பின்தங்கிய நிலையில் இருக்கும் பெண்களின் குழுக்களுக்குப் பிணையம் இல்லாமல் கடன் வழங்கும் நடைமுறை குறுங்கடன் எனப்படுகிறது. இந்த குறுங்கடன் இந்தியாவின் நிதி தொடர்பான செய்திகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தத் துறையில் கணிசமான அளவு புதிய முதலீடுகள் உள்நாட்டிலிருந்தும் உலகளாவிய முதலீட்டு மூலங்களிலிருந்தும் வருகின்றன. விளிம்புநிலைக் குழுக்களை "நிதிச் சூழலில் இணைக்கும்” இந்த நடவடிக்கை இந்திய வங்கிகளின் அமைப்பில் உள்ள டஜன் கணக்கான குறுங்கடன் நிறுவனங்களுக்குத் (MFI) தொடர்ந்து லாபகரமாக இருப்பதை இந்த முதலீடுகள் உறுதி செய்கின்றன.
பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் குறுங்கடன் துறை ஊடகங்களின் கோபத்திற்கு ஆளானது. அப்போது ஆந்திரப் பிரதேசத்தில் கட்டாயக் கடன் வசூல் நடைமுறைகள் நடைமுறையில் இருந்தன. இதன் விளைவாகத் தற்கொலைகளும் நிகழ்ந்தன. ஊடகங்கள் இதில் தீவிர கவனம் செலுத்தி MFIகள்மீது கடும் நெருக்கடியை ஏற்படுத்தின. தற்போது இந்த நிறுவனங்கள் வழங்கும் கடன்கள் தொடர்பான ஊடகச் செய்திகளுக்கும் கடன் பெற்றதாகக் கூறப்படும் நபர்களின் யதார்த்த வாழ்விற்கும் எந்தத் தொடர்பும் இல்லாத நிலை இன்று உள்ளது. ஊடகச் செய்திகள் தகவல்கள், எண்கள், கொள்கைகள் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. எனினும், ஏழைப் பெண்கள் மீது கவனம் செலுத்துவதால் குறுங்கடன் துறைக்குக் கணிசமான அளவில் தார்மீக அதிகாரம் தொடர்ந்து கிடைத்துவருகிறது. ஆனால் இந்த நிறுவனங்கள் உண்மையிலேயே பெண்களுக்குத் தேவையான ஆதரவையும் சேவைகளையும் வழங்குகின்றனவா? பங்குதாரர்களுக்கான வருமானத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தும் ஒரு தொழில் துறை, பின்தங்கிய நிலையில் இருக்கும் பெண்கள் இந்தியாவின் நிதிச் சூழலில் இணையாமல் இருப்பது தொடர்பான பிரச்சினையைக் கவனிப்பதற்கான வாகனமாகத் தொடர்ந்து செயல்படுவது ஏன்?
இந்தியாவின் வணிக குறுங்கடன் துறையில் பத்தாண்டுகள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் நான் எழுதி அண்மையில் வெளியான நூலில் (Making Women Pay: Microfinance in Urban India), இந்தியாவின் குறுங்கடன் துறை ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவது என்னும் வெளிமுகமான நோக்கத்திலிருந்து விலகிச் சென்றதைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அது மட்டுமல்லாமல், குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வியூகங்களில் பெண்களின் உண்மையான தேவைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்பதையும் காட்டியிருக்கிறேன். அவற்றின் அன்றாடச் செயல்பாடுகள், அந்த நிறுவனங்களுக்குள்ளும் வாடிக்கையாளர்களுடனான அவர்களின் தொடர்புகளிலும் பாலினச் சமத்துவமின்மையை அமைப்புரீதியாக வலுப்படுத்துகிறது.
கடன் வாங்கும் பெண்களின் சம்பளம் இல்லாத உழைப்பை வைத்து இந்தத் தொழில் துறை லாபமடைகிறது. பெண்கள் தங்கள் குழுக்களை ஒழுங்கமைத்து, குழுவில் இருப்பவர்களுடன் பேணும் தனிப்பட்ட உறவுகளைப் பயன்படுத்திக்கொண்டு கடன்கள் திருப்பிச் செலுத்தப்படுவதை உறுதிசெய்கிறார்கள். உதாரணமாக, பெங்களூருவில் சாந்தி என்ற தலைவரை நான் சந்தித்தேன். அவர் தனது அக்கம்பக்கத்தினருக்கு உதவுவதாகக் கூறினார். அவருடனும் அவரது குழுவில் உள்ள மற்றவர்களுடனும் தொடர்ந்து உரையாடியதில், அவர் சமூகத்தில் தான் இருக்கும் நிலையைப் பயன்படுத்திக்கொண்டு குறுங்கடன் வழங்கும் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்பக் குழுக்களை உருவாக்குவதை அறிய முடிந்தது. ஓரளவு நல்ல நிலையில் இருக்கும் பெண்கள், ஏழைகள், தொழில்முனைவோர், வாடகைதாரர்கள், வீட்டு உரிமையாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தேவையான எண்ணிக்கையில் அந்தக் குழுவில் இருப்பதை உறுதிசெய்கிறார். கடன் தரும் நிறுவனங்களைப் பொறுத்தவரை இப்படிப் பல விதமான பெண்கள் கொண்ட குழுக்கள் பாதுகாப்பானவை. கடனைத் திரும்பப் பெற முடியாமல் போகும் அபாயம் இதனால் குறைகிறது.
