ஒன்றியமும் மையமும்: இந்தியாவில் கூட்டாட்சியின் அரசியல் மொழி

27/02/2023
IiT English Page

2021ஆம் ஆண்டு மே 21 அன்று ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தமிழ்நாட்டரசு தன்னுடைய ஆரம்ப நகர்வுகளில் ஒன்றாக, அதிகாரபூர்வமான தகவல் தொடர்புகளில் "மத்திய அரசு" என்ற சொற்றொடரைத் தவிர்க்கத் தொடங்கியது. இந்திய அரசை மத்திய அரசு (Central Government) என்பதற்குப் பதிலாக ஒன்றிய அரசு (Union Government) என்று குறிப்பிடத் தமிழ்நாட்டரசு முடிவுசெய்தது. இந்தியக் கூட்டாட்சி அமைப்பில் நிகழ்ந்துவரும் வீழ்ச்சியைத் தடுக்கும் நோக்குடன் இந்த முடிவை அது எடுத்தது. கூட்டாட்சி அமைப்புக்கும் மாநிலத்தின் சுயாட்சிக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக இந்தப் பெயர் மாற்றம் தேவைப்பட்டது என்கிறார் எழுத்தாளரும் தமிழ் மொழியுரிமைப் போராளியுமான ஆழி செந்தில்நாதன்.

இந்திய அரசியலில் 1930களிலும்1940களிலும் இருந்ததைப் போலவே, கூட்டாட்சி என்பது சந்தேகத்திற்கிடமின்றி அடிப்படைக் கோட்பாடாகத் தற்போது மாறியுள்ளது. கோட்பாடுகள் என்பவை வெறும் சொற்கள் அல்ல. சொற்களிலிருந்து கோட்பாடுகளை வேறுபடுத்தும் ஒரு முக்கிய அம்சம் அவற்றின் தெளிவின்மை. 20ஆம் நூற்றாண்டின் முக்கியமான வரலாற்றறிஞர்களில் ஒருவரான ரெய்ன்ஹார்ட் கொசெல்லக்கைப் பொறுத்தவரை, அடிப்படைக் கோட்பாடுகள் "ஒரு குறிப்பிட்ட காலத்தின் மிக அவசரமான சிக்கல்கள் உருப்பெறுவதற்கு இன்றியமையாதவை." அவை “மிகவும் சிக்கலானவை, எப்போதும் தவிர்க்க முடியாதவை, தெளிவற்றவை, சர்ச்சைக்குரியவை, எதிர்ப்புக்கும் உட்பட்டவை” என்றும் அவர் கூறியிருக்கிறார். கூட்டாட்சி என்பதன் பொருள் மையத்திற்கும் அலகுகளுக்கும் இடையிலான அதிகாரப் போராட்டங்களின் மையமாக இருக்கும் வகையில் கூட்டாட்சிக் கோட்பாடு இன்று நமது அரசியல் மொழியையும் சொல்லாடலையும் வடிவமைக்கிறது. முன்பு இல்லாத வகையில் நிகழ்ந்துவரும் ஒற்றையாட்சிக் கூறுகளின் வளர்ச்சியை இது எதிர்க்கிறது. முக்கியமாக, இந்திய மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை மதிக்ககும் கூட்டாட்சி மரபை நினைவுபடுத்தி அதை மீட்டெடுப்பதற்கான அரசியல் மொழியை அது உருவாக்குகிறது.

