சாலைகளும் உணர்வுகளும்: கேரளத்தில் அரசியல் வெளிகளாக மாறிய சாலைகள்

24/04/2023
IiT English Page

தஸ்தாயேவ்ஸ்கியின் ‘கீழுலகிலிருந்து குறிப்புகள்’ (1864) என்னும் கதையில் வரும் சுவாரஸ்யமான ஒரு பகுதியில், உயரதிகாரி ஒருவரால் மனிதாபிமானமற்ற முறையிலும் அலட்சியமாகவும் நடத்தப்பட்டதால் மனமுடைந்த கதையின் மையப்பாத்திரம் (ஒரு சாதாரண எழுத்தர்), பழிவாங்க முடிவு செய்கிறார். அந்த அதிகாரியைப் பழிவாங்குவதற்கான சரியான வழியைத் திட்டமிடப் பல மாதங்களைச் செலவிடுகிறார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் மையத் தெருவான நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டில் அந்த அதிகாரியை எதிர்கொள்வது என்பதே அந்தத் திட்டம். அங்கு இந்த எழுத்தர் அவரை அடிக்கடி பார்ப்பதுண்டு. அதிகாரியை அந்தத் தெருவில் பார்க்கும்போது ஒதுங்கிப்போவதே எழுத்தரின் வழக்கம். "நான் அவரைப் பார்க்கும்போது ஒதுங்கிப்போகாமல் இருந்தால் என்ன ஆகிவிடும்?" என்று அவர் நினைக்கிறார். பழிவாங்கும் இந்தத் "துணிச்சலான எண்ணம்" அவருக்கு அளவு கடந்த உற்சாகத்தைத் தரத் தொடங்குகிறது. அந்த நிகழ்வைப் பற்றித் "தொடர்ந்தும் தெளிவாகவும்" கனவுகாண வைக்கிறது. பொதுச் சாலையில் எழுத்தருக்கும் அவரது வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குமான இடம் உயர்குடியினரால் மறுக்கப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் அந்தச் சாலையில் இருப்பது எதிர்ப்பைக் காட்டும் செயலாக மாறுகிறது.

பொதுச் சாலையில் தனது இடத்தை உறுதிப்படுத்திக்கொள்வது அதிகாரத்திற்குச் சவால் விடுவதாகும். தவிர, பல ஆண்டுகளாகச் சாதாரணமான இடமாக இருந்த அந்தத் தெரு - குறைந்தபட்சம் தற்காலிகமாக – அரசியலாக்கப்படுகிறது. மார்க்சியத் தத்துவவாதி ஹென்றி லெஃபெப்வெரின் வார்த்தைகளைக் கடன் வாங்கிச் சொல்வதானால், ஒரு பிரிவினர் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட வேலைகளுக்கு அப்பாற்பட்ட நோக்கங்களுக்காகப் பொது வெளிகளைத் “தமதாக்கிக்கொள்வது” ஜனநாயகச் செயல்முறைகளின் முக்கிய அம்சமாகும். நவீனச் சமூகங்களில் மாறிவரும் சமூக உறவுகள் குறித்த நமது ஆய்வுகளின் மையமாக இடங்கள், குறிப்பாக இடங்களின் சமூகக் கட்டுமானம், இருக்க வேண்டும் என்று லெஃபெப்வெர் வாதிடுகிறார்.

பொதுச் சாலையொன்றில் வரையறுக்கப்பட்ட அதிகார உறவுகளைத் தகர்க்கும் எண்ணம் தஸ்தாயேவ்ஸ்கியின் நாயகனுக்குத் தற்செயலாகத் தோன்றியது. இந்தியத் துணைக் கண்டத்தில் அரசியல் ரீதியாக இப்படித் தங்களுக்கான இடத்தை அனைவரும் உறுதிப்படுத்திக்கொள்வதற்குப் பல பதிற்றாண்டுகளாக - பல நூற்றாண்டுகளாக என்றும் சொல்லலாம் – லட்சக்கணக்கான சிறிய கலகங்கள் தேவைப்பட்டிருக்கும். பல நூற்றாண்டுகளாகச் சாதிய ஒடுக்குமுறையின் கீழ் தத்தளித்துக்கொண்டிருந்த இந்தியாவில் இடம் சார்ந்த நடைமுறைகளும் சமூக உறவுகளின் வடிவங்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அடியோடு மாற்றியமைக்கப்பட்டன. வட இந்தியாவில் உள்ள சாதியமைப்பால் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பொது வெளிப்பாட்டிற்குக் குடிமைச் சட்டங்களும், ராம்லீலா போன்ற கொண்டாட்டங்களில் மக்கள் பங்கேற்பும் முக்கியமானவையாக அமைந்தன. அதே சமயத்தில் தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசியவாத இயக்கம் தனியார் அமைப்புகளிலிருந்து விடுபட்டுச் சென்னையின் கடற்கரைப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது காலனித்துவ எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகியவற்றில் முக்கியமான நிகழ்வாக அமைந்தது.

