இந்தியாவின் கடன் தகுதி குறித்த மதிப்பீட்டின் முரண்பாடு

17/03/2025
IiT English Page

நிதிச் சந்தைகளில் மூலதனம் திரட்டும் ஒருநாட்டின் திறன், அதன் கடன்தகுதி குறித்த மதிப்பீட்டுடன் தொடர்புகொண்டது. இது, ஒரு நாட்டின் பொருளாதார, சமூக வாய்ப்புகளை நிர்ணயிக்கும் முக்கியமான ஆனால் அதிகம் ஆராயப்படாதஒரு அம்சமாகும். முதலீட்டாளர்கள்ஒரு நாட்டின் கடன்தகுதியைத் தீர்மானிக்கக் கடன் தொடர்பான மதிப்பீடுகளையேசார்ந்திருக்கிறார்கள். ஒரு நாட்டின் கடன்தகுதி சார்ந்த மதிப்பீடு அதன் கடன் தகுதிக்கான அடிப்படைகளைவிடவும் குறைவாகஇருந்தால் (நமது வாதத்தின்படி இந்தியாவில்அப்படித்தான் உள்ளது),  அது கடன் தொடர்பானஅதிக செலவுகளுக்கே வழிவகுக்கிறது. சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, காலநிலைபதிப்புகளைச் சமாளித்தல் போன்ற துறைகளுக்கான பொதுச்செலவினங்களுக்கான நிதி குறைவதற்கு இதுகாரணமாகிறது.

கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் நாடுகளை AAA (அதிகபட்ச மதிப்பீடு) முதல் D (குறைந்த மதிப்பீடு) வரை மதிப்பிடுகின்றன. இந்தியாவின் கடன் மதிப்பீடு - 2006 முதல் Fitch அமைப்பும் 2007 முதல் S&P அமைப்பும் மேற்கொண்ட மதிப்பீடுகளின்படி - BBB என்னும் நிலையிலிருந்து மாறாமல் உள்ளது. இது மிகக் குறைந்த "முதலீட்டுத் தர மதிப்பீடு" (பார்க்க: அட்டவணை 1, 2 ). அடி மட்டத்திலுள்ள "முதலீடு அல்லாத தர மதிப்பீடு”களைவிட இது ஒரு படி மேலே உள்ளது. இந்த முதலீடு அல்லாத தர மதிப்பீடுகள் ஊகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவையாகக் கருதப்படுகின்றன; கடன் திருப்பிச் செலுத்தப்படும் என்ற மிகக் குறைந்த எதிர்பார்ப்புகளையே இவை கொண்டுள்ளன. மூடிஸ் அமைப்பின் மதிப்பீட்டிற்கும் இது பொருந்தும். 2017-20க்கு இடையிலான மூன்று ஆண்டுக் காலத்தைத் தவிர, மூடிஸ் இந்தியாவின் மதிப்பீட்டை BBBக்கு மேல் ஒரு படி உயர்த்தி, பின்னர் BBBக்கே திருப்பியது.

அண்மைக்காலத்தில் இந்தியாவின் பொருளாதாரச் செயல்திறனைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், இந்தியாவின் கடன் தகுதி குறித்த மதிப்பீடு கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக மாறாமல் இருப்பது சரியானதாகத் தோன்றவில்லை. 2006முதல் தற்போதுவரை பொருளாதார, நிதி அளவீடுகள் எவ்வாறு உள்ளன என்பதன் அடிப்படையில் இந்தியாவின் கடன் மதிப்பீடு மேம்படுத்தப்படத் தகுதியானதா என்பதை இங்கே மதிப்பிட முயல்கிறோம்.

கடன் மதிப்பீடுகள் ஒப்பீட்டுத் தரவரிசையில் உள்ள இடர்வாய்ப்புகளை வெளிப்படுத்துவதாக மதிப்பீட்டு நிறுவனங்கள் வாதிடுகின்றன. அதாவது, ஒரு நாட்டின் கடன் மதிப்பீடு மற்ற நாடுகளுடன் ஒப்பிடுவதால் ஏற்படும் விளைவு என்பது இதன் பொருள். எனவே, இந்தியாவின் பொருளாதார, நிதி அளவீடுகளின் போக்கை (2006முதல்) உலகின் மிக முக்கியமான பொருளாதாரங்களை உள்ளடக்கிய குழுவான ஜி-இருபது (G20) நாடுகளின் போக்குடன் ஒப்பிடுகிறோம். ஜி20 நாடுகள் குழுவில் வளர்ச்சியடைந்த நாடுகளும் வளரும் நாடுகளும் உள்ளன. மேலும் AAA முதல் CC வரையிலான முழு வரம்பையும் உள்ளடக்கிய கடன் மதிப்பீடுகளைக் கொண்டுள்ளன. எனவே இது பொருத்தமான ஒப்பீட்டு மாதிரியாக அமைகிறது.


