உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளும் தொழில்துறைக் கொள்கையும்: இந்திய அனுபவம்

23/10/2023
IiT English Page

தொழில்துறைக் கொள்கை என்பது பல்வேறு நோக்கங்களுக்காகப் பொருளாதாரத்தின் சில பகுதிகளைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் கணிசமான பங்கை வகிக்க முடியும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இது  உலக அளவில் மீண்டும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அமெரிக்காவின் பணவீக்கக் குறைப்புச் சட்டம் இதற்கான முதன்மையான எடுத்துக்காட்டு. இது அமெரிக்க அரசு, தான் முக்கியமானதாகக் கருதும் தொழில்களை ஆதரிக்க மானியங்கள், வரிச் சலுகைகள், கடன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் சட்டம் இது. இந்தியாவும் இந்தப் போக்குக்கு அன்னியமானதல்ல. 2020இல் உற்பத்தியோடு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகளை இந்தியா அறிமுகப்படுத்தியது. நாட்டிற்குள் தங்கள் உற்பத்தியை விரிவுபடுத்தும் நிறுவனங்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். மருந்து, மின்னணு, மருத்துவச் சாதனங்கள் ஆகிய மூன்று தொழில்களில் தொடங்கி, மேலும் பல துறைகளையும் உள்ளடக்கியதாக இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துகிறது.

ஆனால் உள்நாட்டை மையமாகக் கொண்ட இந்தக் கொள்கைகள் "உலக அளவிலான மதிப்புக் கொண்ட சங்கிலி"யுடனும் (Global Value Vhain - GVC), இந்தியா உருவாக்க விரும்பும் "பன்முகப்படுத்தப்பட்ட, ஜனநாயக ரீதியிலான" மறுஉலகமயமாக்கல் ஆகியவற்றுடன் இந்தியத் தொழில்துறையை ஒருங்கிணைப்பதற்கான பரந்த முயற்சிகளுடன் எவ்வாறு பொருந்துகின்றன?

இதைப் புரிந்துகொள்ள, நாம் கோவிட்-19 பெருந்தொற்று, அந்த நேரத்தில் உருவான உலக அளவிலான மதிப்புக் கொண்ட வர்த்தகச் சங்கிலிகள் (ஜிவிசி) ஆகியவை பற்றிய உரையாடலுக்குச் செல்ல வேண்டும். தொற்றுநோயால் ஏற்படும் இடையூறுகளின் தொடர் விளைவுகள் ஜிவிசிகள் மூலம் பல நுகர்வுப் பொருட்களைப் பெறும் உலகமயமாக்கப்பட்ட உலகின் தன்மைகளைக் கொண்டுவந்தன. இது தொடர்பான முக்கியமான கேள்வி உலக அளவிலான இந்த வர்தகச் சங்கிலிகளுடனும் நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் அவற்றின் தன்மையுடனும் தொடர்புடைய அபாயங்களை நோக்கியதாக அமைந்தது.

சமீபகாலம்வரை, ஏற்கனவே உள்ள ஜிவிசிகளுடன் தங்களை ஒருங்கிணைத்துக்கொள்ளப் பல நாடுகள் முயற்சிசெய்துவந்தன. ஜிவிசியில் பங்கேற்பது மேம்பட்ட உற்பத்தித்திறன், கூடுதலான தொழில்நுட்பச் செறிவு, ஏற்றுமதியின் பன்முகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நாட்டிற்குப் பொருளாதார நன்மைகளைக் கொண்டுவருகிறது. இதன் விளைவாக, ஜிவிசிகளில் பங்கேற்பதை எது தீர்மானிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கொள்கை வகுப்பில் தாக்கங்களைக் கொண்டுள்ளது. உலகளாவிய இந்தச் சங்கிலிகளில் பங்கேற்பதன் ஆதாயங்கள் வெவ்வேறு நாடுகளுக்கிடையே கணிசமாக வேறுபடுகின்றன.