சொற்களின் பொருள்கள் மூலம் தமிழ்நாடு மேற்கொள்ளும் எதிர்ப்புச் செயலானது, இந்திய மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கூட்டாட்சி என்ற அரசியல் மொழியை மீட்டெடுப்பதற்கான பெரியதொரு திட்டத்தை முன்னிட்டுப் பேச வேண்டும். இந்த விவாதத்தின் விதிமுறைகள் ஒருவர் யூகிக்கக்கூடியதைக் காட்டிலும் மிகவும் சிக்கலானவை. ஒன்றிய அல்லது கூட்டாட்சி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான வேறுபாடு வரலாற்று ரீதியானது; 1930களிலும் 1940களிலும் இது குறித்துப் பரவலாக விவாதம் நடந்தது. 1950இல் கூட்டமைப்பிற்கு மாறாக இந்தியாவை "ஒன்றிய"மாக ஆக்கியது, ஒன்றியத்திற்கும் மையத்திற்கும் இடையிலான வேறுபாட்டின் வலிமையைக் குறைத்துவிட்டது. இந்த அமைப்பில் உள்ள மாநிலங்களுக்கெனச் சொந்தமான இறையாண்மை இல்லை என்ற கருத்து கூட்டமைப்பு என்பதற்குப் பதிலாக ஒன்றியம் எனக் குறிப்பிடுவதன் அடிப்படையாக அமைந்தது.

மத்திய அரசின் வரலாறு
காலனிய அரசாங்கமும் இந்தியத் தலைவர்களும் "மையம்", "மத்திய அரசாங்கம்" என்ற சொற்களை அடிக்கடி பயன்படுத்தினார்கள். 1919ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டம், உள்ளூர் சட்டமன்றங்கள் ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்தி மத்திய சட்டமன்றம், மத்திய அரசாங்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டதுவரையிலும், மத்திய அரசு என்பது கவர்னர் ஜெனரலையும் மாகாண அல்லது உள்ளாட்சி அரசாங்கங்கள் என்பது கவர்னரையும் குறிக்கும். இன்று, " உள்ளாட்சி" என்ற சொல் எந்த வகையிலும் மாநில அரசாங்கத்தைக் குறிக்காது என்பதும் நகராட்சி அல்லது பஞ்சாயத்து அரசாங்கத்தை மட்டுமே குறிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. காலனித்துவ இந்தியாவில் "மையம்" என்பது பிரிட்டிஷ் இந்தியாவின் அரசாங்கத்தின் இருக்கையைக் குறித்தது. பிரிட்டிஷ் இந்திய அரசு, மையத்தில் குவிந்த அதிகாரங்களுடன் ஒற்றையாட்சி நடக்கும் அரசாக இருந்தது. எனவே, ஏகாதிபத்திய அரசியலமைப்பில் மையமும் மத்திய அரசாங்கமும் முக்கியமான வகைமைகளாக இருந்தன.

காலனிய அரசு தந்த பொருளை ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு மொழியிலேயே இந்திய தேசியவாதிகளும் பேசினார்கள். இந்திய அரசியலமைப்பின் முதலாவது பெரிய தேசியவாத அறிக்கையாக அமைந்த 1928ஆம் ஆண்டின் நேரு அறிக்கை Nehru Report (1928), "மத்திய அரசு" என்ற சொற்றொடரைத் தாராளமாகப் பயன்படுத்தியது. மாகாண அரசாங்கங்களின் சட்டங்களை ரத்து செய்வது உள்ளிட்ட அசாதாரணமான அதிகாரங்கள் மத்திய அரசிற்குத் தேவை என்றும் அந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் கோரினார்கள். "அந்த அதிகாரங்கள் இல்லாமல் எந்த மத்திய அரசையும் நடத்த முடியாது" என்றார்கள்.

