நலத்திட்டங்களும் அவற்றைத் திறமையாகச் செயல்படுத்துதலும்

13/02/2023
IiT English Page

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மக்கள் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் மேலும் திறன் மிக்க வகையில் செயல்படுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பெருகியிருக்கின்றன. திட்டங்களின் பலன்கள் உரியவருக்குச் சேராமல் இடையில் கசிந்துவிடுதல், வேண்டியவருக்குச் சலுகை அளித்தல் ஆகியவற்றைக் குறைப்பதற்குத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளைப் பயன்படுத்தி நலத்திட்டங்கள் உரியவர்களைச் சென்றடைவதை மேம்படுத்த அரசியல்வாதிகள் முயல்கிறார்கள் என்பதே இதன் பொருள். இந்த "உயர் தொழில்நுட்பப் பாதுகாப்பு வலையில்" ஏறக்குறைய 300 நலத்திட்டங்கள் உள்ளதாக தி எகனாமிஸ்ட் (The Economist) மதிப்பிட்டுள்ளது. இத்திட்டங்களால் 950 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ஏழைகள். இவற்றுக்காக அரசு மேற்கொள்ளும் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடு. இந்தப் "புதிய நலத்திட்ட அணுகுமுறை" (new welfarism), விதிமுறைகளின் அடிப்படையில் நேரடிப் பரிமாற்றங்களைச் செய்வதையும் ஜன்தன் வங்கிக் கணக்குகள், ஆதார் அடையாளம், மொபைல் தொலைபேசிகள் ஆகியவற்றை (JAM) இதற்காகப் பயன்படுத்துவதையும் வலியுறுத்துகிறது. இந்த அணுகுமுறை ஆளும் கட்சிகளுக்கு வாக்குகளையும் அரசியல் ஆதரவையும் பெற்றுத்தந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் நலத்திட்டங்களைத் திறன்மிகச் செயல்படுத்துவது பலரும் கருதுவதுபோல அரசியல் பலன்களைக் கொண்டுவருகிறதா? நலத்திட்டங்களின் தாக்கம் ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு கேள்விகளைச் சார்ந்துள்ளது: திட்டங்களின் பலன்களைத் தங்களுக்குக் கிடைக்கச்செய்வதற்காக வாக்காளர்கள் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளிக்கிறார்களா? திட்டத்தின் பலன்களைத் தங்களுக்கு வழங்கும் செயல்முறை குறித்து வாக்காளர்கள் அக்கறை காட்டுகிறார்களா? அதாவது, ஊழலையும் வேண்டியவர்களுக்குச் சலுகையளிக்கும் போக்கையும் குறைக்கும் திறமையான அமலாக்கத்திற்கு வாக்காளர்கள் வெகுமதி அளிக்கிறார்களா?

அரசு சீர்திருத்தங்கள் வேண்டியவர்களுக்குச் சலுகை தரும் போக்கைக் குறைப்பதன் மூலம் திருட்டு அல்லது ஊழலைக் குறைக்க முயற்சிக்கின்றன. பொதுமக்கள் ஊழலை வெறுக்கிறார்கள் என இத்தகைய முயற்சிகள் அனுமானித்துக்கொள்கின்றன. ஆனால், தங்கள் குடும்பம், உறவினர்கள் அல்லது தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்கும் போக்கு மக்களிடையே பரவலாகக் காணப்படுவதை நமது அனுபவம் காட்டுகிறது. சில சமயம் அரசிடமிருந்து பொதுமக்கள் திருடிக்கொள்வதையும் காண முடிகிறது. அப்படித் திருடுவது குறித்த நகைச்சுவையான சித்தரிப்பை ‘கடியாபாஸ்’ போன்ற திரைப்படங்களில் காணலாம். சலுகையை எதிர்பார்க்கும் போக்கு சாதி அடிப்படையிலான அரசியலில் கண்கூடாக உள்ளது. எனது இரண்டு ஆண்டுகாலக் களப்பணியில், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சாதாரண வாக்காளர்கள் ஆகியோர், “அவர் எங்க ஆளு, எங்களுக்காக ஏதாவது செய்வார்” என்பதாக அந்த எதிர்பார்ப்பைக் குறிப்பிட்டார்கள். அரசியல்வாதி ஒருவர் கன சுருக்கமாகக் குறிப்பிட்டதுபோல, "சாதி என்பது பொருள் சார்ந்த நன்மையுடன் இணைந்தது”.