பொதுவாக, ஜிவிசிகளுடனான ஒருங்கிணைப்பு முன்னும் பின்னுமான இணைப்புகள் மூலம் நிறைவேற்றப்படுகிறது. பின்னோக்கிய இணைப்புகள் ஒரு நாட்டின் பொருளாதாரம் தன் சொந்த ஏற்றுமதிகளுக்கான உற்பத்திக்கான உள்ளீடுகளாக இடைநிலைப் பொருட்கள் அல்லது சேவைகளை எவ்வாறு இறக்குமதி செய்கிறது என்பதை அளவிடுகிறது. முன்னோக்கிய இணைப்புகள் ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு வழங்கும் உள்ளீடுகளைக் குறிக்கின்றன. இந்த உள்ளீடுகள் மூன்றாம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

சமீபகாலங்களில், பல நாடுகள் குறிப்பிட்ட சில வர்த்தகக் கூட்டாளிகளை அதிகமாகச் சார்ந்திருப்பதைத் தவிர்ப்பதற்காகத் தொழில்துறைக் கொள்கையை நாடுகின்றன. ஆனால் இந்தியப் பின்னணியில் இந்த உற்பத்தி வலைப்பின்னல்களை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது?

ஜிவிசியுடனான ஒருங்கிணைப்பு
ஜிவிசிகள் முன்னணி நிறுவனங்கள் மூலம் தமது வலையமைப்பை உருவாக்கிக்கொள்கின்றன. பொதுவாக இந்த மதிப்புச் சங்கிலிகளை உருவாக்குவதில் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு நாடு இந்தச் சங்கிலிகளுடன் இணைந்துகொள்வதன் மூலம் புதிய வலைப்பின்னல்களுடனான தொடர்பும் ஏற்றுமதிகளும் சாத்தியமாகின்றன. ஒரு நாடு ஜிவிசியில் பங்கேற்பது, அந்த நாட்டின் அளவு, இடம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் உற்பத்திப் பங்கு, வர்த்தக, முதலீட்டுக் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது. ஒரு நாட்டின் வர்த்தகத்தின் தன்மை காரணமாக ஜிவிசியுடன் அது கொள்ளும் ஒருங்கிணைவு முக்கியமாகிறது. இந்த வர்த்தகம் நுகர்வோர் பொருள்களுக்கான உற்பத்தியின் செயல்முறையில் பயன்படுத்தப்படும் இடைநிலை உள்ளீட்டுப் பொருள்களாகவே இருந்துவரும் நிலை 1960களின் நடுப்பகுதியிலிருந்து அதிகரித்துவருகிறது. போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்தல், இறக்குமதிக் கட்டணங்களைத் தளர்த்துதல், போக்குவரத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போன்ற சில காரணிகள் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் ஒவ்வொரு கட்டத்திலும் மதிப்புக் கூட்டப்படும் இடைநிலை உள்ளீடுகளின் வர்த்தகம் அதிகரிக்க வழிவகுத்திருக்கின்றன. இது சில பிராந்தியங்கள் அல்லது நாடுகள் சில பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் அதில் சிறப்பான தேர்ச்சி பெறுவதற்கும் எலக்ட்ரானிக் தயாரிப்புகளுக்கு "ஆசியத் தொழிற்சாலை" என்று பெயரிடப்பட்டவும் வழி வகுத்தது. மறுபுறம், இந்தச் சங்கிலிகளில் இணைந்துகொள்ளாத நாடுகள் ஏற்றுமதிச் சந்தைகளில் நுழைவது கடினமாக ஆகியுள்ளது.

முன்னணி நிறுவனங்கள்
இவற்றோடு முன்னணி நிறுவனங்களின் பங்கும் முக்கியமானது. அதிக எண்ணிக்கையிலான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுடன் (MSMEs) முன்னோக்கிய, பின்தங்கிய இணைப்புகளைக் கொண்டுள்ள முன்னணி நிறுவனங்கள் சிறிய, நடுத்தர அல்லது பெரிய நிறுவனங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன. முன்னணி நிறுவனம் மதிப்புச் சங்கிலி முழுவதையும் நிர்வகிக்கிறது.

