தமிழ் வாக்காளர்: புத்திசாலியா, திரைப்பட ஆராதகரா

08/07/2024
IiT English Page

தமிழ் சினிமாவில் மெகா ஸ்டாராக விளங்கிய எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) தமிழக முதல்வராக 1977இல் பதவியேற்றபோது, அந்தப் பெருமைமிகு பதவிக்கு வந்த முதல் இந்திய நடிகர் என்ற பெருமையைப் பெற்றார். அடுத்த சில பத்தாண்டுகளில் எம்.ஜி.ஆரும் திரைப்பட உலகுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மற்ற சிலரும் இந்தப் பதவியை வகித்துவந்தார்கள். திரைக்கதை எழுத்தாளராக இருந்த மு. கருணாநிதி ஐந்து முறை முதலமைச்சராகப் பதவி வகித்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துத் திரையுலகில் புகழ் பெற்றவரும் எம்.ஜி.ஆருடன் தனிப்பட்ட முறையில் உறவு கொண்டிருந்தவருமான ஜெ. ஜெயலலிதா ஆறு முறை முதல்வராக இருந்தார். ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் (1991-96) தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் அவரைப் பல்வேறு வேடங்களில் சித்தரிக்கும் மாபெரும் கட்அவுட்கள் வைக்கப்பட்டன. சென்னையில் வளர்ந்த நான், ஜெயலலிதா தலைவராக இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) தலைமை அலுவலகத்திலிருந்து 300 மீட்டர் தொலைவிலும், அவருடைய இல்லத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் வசித்துவந்தேன். சிங்கத்தின் மேல் அமர்ந்திருக்கும் துர்க்கா தேவியாக, குழந்தையைக் கையில் ஏந்திய அன்னை மேரியாக எனப் பலவாறாக அவரைச் சித்தரிக்கும் நூற்றுக்கணக்கான படங்களைப் பார்த்திருக்கிறேன். இந்தக் காலகட்டத்தில், தமிழ் நடிகை குஷ்புவின் ரசிகர்கள் அவருக்கு ஒரு கோவில் கட்டினார்கள். இது நாடு முழுவதும் பல விமர்சனங்களைச் சந்தித்தது. திரை நட்சத்திரங்களின் மீது  அசாத்தியமான மோகம் கொண்டவர்கள் என்னும் பெயரைத் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு இது பெற்றுத்தந்தது. குஷ்புவின் அரசியல் வாழ்க்கை அதிமுக, திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஆகிய மாநிலக் கட்சிகளிலிருந்து தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி என்று மாறியிருக்கிறது. தமிழ் வாக்காளர்கள் திரைப்பட நட்சத்திரங்களை ஆராதிப்பவர்கள் என்னும் கருத்தை இவையெல்லாம் வலுப்படுத்தியுள்ளன. தமிழக அரசியலில் வெற்றிக்கான பாதை சினிமா என்பது இன்று கிட்டத்தட்ட ஒரு கோட்பாடாக நிலைபெற்றுவிட்டது. தமிழ் வாக்காளர் போதிய அரசியல் அறிவு அற்றவர், அவரைக் கையாள்வது எளிது என்னும் எளிய முடிவுக்குப் பலரும் வந்திருக்கிறார்கள்.

ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய நட்சத்திரங்களாக விளங்கும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரின் தோல்வியுற்ற அரசியல் வாழ்க்கையைப் பாருங்கள். 1960களில் குழந்தை நடிகராகத் திரையுலகில் அறிமுகமான கமல்ஹாசன் இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல மொழிப் படங்களில் அவர் நடித்தாலும் அவற்றில் பெரும்பாலானவை தமிழ்ப் படங்கள். அவரது படங்கள் விமர்சகர்களின் விருதுகளையும் வணிக ரீதியான வெற்றிகளையும் பெற்றுள்ளன. 2018இல் அவர் மக்கள் நீதி மய்யம் (எம்.என்.எம்.) என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். புகழ்பெற்ற நட்சத்திரமாக இருந்தபோதிலும் அவருடைய கட்சி 2019 மக்களவைத் தேர்தலிலும் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்ட எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. சட்டமன்றத் தேர்தலில் தென் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாஸன் பாஜகவிடம் தோல்வியடைந்தார். அன்றும் இன்றும் தமிழக அரசியல் நிலப்பரப்பில்  அவருடைய பங்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான ஒன்றிணைந்த எதிர்ப்பை முன்வைப்பதற்காக வலுவான திமுகவுடன் எம்.என்.எம். கூட்டணி வைத்தது. தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

கமல்ஹாஸனைக் காட்டிலும் கூடுதலான நட்சத்திர வலிமையும் முற்றிலும் மாறுபட்ட அரசியல் சித்தாந்தமும் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பல ஆண்டுகளாக அரசியல் களத்தில் ஏமாற்றத்தைச் சந்தித்துவருகிறார். “சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், தமிழ்நாட்டைத் தாண்டி (குறிப்பாக ஜப்பான் வரை) ரசிகர்களைக் கொண்டவர். 1990களில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவருடைய இல்லத்துக்கு அருகில் வசித்த ரஜினிகாந்துக்கு முதல்வருடன் அவ்வப்போது ஏற்பட்ட மோதல்கள் பரபரப்பான செய்திகளாயின. ரஜினிகாந்த் ஜெயலலிதாவை வெளிப்படையாக எதிர்த்தது 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முக்கியக் காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். அடுத்த இருபது ஆண்டுகளில், ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தாரே தவிர ஒருபோதும் அரசியலில் இறங்கவில்லை. இறுதியாக அவர் அரசியலில் இறங்க முடிவுசெய்து 2018இல் ரஜினி மக்கள் மன்றம் என்னும் அமைப்பை உருவாக்கினார். இந்தப் பரிசோதனை அதிக நாள் நீடிக்கவில்லை. அவர் அறிவித்ததுபோல அது கட்சியாக உருவெடுக்கவில்லை. தேர்தலிலும் போட்டியிடவில்லை. 2021இல் மன்றம் தன் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது. திரை நட்சத்திரங்கள் என்ற வகையில் கமல்ஹாசனுக்கும் ரஜினிகாந்துக்கும் உள்ள அபாரமான புகழ் அவர்களது அரசியல் சித்தாந்தங்களில் இருக்கும் தெளிவின்மை, தொழில்முறை அரசியல்வாதிகளாக அவர்களது அனுபவமின்மை ஆகியவற்றை மீறி அவர்களுக்கு வெற்றி தேடித்தரவில்லை.

ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் ஏன் அரசியலில் வெற்றிபெறவில்லை என்பதை விளக்குவதல்ல; தமிழக அரசியலின் சிக்கலான தன்மையை வலியுறுத்துவதே என் நோக்கம். நீண்ட காலமாகவே தமிழ் சினிமாவிற்கும் அரசியலுக்கும் இடையே தொடர்புகள் உள்ளன (தியோடர் பாஸ்கரன், ராபர்ட் ஹார்ட்கிரேவ் ஜூனியர், கே. சிவத்தம்பி, எம்.எஸ்.எஸ். பாண்டியன், சாரா டிக்கி, செல்வராஜ் வேலாயுதம், பிரேமிண்டா ஜேக்கப் உள்ளிட்ட பலர் இதை ஆய்வுசெய்திருக்கிறார்கள்). ஆனால் இந்தத் தொடர்புகளைத் தனிநபர்கள் திரைப்படங்களில் பெற்ற வெற்றி அல்லது வெகுமக்களிடையே அவர்கள் பெற்ற புகழின் விளைவாகச் சுருக்க முடியாது. அப்படிச் செய்வது தமிழ் வாக்காளரின் அரசியல் அறிவையும், தமிழ்நாட்டின் வலுவான கட்சிகளின் அரசியல் அறிவுக்கூர்மையையும் குறைத்து மதிப்பிடுவதாகும். தமிழ்நாட்டு வாக்காளர்கள் திரையுலகப் பிரமுகர்களை ஆதரிப்பதில் அபாரமான விவேகத்தைக் காட்டியிருக்கிறார்கள். ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் அரசியல் தலைவர்களாக அவர்கள் நிராகரித்திருக்கிறார்கள்.