பொருளாதார நிலை: ஜி20 நாடுகளுடனான ஒப்பீடு
இந்தியப் பொருளாதாரம் 2006இல் 13ஆவது பெரிய நாடாக இருந்து, 2023இல் 5ஆவது பெரிய நாடாக வளர்ந்தது. A+ க்குக் கீழே மதிப்பிடப்பட்ட முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாகவும், மிகக் குறைந்த முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்றுள்ள நாடாகவும் இந்தியா உள்ளது (பார்க்க: படம் 1).


நிதி நிலை: G20 நாடுகளுடன் ஒப்பீடு
இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளாதார வலிமையை அங்கீகரிக்கும் அதே வேளையில், இந்தியாவின் கடன் தகுதியை மதிப்பிடும் செயல்பாடு பெரும்பாலும் பலவீனமான நிதி அளவீடுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று மதிப்பீட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. அதாவது இந்தியாவுக்கு இணையாக மதிப்பிடப்பட்ட பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கடன் அளவுகளும் கடன் சேவைக்கான செலவுகளும் அதிகமாக இருக்கின்றன. இவற்றின் அடிப்படையிலேயே இந்தியாவின் கடன் தகுதி மதிப்பிடப்படுகிறது.

Source:S&P (May 2023); Moody’s (October 2024); Fitch (August 2024)

எடுத்துக்காட்டாக, 2022ஆம் ஆண்டு நிலவரப்படி (அண்மையில் கிடைக்கும் தரவுகளின்படி), இந்தியாவின் அரசாங்கக் கடன்-ஜிடிபி விகிதம் 81.7 சதவீதமாக உள்ளது. வட்டிச் செலவு-ஜிடிபி விகிதம் 5.2 சதவீதமாக உள்ளது. இந்தியாவைப் போலவே BBB மதிப்பீட்டைப் பெற்றுள்ள இந்தோனேசியாவைவிட இவை மிகவும் அதிகம். இந்தோனேசியாவில் அரசாங்கக் கடன்-ஜிடிபி விகிதம் 40 சதவீதமாகவும் வட்டிச் செலவு-ஜிடிபி விகிதம் 2 சதவீதமாகவும் உள்ளன. இருப்பினும், 2006, 2022ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் நிதி அளவீடுகளின் போக்கு  பெரும்பாலான ஜி20 நாடுகளுடன் ஒப்பிடும்போது நிலையானதாக உள்ளது என்ற உண்மையைக் குறிப்பிட்ட ஓர் ஆண்டின் அடிப்படையில் மேற்கொள்ளும் ஒப்பீடு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. பெரும்பாலான ஜி20 நாடுகளில் இதே காலகட்டத்தில் இந்த அளவீடுகளில் ஒன்றோ அல்லது இரண்டுமோ கூடுதலாக இருந்தது.

ஜி20 நாடுகளின் கடன் சுமை, கடன் சேவைச் செலவுகள் ஆகியவற்றில் 2006க்கும் 2022க்கும் இடையிலான மாற்றத்தைப் படம் 2 காட்டுகிறது. 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் கடன்-ஜிடிபி விகிதம் 2006இல் இருந்ததைப் போலவே (1.05 மடங்கு) இருப்பதால், இந்தியா நடுப்பகுதிக்கு மிக அருகில் உள்ளது. ஜிடிபி-வட்டி விகிதத்திலும் (2006ஐப் போல 0.97 மடங்கு) இதே நிலைதான். பெரும்பாலான G20 நாடுகள் கடன் சுமையில் (கீழ் வலது) அல்லது கடன் சேவைச் செலவில் (மேல் இடது கால்பகுதி) அல்லது இரண்டிலும் (மேல் வலது) அதிக விகிதத்தைக் கொண்டுள்ளன. மூன்று நாடுகள் (கீழ் இடது) மட்டுமே இரண்டு அளவீடுகளிலும் குறைந்த விகிதங்களைக் கொண்டுள்ளன.


