இமயமலை அடிவாரத்தின் நகர்ப்புறமும் கிராமப்புறமும்

11/09/2023
IiT English Page

"விவசாயம் முன்பு இருந்ததைப் போல இல்லை." கோவிடால் ஏற்பட்ட இடைவெளிக்குப் பிறகு 2022 கோடையில் களப்பணிக்காகக் கலிம்போங் சென்றபோது அங்கே இருப்பவர்கள் இதைத்தான் என்னிடம் சொன்னார்கள். ஏதோ ஒன்று மாறிவிட்டது. மற்றவர்களிடமிருந்து எங்களை வேறுபடுத்திக் காட்டுவதே விவசாயம்தான் என்று இமயமலை அடிவாரத்தில் உள்ள மேற்கு வங்க மாவட்டமான காலிம்போங்கிலுள்ள மக்கள் முன்பெல்லாம் சொல்வதுண்டு. விவசாயமும் நிலத்தின் மீதான குத்தகை உரிமைகளும் நேபாளிகள், பழங்குடி மக்களான லெப்சாக்கள், பூட்டியாக்கள் ஆகியோருக்கு, கலிம்போங்தான் எங்கள் வீடு என்று சொல்லிக்கொள்ளும் வித்தியாசமான அரசியல் உணர்வைக் கொடுத்தன. டீஸ்டா ஆற்றின் மறுகரையில் உள்ள தேயிலைத் தோட்ட மாவட்டமான டார்ஜிலிங்கைவிடவும் கலிம்போங்கில் கல்வியறிவு அதிகமாக இருப்பதாகவும், அங்குள்ள மக்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். கலிம்போங்கில் வேளாண்மையும் ஊர்ப் பெருமித உணர்வும் எப்போதுமே உறுதியாக இருந்தன என்பது இதன் பொருளல்ல. ஆனால், ஏதோ ஒன்று மாறிவிட்டது. குறுகிய காலத்திலேயே இந்தப் பிரதேசத்தில், குறிப்பாக கிராமங்களில் வாழ்வதற்கான நிலைமை சந்தேகத்திற்குரியதாக ஆகிவிட்டது.

கலிம்போங் விவசாயிகள் பலரும் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டனர். உற்பத்திச் செலவு, குறிப்பாக அரிசிக்கான செலவு, சந்தையில் அதற்கு இருக்கும் மதிப்பைவிட உயர்ந்துள்ளது. விற்பதற்குச் சந்தை இல்லை என்பது மட்டுமின்றி, விவசாயத்துக்குத் தண்ணீரும் இல்லை என அவர்கள் விளக்கினார்கள். கிராமவாசிகள், குறிப்பாக இளைஞர்கள், சேவைத் துறையில் வேலை தேடி இந்தியாவின் நகரங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது அதிகரித்துவருகிறது. பெருந்தொற்றுக் காலத்தில் ஏதாவது மாறிவிட்டதா? அப்படியின்றுமில்லை. இது நீண்ட காலமாக இருந்துவரும் நெருக்கடி.

டார்ஜிலிங், டோர்ஸ் ஆகிய இடங்களிலுள்ள பல பகுதிகளிலும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்துள்ளன. ஆனால் காலனியாட்சிக் காலத்தின் அதிகாரிகள் தேயிலைத் தோட்டங்களுக்காகக் கலிம்போங்கை உருவாக்கவில்லை. காலிம்போங் காலனித்துவ அல்லது முதலாளித்துவக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று இதற்குப் பொருளல்ல. அத்தகைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருந்தது என்பதே உண்மை. பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகிகள் கலிம்போங்கை "அரசு எஸ்டேட்" ஆக மாற்றினார்கள். இந்தியாவில் காலனித்துவ ஆட்சிக்கு முன்னதாக பிரிட்டனில் எஸ்டேட்கள் இருந்திருக்கவில்லை என்றால் காலனியாட்சிக் காலத்தில் வங்காளத்தில் அரசாங்கத்துக்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் இருந்திருக்காது. நிலப்பகுதிகளை வேலியிட்டுப் பராமரித்தல், நில வருவாயைப் பெறுதல், சமூக அடுக்குகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான உத்திகள் இதுபோன்ற எஸ்டேட்களில் கூர்மையடைந்திருந்தன. இந்த உத்திகள் காலனித்துவ இந்தியாவில் கலிம்போங் உள்ளிட்ட காலனித்துவக் குடியிருப்புகளில் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டன.