அப்படியானால், இன, அரசியல் புவியியல் அடிப்படையிலான சலுகைகளுக்கும் திட்டங்களைத் திறமையாகச் செயல்படுத்துவதற்கும் இடையிலான ஊடாட்டத்தில் வாக்காளர்கள் எங்கே நிற்கிறார்கள்? இந்திய வாக்காளர்கள் அரசின் சிறந்த செயல்திறனுக்கு வெகுமதி அளிக்கும் அதே வேளையில், திறமையான செயலாக்கத்தைவிடவும் விளைவுகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்று எனது ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நான் வாதிடுகிறேன். வாக்காளர்கள் அரசின் செயல்திறனுக்குச் சிறிதளவே வெகுமதியளிக்கிறார்கள். நமது நாளிதழ்கள் சித்தரிக்கும் சூழ்நிலைக்கு மாறாக, நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து (குறிப்பாக, சிறப்பாகச் செயல்படுத்தல்) வாக்காளர்களின் ஆர்வம் குறைவாகவே உள்ளது.

வினியோகக் கொள்கை தொடர்பான பரிசோதனைகள்
இந்தக் கேள்விகளைக் குறித்து ஆராய நான் இணையம் வழியாக ஒரு கணக்கெடுப்பையும் (1,047 வாக்காளர்கள்) சி-ஓட்டர் இந்தியா (CVoter India) மூலம் 12 மொழிகளில், தேசிய அளவிலான பிரதிநிதித்துவம் கொண்ட தொலைபேசிக் கருத்துக்கணிப்பையும் (5,350 வாக்காளர்கள்) நடத்தினேன்.

ஒவ்வொரு கருத்துக்கணிப்பிலும், தற்போதைய அரசாங்கத்தின் செயல்திறன் பற்றிய எதிர்மறைத் தகவல், அதன் நலத்திட்டங்களில் ஒன்றைப் பற்றிய நேர்மறையான தகவல் அல்லது நலத்திட்டத்தை அமல்படுத்துவதில் ஊழலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து அரசு அமல்படுத்திய நலத்திட்டம் பற்றிய நேர்மறையான தகவல் ஆகியவற்றில் எதையேனும் படிக்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டேன்.

எதிர்மறையான கூறு, "இந்தியாவின் பொருளாதாரம் நன்றாக இல்லை" என்பதற்கு அழுத்தம் தந்தது. இது வரலாறு காணாத வேலையின்மை, எரிபொருள் விலை உயர்வு, வளர்ந்துவரும் வருமான சமத்துவமின்மை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியது. நேர்மறையான கூறு, ஏதேனும் ஒரு நலத்திட்டத்தில் (உஜ்வாலா அல்லது பிரதமர் ஆவாஸ் யோஜனா) பயனடைந்தவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டது. போலி அடையாளங்களுடன் சலுகை பெறுவதைக் குறைக்க பயோமெட்ரிக் அங்கீகாரம், ஊழல், வேண்டியவருக்குச் சலுகை அளித்தல் ஆகியவற்றைக் குறைக்க வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகத் தொகையைச் செலுத்துதல், சொத்துக்கள் இருக்குமிடத்தை அறிய ஜியோடேகிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் செய்தல் முதலான நடவடிக்கைகளைக் குறிப்பிடுவதன் மூலம் செயல்திறன் என்னும் கூறு இதில் சேர்க்கப்பட்டது.