தூய்மை, தீட்டு ஆகியவை குறித்த சட்டங்கள் கேரளத்தில் மிகவும் கடுமையாக இருந்தன (சில சாதிகளைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதிய இந்த மாநிலம், சில சாதிகளைப் "பார்க்க முடியாத", "அணுக முடியாத" நிலைக்கும் தள்ளியது). பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தச் சட்டங்கள் நொறுங்கத் தொடங்கியவுடன் தெருக்கள், சாலைகளின் சந்திப்புகள், தெரு முனைகள், சந்தைகள் ஆகியவற்றின் பிரத்யேக உரிமை தீவிரமான கேள்விக்குள்ளானது. ஜூர்கன் ஹேபர்மாஸ் குறிப்பிடும் நவீன பொது வெளி உருவாவதற்கான ஆரம்ப அறிகுறிகள் வடிவம் பெறத் தொடங்கின. இதற்கிடையில், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரளத்தில் இலக்கியம், பத்திரிகை போன்ற மேடைகள் முற்போக்கானவையாக இருந்தாலும் பிராந்திய அடையாளத்தில் வேரூன்றிய தனித்துவமான பெருநகரத்தன்மையை உருவாக்கின. கல்வி, இலக்கியம், கலாச்சாரம், மதம் ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டாலும், கேரளத்தில் சமூக-வெளி சார்ந்த புதிய உறவுகளை வடிவமைத்த இடம் சார்ந்த குறிப்பான மாற்றங்களைப் பற்றிக் குறைவாகவே எழுதப்பட்டுள்ளது.

லெஃபெப்வெர் கூறுவதுபோல, புதிய சமூக அமைப்பின் தோற்றம், இடம் சார்ந்த புதிய வெளிப்பாட்டையும் சுட்டுகிறது. ஒருபுறம் டீக்கடைகள், வாசகசாலைகள், நூலகங்கள் போன்ற பொதுவான சமூக இடங்கள் உருவாகத் தொடங்கின. மறுபுறம் சாலைகள், பொது நிறுவனங்கள், மத நிறுவனங்கள் போன்ற பிற இடங்களில் மக்கள் புழங்குவதற்கான விதிகள் மறுபரிசீலனை செய்யப்பட்டன. இந்த முயற்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு திருவிதாங்கூரில் நடந்த சன்னார் கிளர்ச்சி போன்ற போராட்டங்களின் மூலம் வடிவம் பெறத் தொடங்குகின்றன. திருவிதாங்கூரில், சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் அப்போது கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்தார்கள். உயர்சாதி இந்து ஆண்கள் இப்பெண்களை இழிவுபடுத்தி, அவர்களின் மார்பகங்களை மூடியிருந்த ஆடைகளைப் பொது இடங்களில் கிழித்தது பரவலான எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. மதமாற்றங்கள் குறித்துச் சாதி இந்துக்கள் எச்சரிக்கையாக இருந்தபோதிலும் பொதுச் சாலைகள், சந்தைகள் போன்ற இடங்கள் மீதான அவர்களின் ஆதிக்கத்திற்கு மதமாற்றம் முன்வைத்த சவாலால் ஆடிப்போனார்கள். சென்னை மாகாண ஆளுநர், திருவிதாங்கூரில் உள்ள மிஷனரிகள் ஆகியோரின் தலையீட்டைத் தொடர்ந்து, மன்னர் உத்தரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா 1859ஆம் ஆண்டில் சன்னார் பகுதியைச் சேர்ந்த பெண்களுக்குத் "தாங்கள் விரும்பும் உடையைக் கொண்டு தங்கள் மார்பகங்களை மறைத்துக்கொள்வதற்கு" சுதந்திரம் உண்டு என்று அறிவித்தார். அந்த ஆடைகள் "உயர் சாதிப் பெண்கள் அணியும் ஆடைகளைப் போல" இருக்கக் கூடாது என்றும் அவர் அறிவித்தார்.

ஷோபா யாத்திரையில் கூடும் கூட்டம், 2017.