முன்னணி நிறுவனங்களின் தோற்றமும் அவை ஜிவிசியில் பங்கேற்பதும் சாதகமான வணிகச் சூழல், வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது, உள்நாட்டு நிறுவனங்கள் சர்வதேசமயமாகுதல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் காரணிகளைப் பொறுத்தது. உள்நாட்டு நிறுவனங்கள் சர்வதேச வர்த்தகர்களுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கும்போதும் உள்நாட்டு உற்பத்திக்கான இடைநிலை உள்ளீடுகளை இறக்குமதி செய்வதன் மூலமும் சர்வதேசமயமாகலாம். ஜிவிசிகள் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல், திறன்களை மேம்படுத்துதல், உற்பத்தி சார்ந்த தொழில்மயமாக்கலுடன் தொடர்புடைய பிற நன்மைகள் ஆகியவற்றுக்குச் சிறந்த பங்களிப்பை அளிக்க இயலும். உள்ளூர் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தித் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும், தங்களது போட்டியிடும் திறனை அதிகரித்துக்கொள்ளவும் முயற்சிக்கும்போது அவர்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய சூழலை உருவாக்குவதற்கான விருப்பம் இந்த அமைப்பு முழுவதிலும் பரவியிருக்கிறது.

இருப்பினும், வளரும் நாடுகளில் உள்ள பல உள்நாட்டு நிறுவனங்கள், குறிப்பாகச் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், ஜிவிசிகளில் எளிதில் ஒன்றிணைவதில்லை. ஜிவிசியில் பங்கேற்பதில் இவை சவால்களை எதிர்கொள்கின்றன. வளரும் நாடுகளுக்கிடையில் நடக்கும் வர்த்தகத்தின் எழுச்சி, வளரும் நாடுகளைப் பொறுத்தவரை உள்ளூர், பிராந்திய மதிப்புச் சங்கிலிகளை மிகவும் முக்கியமானதாக ஆக்கியுள்ளது.

முன்னணி நிறுவனங்கள் (உலக அளவிலான வாங்கும் நிறுவனங்கள் போன்றவை) தங்கள் சப்ளையர்களுடன் வர்த்தக அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் உற்பத்தியாளர்கள் புதியவற்றைக் கற்றுக்கொள்வதற்கும் புதுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஆதரவளிக்க வேண்டும் என்று ஜிவிசி செயல்முறைகள் வலியுறுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் மதிப்புக் கூட்டாத செயல்பாடுகளை அயலாக்கம் செய்யும்போது, குறைந்த அளவில் மதிப்புக் கூட்டப்பட்ட செயல்பாடுகளுக்கு மாறாக, தெளிவாக அளவிட முடியாத, அதிக மதிப்புக் கூட்டப்பட்ட செயல்பாடுகள் மீது நேரடிக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. எனவே, வர்த்தக அறிவுப் பரிமாற்றம் சில செயல்பாடுகள் அல்லது பணிகள், சில தொழில்கள் ஆகியவற்றின் மூலம் அதிகமாக நிகழ்கிறது.

உயர்ந்த அளவிலான மதிப்புக் கூட்டப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்நாட்டுத் தொழிலாளர்களின் உற்பத்தித்திறனையும் பணித்திறன்களையும் உயர்த்தும். தொழில்நுட்பப் பரிமாற்றம் இல்லாத நிலையில் வளரும் நாடுகள் பெரும்பாலும் குறைந்த அளவிலான மதிப்புக் கூட்டப்பட்ட செயல்பாடுகளில் முடக்கப்படுகின்றன. மேம்படுத்துதல் என்பது "நிறுவனங்கள், நாடுகள் அல்லது பிராந்தியங்கள் அதிக மதிப்புக் கூட்டப்பட்ட செயல்பாடுகள், அதிகரித்த மதிப்பு வாய்ந்த பலன்களை நோக்கிச் செல்லச் செயல்படுத்தும் உத்திகள்" என வரையறுக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில் முன்னணி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது.

கொள்கை அடிப்படையில் பார்க்கும்போது, ஜிவிசிகள் பொருளாதாரத்தில் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பது மிகவும் முக்கியமானது; இதில் முன்னணி நிறுவனத்தின் பங்கும் முக்கியமானது. மேலும், ஜிவிசி ஒருங்கிணைப்பையும் மேம்படுத்தலையும் ஊக்குவிப்பதில் தொழில்துறை மற்றும் இதர கொள்கைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது.