விஜயகாந்த், சரத்குமார், ராதிகா சரத்குமார் உட்பட சில நடிகர்கள் தங்கள் அரசியல் வாழ்க்கையில் ஓரளவு வெற்றியைப் பெற்றுள்ளனர். அவர்கள் அரசியல் கட்சிகளை உருவாக்கித் தேர்தலில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். போன்றவர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களின் வெற்றிகள் மிகவும் குறைவு. விஜயகாந்தின் கட்சி ஒரு சில தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சரத்குமார் கட்சி அண்மையில் பாஜகவுடன் இணைந்தது. குஷ்பு பல்வேறு கட்சிகளில் உறுப்பினராக இருந்தும் தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. விஜய் சமீபத்தில்தான் களம் இறங்கினார். அஜித் குமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி, நயன்தாரா, த்ரிஷா, தனுஷ் போன்ற தற்போதைய நட்சத்திரங்கள் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள்.அவர்களில் பலர் மனிதாபிமானச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.  நட்சத்திர அந்தஸ்துக்கும் பொது வாழ்வில் அவர்களுடைய ஈடுபாட்டிற்கும் இடையில் மாறிவரும் உறவுகளை இது பிரதிபலிக்கிறது. தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்திற்குத் திரைப்படம் சுலபமான பாதை என நீண்டகாலமாகப் புழங்கிவரும் தேய்வழக்கு உண்மையில் முந்தைய தலைமுறை அரசியல்வாதிகளுடன், குறிப்பாக மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் தொடர்புடையதாகவே தோன்றுகிறது. அவர்களில் இருவர் நீண்ட காலம் அரசியலில் இருந்தார்கள். இருபத்தியோராம் நூற்றாண்டுவரை அவர்களுடைய அரசியல் வாழ்க்கை நீடித்திருந்தது. ஆனால் இந்த வெற்றிகளை அவர்களின் திரையுலக வாழ்க்கையின் விளைவு என்று சுருக்கவோ நிராகரிக்கவோ முடியாது.

