இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரமாகவும் திறந்த முறையிலும் (Free and Open Indo-Pacific - FOIP) அமைவதற்கான தனது நாட்டின் புதிய திட்டத்தைப் புதுதில்லியில் விவரித்த ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, "இதை (திட்டத்தை) அடைவதில் இந்தியாவின் பங்கு தவிர்க்க முடியாதது" என்று அறிவித்தார். மார்ச் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவர் முன்வைத்த கருத்துக்கள் தற்போதைய உலகளாவிய அமைப்பில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் "மிகவும் தனித்துவமான நிலை”யையும் அதைப் பராமரித்த்துப் பலப்படுத்துவதில் அவர்களின் "பெரிய பொறுப்"பையும் அடிக்கோடிட்டுக் காட்டின. நான்கு நாடுகள் கொண்ட குவாட் அமைப்பில் ஆஸ்திரேலியா, அமெரிக்காவுடன் இணைந்த இந்த இரு நாடுகளும் பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தங்கள் கூட்டுப் பங்களிப்பை முன்னெடுத்துள்ளன.
தற்போதைய இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையின் மூன்று முன்னுரிமைகளான பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, அந்தஸ்து ஆகியவற்றில் முன்னேற்றத்தின் அடிப்படையில் இன்று இந்தியாவின் மூலோபாயம் தொடர்பான முக்கியப் பங்காளிகளில் ஜப்பானும் ஒன்று. நாட்டின் தலைவர் மேற்கொள்ளும் பயணங்களை அந்நாடு பயணிக்க விரும்பும் பாதையின் குறிப்பானாகக் கருதினால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் ஆட்சிக் காலத்தில் (2014-19) அதிகம் பயணித்த நாடு ஜப்பான் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டாவது ஆட்சிக் காலத்தின்போது, அண்மையில் மே மாதம் ஹிரோஷிமாவில் நடந்த ஜி-7 உச்சிமாநாடு உட்பட, மூன்று முறை அவர் ஜப்பானுக்குப் போயிருக்கிறார்.
மோடி, தன்னுடைய முன்னோடிகளைப் போலவே, இருதரப்பு (இந்தியா-ஜப்பான்), முத்தரப்பு (இந்தியா-ஜப்பான்-அமெரிக்கா; இந்தியா-ஜப்பான்-ஆஸ்திரேலியா), நாற்கரம் (இந்தியா-ஜப்பான்- அமெரிக்கா-ஆஸ்திரேலியா) என ஒன்றுடன் ஒன்று இணைந்த மூலோபாயக் கூட்டாண்மைகளின் மூலம் இந்தியா-ஜப்பான் உறவைக் கட்டமைத்துள்ளார். இந்தக் கூட்டாண்மை நீடித்திருக்கும் ஒன்றாகத் தோன்றுவது ஏன் என்பதையும் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கூட்டாண்மையாக இது மதிப்பிடப்படுவது ஏன் என்பதையும் இந்த விரிவான பின்புலத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.
கூட்டு அல்ல; பிரச்சினை அடிப்படையிலான கூட்டாண்மை
பனிப்போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கிற்குள் இந்தியா தனது நலன்களை எவ்வாறு முன்னெடுக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல், இந்திய-ஜப்பான் உறவையும் அதன் நீட்சியான குவாட் குழுவையும் ஆராய முடியாது. மூலோபாய ரீதியிலான தன்னாட்சிக் கொள்கை, இந்தக் கொள்கையைப் பாதுகாப்பதற்கான மூலோபாய ரீதியிலான கூட்டாண்மைகளை (கூட்டணிகள் அல்ல) உருவாக்குதல், மூலோபாய விஷயத்தில் மிகத் தெளிவாக இந்தியா சந்திக்கும் சவாலை – அதாவது சீனா – எதிர்கொள்வதற்கான வலைப்பின்னலை (சுய உதவிக்கு அப்பாற்பட்டு) உருவாக்குதல் ஆகியவை இந்தியாவின் அணுகுமுறையை வரையறுக்கும் முக்கிய அம்சங்களில் சில.