தொழில்துறைக் கொள்கை தேய்கிறதா?
தொழில்துறைக் கொள்கை வளர்ச்சிக் கொள்கையின் மையமாக உள்ளது. அது பல சமயங்களில் பல்வேறு பெயர்களை எடுத்துள்ளது (எ.கா., ஏற்றுமதி வசதி, வெளிநாட்டு முதலீட்டை மேம்படுத்துதல் அல்லது சுதந்திர வர்த்தக மண்டலங்கள்). தொழில்துறைக் கொள்கை என்பது உற்பத்தித் தொழில்களுக்கான சலுகைகள் பற்றியது மட்டுமல்ல; சேவைகள் அல்லது விவசாயத் துறைகளுக்குமானது.

கோட்பாட்டளவில் பார்க்கும்போது, தொழில்துறைக் கொள்கை தேவை என்னும் வாதம் சந்தையின் தோல்வியிலிருந்து எழுகிறது. தொழில்துறைக் கொள்கையின் தேவை கோட்பாட்டளவில் உறுதியானதாகவும் சிறப்பான முறையில் முன்வைக்கப்படுவதாகவும் உள்ளது என்று பொருளாதார வல்லுனர் டானி ரோட்ரிக் கூறுகிறார். தொழில்துறைக் கொள்கையால் சந்தையின் தோல்விகளைக் கையாள முடியும்; ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது கடினம் என்று அவர் சொல்கிறார். கடன், உழைப்பாளர்கள், பொருட்கள் அல்லது அறிவுக்கான சந்தைகளில் நிகழும் தோல்விகளால் தொழில்துறைக் கொள்கைக்கு ஆதரவான குரல் எழுகிறது என்று அவர் விளக்குகிறார்.

ரோட்ரிக்கின் கருத்துப்படி, நடைமுறையில் தொழில்துறைக் கொள்கைக்கு இரண்டு முக்கிய எதிர்ப்புகள் உள்ளன. ஒன்று தகவல் சமச்சீரற்ற தன்மை, மற்றொன்று ஊழலும் உற்பத்தித்திறனுக்குப் பங்களிக்காமலேயே பலன்களைப் பெறுதலும். தகவல் சமச்சீரற்ற தன்மையைப் பொறுத்தவரை நிறுவனங்கள், துறைகள் அல்லது முழுமையற்ற சந்தைச் சூழல்களால் பாதிக்கப்பட்ட சந்தைகளில் வெற்றியாளர்களை அரசாங்கங்கள் அடையாளம் காண்பது சாத்தியமற்றது. ஆயினும், அப்படி அடையாளம் காணும்படி தொழில்துறைக் கொள்கை அரசாங்கங்களை நிர்ப்பந்திக்கிறது. இரண்டாவதாக, தொழில்துறைக் கொள்கை பெரும்பாலும் ஊழலுக்கும் உற்பத்தித்திறனுக்குப் பங்களிக்காமல் பலன்களை அடையவும் வழிவகுக்கிறது என்று வாதிடப்படுகிறது. தொழில்துறைக் கொள்கையை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் தொழில்துறைக் கொள்கையின்மீது உரிய சான்றுகளின் அடிப்படையில் மேற்கொள்ளும் மதிப்பீடு குறித்துப் பல வாதங்கள் உள்ளன. பெரும்பாலும் ஒவ்வொரு நிகழ்வின் அடிப்படையிலான சான்றுகளின் ஆதரவுடன் தொழில்துறைக் கொள்கை செயல்படுவதாக அதன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவின் ஜிவிசி ஒருங்கிணைப்பும் தொழில்துறைக் கொள்கையும்
இந்தியாவில் உற்பத்திக்கான திறன், குறிப்பாக நடுத்தரத் தொழில்நுட்பத் தொழில்களில், இருந்தாலும் ஜிவிசிகளில் அதன் பங்கேற்பு குறைவாகவே உள்ளது. ஜிவிசிகளில் இந்தியாவின் பங்கேற்பு பெரும்பாலும் ஒரு சில தொழில்களில் (எ.கா. ஆட்டோமொபைல்) குவிந்துள்ளது. உழைப்பாளர்கள் அதிகம் தேவைப்படும் பொருள்களுக்கான ஏற்றுமதியில், குறிப்பாக ஆடைகள் ஏற்றுமதியில் இந்தியா தனது பங்கை இழந்துவருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, தயாரிப்பை மேம்படுத்துதல் (ஜிவிசிக்குள் அதிக மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்பாக மேம்படுதல் என வரையறுக்கப்படுகிறது), செயல்முறை மேம்படுத்தல் (இது ஜிவிசிக்குள் இருக்கும் செயல்பாடுகளில் உற்பத்தித்திறனை அதிகரிப்பது) ஆகியவை நடந்தாலும், செயல்பாட்டு அளவிலான மேம்படுத்தலும் (உற்பத்திச் செயல்முறை தொழில்நுட்ப ரீதியாக அதிநவீனமான அல்லது அதிக ஒருங்கிணைவு கொண்ட அம்சங்களுக்கு மாறுதல்), துறைகளுக்கிடையிலான மேம்படுத்தலும் குறைவாகவே நிகழ்கின்றன. ஜவுளித் தொழிலில் இந்த நிலை உள்ளது. வெவ்வேறு தொழில் துறைகளுக்கிடையிலான தொடர்பு, அல்லது வர்த்தகச் சங்கிலி அமைப்பை மேம்படுத்துதல் என்பது அதிக மதிப்புக் கூட்டப்பட்ட விநியோகச் சங்கிலிகளுக்கு மாறுவதை உள்ளடக்கியது.

