தலையெடுத்தது. "அனைவருக்கும் வீட்டு வசதி உரிமை" பற்றிய தெளிவான சொல்லாடல் இல்லாததால் வீட்டு வசதி என்பது அரசின் கொள்கை சார்ந்த விவகாரமாகக் குறுக்கப்பட்டது. பிறகு இது எண்களில் அளவிடப்பட்டு வரைபடங்களில் பட்டியலிடப்பட்ட மற்றொரு அரசாங்கமயமாக்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாக மாறிவிட்டது. "நகர்ப்புற ஏழைகள்" பற்றிய தெளிவான அரசியல் கட்டமைப்பு இல்லாத நிலையில் இவர்களின் உருவம் அடையாளமும் தெளிவும் அற்றதாக ஆனது. இந்த நிலை இந்தியாவில் வீட்டு வசதிப் பிரச்சினையை அரசியலாக்குவதற்கு உதவிகரமாக அமையவில்லை.

கொள்கை வகுப்பைப் பிரதானமாகக் கொண்டு அரசாங்கமயப்படுத்தப்பட்ட இந்தப் போக்கிற்கான எதிர்ப்பு, ஏழைகள் நகர்ப்புறங்களில் சட்ட விரோதமாகக் குடியேறுவதன் மூலம் நடக்கிறது. நகர்ப்புறக் குடியேற்றம் அல்லது தன்னிச்சையான கட்டுமானம் எனப் பரவலாகப் புரிந்துகொள்ளப்படும் போக்கு இது. இந்தச் செயல்பாட்டை ஆதரிப்பவர்கள், நகர்ப்புறத் திட்டங்கள், கொள்கைகளின் வரம்பெல்லைக்கு வெளியிலேயே ஏழைகள் இருப்பதாக வாதிடுகிறார்கள். ஏழைகளின் அமைதியான இந்த அத்துமீறல்கள் சட்ட விரோதமானவை எனக் கருதப்பட்டாலும், இவை எதிர்ப்புச் செயலாக மட்டுமின்றி, நகரங்களில் உள்ள வீட்டுப் பிரச்சனைக்கான ஒரே நடைமுறைத் தீர்வாகவும் இருக்கின்றன. அரசு மலிவான விலையில், போதிய அளவில், பொருத்தமான வீடுகளை ஏழைகளுக்கு வழங்குவது சாத்தியமில்லாத நிலையில், குடிசைக் குடியிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அவற்றை ஒழுங்குபடுத்துவதும் மேம்படுத்துவதும் சிறந்த வழியாக இருக்கும்.

நியாயமான இந்த வாதத்தை வசிப்பிட உரிமை ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக முன்வைத்துவருகிறார்கள். கொள்கை வகுப்புடன் தொடர்புகொண்டிருந்தாலும், இந்த நிலைப்பாட்டை மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வாகக் கருத அரசு மறுத்துவிட்டது. ஆனால், தற்போது மக்களை அவர்கள் வசிப்பிடத்திலிருந்து பலவந்தமாக அப்புறப்படுத்துவதைப் பார்க்கையில், வீட்டு வசதி உரிமைகளுக்கான குரல் அரசியல் ரீதியான மொழியில் முன்வைக்கப்படாததால் பலவீனமடைவதாகத் தோன்றுகிறது. இத்தகைய அப்புறப்படுத்தல்களுக்குப் பரவலான எதிர்ப்பு எழவில்லை. பலவீனமான முறையீடுகள், பெரும்பாலும் பணிந்துபோகுதல் என்பவை இவர்களுக்கான தெளிவான அரசியல் மொழி இல்லாததன் பிரதிபலிப்பாகும். அமைதியான எதிர்ப்பு என்பது பயனுள்ள உத்தியாக இருந்துவந்தாலும் அரசும் மூலதன சக்திகளும் பிரயோகிக்கும் வன்முறை புதிய உச்சத்தை எட்டியுள்ள சூழ்நிலைகளில் அமைதியான எதிர்ப்புகளால் தீவிரமான விமர்சனத்தை முன்வைக்க முடியவில்லை. இடிப்புகளும் முடக்கங்களும் அப்பட்டமான உரிமை மீறல் எனக் கூறுவதற்கு அத்தகைய தீவிரமான விமர்சனக் குரலைத் தவிர வேறு வழி இல்லை.

அரசு ஆவேசமான அதிரடிப் போக்கில் இறங்கியிருப்பதால் இந்தியாவில் பெரும்பாலான அரசியல் இயக்கங்கள் கடந்த இருபது ஆண்டுகளாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளன. பெண்ணிய இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்கள்  போகும் திசையறியாத தவிப்புடன் சட்டத்துடனும் அரசுடனுமான தங்கள் உறவை மறுபரிசீலனை செய்கின்றன. இந்தக் கட்டத்தில், தொழிலாளர், வர்க்கம், சாதி, பாலினம் உள்ளிட்ட பல்வேறு அக்கறைகளை ஒன்றிணைக்கக்கூடிய நீதிக்கான அர்த்தமுள்ள மொழியில் எதிர்ப்புச் சொல்லாடலை உருவாக்குவதற்கான மொழியை உருவாக்குவதை விடவும் முக்கியமானது எதுவுமில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான அமைப்புசார் வன்முறைகளுக்கு எதிராகப் பேசுவதற்கும், தொழிலாளர் உரிமைகள், பாலின நீதி ஆகியவை குறித்த அக்கறைகளை முன்னிலைப்படுத்துவதற்கும் வசிப்பிட உரிமைகளுக்கான அரசியல் ரீதியான கோரிக்கை தேவைப்படுகிறது. எனவே, வசிப்பிடத்திற்கான நீதியால் இந்தியாவில் சமூக இயக்கங்களுக்குத் தேவையான இடத்தையும் மொழியையும் வழங்க முடியும். இது இந்தக் குறிப்பிட்ட தருணத்தில் புதிய அரசியல் எதிர்காலத்தை மறுவுருவாக்கம் செய்யக்கூடும்.

சுஷ்மிதா பதி

Author

சுஷ்மிதா பதி பெங்களூரில் உள்ள இந்திய தேசிய சட்டப் பள்ளியின் அரசியல் அறிவியல் உதவிப் பேராசிரியராக உள்ளார்.

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்