ஆயினும், கடன் வழங்கும் நிறுவனங்களின் பணியாளர்கள் தாங்களே அத்தகைய குழுக்களை உருவாக்குவதற்குத் தேவையான நுண்ணிய தகவல்களை அறிந்திருக்கவில்லை. சாந்தி பலவிதமான ஆர்வங்கள் கொண்ட பெண்களிடம் பேசி, வற்புறுத்திக் கூட்டிச் சென்று கடன் வாங்கித்தந்தார். இவை எல்லாமே “உதவி” என்ற பெயரில்தான் நடந்தன என்றார். கடன் தரும் நிறுவனத்திடமிருந்து அவர் சம்பளம் எதுவும் பெறாவிட்டாலும் இதில் சாந்திக்குச் சில நலன்கள் இருப்பது உண்மைதான். ஆனால், அந்நிறுவனங்களும் அவரது சேவைகளால் லாபம் ஈட்டுகின்றன என்பதில் எந்த ஐயமும் இல்லை.
குறுங்கடன்கள் குறுந்தொழில் நடத்துவதற்கும் தன்னிறைவு அடைவதற்குமான வாய்ப்பைப் பெண்களுக்கு வழங்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில், கடன் வாங்கும் பெண்கள் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துவதற்கும் மருத்துவச் செலவுகளுக்காகவும் அதிக வட்டி கட்ட வேண்டிய கடனை அடைப்பதற்கும் மோசமான வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்வதற்காகவும் கடன்களைப் பயன்படுத்துகின்றனர். குறுங்கடன் தரும் நிறுவனங்களும் இதிலிருந்து லாபம் பெறுகின்றன. கடன் வாங்கியவர் தனது கடனைத் திருப்பிச் செலுத்தினால் அடுத்த ஆண்டு கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம். புதிய வாடிக்கையாளரைப் பெறக் கணிசமான முயற்சிகள் தேவைப்படும். எனவே ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர் தன் கடனை அடைத்துவிட்டுப் புதிதாகக் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறுவது கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு லாபகரமானது.
கடன் வாங்குபவர்கள் பலரும் பொறாமைப்படும் அளவிற்குக் குறுங்கடன் தரும் நிறுவனங்களில் பதவிகளை வகிக்கும் பெண் பணியாளர்களும் தங்கள் தொழில் வாழ்வில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமற்ற சூழலிலேயே இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களுடன் தினமும் உரையாடும் பெண் பணியாளர்களுடன் நான் பேசினேன். பெண்களின் தாங்க முடியாத கடன் சுமையைச் சமாளிக்க உதவும் இந்தப் பெண்கள் கனத்த மனதுடன் இருக்கிறார்கள். குறுங்கடன் துறையில் களப்பணியாளராக இருக்கும் நதியா, தான் உருவாக்க உதவிய ஒரு குழுவின் உறுப்பினர் ஒருவர் தலைமறைவான நிகழ்வை நினைவுகூர்ந்தார். குழுவின் மற்ற உறுப்பினர்களால் மாதாந்தரத் தவணையைச் செலுத்த முடியவில்லை. ஒவ்வொரு மாதமும் அந்த உறுப்பினரின் கடனை அடைக்கக் குழுவினர் போராடினார்கள். இந்தப் பிரச்சினை பற்றிப் புகாரளித்திருந்தால் அது நதியாவுக்கும் கடன் வாங்கியவர்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தியிருக்கும். அதற்குப் பதிலாக, தலைமறைவான உறுப்பினரின் வீட்டிற்குள் நுழைந்து, அவருடைய வாட்டர் ஃபில்டர் உள்ளிட்ட சில பொருட்களை விற்று அவருடைய கடனை அடைக்கும்படி நதியா குழுவினரிடம் சொன்னார். அவ்வாறு செய்த பிறகு அவர்கள் "மகிழ்ச்சி" அடைந்தார்கள். ஏனென்றால் நதியாவால் அவர்களுக்கு அடுத்த ஆண்டு இன்னொரு கடனைக் கொடுக்க முடிந்தது.