விழுமியங்களின் அடிப்படையிலான கூட்டமைப்புகள் அல்லாமல் பிரச்சினை அடிப்படையிலான அணிசேரல் இந்தியாவின் மூலோபாயக் கூட்டாண்மைகளின் அடிப்படையாக அமைந்துள்ளது. இத்தகைய கூட்டாண்மைகளில் முக்கியமானவற்றில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜப்பானுடனான கூட்டாண்மையும் ஒன்று. தற்போதைய உலகச் சூழலில் இது அசாதாரணமான நிலைப்பாடு அல்ல. "நாங்கள் (ஜப்பான்) விழுமியங்களைத் திணிக்கவில்லை" என்று புதுதில்லியில் ஜப்பான் பிரதமர் கிஷிடா கூறியது இதை உறுதிப்படுத்துகிறது. அதன் விளைவாக ஆர்வங்களின் (பாதுகாப்பு, பொருளாதார வளம்) அடிப்படையிலும் இடம் சார்ந்ததாகவும் (பொதுவான பகுதிகள், புவிசார் அரசியல் கட்டமைப்பு), அமைப்புகளில் உறுப்பினராக இருப்பதன் மூலமாகவும் (எ.கா. குவாட், பிரிக்ஸ், எஸ்சிஓ) பிரச்சினையின் அடிப்படையிலும் (கடல், ஆற்றல், காலநிலை) உறவுகள் அமைகின்றன. கூட்டாண்மை என்பது கொள்கை வகுப்பாளர்களுக்கும் தலைமைத்துவத்திற்கும் ஒரே மாதிரி அமைந்த விரைந்து செயல்படக்கூடிய ஏற்பாடுகளாகும். இது உலக ஒழுங்கைத் தொடர் இயக்கமாக வழிநடத்துவதற்கு மிகவும் தேவையான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. அதன் விளைவாக உருவாகும் வலைப்பின்னல்கள் மூலோபாயத்தைப் பிரதிபலிக்கின்றன. இதில் இருதரப்பு, சிறுதரப்பு (எ.கா. முத்தரப்பு, நாற்கர), பலதரப்பு வடிவங்கள் ஆகியவை ஒன்றையொன்று வலுப்படுத்தக்கூடிய சக்திகளாக மாறும்.
வலைப்பின்னல்களை உருவாக்குவதன் மூலம் "சீனாவால் எழும் சவா”லுக்கு இந்தியா ஆற்றும் எதிர்வினை, இராணுவ, பொருளாதாரப் பரிமாணங்களுக்கு அழுத்தமளிக்கும் வகையில் பொதுவான கூறுகளைக் கொண்ட மூலோபாயக் கூட்டாண்மைகளின் வலைப்பின்னலை உள்ளடக்கியது. அண்டை நாடுகளுக்கு எதிரான மூலோபாயத் தடுப்பணையை வலுப்படுத்துவதையும் சீனப் பொருளாதாரத்தைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் இலக்காகக் கொண்ட அணுகுமுறை இது. ஜப்பானுடனான இந்தியாவின் தொடர்புகள் இந்த வலைப்பின்னலின் முக்கிய அங்கமாகவும், அதைத் தொடர்ந்து, பனிப்போரின் முடிவுக்குப் பின் மூலோபாய ரீதியிலான இந்தியாவின் பெரும் திட்டத்தின் முக்கிய அங்கமாகவும் அமைகின்றன.