அடுத்த அரை நூற்றாண்டில், அரசியல் உணர்வும் சமூக சமத்துவத்திற்கான இயக்கங்களும் உருவாகும் இடங்களாகக் கேரளத் தெருக்கள் உருப்பெற்றன. பொது இடங்கள் மீதான உரிமையை வெளிப்படையாக நிலைநாட்டிக்கொள்ளும் இத்தகைய செயல்பாடுகள் 1893இல் அய்யன்காளியின் புகழ்பெற்ற மாட்டு வண்டிப் போராட்டத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தன. தனது சாதியினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சாலைகளில், உயர் சாதியினர் அணியும் உடைகளையும் தலைப்பாகையும் – சாதியத்தின் இந்த அடையாளங்களும் அவருக்கும் அவரது சாதியினருக்கும் தடைசெய்யப்பட்டவை - அணிந்தபடி நடமாடுவதே அய்யன்காளியின் எதிர்ப்பின் முறையாகும். சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வைக்கம் கோயிலுக்கு அருகில் உள்ள சாலைகளில் நடந்து செல்வதற்கான வைக்கம் சத்தியாகிரகம் போன்ற இயக்கங்கள் இந்த முயற்சிகளுக்கு உத்வேகம் அளித்தன.

1920களிலும் 1930களிலும் எழுந்த தேசியவாத, சோஷலிச அலைகள் பொதுச் சாலைகளை ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும் வர்க்க எதிர்ப்புக்குமான போராட்டக் களங்களாக மாற்றின. பிரபல புள்ளிகளின் (பெரும்பாலும் ஆண்கள்) நினைவுக் குறிப்புகளும் சுயசரிதைகளும் இந்த மாற்றங்களைப் பிரதிபலிக்கத் தொடங்குகின்றன. உலகம் பற்றிய கண்ணோட்டங்களையும் அரசியல் நிலைப்பாடுகளையும் வடிவமைக்கும் இடங்களாகப் பொதுச் சாலைகள் வகிக்கும் பங்கு - பெரும்பாலும் மிகச் சாதாரணமான, அன்றாட அனுபவங்கள் மூலம் – தனித்து நிற்கத் தொடங்குகிறது. கேரள மாநிலத்தின் முதல் முதலமைச்சரும் கம்யூனிஸ்ட் தலைவருமான இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தனது நினைவுக் குறிப்பில் எழுதியதை இதற்கான எடுத்துக்காட்டாகக் கூறலாம். திருச்சூரில் உள்ள சாலைகளில் நடந்து செல்வதும் கருப்பட்டண்ணாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு அருகில் மாலை உலா வருவதும் தன்னுடைய அரசியலை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தது என்று அவர் எழுதினார். பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களைச் சந்திக்கவும் பழகவும் இயன்றதே இதற்குக் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இத்தகைய அன்றாட அனுபவங்கள் தன் வாழ்க்கையில் "ஆழமான தாக்கத்தை" ஏற்படுத்தியதாக அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் குறிப்பிட்டார்.

திருவனந்தபுரம் மானவீய வீதியில் இசை நிகழ்வு

இருபதாம் நூற்றாண்டில் கேரளத்தில்  சமயம்சாராத வேறு பல விவாத வெளிகள் உருவாகிவந்தாலும், தெருவீதிகளே அம்மாநில மக்களின் விழிப்புணர்வு வசீகரமாக வெளித்தெரிவதற்கான சிறந்த வடிவங்களாகத் தொடந்தன. சில மேலாதிக்கங்களுக்குச் சவால்விடுவதற்கும், பாலின மேலாதிக்கம் போன்ற சிலவற்றை நிதரிசனங்களாக  வெளிக்காட்டுவதற்கும் ஏற்ற மார்க்கங்களாக அவை விளங்கின. பல்வேறு மதங்களையும் நம்பிக்கைகளையும் சார்ந்த மக்களின் ஊர்வலங்கள் கேரளம் முழுவதிலும் நடக்கின்றன. திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகக் கட்டிடத்திற்கு வெளியே உள்ள நடைபாதையின் ஒரு பகுதியைப் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். இவ்வாறாக, அரசியல், மதம், கலாச்சாரம் ஆகிய காரணங்களுக்காகவும் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்வதற்காகவும் சாலைகளைத் தன்வயப்படுத்திக்கொள்வவது சமகாலக் கேரளத்தின் ஒரு அம்சமாகத் தொடர்கிறது. கடந்த சில பதிற்றாண்டுகளில் பொது இடங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அரசியல், கலாச்சார, பொருளாதார நெருக்ககள் உருவாகியுள்ளன. இதன் விளைவாகப் பொது நிலங்களைத் தனியார்மயமாக்குவது போன்றவை அல்லது கொச்சி, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் நகர்ப்புற நிலப்பரப்புகளை மறுவடிவமைப்பு செய்வது ஆகியவை நடக்கின்றன. ஆனாலும், போராட்டத்திற்கும் எதிர்ப்புக்குமான சில புதிய இடங்களும் தோன்றியுள்ளன.

திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் உள்ள மானவீய வீதி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இங்கு பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கலை, கலாச்சார நிகழ்வுகள், நாட்டுப்புறப் பாடல்கள், திரையிடல்கள் ஆகியவை அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படுகின்றன. எந்த அரசியல் அல்லது மத அமைப்பின் நேரடி ஆதரவும் இல்லாமல் செயல்படுவதே இந்த அமைப்பின் பலம் என்று அமைப்பாளர்களில் ஒருவர் என்னிடம் தேநீர் அருந்தும்போது கூறினார். மானவீய வீதி மக்களை ஈர்க்கத் தொடங்கியவுடன், அதைச் சொந்தம் கொண்டாட முயன்ற அரசியல் கட்சிகள் இந்த இடத்தைத் "தன்வயப்படுத்திக்கொள்ள" முனைந்தன. இந்நிகழ்வுகளை ஆதரிக்கும் புரவலர்கள் இந்த முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்தார்கள். இத்தகைய பண்பாட்டு மையகளின் தேவையை அங்கீகரித்து முந்தைய இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் 2017-18 நிதிநிலை அறிக்கையில் மானவீய வீதியை மேம்படுத்த 50 லட்சம் ரூபாயை ஒதுக்கியது. திறன்மிகு நகரத் திட்டத்தின் ஒரு பகுதியாக மறுசீரமைப்பு முன்மொழிவுக்கும் ஒப்புதல் அளித்தது.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான போராட்டத்தின்போதும்  பழமைவாதிகளின் போராட்டங்களுக்கு எதிர்வினையாகப் பொதுச் சாலைகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். பிறகு முற்போக்குக் குழுக்களும் மாநில அரசும் தேசிய நெடுஞ்சாலைகளில் 620 கிலோமீட்டர் நீளமுள்ள மனிதச் சங்கிலியை நடத்தின. கேரள அரசியல் கட்சிகளின் அண்மைக்காலத் தேர்தல் அறிக்கைகளில் மைதானம் போன்ற பிற பொது இடங்களும் இடம் பெறுகின்றன.

இணையச் செய்தித் தளங்கள், சமூக ஊடகங்கள் போன்ற மெய்நிகர் வெளிகளின் மீது ஆளுங்கட்சி கிட்டத்தட்ட ஏகபோக உரிமை கொண்டிருப்பதாகத் தோன்றும் இந்த நேரத்தில், இந்தியாவில் அரசியல் என்பது அடிப்படையில் இடம் சார்ந்தது என்பதையும் அது தொடர்ந்து அப்படியே நீடிக்கிறது என்பதையும் அங்கீகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது.  இந்தியத் தெருக்கள், பொதுச் சாலைகள் ஆகியவை அரசியல் போராட்டங்களின் முன்னணிக் களமாகவும் மையமாகவும் இருக்கின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் புதுதில்லி ஷாஹீன்பாகில் பெண்கள் நடத்திய போராட்டம், வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தில்லிக்கு வெளியே முக்கியச் சாலைகளை ஆக்கிரமித்த விவசாயிகளின் போராட்டம், பெருந்தொற்றின்போது நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட நீண்ட நடைப்பயணம் ஆகியவை இந்த நாட்டின் அரசியல் சூழலை வடிவமைக்கும் நிகழ்வுகள் சாலைகளில் தொடர்ந்து நிகழ்ந்தபடி இருக்கும் என்பதற்கான சாட்சியமாக உள்ளன. 

எஸ். ஹரிகிருஷ்ணன்

Author

எஸ். ஹரிகிருஷ்ணன் டப்ளின் சிட்டி பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர். Social Spaces and the Public Sphere: A Spatial-history of Modernity in Kerala நூலின் ஆசிரியர். Ala என்னும் இணைய இதழின் இணை ஆசிரியர். அவருடைய ட்விட்டர் பக்கம்: @harikrishnan_91

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்