தமிழக அரசியலின் ஆரம்பகாலத் தலைவர்களின் அரசியல் வாழ்க்கையின் வேர்களை ஈ.வெ. ராமசாமி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் காணலாம். இந்து மதத்தின் சாதிய, பாலினப் படிநிலைகளைத் தீவிரமாக எதிர்த்த இந்த இயக்கம், இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தி பேசும் பகுதியான வட இந்தியாவிலிருந்து மாறுபட்ட தமிழ் (அல்லது திராவிட) நாட்டின் பண்பாட்டுத் தனித்தமையை வலியுறுத்தியது. இந்தச் சுயமரியாதை இயக்கத்தின் முதன்மை உறுப்பினர்களில் ஒருவராக இருந்த சி.என். அண்ணாதுரை, இந்தியா ஜனநாயக நாடாக மாறியபோது தேர்தல் அரசியலில் பங்கேற்கக்கூடிய அரசியல் கட்சியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) நிறுவினார். 1967இல் இந்தக் கட்சி மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது. அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு கட்சியில் பிளவு ஏற்பட்டது. 1970களின் முற்பகுதியில் எம்.ஜி.ஆர். தலைமையில் திமுகவிலிருந்து பிரிந்தவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) உருவாக்கினார்கள். இது தமிழகத்தின் மற்றொரு வலுவான கட்சியாக வளர்ந்தது. அதாவது, தமிழ்நாட்டின் அரசியலில் இரண்டு முக்கியமான தலைவர்கள் தங்கள் அரசியல் சித்தாந்தத்தையும் வழிமுறையையும் ஒரே ஊற்றிலிருந்துதான் பெற்றார்கள். அவர்களின் பிரச்சார முறை சினிமாவை மையமாகக் கொண்டிருந்தது. திரைப்படம் 1950களிலும் 60களிலும் வேகமாக வளர்ந்துவரும் ஊடகமாக இருந்தது. இது கிராமப்புறங்களையும் படிப்பறிவற்ற பார்வையாளர்களையும் சென்றடையக்கூடியது. எனவே இது தேர்தல் அரசியலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில், திமுக தனது கொள்கையைப் பரப்பவும், மதம் சார்ந்த மூடநம்பிக்கைகள், சாதி/வர்க்கப் படிநிலைகள் ஆகியவை குறித்த விமர்சனங்களை முன்வைக்கவும் திரைப்படத்தை உணர்வுப்பூர்வமாகப் பயன்படுத்தியது. தன்னுடைய தேர்தல் சின்னத்தையும் (உதயசூரியன்) திரைப்படங்களில் காட்டியது. எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் போன்ற நட்சத்திரங்களுக்கான ரசிகர் மன்றங்கள் கட்சிக்கான தொண்டர்களை அணிதிரட்ட உதவின. ரசிகர் மன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு பகுதிகயிலும் கட்சிகளுக்காகப் பிரச்சாரம் செய்ததுடன் அரசியலிலும் நுழைந்தார்கள்.

அரசியல், சினிமா ஆகிய இரு களங்களிலும் செயல்பட்டுவந்த தனிநபர்களின் தொழில் வாழ்க்கையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, மு. கருணாநிதி 1952ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் சமூக அவலங்களை விமர்சித்துப் பொறி பறக்கும் வசனங்களை எழுதினார். அப்போது திருச்சி சட்டமன்ற உறுப்பினரக இருந்த அவர், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். ஒரு துறையில் அவரது செயல்பாட்டை மற்றொன்றிலிருந்து பிரிக்க முடியாது. இரண்டுமே திமுகவின் கொள்கைகளையே முன்னிறுத்தின. 50களிலும் 60களிலும் திரையுலகப் பிரமுகர்களின் அரசியல் வெற்றியானது சினிமாவுக்கும் திமுக அரசியலுக்கும் இடையேயான ஆழமான அமைப்பு சார்ந்த உறவுகளிலிருந்து உருவானது. இந்த வெற்றி வெறுமனே பாமர மக்களிடம் அவர்கள் பெற்ற புகழின் விளைவு அல்ல. 1960களில், எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கை தனிநபரை மையமாகக் கொண்டு அமைந்தது. திமுக கொள்கைகள் நீர்த்துப்போன நிலையில் அதில் இடம்பெற்றன. ஆனால் அப்போதும் அவரது படங்கள் கட்சியின் செய்திகளுடனும் குறியீடுகளுடனும் நெருக்கமாக இணைந்திருந்தன. திரையுலகிற்கு வெளியே எம்.ஜி.ஆர். மக்களுக்கான தொண்டுப் பணிகள், பொதுக்கூட்டங்கள் போன்ற அரசியல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டார். அரசியல் பிரச்சாரத்திற்கு சினிமாவைத் திட்டமிட்டுப் பயன்படுத்திய இந்த முதல் தலைமுறை அரசியல்வாதிகளுக்குப் பிறகு, திரைப்படத்திலும் அரசியலிலும் அற்புதமான வெற்றியைப் பெற்ற ஒருவரைக்கூடத் தமிழ்நாடு காணவில்லை.

