ஜி-20 நாடுகளின் பேரியல் பொருளாதாரத்தின் நிலை என்ன?

31/07/2023
IiT English Page

ஜி-20 உறுப்பு நாடுகளின் வழக்கமான கூட்டத்தையும், சுழற்சி முறையில் இந்தியாவுக்குக் கிடைத்த தலைமைப் பதவியையும் நரேந்திர மோடி அரசு திருவிழாவாக மாற்றியதில் உச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தைவிடவும் பாஜகவின் அரசியல் கலையே அதிகம் வெளிப்படுகிறது. ஜி-20ஐச் சுற்றி உருவாகியுள்ள பரபரப்பானது, பிரதமரை ஒப்பற்ற உலகத் தலைவராகச் சித்தரிக்கும் பாஜகவின் பரப்புரைக்குப் பொருத்தமாகவே உள்ளது. இது ஒருபுறமிருக்க, ஜி-20 உச்சி மாநாட்டினால் இந்தியாவுக்குப் பேரியல் பொருளாதாரம் சார்ந்த முக்கியத்துவம் ஏதேனும் இருக்குமா? இந்தியாவின் பொருளாதார முன்னுரிமைகளையும் சவால்களையும் உலகின், குறிப்பாக மற்ற G-20 உறுப்பினர்களின் முன்னுரிமைகள், சவால்களின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யாமல் இந்தக் கேள்விக்கு விடையளிக்க முடியாது.

உலகப் பொருளாதாரச் சூழலைச் சுருக்கமாக மதிப்பாய்வு செய்து இந்த விவாதத்தைத் தொடங்குவது பயனுள்ளதாக இருக்கும். அடுத்தடுத்து மூன்று அதிர்ச்சிகள் - பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் பணவீக்கம் உயர்வு - உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அதிகரிக்கும் சமத்துவமின்மை, ஏழைகளின் வருமான இழப்பு பற்றிய கவலைகளை ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தாலும், நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையின் மீதும் வளர்ச்சிக்கான அதன் நடுவாந்தர கால அளவிலான செலவுகள் மீதுமான கடுமையான இறுக்கத்தின் தாக்கம் குறித்து உலகப் பொருளாதாரத்தின் உச்ச பீடம் கவலை கொண்டுள்ளது. பலதரப்பு வர்த்தகச் சூழல் நடைமுறை அளவில் இல்லாமல்போன பிறகு இந்தச் சூழல் ஏற்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒரு வழியாக இறக்குமதிக்கான பதிலீடு தேவை என்னும் உணர்வு உலகளாவிய வடக்கில் வளர்ந்துவருகிறது. இந்நிலையில் உலக வர்த்தக அமைப்பின் தோஹா அமர்வு (இதில் இந்தியா முக்கியப் பங்கு வகித்தது) போன்ற பேச்சுவார்த்தைகளில் முன்னெடுக்கப்பட்ட வளர்ச்சிக்கான பழைய பாணியிலான செயல் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதை உறுதிசெய்வது குறித்த அர்த்தமுள்ள உரையாடலை மேற்கொள்ள G-20 போன்றதொரு அமைப்புக்கு மிகக் குறைவான வாய்ப்பே உள்ளது.

உச்சி மாநாட்டின் தலைவர் என்ற முறையில் இந்தியாவின் நலன்களும் இருபதாண்டுக் காலம் ந்டப்பிலிருக்கும் வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை ஜி-20 போன்ற பலதரப்பு மன்றத்தில் முன்னெடுப்பதுடன் முழுமையாகப் பொருந்தவில்லை. பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் குறைந்த-நடுத்தர வருமானம், அல்லது குறைந்த வருமானம் ஆகிய பிரச்சினைகளைத் தொடர்ந்து எதிர்கொள்கிறார்கள். பேரியல் பொருளாதாரமோ டாலர் மதிப்பில் உலகில் மூன்றாவது இடத்தைப் பெறக்கூடிய நிலை உள்ளது. உலகளாவிய பொருளாதாரப் போட்டியில் பங்குகொள்ளத் தயாராக இருக்கும் குறிப்பிடத்தக்க ஆற்றல் வாய்ந்ததும் ஆழமானதுமான முதலாளித்துவ அடித்தளத்தைக் கொண்டுள்ளதாகப் பேரியல் பொருளாதாரம் தன்னைப் பறைசாற்றிக்கொள்கிறது. தொழில்துறைக் கொள்கையும் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கும் போக்கும் மேற்கத்திய நாடுகளில் மீள் வருகை நிகழ்த்தியுள்ள சமயத்தில் இந்தியாவிலும் இதேபோன்ற உணர்வு தோன்றியிருப்பது தற்செயலானதல்ல.