இந்தியாவின் எதிர்கால அரசியலமைப்பு கூட்டாட்சியாக இருக்க வேண்டும் என்ற உண்மை 1920களின் பிற்பகுதியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியாவின் எதிர்கால அரசியலமைப்பிற்கான கொள்கைகளைப் பரிந்துரைக்க சைமன் கமிஷனை (1927-29) அரசு நியமித்தது. பிரிட்டிஷ் இந்தியா, சமஸ்தானங்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய இந்தியக் கூட்டமைப்பை நிறுவ வேண்டும் என அந்தக் கமிஷனின் அறிக்கை வாதிட்டது. காலனிய ஒற்றையாட்சி அரசைக் கூட்டாட்சி அரசாக மாற்றுவதே சைமன் கமிஷனின் முன் இருந்த முக்கியப் பணி. ஆக, மத்திய என்பதற்கு மாற்றாக, "கூட்டாட்சி" என்னும் புதிய அரசியலமைப்பு வகைமை பிற்காலக் காலனித்துவ இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. 1930களில் கூட்டமைப்பை உருவாக்குவதற்காகக் கோடிகாட்டப்பட்ட பெரும்பாலான திட்டங்களில் மத்திய, கூட்டாட்சி ஆகியவற்றுக்கிடையே கவனமான வேறுபாட்டு நிலவியதைக் காணலாம். பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களுக்குப் பொதுவான விஷயங்களைக் கையாளும்போது மத்திய விவகாரங்கள் / மத்திய அரசாங்கம் என இந்திய அரசாங்கம் குறிப்பிடப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாணங்களையும் சமஸ்தானங்களையும் இணைத்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கான விவகாரங்களைக் குறிப்பிடும்போது கூட்டாட்சி விவகாரங்கள் / கூட்டாட்சி அரசு எனக் குறிப்பிடப்பட்டது.

1930 அக்டோபரில், லண்டனில் முதல் வட்ட மேசை மாநாடு கூடுவதற்குச் சற்று முன்னதாக, ஹைதராபாத் பிரதம மந்திரி அக்பர் ஹைதாரி “இந்தியாவுக்கான கூட்டாட்சித் திட்ட”த்தை முன்வைத்த அதே பொருளில் இது அமைந்துள்ளது. சமஸ்தானங்களுடனான உறவுகளை நிர்வகிக்கும் அரசியல் துறை தொடர்பான ஆவணக் காப்பகங்களில், 1930களில் கூட்டாட்சி, மத்திய அரசு ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடு தொடர்பான கோப்புகளைக் காணலாம். 1930களில் இந்தியாவின் மாறிவரும் அரசியலமைப்பின் கட்டமைப்பில் சமஸ்தானங்கள் கூட்டாட்சிக் கூறுகளாக இருந்தன, ஏனெனில் சமஸ்தானங்கள் தொடர்பாக மட்டுமே மத்திய அரசு என்பதற்கு மாற்றாகக் கூட்டாட்சி என்பது ஒரு அரசியலமைப்பு வகைமையாக இருக்க முடியும்.

வெஸ்ட் மின்ஸ்டர் மாதிரியிலான நாடாளுமன்ற அரசாங்கத்தை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த இந்திய தேசியவாதிகள் வலிமை வாய்ந்த மத்திய அரசாங்கத்தை ஆணித்தரமாக முன்னிறுத்தினார்கள். இது தேசியவாதிகள், சமஸ்தான மன்னர்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கிடையிலான வேறுபாடுகளின் முக்கியப் புள்ளியாக மாறியது. வலிமை வாய்ந்த மத்திய அரசாங்கம் குறித்து முஸ்லிம் லீக் நீண்ட காலமாகவே ஐயம் கொண்டிருந்தது. நேரு அறிக்கைக்கு எதிர்வினையாக முகம்மது அலி ஜின்னா பதினான்கு அம்சங்களை முன்வைத்தார். எஞ்சிய அதிகாரங்கள் என்பவை மத்திய அரசிடம் அல்லாமல் மாநில அரசுகளிடம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார். மாகாணங்களுக்குச் சுயாட்சி, மத்திய அரசுக்கு வரம்பிற்குட்பட்ட அதிகாரங்கள் என்பதே 1930களிலும் 1940களிலும் கூட்டாட்சி குறித்த முஸ்லிம்களின் சிந்தனையாக இருந்தது.