திரைப்படத்திற்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்புகள் தமிழ்நாட்டிற்கும் அதன் அண்டை மாநிலங்களுக்கும் மட்டுமேயானதல்ல (தெலுங்குப் படங்களில் மாபெரும் புகழ்பெற்ற நட்சத்திரமான என்.டி. ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியை நிறுவி, 1980, 90களில் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். தென்னிந்தியா நட்சத்திர வசியத்துக்கு உட்பட்டது என்னும் பொதுக்கருத்துக்கு இதுவும் வலு சேர்த்தது). நாட்டின் பிற பகுதிகளிலும் இந்தப் போக்கு வலுவாக இருந்தது. எல்லாக் கட்சிகளிலும் இந்தப் போக்கு நிலவியது. சுனில் தத், தர்மேந்திரா, ஜெயா பச்சன், ஊர்மிளா மடோங்கர், கங்கண ரணாவத் ஆகியோரின் அரசியல் வாழ்க்கை, விந்திய மலைகளுக்கு வடக்கே உள்ள அரசியலிலும் நட்சத்திர அந்தஸ்து தாக்கம் செலுத்துவதைக் குறிக்கிறது.

இன்னும் பரந்த அளவில் பார்க்கும்போது, திரைப்படத்துக்கும் அரசியலுக்கும் இடையேயான ஊடாட்டங்களை எந்த ஒரு பிராந்தியத்தின் பண்பாட்டுத் தனித்துவத்தை (அல்லது பின்தங்கிய நிலையை) வைத்து விளக்க முடியாது. நவீன உலகில் வெகுஜன ஊடகங்கள், சமூகம், அரசியல் ஆகியவற்றுக்கு இடையிலான கருத்தியல் உறவுகளால் விளக்க முடியும். இந்த உறவுகள் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து தற்போதுவரை காணப்படுகின்றன; உலகளாவிய தெற்கிலும் வடக்கிலும் உள்ள சர்வாதிகார, ஜனநாயக நாடுகளில் இவை பரவியிருக்கின்றன. அல்ஜீரியா 1950களில் பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கான போரில் அல்ஜீரிய சினிமா முக்கியப் பங்கு வகித்தது என்றும் அது இன்று எப்படி நினைவுகூரப்படுகிறது என்பதையும் ஒரு ஆய்வு விளக்குகிறது. சமகால அமெரிக்காவின் பழமைவாத, தாராளவாத அரசியல் சக்திகளுக்கிடையே போட்டிக்கான தளமாகத் திரைப்படங்கள் செயல்படுவதை மற்றொரு ஆய்வு காட்டுகிறது. ஜெர்மனியிலும் இத்தாலியிலும் பாசிச ஆட்சிகளுக்குத் திரைப்படங்கள் உதவின. கொரியாவிலும் பராகுவேயிலும் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்கவும் திரைப்படங்கள் உதவின. சினிமாவிற்கும் அரசியலுக்கும் இடையிலான உறவுகள் சிக்கலானவை. நட்சத்திர வழிபாடு என்றோ குறிப்பிட்டதொரு பண்பாட்டின் தனித்த இயல்பு என்றோ அதைக் குறுக்கிவிட முடியாது. தங்களைக் குறைத்து மதிப்பிட  வேண்டாம் என்று இந்திய வாக்காளர்கள் பலமுறை அரசியல் பண்டிதர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். மிக அண்மைக்காலத்தில், 2024 மக்களவைத் தேர்தல்களில், கருத்துக் கணிப்புகளை மீறி, கணிசமாகக் குறைக்கப்பட்ட வலிமையுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. கடந்த இருபது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் அரசியல் மாறிவிட்டதையும், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தின் இயல்பாக இருந்த சினிமா-அரசியல் நேரடித் தொடர்பு இப்போது இல்லை என்பதையும், தமிழ் வாக்காளர் ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல என்பதையும் உணர வேண்டிய தருணம் இது.

ராதா குமார்

Author

ராதா குமார் சைராகஸ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர். 

(Tamil Translation by Aravindan D.I.) 
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்