இந்திய-ஜப்பான் கூட்டாண்மையைப் புரிந்துகொள்ளுதல்
பொருளாதார ரீதியான நலன்களும் அக்கம்பக்கத்து நாடுகளின் மீது சீனாவின் கால் தடங்கள் பதிவது குறித்த அச்சங்களும் பனிப்போருக்குப் பிந்தைய காலத்தில் இந்தியாவையும் ஜப்பானையும் நெருக்கமாகக் கொண்டுவந்தன. கடந்த பத்தாண்டுகளில் ஜப்பான் அமைதிவாதத்திலிருந்து விலகித் தன்னுடைய தேசியப் பாதுகாப்பு நிலைப்பாட்டை மறுவடிவமைத்துக்கொண்டது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் நிலை உயர்ந்துவந்த்து. இவை இரண்டும் சேர்ந்து இரண்டு அரசாங்கங்களுக்குமான வாய்ப்புகளை வழங்கின. இரு நாடுகளுக்குமிடையே பெரிய வேறுபாடுகள் இல்லை என்றாலும் பனிப்போரின்போது இவை தள்ளியே இருந்தன. சோவியத் யூனியனுடனான இந்தியாவின் நட்பு, அமெரிக்காவுடனும் அதன் கூட்டணி நாடுகளுடனும் (ஜப்பான் உட்பட) அதற்கு இருந்த சங்கடங்கள், டோக்கியோவின் ஏற்றுமதி சார்ந்த அணுகுமுறைக்கு மாறான அதன் சுய சார்புப் பொருளாதாரப் பார்வை ஆகியவை இந்த இடைவெளிக்கான முக்கியக் காரணங்களாக இருந்தன. சோவியத் யூனியன் சிதறுண்டது, 1993இல் இந்தியா மிகவும் கடுமையான அன்னியச் செலாவணிப் பற்றாக்குறை நெருக்கடியை எதிர்கொண்டபோது வெற்றிகரமான ஆசியப் பொருளாதாரங்களுடன் இணைந்து செயல்படும் நோக்கில் இந்தியப் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் "கிழக்கு நோக்கிய" கவனத்தை முன்னெடுத்தது ஆகியவற்றால் இந்த நிலை மாறியது. 1998இல் இந்தியா மேற்கொண்ட அணுசக்திச் சோதனைகளை விமர்சித்த ஜப்பான் இந்தியாமீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்தக் காலகட்டத்தில் இந்திய ஜப்பான் உறவு பின்னடைவைக் கண்டது. இந்தச் சிறிய காலகட்டம் நீங்கலாக இந்த உறவுப் பாதை நேர்மறையானதாகவே இருந்தது. 2018இல் மோடி, ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரின் கீழ் இந்த உறவு "மூலோபயம் சார்ந்த, உலகளாவிய சிறப்புக் கூட்டாண்மை"யாக உயர்ந்தது.
ஜப்பானுக்கும் இந்தியாவுக்குமிடையேயான இருதரப்பு உறவுகளால் பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, இந்தியாவுக்கான அந்தஸ்து ஆகியவற்றில் கண்கூடான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சீன-இந்திய உறவுகளில் ஏற்பட்ட மோசமான சரிவே மோடி அரசாங்கத்தை ஜப்பானுக்கு நெருக்கமாகக் கொண்டுசென்றதில் முதன்மையான காரணி. ஜூலை 2020இல் பெருந்தொற்றுக்கு மத்தியில் கால்வானில் ஏற்பட்ட மோதல்கள் சீனாவை நோக்கிய இந்தியாவின் கணக்கீட்டில் அதுவரை இல்லாத மாற்றத்தை ஏற்படுத்தின. "நடப்பு நிலைமையை மாற்றுவதற்கான தன்னிச்சையான முயற்சிகளை" எதிர்ப்பதன் மூலம் இந்தியாவிற்கான தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்த ஜப்பான் போன்ற நட்பு நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் சீனாவுக்கு எதிரான மூலோபாயத் தடுப்பணையை வலுப்படுத்த இந்தியா விரைவாகச் செயல்பட்டது. இரு நாடுகளிக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பில் திறன் மேம்பாடு முக்கிய கவனம் பெற்றிருக்கிறது. நேரடி அந்நிய முதலீடு, இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குத் தனது வெளிநாட்டு மேம்பாட்டு உதவித் திட்டத்தின் (ODA) மூலம் கடன் வழங்குதல் ஆகியவை இதில் முதலிடத்தில் இருக்கின்றன.
