இந்தியா-ஆஸ்திரேலியா உறவு இயற்கையானது, ஆனால் புறக்கணிக்கப்பட்டது என்று நீண்ட காலமாகக் கூறப்படுகிறது. காலனிய ஆட்சிக்கு உட்பட்டிருந்த இந்த இரு நாடுகளும் பொதுவான ஜனநாயக விழுமியங்களையும் கலாச்சார நோக்கங்களையும் கொண்டிருப்பதாகக் கருதப்படுவதால் இவ்விரு நாடுகளுக்கிடையிலான உறவு இயற்கையானது எனக் கூறப்படுகிறது. பனிப்போர் காலகட்டத்தில் இந்தியா அணிசேரா நிலைப்பாடு எடுத்தது. ஆஸ்திரேலியா அமெரிக்காவுடன் கூட்டணி அமைத்திருந்தது. எனவே இந்த உறவு புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது. "கிரிக்கெட், உணவு, காமன்வெல்த்" ஆகியவைதான் இரு நாடுகளுக்கிடையிலான உறவைக் கட்டமைத்த மேலோட்டமான அடிப்படை. ஆசியாவிலும் பசிபிக் பிராந்தியத்திலும் ஆங்கிலோ-சாக்சன் பிரிவினரின் (5, 6ஆம் நூற்றாண்டுகளில் வடக்கு ஐரோப்பாவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து குடியேறியவர்கள்) மேலாதிக்கத்தின் துணை ஏகாதிபத்திய ஆதரவாளராக ஆஸ்திரேலியா இருந்தது. பிறகு, அமெரிக்காவும் இந்தியாவும் இந்தப் படிநிலை அரசியலையும் பொருளாதார ஒழுங்கையும் விமர்சித்து எதிர்த்தன. ஜவஹர்லால் நேருவின் தேசியவாதத்திலிருந்து உருவான நாகரிகம் சார்ந்த இந்தியாவின் தனித்துவம் என்னும் கருத்தை இவை முன்னிறுத்தின. பனிப்போருக்குப் பிந்தைய காலத்தில் ஆஸ்திரேலியா அமெரிக்காவுடனான கூட்டணியிலும் ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தும் நாடுகளுடனான உறவிலும் உறுதியாக இருந்தது. இந்தியா தனது மூலோபாய சுயாதிகாரத்தில் உறுதியாக இருந்தது. 1990களில் இந்தியா தனது பொருளாதாரத்தை தாராளமயமாக்கியபோதிலும், அதன் வளர்ச்சி சேவைத் துறையின் விரிவாக்கத்தால் சாத்தியமானது. ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் அதன் வள ஆதாரங்கள், கல்விச் சேவை ஆகியவற்றைப் பிற நாடுகளுக்கு, குறிப்பாக சீனாவிற்கு, வழங்கியதால் வளர்ந்தது. எனவே இந்திய, ஆஸ்திரேலிய உறவை ஆழப்படுத்துவதகான பொருளாதாரக் காரணிகள் ஏதுமில்லாத நிலை இருந்தது.