1870களில் வங்காளம், பிகார் உட்பட இந்தியா முழுவதும் ஏற்பட்ட பஞ்சத்தால் அரசாங்கத் தோட்டங்களின் விரிவாக்கம் பாதிக்கப்பட்டது. இதையடுத்துக் காலனித்துவ அரசாங்கம் முதல் பஞ்ச கால ஆணையத்தை உருவாக்கியது. 1886ஆம் ஆண்டு புதிய வங்காள விவசாயத் துறையை நிறுவுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆணையம் கூறியது. அந்த ஆண்டு புதிதாக நியமிக்கப்பட்ட இயக்குனர் பஞ்சத்திற்குத் தொழில்நுட்பத் தீர்வு இருப்பதாக விளக்கினார். சாகுபடிக்கான சிறந்த முறைகள், அந்த முறைகளைப் பரவலாக்குதல், அவற்றுடன் தொடர்புடைய கருவிகள், வேளாண் புள்ளிவிவரங்கள், "பொருளாதாரத் தகவல்கள்" ஆகியவற்றில் தனது துறை கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.

காலிம்போங்கில் இருப்பதுபோன்ற அரசாங்கத்துக்குச் சொந்தமான தோட்டங்களில் பஞ்சத்திற்குப் பின்பு அதிகாரவர்க்கம் மேற்கொண்ட திட்டம், மக்களின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியை அவர்கள் வேலை செய்வதை உறுதி செய்யும் பொருளாதாரத் திட்டத்துடன் இணைத்தது. அப்போது வளர்ந்துவந்த மலை வாழிடமான டார்ஜிலிங், கல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கான உணவை உற்பத்தி செய்யும் இடமாக காலிம்போங்கை அரசு உருவாக்கியது. 1880களில் தொடங்கி, நேபாளிகள், லெப்சாக்கள், பூட்டியாக்கள் ஆகியோர் தனித்தனி நிலங்களில் குடியேறினார்கள். அவர்கள் அரசு எஸ்டேட்டில் குத்தகைதார விவசாயிகளாகப் பதிவு செய்யப்பட்டார்கள். பஞ்சத்தைத் தடுப்பதே இதன் அறிவிக்கப்பட்ட நோக்கம். ஆனால் பயிரிடப்படாத நிலத்திலிருந்து வாடகை வசூல் மூலம் லாபம் பெறுவதும் அதன் நோக்கமாக இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. இவ்வாறு, விவசாயியின் உற்பத்தித் திறனைப் பலனுள்ள முதலீடாகக் கொண்டு  அதைப் பெருக்குவதற்கான அளவீடாக உணவு அளிப்பதைப் பிணைத்த செயல்பாடு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் முழுவதும் மனித வாழ்க்கைத் தரத்தை உறுதிசெய்வதற்காக உருவாகிவந்த  அரசியல் தர்க்கத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.

தற்காலத்துக்கு வருவோம். இந்தச் சிறிய பண்ணைகளில் ஒன்றில் வாழ்க்கை நடத்துவது இனியும் சாத்தியமில்லை. மக்கள் நிலத்தை விட்டு வெளியேறுகிறார்கள். ஏன்? காரணங்கள் பல விதமானவை; சிக்கலானவை. இமயமலைச் சரிவுகளில் விவசாயம் செய்வது எளிதல்ல. இயந்திரங்களின் மூலம் விவசாயம் செய்வதற்குச் செலவு அதிகம் ஆகும். தவிர, அந்தச் செயல்முறை இந்த நிலப்பரப்புக்குப் பொருத்தமற்றது. கலிம்போங்கின் மலைப்பகுதிகள் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடியவையாக இருப்பதும் ஒரு காரணம்.  மலைப்பகுதிகளுக்குச் சமவெளியிலிருந்து உணவு அனுப்பப்படுவது அதிகரித்துவருகிறது. டீஸ்டா நதியில் நிறுவப்பட்டுள்ள நீர் மின் நிலையங்களால் ஏற்படும் நிச்சயமற்ற நிலைகளும் உள்ளன. அணைகளால்தான் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரிப்பதாகவும், பருவங்கள் கணிக்க முடியாதபடி ஆகிவிட்டன என்றும் கலிம்போங்கில் உள்ள விவசாயிகள் வலியுறுத்திக் கூறினார்கள்.