ஆய்வுகளின்போது இப்படி வெவ்வேறு தகவல்களை அளித்து அவற்றிலிருந்து எதையேனும் படிக்கும்படி கேட்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டால் அதன் விளைவாக ஆராய்ச்சியாளருக்குக் கிடைக்கும் மக்களின் குழுக்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருக்கும். அவர்கள் படிக்கும் அல்லது கேட்கும் தகவல்களின் வகை மட்டுமே மாறுபட்டிருக்கும். அவர்களுடைய அரசியல் தேர்வுகள் தகவல்களின் தன்மையைப் பொறுத்தே இருக்கிறது; வேறு காரணிகளைப் பொறுத்து அல்ல என்று அதிக நம்பிக்கையுடன் ஆய்வாளர் கூற இந்த முறைமை வழி வகுக்கிறது. இந்த ஆய்வில் நான் பங்கேற்பாளர்களின் அரசியல் தேர்வுகளை இரண்டு வழிகளில் அளந்தேன்: மோடி அரசாங்கத்தின் செயல்திறனை 0 முதல் 10 என்னும் அளவில் மதிப்பிடுமாறு வாக்காளர்களைக் கேட்டேன் (அதிக மதிப்புகள் அதிக வரவேற்பைக் குறிக்கின்றன). அவர்களின் மாநிலத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்குக் கற்பனையாக 10 ரூபாய் நன்கொடை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். யாருக்கும் நன்கொடை இல்லை என்பதிலிருந்து நன்கொடையைப் பல கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுப்பதுவரையிலும் அவர்களுக்குப் பல தேர்வுகள் இருந்தன. பாஜகவுக்கு எவ்வளவு நன்கொடை அளிக்கப்பட்டது என்பதை அறிய நான் ஆர்வமாக இருந்தேன்.

திறமையான செயல்முறையைக் காட்டிலும் விளைவுகளையே வாக்காளர்கள் விரும்புகிறார்கள்
நேர்மறையான செயல்திறன் குறித்த தகவலை நோக்கி வாக்காளர்களின் விருப்பத் தேர்வுகள் நகர்வதைக் கண்டேன். வாக்காளர்கள் சராசரியாக, வேலைவாய்ப்பின்மை, வளர்ந்துவரும் சமத்துவமின்மை, எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றில் மோடி அரசாங்கத்தின் செயல்திறனுக்கு 10க்கு 6 என்று வழங்கினர். நலத்திட்டங்களைப் பற்றிக் கூறப்பட்ட பிறகு அவர்கள் அரசாங்கத்தை மேலும் சாதகமாக மதிப்பீடு செய்தனர் (10க்கு 7க்கு மேல்); அரசாங்கத்தின் மதிப்பு இதனால் 1.14 புள்ளிகள் அல்லது முழு அளவில் 11 சதவீத புள்ளிகள் மேம்பட்டது. நன்கொடை என்று வரும்போது, எதிர்மறையான தகவலைக் கண்ட பிறகு, வாக்காளர்கள் சராசரியாக 10 ரூபாயில் 3.9ஐ பாஜகவுக்கு வழங்கினர். நலத்திட்டங்களைப் பற்றி அறிந்துகொண்ட பிறகு 28 பைசா கூடுதலாக வழங்கினார்கள். இது மொத்த பட்ஜெட்டில் தோராயமாக 2.8 சதவீதம்.

இந்த முடிவுகளிலிருந்து என்ன தெரிகிறது? முதலாவதாக, வாக்காளர்கள் மோசமான பேரியல் பொருளாதாரச் செயல்திறன் மோசமாக இருப்பதில் கவனம் செலுத்தினாலும், அவர்கள் பாஜக அரசாங்கத்தைச் சாதகமாக மதிப்பிடுவதாகத் தெரிகிறது. வாக்காளர்கள் செயல்திறன் அடிப்படையில் மதிப்பிடுவதில் உள்ள வரம்புகளைப் பற்றி இது நமக்குச் சொல்கிறது: செயல்திறன் முக்கியம்தான் என்றாலும் அது மட்டுமே ஒரு கட்சிக்கு ஆதரவாக அமைந்துவிட முடியாது. இரண்டாவதாக, ஒரு கருத்துக்கணிப்பில் வெளிப்படும் போக்குகள் பாஜகவுக்கான ஆதரவை மிகைப்படுத்திக் காட்டலாம். ஆனால் வாக்காளர்கள் நடந்துகொள்ளும் விதம் குறித்த அளவுகோல்கள் மேலும் துல்லியமான சித்திரத்தைத் தருகின்றன.