2019இல் இந்தியா அமெரிக்காவுடன் 2+2 என்ற அளவில் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கான கட்டமைப்பை உருவாக்கியது. இரு நாடுகளின் வெளியுறவு, பாதுகாப்பு அகிய துறைகளின் அமைச்சர்கள் ஆண்டுதோறும் சந்திப்பதற்கான கட்டமைப்பு இது. அடுத்து ஜப்பானுடன் இத்தகைய கட்டமைப்பை உருவாக்கியது. இந்தப் பேச்சுவார்த்தைகளுடன், இராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் கூட்டுப் பயிற்சிகள், இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பும் தொடங்கின. பாதுகாப்புக் கருவிகளையும் தொழில்நுட்பத்தையும் பரிமாறிக்கொள்வது தொடர்பான ஒப்பந்தமும் (2015) இந்த ஒத்துழைப்பில் அடக்கம். பின்புல அமைப்புகள் சார்ந்த பரஸ்பர ஆதரவு, ஆயுதங்கள், உணவு, போக்குவரத்துச் சேவைகள் முதலானவற்றைப் பகிர்ந்துகொள்வதற்காக 2020இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் (Acquisition and Cross-Servicing Agreement) இவை அனைத்தும் பாதுகாப்புச் செயல்திட்டம் வேகமாக முன்னேறுவதைக் காட்டுகின்றன. கூட்டாளி நாடுகளின் "பாதுகாப்புத் திறன்களையும் போரைத் தடுக்கும் திறன்களையும்" மேம்படுத்துவதற்காகப் புதிய வெளிநாட்டுப் பாதுகாப்பு உதவி (OSA) என்னும் திட்டத்துடன் வெளிநாட்டு மேம்பாட்டு உதவித் திட்டத்தை (ODA) விரிவுபடுத்துவதற்கான கிஷிடா அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பு இந்தியா விரும்பக்கூடிய வகையில் அமைந்தது.
அணு வினியோகக் குழு (2008) போன்ற மதிப்புமிக்க குழுக்களில் இந்தியா நுழைவதற்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்தது, பிராந்திய அளவிலும் இந்தோ-பசிபிக் நிறுவனங்களிலும் இரு நாடுகளும் இணைந்து கொள்கை ஒருங்கிணைப்புச் செயல்பாடுகளில் ஈடுபடுதல் ஆகியவை இந்திய நிலையின் பொருள் சாராத அம்சங்களை மேம்படுத்துகின்றன. உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே வேறுபாடுகள் (ரஷ்யாவைக் கண்டிப்பதில் இந்தியாவின் தயக்கம்) இருந்தபோதிலும், சீனா குறித்த பொதுவான கவலைகள் இந்திய-ஜப்பான் உறவை முன்னெடுத்துச் செல்கின்றன. இது அண்மை வருங்காலத்தில் மாற வாய்ப்பில்லை. இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தைப் பாதுகாக்கச் சில கருத்து வேற்றுமைகளை இரு நாடுகளுமே ஏற்றுக்கொள்கின்றன. இந்த உறவின் நன்மைகள் அவர்களின் முத்தரப்பு, நாற்கர வலைப்பின்னல்களுக்கு நீட்சி அடைகின்றன.