அரசியல் நிர்ணய சபை
அரசியல் நிர்ணய சபையில் வலுவான மையம் என்பதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையிலான அரசியல் சாசன வரைவுக் குழு, வலுவான மத்திய அரசு வேண்டுமென அழுத்தமாக வாதிட்டது. "மையம்", "மத்திய அரசு" என்ற சொற்கள் எல்லா விவாதங்களிலும் பரவலாக இடம்பெற்றிருந்தாலும் 1950இல் உருவான அரசியலமைபுச் சட்டத்தில் அந்தச் சொற்கள் இடம் பெறவில்லை. குறிப்பாக அம்பேத்கர், விவாதத்தின் முக்கியமான தருணங்களில் "மையம்" என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இப்போது சட்டப் பிரிவு 356 (அரசியலமைப்பின் வரைவில் இது பிரிவு 278) பற்றி விவாதிக்கும்போது, அம்பேத்கர், "மாகாணத்தில் நல்ல அரசாங்கம் இருக்கிறதா இல்லையா என்பதை மத்திய அரசு தீர்மானிக்க வேண்டும்" என்று கூறினார். இது அவரது சிந்தனை முறையைச் சுட்டிக்காட்டுகிறது. “டாக்டர் அம்பேத்கர் எல்லாவற்றையும் மத்திய அரசுக்கு எடுத்துக்கொண்டுவிட்டார்” என அரசியல் நிர்ணய சபையில் டாக்டர் லோகநாத் மிஸ்ரா கூறிய கருத்தையும் இது நிரூபிக்கிறது. ஹஸ்ரத் மொஹானி, தாமோதர் ஸ்வரூப் சேத் போன்ற தலைவர்கள் மையப்படுத்தலையும் மாநிலங்களுக்கு இறையாண்மை இல்லாத நிலையையும் கடுமையாக எதிர்த்தார்கள். அளவுக்கதிகமாக மையப்படுத்தல் "சர்வாதிகார”த்திற்கு வழிவகுக்கும் என்று ஸ்வரூப் எச்சரித்தார்.

இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக அமையும் என்றாலும், அது எந்த வகையிலும் சமஸ்தானங்களும் சிறுபான்மையினரும் பரிந்துரைத்த வகையிலான கூட்டமைப்பாக இருக்காது என்பதை அரசியலமைப்புச் சபை விவாதங்கள் காட்டுகின்றன. பிராந்திய உணர்வு, மாகாண சுயாட்சி ஆகியவற்றின் வலுவான உணர்வின் அடிப்படையில் சமஸ்தான மன்னர்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் சிந்தனை அமைந்தது. மத்திய அரசு குறைந்தபட்சச் செயல்பாடுகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்; பெரும்பாலான விவகாரங்கள் மையத்திற்கும் மாகாணங்களுக்கும் இடையில் பிரிக்கப்பட வேண்டும். மத்திய, மாகாண அரசுகளுக்கான பொதுவான விவகாரங்களுக்கான கூட்டுப் பட்டியல் மிகக் குறைவாகவே இருக்க வேண்டும் என அவர்கள் கருதினார்கள். ஆனால், 1930கள் அல்லது 1940களில் யாரும் நினைத்திருந்ததைவிட மிகப் பெரிய கூட்டுப் பட்டியல் இந்தியாவில் உருவானது. சுதந்திர இந்தியாவில் காலனித்துவ அரசின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மீண்டும் உருவாக்க முயன்ற தேசியவாதச் சிந்தனையின் ஆதிக்கம் அதிகரித்துவந்ததையே இது காட்டுகிறது. மத்திய அரசின் அதிகாரங்களை அதிகரிப்பதன் மூலம் அவர்கள் "பழைய பிரிட்டிஷ் ஒற்றையாட்சி இந்தியப் பேரர”சைப் போலவே "ஒற்றையாட்சி இந்தியப் பேரர”சை உருவாக்கிவிட்டார்கள் என்று ஹஸ்ரத் மோஹானி 1949, செப்டம்பர் 2  அன்று, அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கரையும் ஜவஹர்லால் நேருவையும் குற்றம்சாட்டினார்.