திட்டங்களைத் திறமையாக அமல்படுத்தும் விஷயத்தில் பலன்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பது குறித்து வாக்காளர்கள் அக்கறை கொள்கிறார்களா? இதை அறிவதற்காக, ஊழலையும் வேண்டியவர்களுக்குச் சலுகை அளிப்பதையும் குறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த கூடுதல் தகவல்கள் வாக்காளர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை ஒப்பிட்டுப்பார்த்தேன். கூடுதல் தகவல்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தின? அதிகம் இல்லை. அரசின் செயல்திறன் குறித்த மதிப்பீடுகள் இதனால் 0.91 புள்ளிகள் உயர்ந்தன. மொத்தக் கணக்கில் இது 2 விழுக்காடு. ஆளுங்கட்சிக்கான நன்கொடை 29 பைசா அதிகரித்தது. ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் இது கிட்டத்தட்ட 3 விழுக்காடு. 

மொத்தமாகத் தொகுத்துப் பார்க்கும்போது, நலத்திட்டங்களை உரியவர்களுக்குக் கொண்டுசேர்ப்பதால் அரசியல் ரீதியாகப் பலன் இருக்கிறது என்பது தெளிவு. ஆனால், அதைத் திறம்பட அமலாக்குவதற்கான கூடுதல் மதிப்பு குறைந்த அளவில்தான் உள்ளது. பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பயனாளர்கள் விஷயத்திலும் இதே நிலை இருப்பதை இன்னொரு ஆய்வில் நான் கண்டறிந்தேன்.

முடிவுகள்
இந்த ஆய்வின் விளைவு என்னவென்றால், வாக்காளர்கள் செயல்முறைக்கு (அதாவது, திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு எவ்வாறு போய்ச்சேருகின்றன என்பது) அதிக அளவில் மதிப்பளித்தால் மக்களுக்கான பலன்கள் இடையில் கசிதல், வேண்டியவர்களுக்குச் சலுகை அளிக்கும் போக்கு ஆகியவற்றைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட பல நிர்வாகச் சீர்திருத்தங்கள் அரசியல் ரீதியாகப் பலன் தரும். தற்போது, ஊழலைப் பற்றிய பொது உரையாடல் உயர்மட்ட ஊழல் வழக்குகளைப் பற்றியதாக மட்டுமே இருக்கிறது. ஊழலில் அல்லது வேண்டியவர்களுக்குச் சலுகை அளிப்பதில் ஈடுபடும் செல்வாக்கு மிக்க நபர்களைச் சுட்டிக்காட்டிப் பேசுவதிலேயே இந்த உரையாடல் கவனம் செலுத்துகிறது. இருப்பினும், இந்த உரையாடலை ஆழப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. கொள்கை வடிவமைப்பு, பலன்கள் உரிய பயனருக்குப் போய்ச்சேருதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நன்கொடையாளர்களும் நிபுணர்களும் செயல்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளைக் குடிமக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதையும் அவற்றுக்கு ஏதேனும் மதிப்பளிக்கிறார்களா என்பதையும் மதிப்பிட வேண்டும். பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் வேண்டியவர்களுக்குச் சலுகை அளித்தல், ஊழல் ஆகியவற்றின் தீய விளைவுகளை இன்னும் வெளிப்படையாக எடுத்துக்காட்டி, திறமையான செயலாக்கத்தின் ஆதாயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும். செயல்திறனுக்கான மதிப்பை உருவாக்க வேண்டும்; அது இருப்பதாக அனுமானித்துக்கொள்ள முடியாது. வாக்காளர்களிடமிருந்து நெருக்கடி வராதவரையிலும், நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குமான அரசியல் ஊக்குவிப்புகள் பலவீனமாகவே இருக்கும்.

ஷிகர் சிங்

Author

ஷிகர் சிங் CASI நிறுவனத்தில் முதுமுனைவுப் பட்ட ஆய்வாளர் அவருடைய ட்விட்டர் கணக்கு: @shikhar_46.

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்