இந்த உண்மைகள் ஜி-20 நாடுகளின் பேரியல் பொருளாதாரக் கூறுகளை முற்றிலும் பொருத்தமற்றவையாக ஆக்குகின்றனவா? சர்வதேசப் பொருளாதார ஒத்துழைப்புச் செயல்திட்டத்தில் விரைவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய பருவநிலை மாற்றம் என்னும் பிரச்சினை இல்லாமல் இருந்திருந்தால் அப்படித்தான் ஆகியிருக்கும். பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் அலட்சியப் போக்கை மேற்கொண்டால் அது உலகைச் சுற்றுச்சூழல் பேரழிவின் விளிம்பிற்கு இட்டுச் செல்லும் என்பதற்கான போதிய அறிவியல் சான்றுகள் இப்போது உள்ளன. இந்த நெருக்கடியைக் கையாள்வதில் உள்ள உண்மையான சவால், இந்த உண்மையை அனைவரும் ஒப்புக்கொள்வது அல்ல; பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தணிக்கும் முயற்சிகளுக்கு எவ்வாறு நிதியளிப்பது என்பதில் உள்ள கருத்து வேறுபாடுதான் பிரச்சினை. பசுமையை அதிகரிக்கச்செய்யும் மாற்றத்திற்குத் தேவையான நிதிக்கும் அதை அளிப்பதற்கான திறனுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் இந்தச் சர்ச்சையின் மையம். பருவநிலையைச் சமாளிப்பதற்கான நிதி திரட்டும் முயற்சிகளில் வளர்ந்த நாடுகளின் நியாயமான பங்களிப்பு என உலகளாவிய தெற்கு நினைப்பதை ஒப்புக்கொள்ள வளர்ந்த நாடுகள் மறுக்கின்றன. பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான நிதி தொடர்பான பேச்சுவார்த்தைகளின் முதல் நாளிலிருந்தே இந்தச் சவால் இருந்துவந்தாலும், எதிர்காலத்தில் இது மேலும் மோசமாகும் என்று நம்புவதற்குக் காரணம் இருக்கிறது. மக்களைக் கவரும் திட்டங்களுக்கான அழுத்தங்கள் பொருளாதாரக் கொள்கையை மானியத்துடன் கூடிய தொழில்துறைக் கொள்கை மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கி மாற்றியமைப்பதால், முன்னேறிய பொருளாதாரங்களில் பற்றாக்குறையும் கடனும் அதிகரிப்பதைப் பெரும்பாலான வல்லுநர்கள் அவதானிக்கிறார்கள். இது பருவநிலை தொடர்பான நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தக்கூடிய நிதி ஆதாரங்களைக் காலிசெய்துவிடக்கூடும்.

இந்தப் பின்னணியில் பலதரப்புப் பொருளாதார அமைப்புகளின் பங்கு - குறிப்பாக உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகிய இரு பெரும் அமைப்புகளின் பங்கு – பசுமை சார்ந்த மாற்றத்தின் எதிர்காலத்திற்கும், அதன் நீட்சியாக வளங்குன்றா வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானதாக மாறும். இந்த அம்சத்தில்தான், ஜி-20யின் தலைமைப் பதவியில் இருக்கும்போது முன்னேற்றம் காண முடியும் என்று இந்தியா நம்புகிறது. சர்வதேச நிதியம், உலக வங்கி ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தத்தங்களுக்கான கோரிக்கைகள் நிச்சயமாகப் புதியவை அல்ல. சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதார வலிமையின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் அவை முற்றிலும் நியாயமானவை. இந்தியா தனது அவசரத் தேவையை உணர்ந்து புதிய உத்வேகத்துடன் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உறுதிபூண்டிருப்பதுபோலத் தோன்றுகிறது. பன்னாட்டு வங்கிகளை வலுப்படுத்துவற்காக ஒரு நிபுணர் குழு, அமெரிக்காவின் வருவாய்த்துறை செயலர் லாரன்ஸ் சம்மேர்ஸ் இந்தியாவின் 15ஆவது நிதிக் குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங் இருவரின் இணைந்த தலைமையின் கீழ் அமைக்கப்பட்டிருப்பதே இதைத் தெளிவாக்குகிறது. இருவரும் தத்தமது நாடுகளில் அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்தி இயக்குகின்ற, அரசு அதிகாரிகளும் தனியார் சக்திகளும் கைகோத்து நடத்தும் ரகசியக் குழுக்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்தவர்கள். பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் முக்கிய இலக்காக உலகளாவிய பொதுப் பொருட்கள் தொடர்பான ஏற்பாட்டைச் சேர்ப்பதற்கு இந்தியா ஏற்கனவே அழுத்தம் கொடுத்துவருகிறது. இறுதி முடிவை எட்ட முடியாவிட்டாலும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான செயல்களைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என்று இந்தியா நம்புகிறது. சுற்றுச்சூழல்முதல் ஆரோக்கியம், கலாச்சாரம், இணைய உலகின் கூறுகள் என அனைத்தும் உலகளாவிய பொதுப் பொருட்களின் பட்டியலில் அடங்கியுள்ளன.