மக்களில் சிலரை விளிம்புநிலைக்குத் தள்ளுதல், மக்களை இனம் சார்ந்து வகைப்படுத்துதல், உழைப்பு ஆகியவற்றின் வரலாறுகளையும் கவனிக்க வேண்டும். காலனித்துவ ஆட்சியின்போது பிரிட்டிஷார் தொழிலாளர்களைப் பல பிரிவுகளாக வகைப்படுத்திவைத்திருந்தார்கள். அதன்படி நேபாளிகள் "போரிடும் இனம்". எனவே அவர்கள் ராணுவ சேவைக்குப் பொருத்தமானவர்களாகக் கருதப்பட்டார்கள். "விசுவாசம்", "துணிச்சல்" ஆகிய குணங்கள் சேவைப் பணிக்கானவையாக வரையறுக்கப்பட்டன. இன்றும்கூட இந்தியாவின் நகர்ப்புற மையங்களில் இனம் சார்ந்தும் பாலினம் சார்ந்தும் புழங்கிவரும் கருத்தாக்கங்கள் மலைப்பகுதிகளிலிருந்து வரும் மக்களை நல்ல வேலையாட்களாகவும் சிப்பாய்களாகவும் பார்க்கின்றன. ஆயாக்கள், வீட்டுப் பணிப்பெண்கள், சமையல்காரர்கள் ஆகிய வேலைகளுக்குப் பொருத்தமானவர்களாகவும் அவர்களைக் கருதுகின்றன.

சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு மத்தியில் மலைகளில் வசிக்க முயல்வதன் பொருள் என்ன என்பதைப் பற்றி காலிம்போங் குடியிருப்பாளர்களிடம் நான் பேசியபோது, அவர்கள் இந்தக் காரணிகளைப் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். இவையனைத்தும் மலையகத்தில் உள்ள பழமையான தொழில்களில் ஒன்றான சுற்றுலாவின் புத்துருவாக்கத்தில் ஒன்றிணைவது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

மேற்கு வங்காளத்தின் இமயமலை அடிவாரங்கள் நீண்ட காலமாகவே சமவெளிகளில் இருப்பவர்கள் விரும்பி வரக்கூடிய குளிர்ச்சியான மலைவாழிடங்களாக இருந்துவருகின்றன. டார்ஜிலிங் போன்ற "மலைப்பகுதிகள்" ஐரோப்பியர்களுக்கும் சமூகத்தின் உயரடுக்குகளைச் சேர்ந்த இந்தியர்களுக்கும் சுகாதாரம் பேணுவதற்கும் புத்துணர்ச்சி பெறுவதற்கும் சமூகத்தின் உள்ளார்ந்த இயல்பைப் பாதுகாப்பதற்கும் பயன்படுகின்றன. இந்திய நகரங்களில் வெப்பநிலை அதிகரித்துவருவதால், மலைவாழிடங்களின் தேவை இப்போது முன்பைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சியுடன் மலைப்பகுதிகள் சுற்றுலாத் தலங்களாகப் பயன்படுவதும் அதிகரித்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தன்னுடைய மாநிலத்தின் மலைப்பகுதிகளை சுவிட்சர்லாந்துடனும், கொல்கத்தாவை லண்டனுடனும் ஒப்பிட்டுப் பேசிவருகிறார். இதன் மூலம் மலைகள்மீதான காலனித்துவப் பார்வையைப் புதுப்பித்து, விரிவடைந்துவரும் இந்த நுகர்வோர் மையத்திற்கான இந்தப் படிமங்களைப் பொருத்துகிறார்.

பிரித்தானியப் பெருந்தோட்டங்கள் பற்றிய ஐதீகங்கள், பதிவுகள் ஆகியவற்றைப் படித்து ரேமண்ட் வில்லியம்ஸ் மேற்கொண்ட "கிராமமும் நகரமும்" பற்றிய ஆய்வு வங்காளத்தின் மலைகளை அதன் நகர்ப்புற மையத்திலிருந்து புரிந்துகொள்வதற்கு உதவக்கூடியது. கிராமப்புறங்கள் இயற்கை சார்ந்தவை, நிலையானவை, மாறாதவை என்னும் பார்வைகள் அங்கே நிலவும் வளங்களைச் சுரண்டும் வன்முறையை மறைப்பதாக வில்லியம்ஸ் கூறினார்.