வளரும் நாடுகள் ஜிவிசிகளில் தங்கள் ஒருங்கிணைப்பை மேலும் நன்றாகச் செலய்படுத்தலாம். வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் தங்கள் கொள்கைகளைச் சீரமைப்பதன் மூலம் தங்கள் பொருளாதாரங்களில் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளால் கிடைக்கும் வளர்ச்சியின் நன்மைகளை அதிகரிக்கலாம். ஜிவிசி பங்கேற்பை மேம்படுத்துவதில் நாடுகள் பின்பற்றக்கூடிய தொழில்துறை கொள்கைகளின் வகைப்பாடுகள் மூன்று தொகுப்புகளிலான கொள்கைகளை உள்ளடக்கியது. ஒட்டுமொத்த தேசியப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் கிடைமட்டக் கொள்கைகள் (எ.கா. சரக்கு மற்றும் சேவை வரி), குறிப்பிட்ட துறைகள் அல்லது தொழில்களை இலக்காகக் கொண்ட செங்குத்தான தொழில்துறைக் கொள்கைகள் (எ.கா. ஆட்டோமொபைல் துறைக்கான ஆட்டோமோட்டிவ் மிஷன் திட்டம் 2016-26), இறுதியாக, ஜிவிசி கொள்கைகள் ஆகியவையே இந்த மூன்று தொகுப்புகள்.

கடைசி வகையைச் சேர்ந்த கொள்கை, மதிப்புச் சங்கிலியின் வெவ்வேறு பிரிவுகளில் உள்ள இணைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்தியங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். இந்தியாவின் கொள்கை அணுகுமுறையானது, சரக்குப் போக்குவரத்து, உள்கட்டமைப்பு ஆகியவற்றில் உள்ள தடைகளைப் போக்கி, எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்துகிறது. அந்த அணுகுமுறையைக் கிடைமட்ட அல்லது செங்குத்து அடிப்படையில் வகைப்படுத்தலாம். எனினும், அதிக ஒருங்கிணைப்பை எட்டுவதற்கு ஜிவிசியை மையமிட்ட கொள்கைகள் தேவை.