இந்தப் பிரச்சினைகளில் நடந்துகொண்டிருக்கும் விவாதங்கள் இந்தியா அல்லது உலகளாவிய தெற்கின் நலன்களுக்கு இணக்கமான விளைவை ஏற்படுத்தும் என்று பரிந்துரைக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பது உறுதி. இந்தியா, பழைய பாணியிலான வளர்ச்சிக்கான சவால்களுக்கு (நிலையான வேலைகளையும் மக்களுக்கான தரமான சேவைகளை வழங்குதல்) எதிரான போரைத் தொடர்ந்தாலும் எதிர்காலத்தின் முக்கியப் போராகப் பரவலாகக் கருதப்படும் ஒரு பிரச்சினைக்காக அதன் பொருளாதார, புவிசார் அரசியல் வளர்ச்சியைப் பயன்படுத்துவது நல்லது என்னும் உண்மையை அங்கீகரிப்பதையே இவை குறிக்கின்றன. பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான நிதி என்பதுதான் அந்தப் பிரச்சினை. வேலைவாய்ப்பு, மக்களுக்கான நலத்திட்டங்கள் ஆகியவை புறக்கணிக்கக்கூடியவையல்ல. ஏனெனில் இவை இன்னமும் இந்திய அரசியலிலும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பொருளாதார வலிமை (பெரும்பாலும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு) அதிகரித்துவந்தாலும், சமமற்ற வளர்ச்சியின் எதிர்மறை விளைவுகளைத் தணிப்பதற்காகக் கூடுதலாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவையும் அதிகரித்துவருகிறது.

ஜி-20ஐச் சுற்றி நடக்கும் பேரியல் பொருளாதார உரையாடல் நிதானமான யதார்த்தத்தால் இயக்கப்படுகிறது. சர்வதேசப் பொருளாதார ஒத்துழைப்பின் எதிர்காலத்திற்கு எளிதாகப் பெறக்கூடிய பலன்கள் எதுவும் இல்லை என்பது மட்டுமல்ல; உள்நாட்டு அரசியல் பொருளாதார அக்கறைகளும் அவற்றுக்கான செலவுகளும் அதிகரிப்பதால் பல நாடுகளும் நடுத்தரமான காலக்கெடுவில்கூடத் தாங்கள் நிறைவேற்ற விரும்பும் உறுதிமொழிகளை நிறைவேற்றுவது கடினமாகிவிடும் என்பதே அந்த யதார்த்தம். இறுதியான, ஆனால் முக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால், ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான கருத்து வேறுபாடு ஜி-20 நாடுகளுக்கிடையிலான ஒருமித்த தன்மையைத் தடம் புரளச் செய்யக்கூடும்; உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கிடையில் புவிசார் அரசியல் பதற்றங்கள் புத்துயிர் பெறுவது நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் கடினமாக்கும் என்ற கடுமையான யதார்த்தத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

ரோஷன் கிஷோர்

Author

ரோஷன் கிஷோர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் புள்ளிவிவரம் மற்றும் அரசியல் பொருளாதாரப் பிரிவின் ஆசிரியர். 2020இல் CASIvஇல் விசிட்டிங் ஃபெலோவாக இருந்தவர். இங்கே அவர் முன்வைப்பவை அவருடைய சொந்தக் கருத்துக்கள்; அவர் பணிபுரியும் நிறுவனத்தின் கருத்துக்களைப் பிரதிபலிப்பவை அல்ல.

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்