முன்னாள் காலிம்போங் அரசாங்கத்தின் பெருந்தோட்டங்களில் வேளாண்மை தொடர்ந்து தோல்வியடைந்தாலும், மூலதனம் கைவிடப்படவில்லை. மாறாக, மூலதனத் திரட்சியானது இன்னும் நெருக்கமான இடங்களுக்கு, குறிப்பாக மறு உற்பத்திப் பணிகளுக்கு மாறியுள்ளது. மேற்கு வங்க அரசு இப்போது சிறு விவசாயிகள் குடிபெயர்வதைத் தடுக்கும் ஒரு வழியாக பயணிகளுக்கான விடுதிகளை மையமாகக் கொண்ட சுற்றுலாவைத் தீவிரமாக ஊக்குவித்துவருகிறது (துணைதேசியக் கோரிக்கைகளையும் இதன் மூலம் தவிர்க்க நினைக்கிறது என்று சொல்லலாம்). கிராமப்புறங்களில் இனி விவசாயப் பொருளாதாரம் தேவையில்லை என்று தோன்றுகிறது. பயணம் செய்ய விரும்பும், பருவநிலை குறித்துக் கவலைப்படும் இந்திய நடுத்தர வர்க்கத்திற்கேற்ப, மாநில வளர்ச்சி அதிகாரிகள், ரியல் எஸ்டேட் ஊக வணிகர்கள் ஆகியோரின் உதவியுடன் அரசாங்க எஸ்டேட்டைச் சந்தைப்படுத்த விவசாயக் குடும்பங்கள் கற்றுக்கொள்கின்றன. வளர்ந்துவரும் இந்தச் சந்தையில் தேயிலைத் தோட்டங்களும் தவறாமல் பங்குபெறும் நிலையில், மேற்கு வங்காளத்தில் கலிம்போங்கில் அதிக அளவில் தங்கும் விடுதிகள் உள்ளன. பதிவு செய்யப்பட்டவை மட்டுமே கணக்கில் வருகின்றன.

விவசாயம் வீழ்ச்சியடைந்துவருவதால், மலையகச் சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நிலச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதைவிட, மலைகளின் "உள்ளூர்" பண்பாட்டையும் "பாரம்பரிய"த்தன்மையையும் நடுத்தர வர்க்க இந்திய நகர்ப்புற மக்களிடம் சந்தைப்படுத்துவது எளிது என்று தோன்றுகிறது. மேலிருந்து கீழே இறங்கும் வளர்ச்சி இங்கு புதிதல்ல. எல்லைப்புறங்களில் இருக்கும் பகுதிகளின் வளங்களைப் பயன்படுத்துவதன் தர்க்கமே அதுதான். அழிவுக்கான ஆதாரமும் அதுதான்.

குளிர்ந்த காற்றும் மலை சார்ந்த நிலப்பரப்பும் நீண்ட காலமாக மக்களை இப்பகுதிக்கு ஈர்த்துவருகிறது. ஆனால் சுற்றுலாப் பயணிகள் மலைகளில் குவிந்துவரும் நிலையில் 2023இல் மலைச் சாலைகளில் கார்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வது வழக்கமாகிவிட்டது. பத்து நிமிடப் பயணம் ஒரு மணிநேர ஊர்வலமாக மாறுகிறது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் இந்தச் சாலைகளில் நிலச்சரிவு ஏற்படுவது அதிகரித்துவருகிறது. கலிம்போங்கிலிருந்து மக்கள் வெளியேறுகிறார்கள்; இந்தியச் சுற்றுலாப் பயணிகள் மலைப்பகுதிகளுக்குப் படையெடுக்கிறார்கள்.

விவசாயத்தின் வீழ்ச்சியால் சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகள் அதிகரிக்கவில்லை. இவை அதிகரிப்பதால் விவசாயம் வீழ்ச்சியடையவும் இல்லை. காலிம்போங்கில் உள்ளவர்கள் இந்த மாற்றங்களைப் பற்றிப் பேசும்போது, கார்கள், சாலைகள், ஏற்கனவே நடந்த நிலச்சரிவுகள், இனி நடக்கவிருக்கும் நிலச்சரிவுகள் ஆகியவை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரிப்பு, அடிப்படைப் பொருட்களுக்கு நகர்ப்புற வியாபாரிகளை அதிகம் சார்ந்திருத்தல், அதிகமான சுற்றுலா விடுதிகள் ஆகியவையே இப்பகுதியின் எதிர்காலமாக இருக்கும். சுற்றுலா விடுதிகள் மூலம், சமூக மறு உற்பத்தி, வீடுகளை உருவாக்குதல், சமையல், பயணிகளுக்கான சேவைகள் ஆகிய வேலைகளும் - பெண்கள் மீது அதிகம் சுமத்தப்படும் வேலைகள் - மூலதனக் குவிப்பின் புதிய ஆதாரங்களாக மாறியுள்ளன.