வரலாற்று நினைவுகளும் மொழி தரும் ஆறுதல்களும்
ஒன்றிய அரசு, மத்திய அரசு ஆகிய இரண்டுமே இந்திய அரசைக் குறிப்பிடுவதற்குப் பொருத்தமான சொற்கள்தாம் எனபதை வரலாற்றினூடே மேற்கொள்ளும் இந்தப் பயணம் நமக்குக் காட்டுகிறது. இந்திய அரசு என்பதுதான் இந்தியாவிற்கு வெளியே அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வமான, அரசியலமைப்பின் அடிப்படையிலான அமைப்பு. ஒன்றிய அரசா அல்லது மத்திய அரசா என்பது உள்நாட்டில் மட்டுமே முக்கியத்துவம் பெறும் விஷயம். இந்திய தேசியவாதச் சிந்தனையின் வரலாறும் பின்காலனித்துவ இந்திய அரசுகளை உருவாக்குவதில் அது ஆற்றிய அடிப்படையான பங்கும் இந்த இரண்டு சொற்றொடர்கள் மூலம் பதிவாகியுள்ளது. எழுதப்பட்ட அரசியலமைப்பில் "மத்திய அரசாங்கம்" என்ற தொடர் இடம் பெறவில்லை. அரசியல் சட்டத்தை எழுதுவதற்கு முன்பு அதற்கான சிந்தனைகள் உருவாகி விவாதிக்கப்பப்பட்ட அரசியல் மொழியின் திருப்திகரமான பதிவாக அது அமையவில்லை என்பதையே இது நமக்குக் காட்டுகிறது.

ஓ.வி. விஜயனின் கருத்துப்படம்; தேதி கிடைக்கவில்லை

Rama Sundar and Nancy Hudson-Rodd (eds.), Tragic Idiom: O.V. Vijayan’s Cartoons and Notes on India (Kottayam: D. C. Books, 2006) என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரல் அரசியல் மொழியின் புதிய உலகின் கதவைத் திறக்கிறது. இழந்த போர்களையும் மாற்று அரசியல் பாதைகளையும் நினைவில் கொள்வது நம் அன்றாட மொழிக்கு அப்பால் இருக்கும் கோட்பாடுகளையும் சொற்களையுமே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. பல இந்திய மொழிகளில், "ஒன்றிய", "மத்திய" ஆகிய சொற்களுக்கிடையிலான வேறுபாட்டைக் காட்டுவது கடினம். ஒன்றியம், மையம் ஆகிய இரு சொற்களும் ஒன்றிணைந்த நிலையில் கூட்டாட்சி என்பதற்கு மாற்றாக அமைவதை இது நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. கூட்டாட்சி என்பது பெரும்பாலான மொழிகளில் அரசியல் மற்றும் சட்ட ரீதியான  சிந்தனையின் தனித்துவமான வகையாகும். ஒன்றியம் எனபது பிறக்கும்போதே மையத்துடன் தொப்புள் கொடி உறவைக் கொண்டது. அரசியல் சார்ந்த சொற்களிலும் சொல்லாடல்களிலும் ஒன்றியத்தையும் மையத்தையும் அர்த்தமுள்ள வகையில் வேறுபடுத்தக்கூடிய சொற்களின் போதாமையை இது விளக்குகிறது. உதாரணமாக, மலையாளத்தில் மையத்திற்கும் ஒன்றியத்திற்கும் இடையிலான வேறுபாடு மிகவும் குறைவு என்றாலும், கூட்டமைப்பு அல்லது கூட்டாட்சி அரசாங்கம் (சம்யுக்தாபரணம்), ஒற்றை அதிகார அரசாங்கம் (ஐக்யாபரணம்) ஆகியவை வெவ்வேறு பொருள்களைத் தருகின்றன. மையம் என்றால் கேந்திரம், ஒன்றியம் என்றால் ஐக்யம்/ஏகதா. ஆனால் யூனியன் பிரதேசங்களையும் மத்தியிலிருந்து ஆளப்படும் பகுதிகளையும் வேறுபடுத்திக் காட்டுவதற்கு மலையாளத்தில் எந்தச் சொல்லும் இல்லை. இரண்டும் கேந்திராபரணப் பிரதேசம்  என்றுதான் வழங்கப்படுகின்றன (இந்தியிலும் இப்படித்தான் உள்ளது). மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் குறிப்பிடுவது என்னும் தமிழ்நாட்டின் நடவடிக்கையை எதிர்ப்பவர்கள், ஒன்றிய அரசு என்பது மைய அரசைக் குறிக்கவில்லை என்றும் அது உள்ளாட்சி அமைப்பைக் (பஞ்சாயத்து ஒன்றியம்) குறிக்கிறது என்றும் கூறுகிறார்கள். இந்தியாவில் இன்று உரிமைகோரலுக்கு இன்றியமையாத, முறையான கோட்பாடுகள் இல்லாத மொழிகளில் கூட்டாட்சிக் கோட்பாடுகளை மீட்டெடுப்பதற்கான சவாலை இது சுட்டிக்காட்டுகிறது எனக் கருதலாம்.