2022ஆம் ஆண்டில் இந்தியாவின் நிதி அளவீடுகள் 2006ஆம் ஆண்டுடன் ஒப்பிடத்தக்கவை என்றாலும், இரு ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் இருந்திருக்கக்கூடுமென்றும், இது தவறான நிதி நிர்வாகத்தைச் சுட்டிக்காட்டுவதாகவும் வாதிடலாம். இதை ஆராய, 2006-22 காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட G20 நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, மொத்த அரசாங்கக் கடன், வட்டித் தொகை ஆகியவற்றின் போக்கைப் படம் 3 ஒப்பிடுகிறது.

இந்தியாவின் கடனும் வட்டியும் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போலவே அதே வேகத்தில் வளர்ந்துவந்ததை விளக்கப்படங்களிலிருந்து காணலாம். அதே காலகட்டத்தில் சீனாவில் கடனும் வட்டியும் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட வேகமாக வளர்ந்தன. அமெரிக்காவில், 2008க்குப் பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாகக் கடன் வளர்ந்தது. வட்டித் தொகையின் வளர்ச்சி 2021க்குப் பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாக இருந்தது. 

பெரும்பாலான G20 நாடுகளின் கடன் அளவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட வேகமாக வளர்ந்தன. இருப்பினும், 2008ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு வளர்ந்த பொருளாதாரங்கள் கிட்டத்தட்ட பூஜ்ஜிய வட்டி விகிதங்களால் பயனடைந்தன. இதனால் அவை மிகவும் மலிவாகக் கடன் வாங்க முடிந்தது. 2008-21 முதல், வளர்ந்த பொருளாதாரம் கொண்ட நாடுகளின் கடன் சேவை தொடர்பான செலவுகள் கணிசமாகக் குறைந்தன. கடனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுகளும் தொடர்ந்து உயர்ந்து, கடன் அளவு தாக்குப்பிடிக்கக்கூடிய அளவில் இருப்பதான மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றன. 2021ஆம் ஆண்டு வட்டி விகிதம் உயர்ந்ததால் இந்த நாடுகள் கட்டும் வட்டித் தொகை கடுமையாக அதிகரித்தது. சில சந்தர்ப்பங்களில் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை எட்டியது. இதோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் வட்டி விகிதங்கள் பூஜ்ஜியத்திற்கு மேல் இருந்தபோதிலும், அதன் கடன் மதிப்பீடு மாறாமல் இருந்தபோதிலும், இந்தியாவின் கடன் சேவைக்கான செலவுகள் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியைவிட அதிகமாக இல்லை.

வட்டி விகிதங்களைப் பூஜ்ஜியத்திற்கு அருகில் குறைத்துக் கடனை அதிகரித்துக்கொள்ளும் சலுகை வளர்ந்த பொருளாதாரங்களைப் போல இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. , 2008ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடி, 2013ஆம் ஆண்டின் டாப்பர் டான்ட்ரம் (Taper Tantrum - அமெரிக்க பெடரல் ரிசர்வ் எடுத்த நடவடிக்கைகளால் நிகழ்ந்த மூலதன வெளியேற்றம்), 2020ஆம் ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றின்போதும் தனது கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஈடான அளவில் வருடாந்தர வட்டித் தொகையை இந்தியா நிர்வகித்தது. பல்வேறு அரசியல், பொருளாதாரச் சூழ்நிலைகளிலும் இதியா குறிப்பிடத்தக்க வகையில் நிலையான நிதிச் செயல்திறனைக் கொண்டிருந்ததையே இது குறிக்கிறது.

படம் 3: குறிப்பிட்ட சில நாடுகளின் ஜிடிபி, கடன் அளவீடுகள் 


பிற காரணிகள்
கடன் மதிப்பீடுகள் பொருளாதாரம், நிதி நிலை ஆகியவற்றைக் காட்டிலும் அதிகமான காரணிகளை உள்ளடக்கியவை என்னும் விமர்சனம் முன்வைக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, வெளியிலிருந்து வரும் அதிர்ச்சிகளும் பணவியல் கொள்கையின் செயல்திறன் போன்ற உள்நாட்டுக் காரணிகளும் ஒரு நாட்டின் மீது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பையும் மதிப்பீட்டு முறைகள் கருத்தில் கொள்கின்றன.