தொழில் கொள்கை 2.0
சமீபகாலங்களில், அமெரிக்காவின் பணவீக்கக் குறைப்புச் சட்டம், இந்தியாவில், உற்பத்தியோடு இணைக்கப்பட்ட சமீபத்திய ஊக்கத் திட்டங்கள் (பிஎல்ஐ) எனத் தொழில்துறைக் கொள்கையில் புத்தெழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பதினான்கு துறைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கைகள் எதிர்காலத்தில் மேலும் பலவற்றிற்கு நீட்டிக்கப்படலாம். "மேக் இன் இந்தியா" திட்டத்திற்குப் பிந்தைய இந்தியாவின் புத்தம்புதிய தொழில்துறைக் கொள்கைகள் அவை. இந்தத் திட்டங்களின் மூலம் இந்தியா நேரடி அன்னிய முதலீட்டை ஈர்க்கவும், "சாம்பியன் நிறுவனங்களை" உருவாக்கவும் முயற்சி செய்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை இந்தியாவை ஜிவிசியில் ஒருங்கிணைத்து இந்தியாவை ஏற்றுமதி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில்தான் சர்வதேச அளவில் இந்திய நிறுவனங்களின் போட்டித்திறனை மேம்படுத்துவதையும், இந்தியத் தொழில்களின் உள்ளூர்மயமாக்கலை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட பிஎல்ஐ திட்டங்களை நாம் பார்க்க வேண்டும். இந்தியாவின் ஜிவிசி ஒருங்கிணைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஜிவிசி சார்ந்த கொள்கைகளின் பின்னணியிலும் பிஎல்ஐ திட்டங்களைப் பார்க்க வேண்டும். இந்த கொள்கைகள், சாதனை படைக்கும் நிறுவனங்களை உருவாக்க முயற்சிப்பதன் மூலம் தொழில்துறைக் கொள்கையின் குறிக்கோள்களுக்கு ஏற்ப "வெற்றியாளர்”களைத் தேர்வு செய்ய முயற்சிக்கின்றன. இருப்பினும், இந்த நிறுவனங்களும் சாம்பியன் நிறுவனங்களாக மாறுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

கொள்கை அறிவிப்புகளுக்கேற்ப, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்பட்ட இடுபொருட்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவை தொலைநோக்கிலான பலன்களைத் தந்தாலும் திறன் இல்லாத துறைகளில் (எ.கா. சோலார் பேனல்கள், ஈ.வி. பேட்டரிகள்), குறுகிய காலத்தில் உற்பத்திச் செலவை அதிகரிக்கச்செய்யும். பிஎல்ஐ திட்டங்கள், இறக்குமதிக் கட்டணங்களில் மாற்றம் ஆகிய கலவையின் மூலம் நாட்டிற்குள் உற்பத்திச் சங்கிலியின் பெரும் பகுதியை உருவாக்கவே இந்தியா முயற்சி செய்கிறது.

இது வெற்றி பெற்றால், ஏற்றுமதி செய்யக்கூடிய வெற்றிகரமான உள்நாட்டு உற்பத்தித் தளத்தை இந்தியா உருவாக்கும். மறுபுறம், இறக்குமதிக் கட்டணப் பாதுகாப்பு இருந்தபோதிலும், உள்ளீடுகளின் உற்பத்தி உலக அளவில் போட்டித்திறன் கொண்டதாக ஆகவில்லை என்றால், "ஆசியத் தொழிற்சாலை"யின் மதிப்புச் சங்கிலிகளில் கீழ்நிலைத் தொழில்களுடன் ஒருங்கிணைந்திருக்கும் வாய்ப்பைக்கூட இந்தியா இழந்துவிடும். தொழில்துறைக் கொள்கைக்கும் இறக்குமதிக்கான பதிலீட்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். இறக்குமதிக்கான பதிலீடு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இடைநிலை உற்பத்திப் பொருள்களை அதிக அளவில் சார்ந்திருக்க வழிவகுக்கும்; அதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும். ஆனால் அதிக ஜிவிசி ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும் என்று சொல்ல முடியாது. எனவே, பிஎல்ஐ திட்டங்களின் மூலம் ஜிவிசிகளுடன் கூடுதலாக ஒருங்கிணைப்பதற்கான நோக்கத்தில் நிச்சயமற்றதன்மை உள்ளது. இந்தக் கொள்கைகள் இந்தியாவின் உற்பத்தித் துறையைத் தூண்டி, அதிகரித்துவரும் வேலையின்மை என்னும் பிரச்சினையைச் சமாளிக்க உதவுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

சாவன் ராய்

Author

சாவன்ராய், புது தில்லியில் உள்ள இந்திய சர்வதேசப் பொருளாதார உறவுகள் ஆராய்ச்சி கவுன்சிலில் (ICRIER) பேராசிரியராக உள்ளார். A Primer on Electric Vehicles in India: A Machine-Generated Literature Overview 2025th Edition (ஸ்பிரிங்கர்வெளியீடு, 2024) நூலின் இணை ஆசிரியர்.

(Tamil Translation by Aravindan D.I.) 
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்