பருவநிலை நெருக்கடியின் பின்னணியில் இதுபோன்ற இடங்களில் வசிக்கும் அனுபவத்தைச் சந்தைப்படுத்தி வருமானம் ஈட்டுவது மலைப்பிரதேசங்களில் மட்டும் நடப்பதில்லை. கலிம்போங்கில் உள்ள தங்கும் விடுதிகள், பொருளாதாரம், சூழலியல் ஆகிய இரட்டை நெருக்கடிகளின் பின்னணியில் பாதிப்புக்குள்ளாகும் உழைப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிற மாற்றங்களைப் போன்றவை. சுற்றுலா விடுதிகள் புதிய வருமான ஆதாரங்கள் அல்ல; ஏற்கெனவே உள்ள இந்த ஆதாரம் இப்போது மேலும் வலுவடைந்துள்ளது.

ஆக, சுற்றுலாப் பயணிகளுக்கான தங்கும் இல்லங்கள், வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கான மாற்றாக இல்லை. மாறாக, காலனித்துவ வளர்ச்சியின் தீய விளைவுகளில் வேர் கொண்ட, களைகள் நிறைந்த பாதையில் ஒரு இழையாக உள்ளது. பருவநிலை மாற்றத்தினாலும் விவசாயத்தில் நிகழும் வேகமான மாற்றங்களினாலும் மக்களின் உழைப்பு அதிகரித்திருக்கிறது. விளிம்புநிலையில் இருப்பவர்கள், சுற்றுச்சூழல் நெருக்கடிகளின் தீய விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள், குறிப்பாகப் பெண்கள், கூடுதலாக உழைக்க நேரிடுகிறது.

மாபெரும் வளர்ச்சித் திட்டங்கள் பலவும் இயல்பிலேயே பலவீனமானவை; இவை பெரும்பாலும் கண்கூடான வழிகளில் சரிந்துவிடுகின்றன என்பதை உள்கட்டமைப்புத் துறை அறிஞர்கள் நமக்கு நினைவூட்டுகிறார்கள். காலிம்போங்கும் அரசின் இதர தேயிலைத் தோட்டங்களும் காலனித்துவத்தின் மாபெரும் திட்டங்களின் வகைகளைச் சேர்ந்தவை. அவற்றை உருவாக்குவதற்கும் ஒன்றிணைப்பதற்கும் பல்வேறு வேலைகள் நடக்கின்றன. இந்தப் பணிகள் விவசாயத் துறைகளிலும் புது தில்லியில் உள்ள உணவகங்களின் சமையலறைகளிலும் நடக்கின்றன. செவிலியர்களாகி இஸ்ரேலுக்குச் செல்லவிருக்கும் நேபாளிகளுக்காக சிலிகுரியில் நடக்கும் ஹீப்ரு மொழிப் பயிற்சி வகுப்புகளில் நடக்கின்றன. மலைப்பிரதேசங்களில் வசிக்கும் அனுபவத்தை நேபாளிகள், பூட்டியாக்கள், லெப்சாக்கள் ஆகியோர் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று விரும்பும் நடுத்தர வர்க்க சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துவருவதைக் கருத்தில் கொண்டு உள்ளூர் மக்களின் இல்லங்களிலும் இந்தப் பணி நடைபெறுகிறது. உலகளாவிய மூலதனக் குவிப்பு உற்பத்தியிலிருந்து மறு உற்பத்திக்கு மாறும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை, நிலச்சரிவுகள், விவசாயத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்த முடியாத நிலை ஆகியவற்றால் மலைகளில் வாழ்வதற்கான சூழல் பற்றிய கேள்விகள் எதிர்கால சந்ததியினரின் முன் திரண்டு நிற்கின்றன.

சாரா பெஸ்கி

Author

சாரா பெஸ்கி கார்னெல்ல் பல்கலைக்கழகத்தின் ஐ.எல்.ஆர். ஸ்கூலின் அசோசியேட் பேராசிரியர்

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்