2015ஆம் ஆண்டில் இந்தியா பணவீக்கைக் குறைப்பதற்கான கட்டமைப்பைச் செயல்படுத்தியது. இந்த முயற்சியின் விளைவாக, பணவீக்கம் 2006-15 காலகட்டத்தின் சராசரியான 8 சதவீதத்திலிருந்து 2016-23 காலகட்டத்தில் 5 சதவீதமாகக் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வெளிப்புற நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகளும் கணிசமாகக் குறைந்துள்ளன. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 2.4 சதவீதத்திலிருந்து (2006-15) 1.1 சதவீதமாகக் (2016-23) குறைந்தது. 2006உடன் ஒப்பிடும்போது அந்நியச் செலாவணி இருப்பு நான்கு மடங்கு அதிகரித்ததன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. 2024 செப்டம்பர் இறுதி நிலவரப்படி இந்தியா 704.9 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கையிருப்பில் வைத்திருக்கிறது. இது உலகின் நான்காவது மிக அதிகமான இருப்பாகும். (முதல் மூன்று இடங்களில் ஜப்பான், சுவிட்சர்லாந்து, சீனா ஆகிய நாடுகள் உள்ளன.) பத்து மாதங்களுக்கும் மேலான இறக்குமதிகளுக்குப் போதுமான இருப்பு இது.

பொதுக் கடன்களில் எத்தகைய கடன்கள் இருக்கின்றன என்னும் காரணியையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய அரசாங்கத்தின் கடன் பெருமளவில் உள்நாட்டைச் சேர்ந்த நீண்டகால அளவிலான கடன். இதன் மதிப்பு ரூபாயில் குறிப்பிடப்பட்டுள்ளது (2024 ஜூன் இறுதி நிலவரப்படி 94.9 சதவீதம் என்று நிதி அமைச்சகம் தெரிவிக்கிறது). இது கடன் சேவையில் வெளிநாட்டு நாணயத்தால் ஏற்படக்கூடிய அபாயங்களையும் வட்டி விகித அபாயங்களையும் வெகுவாகக் குறைக்கிறது.

முடிவுகள்
மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் நிதி அளவீடுகள் ஒப்பீட்டளவில் உயர்ந்த மட்டங்களில் இருப்பதாக மதிப்பிடுகின்றன. கடந்த பத்தொன்பது ஆண்டுகளில் கடன் அழுத்தத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. குறைந்தது மூன்று அரசியல் சுழற்சிகளையும் (ஒரு சுழற்சிக்கு ஐந்து ஆண்டுகள்) இரண்டு பொருளாதார சுழற்சிகளையும் (மூன்று நெருக்கடிகள் உட்பட) உள்ளடக்கிய காலகட்டம் இது. நாடு வேகமாக வளர்ந்துள்ளதுடன் வெளிப்புற அதிர்ச்சிகளால் ஏற்படும் பாதிப்பும் குறைந்திருக்கிறது. இருப்பினும், இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் கடன் திறன் குறித்த மதிப்பீடு மிகக் குறைந்த முதலீட்டுத் தர மட்டத்தில் மாறாமல் உள்ளது.

இந்தியாவின் கடன் திறன் குறித்த மதிப்பீட்டை அதிகரிக்க மதிப்பீட்டு நிறுவனங்கள் காட்டும் தயக்கத்தைப் புரிந்துகொள்வது கடினமாகிவருகிறது. இந்தியாவின் கடன் அளவுகள் சில நாடுகளைவிட அதிகமாக இருந்தாலும், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரச் செயல்திறனும் நிதி தொடர்பான ஒழுங்கும் சிறப்பாக உள்ளன. இவை அங்கீகரிக்கப்பட வேண்டியவை என்பதோடு, இந்தியாவின் கடன் திறன் குறித்த மதிப்பீடு மேம்படுத்தப்படுவதற்கான காரணமாகவும் அமைகின்றன.

சித்தார்த் கமானி

Author

சித்தார்த் கமானி நியூ டெவெலப்மெண்ட் பேங்கில் இடர் சாத்தியங்களைக் கையாளும் பிரிவின் முதன்மை நிபுணர்.

(Tamil Translation by Aravindan D.I.) 
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்

ஷிரேயன்ஸ் பாஸ்கர்

Author

ஷிரேயன்ஸ் பாஸ்கர் நியூ டெவெலப்மெண்ட் பேங்கில் பொருளாதார நிபுணர். 

(Tamil Translation by Aravindan D.I.) 
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்