இத்தகைய நிகழ்வுகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமான பதிவுகளிலிருந்து மறைக்கப்படுகின்றன. கடன் வசூல் அதிக அளவில் இருக்கும்போது கடன் வழங்கும் நிறுவனங்களால் தங்களுடைய முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தைத் தர முடிகிறது. நான் பேசிய பல பெண் பணியாளர்களுக்கு நிறுவனத்திற்குள் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. அல்லது அவர்கள் நிர்வாக மட்டத்தில் இருந்தால், இதர பெண் பணியாளர்களை நம்பத் தகாதவர்களாகக் கருதினார்கள்.
இந்த யதார்த்தங்களை நேரடியாகவே காண முடியும். ஆயினும் இந்திய ஊடகங்கள் குறுங்கடன் வழங்கும் நிறுவனங்களைப் பற்றி நேர்மறையாகவே சித்தரிக்கின்றன. இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் சலுகை பெற்ற வகுப்பினர் கடன் வாங்கும் பெண்களைப் பார்க்கும் விதம் காரணமாக MFIகளுக்கும் பெண்கள் அதிகாரமளித்தலுக்கும் இடையேயான தொடர்பு நீடிக்கிறது. MFIகளில் கடன் வாங்குபவர்கள் பெரிதும் ஆபத்தான சூழ்நிலைகளில் வாழ்ந்துவருகிறார்கள். சுரண்டலும் வறுமையும் நிலவும் சூழலில் அவர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக இல்லை. குடிசைப் பகுதிகளுக்கு வெளியே இருப்பவர்கள் அங்குள்ள மாறுபட்ட பல்வேறு வகையான சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ள மெனக்கெடுவதில்லை. மாறாக, குடும்ப நலனுக்காக உழைக்கும் சிறுதொழில்முனைவோர் அல்லது குடும்பத்தின் நலனுக்காக உழைக்கும் தாய்மார்கள் அடங்கிய குழுவாகவே நாம் அவர்களைப் பார்க்கிறோம். உருப்படாத குடிகாரர்களைத் திருமணம் செய்துகொண்டவர்களாக அவர்களைக் கருதுகிறோம். MFIகளும் மற்றும் சிறு நிதி வங்கிகளும் (SFBs) வாடிக்கையாளர்களின் "வெற்றிக் கதை”களை விளம்பரப்படுத்துவதன் மூலம் இந்த புரிதலை வலுப்படுத்துகின்றன. ஒரு பெண்ணின் வெற்றியில் அதிக வட்டிக்கு வாங்கப்படும் கடன் ஆற்றும் பங்கை இந்தக் கதைகள் மிகைப்படுத்திச் சொல்கின்றன.
கடன் வாங்குபவரின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்துவதில் கடனுக்கு இருக்கும் பங்கை உயர்த்திக் காட்டுவதற்காக MFIகள் பெண்களுடைய கதைகளின் சிக்கல்களைத் தவிர்த்துவிட்டுத் தம் விருப்பத்திற்கேற்பச் சித்தரிக்கின்றன என்பதைச் செல்வியுடனான எனது நேர்காணலில் என்னால் அறிய முடிந்தது. அதாவது, சுரண்டும் தன்மை கொண்ட நிதி நிறுவனங்கள் கடன் வாங்கும் பெண்கள் செலுத்தும் உழைப்பிலிருந்தும் பணத்திலிருந்தும் லாபம் ஈட்டுவது மட்டுமல்லாமல், தங்களைக் கடன் வழங்குபவர்களாக அல்லாமல் ஏழைப்பங்காளர்களாகக் காட்டிக்கொள்ள இந்தக் கதைகளைப் பயன்படுத்திக்கொள்கின்றன. வறுமையை ஒழிக்கக்கூடிய அல்லது வறுமையிலிருந்து அவர்களை முழுவதுமாக மீட்டெடுக்கக்கூடிய நிறுவனங்களைத் தொடங்கப் பெண்களுக்குத் தாம் உதவுவதாக அவை கூறிக்கொள்கின்றன.