இந்தியாவை ஒரு கூட்டமைப்பு என்று அழைப்பது அல்லது இந்திய அரசாங்கத்தை மத்திய அரசு என்று குறிப்பிடுவது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதல்ல. ஏனென்றால் கூட்டமைப்பு/கூட்டாட்சி அல்லது மத்திய என்னும் சொல் அரசியல் சட்டத்தில் இடம்பெறவில்லை. இருப்பினும், கூட்டமைப்பு என்பது பெரும்பாலான இந்திய மொழிகளில் இருக்கும் ஒரு தனித்துவமான மொழியியல், அரசியல் வகைமையாகும். அரசியல் சட்டம் இவ்விஷயத்தில் மௌனமாக இருந்தாலும் ஆளுங்கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் இந்தியாவை ஒரு கூட்டமைப்பாகவே பார்க்க விரும்புகின்றன. இந்நிலையில் அரசியல் சட்டப்படி பொருத்தமான சொல்லைத் தமிழ்நாடு தேர்வுசெய்கிறது என்பது இவ்விஷயத்தில் அக்கறையுள்ள அனைவருக்கும் அவ்வளவு முக்கியமானதல்ல. நாம் பேசும் மொழிகள் ஒன்றியத்தையும் மையத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பதற்கான வாய்ப்பை நமக்கு வழங்காவிட்டாலும் அப்படி வேறுபடுத்திப் பார்த்தாக வேண்டிய கூட்டாட்சி மொழியை மீட்டெடுப்பதற்கான அவசரத் தேவையைத் தமிழ்நாட்டின் நிலைப்பாடு நமக்கு உணர்த்துகிறது. மத்திய அரசு, கூட்டாட்சி ஆகியவற்றுக்கு இடையிலான பிரிவினையின் சிக்கலான வரலாறும் இந்தியா உருவானபோது ஒன்றியமும் மையமும் இணைந்து பிறந்த நிலையும் இந்தியாவில் வளர்ந்துவரும் மையப்படுத்துதலை எதிர்ப்பதில் இத்தகைய பணியை அர்த்தமுள்ளதாக்குகின்றன.

சரத் பிள்ளை

Author

சரத் பிள்ளைCASIஇல் முதுமுனைவு ஆய்வாளர். இவருடைய முதல் நூலுக்கான திட்டம் காலனியத்திற்குப் பிந்தைய / பிற்கால இந்தியாவில் கூட்டாட்சிக் கருத்தியல்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் குறித்து ஆராய்கிறது. அவருடைய ட்விட்டர் பக்கம்: @i_sarathpillai

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்