முத்தரப்புக் கூட்டாண்மைகளும் குவாட் அமைப்பும்
பழைய கூட்டணிகளின் பலவீனம், பெரிய பலதரப்புக் கட்டமைப்புகளின் பயனற்ற தன்மை போன்ற காரணங்களால் அரசுகள் ஒரு சில நாடுகளைமட்டுமே கொண்ட சிறுதரப்பு ஏற்பாடுகளைப் பயனுள்ளவையாகக் கருதுகின்றன. இழப்புகளைக் குறைத்தல், இராணுவம் சாராத வழிமுறைகளின் மூலம் வலுவான நாடுகளுக்கும் வலுக் குறைந்த நாடுகளுக்கும் இடையிலான சமநிலையை ஏற்படுத்துதல் (soft-balancing) அல்லது தத்தமது நிலைகளைக் கூட்டாண்மையில் உள்ள நாடுகளின் மூலம் சிறந்த முறையில் ஒருங்கிணைப்பதில் இந்தச் சிறுதரப்புக் கூட்டமைப்புகள் உதவுகின்றன. இந்தியாவும் ஜப்பானும் அமெரிக்காவோடு அல்லது ஆஸ்திரேலியாவோடு இணைந்த முத்தரப்பு அமைப்பில், அதாவது இந்தியா-ஜப்பான்-அமெரிக்கா (2011 முதல்), இந்தியா-ஜப்பான்-ஆஸ்திரேலியா (2015 முதல்) என்னும் கட்டமைப்பிற்குள் செயலாற்றுவதன் மூலம் தங்களுடைய தற்போதைய கூட்டணிகளை வலுப்படுத்திக்கொள்கின்றன. உலகம் பற்றிய இந்தியாவின் கண்ணோட்டம், தன்னுடைய நலன்களுக்கு எதிரான அம்சங்களைத் தவிர்ப்பதுடன் சீனாவை வெளிப்படையாகப் பகைத்துக்கொள்ளாமல் இருப்பது என்பதாக ஆன சமயத்தில் இந்த இரு நாடுகளும் இத்தகைய முயற்சியைத் தொடங்கின. இந்தியா-ஜப்பான்-அமெரிக்க முத்தரப்புக் கூட்டாண்மை பிராந்தியப் பொருளாதாரத் திறன் மேம்பாட்டிற்கான மாற்றுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியா-ஜப்பான்-ஆஸ்திரேலியா இடையிலான உரையாடல் இந்தோ-பசிபிக் பகுதியில் விநியோகச் சங்கிலியைக் கட்டமைக்கும் முயற்சிகளுக்குப் பெருந்தொற்றால் ஏற்பட்ட இடையூறுகளை நிவர்த்தி செய்ய முயல்கிறது. எனவே, முத்தரப்பு ஏற்பாடுகள், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவிற்குக் கூடுதல் ஆதாயங்களைக் கொண்டுவரும் நாற்கர மன்றத்தின் (அதாவது குவாட்) செயல்பாடுகளுக்கான முதல் படியாகும்.
2017இல் தொடங்கிய குவாடின் இரண்டாவது இன்னிங்ஸிலிருந்து அதன் நான்கு உறுப்பினர்களும் "விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கை"ச் சிறுமைப்படுத்தும் அதிரடிப் போக்குக் கொண்ட சீனாவைச் சமாளிக்கும் யோசனையையை மையமாகக் கொண்டு வலுவாக ஒன்றிணைந்துள்ளனர். இந்நாடுகள் ஒருமித்த வகையில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரமாகவும் திறந்த முறையிலும் இருக்க வேண்டும் (FOIP) என்னும் யோசனையை ஐ முன்வைத்தன. நிதி, கடன் நடைமுறைகளில் சீனா கடைப்பிடிக்கும் கற்கால வழிமுறைகளை விமர்சித்துத் தங்கள் பொருளாதாரங்களை அதிலிருந்து விலக்கிவருகிறார்கள். ஆரம்பத்தில் சீனாவை நேரடியாகப் பகைத்துக்கொள்ளத் தயங்கினாலும், 2020இல் நிகழ்ந்த சீன-இந்திய மோதலுக்குப் பிறகு, குவாட் அமைப்பின் மீதான தன் உறுதிப்பாட்டைக் குறிப்பதிலும் குவாடின் நிகழ்ச்சி நிரலைத் தன் நலன்களுக்கு ஏற்றவாறு வழிநடத்துவதிலும் இந்தியா பின்வாங்கவில்லை. தொற்றுநோயின் உலகளாவிய விளைவுகளுடன் இணைந்து, நான்கு உறுப்பு நாடுகளும் இப்போது சீனாவைக் குறித்த