அதிக வட்டி கொண்ட சிறுகடன்கள் உழைக்கும் வர்க்கப் பெண்களின் தேவைகளைப் பூர்த்திசெய்கின்றனவா என்ற முக்கியமான கேள்வியை விட்டு விலகிவிட்டோம். மற்ற பல தொழில்களைப் போலவே இந்தத் துறையிலும் நிதி தொடர்பான ஊகங்கள், பங்குதாரர்களின் நலன்கள், அரசும் சந்தையை மையமாகக் கொண்ட நலன்களும் ஒன்றையொன்று சார்ந்திருத்தல் ஆகியவை, குடிமக்கள் என்னும் முறையில் கடன் வாங்கும் பெணகளுக்கான தேவை என்ன என்னும் கேள்வியைத் தவிர்க்கும் கொள்கைகளையும் நடைமுறைகளையும் உருவாக்கியுள்ளன. பயிற்சித் திட்டங்கள் அல்லது நுகர்வோருக்கான புதிய நிதிச் சேவைகளை வடிவமைக்கும்போது மட்டுமே கடன் வாங்கும் பெண்களுக்கு வாழ்க்கையில் உண்மையில் என்ன தேவை என்ற கேள்வியை MFIகள் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன். அந்தச் சமயங்களிலும் கடன் வாங்கும் பெண்களை இந்தச் செயல்முறையில் ஈடுபடுத்துவது எப்படி என்னும் கேள்விதான் எழுகிறதே தவிர, அவர்களின் குறுகிய, நடுத்தர கால இலக்குகளை அடைய இது உதவுமா என்பது பற்றிய கேள்வி அதிகம் எழுவதில்லை.
MFIகள் முன்னிறுத்திக்கொள்ளும் பிம்பத்திற்கும் அவற்றின் நிதி நடவடிக்கைகளின் யதார்த்தத்திற்கும் இடையே கணிசமான அளவில் இடைவெளி உள்ளது. இன்றைய இந்தியாவில் கடன் சுமையைத் தாங்குபவர்களாகவும் வீட்டு நிதி விவகாரங்களை நிர்வகிப்பவர்களாகவும் இருக்கும் பெண்களின் அசாத்தியமான கருணையினாலும் திறமையினாலும்தான் MFIகளின் நேர்மறையான பிம்பம் சாத்தியமாயிருக்கிறது. நெடுநாட்களாகத் தள்ள்ளிப்போட்டுவந்த கருப்பை அறுவை சிகிச்சைக்காக விஜயாவிற்கு நிதி தேவைப்பட்டபோது "அனைவருக்கும் உதவி செய்பவர்” எனப் பெயர் பெற்ற தனது தோழி சாந்தியின் மூலம் MFI கடனுதவி பெற்றார். அவருடைய சுற்றுவட்டாரத்தில் கடன் தருபவர் வசூலிக்கும் வட்டியைக் காட்டிலும் குறைந்த வட்டிக்குக்கு MFI அவருக்குக் கடன் வழங்கியது. விஜயா ஏற்கனவே கணிசமான அளவில் அதிக வட்டித் தொகை உள்ள கடனை வங்கியிருந்தார். விஜயாவிற்கு உண்மையில் தேவைப்படுவது அடிப்படையான, நம்பகமான மருத்துவ சிகிச்சை. MFI தலைவர்கள் பலருடன் நான் பேசியிருக்கிறேன். கடன் வாங்கும் பெண்கள், தங்கள் வாழ்வை மேம்படுத்தக்கூடிய சமூக ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதில் அவர்கள் ஆர்வம் காட்டியதேயில்லை.
இந்தத் தொழில்துறை சமத்துவம் நிறைந்த பாதையில் முன்னோக்கிச் செல்ல வேண்டுமென்றால், இந்தியாவின் உழைக்கும் பெண்களுக்கான நியாயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வியூகத்தை வகுக்கப் பெண் வாடிக்கையாளர்களையும் அவர்களது உள்ளூர் கூட்டாளிகளையும் ஒருங்கிணைக்கும் அர்த்தமுள்ள ஒழுங்குமுறை தேவைப்படுகிறது. இந்திய வங்கித் துறை காலங்காலமாக ஒதுக்கிவந்த உழைக்கும் கிராமப்புற ஏழைப் பெண்களுடன் நம்பத்தகுந்த நம்பிக்கையின் அடிப்படையிலான உறவுகளை உருவாக்கியிருப்பது MFIகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைதான். எனினும் தாங்கள் பின்பற்றும் ஒழுங்குமுறைகளையும் உந்துதல்களையும் மறுஆய்வு செய்து, தங்கள் பணியாளர்களில் பன்முகத்தன்மையைக் கொண்டுவந்து, கடன் வாங்குபவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களைக் குறைப்பது எப்படி என்பது பற்றிய உரையாடலில் இந்த நிறுவனங்கள் பங்கேற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.