தத்தமது நிலைப்பாடுகளைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. ஒரு காலத்தில் குழுவின் பலவீனமான இணைப்பாகக் கருதப்பட்ட இந்திய-ஆஸ்திரேலியக் கூட்டாண்மை, 2020 முதல் பெரிய அளவில் முன்னேறியுள்ளது. இரு தரப்பும் பொருளாதார ரீதியில் பரஸ்பரம் நன்மை விளைவிக்கக்கூடிய ஏற்பாட்டை உருவாக்கிவருகின்றன. ஆஸ்திரேலியாவும் மலபார் கடற்படைப் பயிற்சிகளில் (இந்தியா, ஜப்பான் அமெரிக்காவுடன்) இணைந்துள்ளது. குவாட் கடற்படைகளுக்கிடையே இராணுவ இயக்கத்தை விரிவுபடுத்தும் வகையில் இந்த ஆண்டு முதல் முறையாக அதன் கடற்கரையில் பயிற்சிகள் நடத்தப்பட்டன. இருதரப்புக் கூட்டாண்மையை வலுப்படுத்துவது பெரிய குழுவிற்கான நன்மைகளைக் கொண்டுவருவதுடன் அதன் ஒட்டுமொத்தச் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
எனினும், குவாட் குழு ஆசியாவின் நேட்டோ அல்ல; அதுவே அதன் மிகப்பெரிய பலமாக இருக்கலாம். இது பரந்ததொரு குறிக்கோளை நோக்கி ஒன்றிணைந்து செயல்படும் ஒத்த எண்ணம் கொண்ட நாடுககளின் நெகிழ்வான கூட்டமைப்பாகும். இந்நாடுகளிடையிலான உரையாடல்கள் இராணுவம் அல்லாத முனைப்புகளில் கவனம் செலுத்துவதுபோல் தோன்றுகிறது. ஆனால் இந்த நாடுகளின் தற்போதைய இருதரப்பு, முத்தரப்பு வழிமுறைகளை நாம் கூர்ந்து கவனித்தால், நான்கு உறுப்பினர்களும் வழக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு, உளவுத் தகவல்கள் பகிர்வு, பின்புல அமைப்புகளின் ஆதரவு ஆகியவற்றுக்கான அடிப்படையை நிறுவியுள்ளதை அறியலாம். அதே நேரத்தில், நாற்கரக் கட்டமைப்பானது பொருள்சாராத கருத்தியல் கூறுகளைத் தன் மையமாகக் கொண்டுள்ளது. 2012இல் FOIP மூலோபாயத்தை மேம்படுத்துவதற்காக ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே குறிப்பிட்ட "ஜனநாயக வைரம்" “democratic diamond,” என்னும் கருத்திலிருந்து இது உருவாகிறது. இத்தகைய கருத்தியல் இணைப்பு தனக்கான இடத்தைப் பெற விழையும் இந்தியாவின் அபிலாஷைகளை நிறைவேற்றுகிறது. இது, இந்திய-ஜப்பான் கூட்டாண்மையால் உருவாகக்கூடிய வலைப்பின்னலின் வடிவிலான எதிர்வினையின் மூலம் “பாதுகாப்பு அளிப்பவர்” என்னும் நிலையைப் பெறுவதற்கான இந்தியாவின் இலட்சிய நோக்கை மையமாகக் கொண்டது.
ஜப்பானியப் பிரதமர் கிஷிடா குறிப்பிட்டதுபோல், டோக்கியோவின் கணக்கீடுகளில் இந்தியா "இன்றியமையாத" கூட்டாளியாக மாறியுள்ளது. "நட்பு நாடுகள், ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளிடையே பல அடுக்கு வலையமைப்பை" உருவாக்குவதற்கு இந்தியாவுடனான ஒத்துழைப்பு முக்கியமானது என்று ஜப்பானின் 2022ஆம் ஆண்டின் தேசியப் பாதுகாப்பு வியூகம் குறிப்பிடுகிறது. இது மாறிவரும் உலகளாவிய அமைப்பிற்கு அதன் சொந்த வலையமைப்பின் அடிப்படையிலான எதிர்வினையைப் பிரதிபலிக்கிறது. நேரடிச் சிக்கல்கள் எதுவும் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை தெரியாத நிலையில், இந்தியா-ஜப்பான் கூட்டாண்மை பற்றிய கணிப்பில் நம்பிக்கை தெரிகிறது.