எனினும், கடந்த ஐந்து ஆண்டுகளில், முக்கியமாக சீனாவுடன் அதிகரித்த பதற்றங்களால் சூழ்நிலைகள் வியக்கத்தக்க முறையில் மாறிவிட்டன. சீனாவுடனான ஆஸ்திரேலியாவின் உறவு 2017இல் வேகமாக மோசமடையத் தொடங்கியது. ஆஸ்திரேலியாவிலும் தனது "செல்வாக்கு மண்டலம்" என அந்நாடு கருதும் பசிபிக் பிராந்தியத்திலும் சீனாவின் "தலையீடு" தொடர்பான அச்சுறுத்தல் குறித்து ஆஸ்திரேலியக் கொள்கை வகுப்பாளர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள். சீனாவின் தலையீட்டைத் தடுப்பது, ஆஸ்திரேலியாவில் சீன முதலீட்டைக் கட்டுப்படுத்துவது, அமெரிக்காவுடனான அதன் கூட்டணியை வலுப்படுத்துவது, ஜப்பான் போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதற்கான விழைவு ஆகியவற்றின் பெயரால் ஆஸ்திரேலியாவின் குடிமை உரிமைகளைப் பலவீனப்படுத்தக்கூடிய தேசியப் பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்படுவதற்கு இது வழிவகுத்தது. ஆஸ்திரேலிய-சீன உறவு தொடர்ந்து சரிந்துவந்த நிலையில், சீனா முந்தைய தாராளவாத-தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக இராஜதந்திர "முடக்கத்தை" ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய விவசாயப் பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தத் தொடங்கியது. ஆஸ்திரேலியாவில் படிக்க வேண்டாம் எனத் தன் மாணவர்களிடம் வலியுறுத்தியது. இத்தகைய நடவடிக்கைகள் சீனாவைத் தாண்டிச் தன் சந்தைகளை விரிவுபடுத்துவதற்கான உந்துதலை ஆஸ்திரேலியாவுக்கு உருவாக்கியது.
2020 வாக்கில் சீன, இந்தியத் துருப்புக்களுக்கு இடையே சர்ச்சைக்குட்பட்ட எல்லைப் பகுதியில் மோதல் நிகழ்ந்ததைத் தொடர்ந்து சீனாவுடனான இந்தியாவின் உறவும் மோசமடைந்தது. 1975க்குப் பிறகு முதன்முறையாக நடந்த இந்த மோதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. 2021, 2022இல் சற்றே தீவிரம் குறைந்த மோதல்கள் ஏற்பட்டன. சர்ச்சையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. நுகர்வோர் பொருட்கள், உற்பத்திக்கான உதிரிபாகங்கள் ஆகியவற்றில் சீனாவை அதிகம் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்தியா முயன்றது. உள்ளூர் தொழில்துறைக்கான ஊக்கத் திட்டங்கள், புதிய சுங்க வரிகள், சுங்க வரி அல்லாத தடைகள், சீனத் தொழில்நுட்பங்கள் சிலவற்றின் மீதான தடைகள், இந்தியாவில் சீன முதலீடு மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் மூலம் இதைச் செய்தது.
சீனாவுடனான ஆஸ்திரேலிய, இந்திய உறவுகள் ஒரே நேரத்தில் பின்னடைவைச் சந்தித்திருப்பது இந்த இரு நாடுகளிடையே நெருக்கமான ஒருங்கிணைப்புக்கான உத்வேகத்தை அளித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் இரு நாடுகளும் விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை அறிவித்தன. மலபார் கடல்சார் பயிற்சியில் பங்கேற்பதற்கான தன் நீண்டகால விருப்பத்தை ஆஸ்திரேலியா இந்த ஆண்டு நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு அந்தப் பயிற்சியை ஆஸ்திரேலியா நடத்துகிறது. ஆஸ்திரேலியா இப்போது இந்தியாவை "உயர்மட்ட"ப் பாதுகாப்புப் பங்காளியாகத் தரமுயர்த்தியுள்ளது. நீண்ட காலம் தாமதமாகிவந்த பொருளாதார உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் துரிதப்படுத்தப்பட்டு, கடந்த ஆண்டு இடைக்கால ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஆஸ்திரேலியா இந்தியாவுடனான நெருக்கமான உறவை எப்போதுமே மிகவும் ஆர்வத்துடன் முன்னிறுத்திவந்திருக்கிறது என்றாலும், இந்தியா இப்போது அதற்குச் சாதகமாக எதிர்வினையாற்றுகிறது. இந்தியாவிற்குப் பல ஆஸ்திரேலிய அமைச்சர்கள் வருகை தருவதற்கு இணையாக 2022ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு எண்ணற்ற அமைச்சர்களை அனுப்பியது.
இரு நாடுகளுக்கும் முக்கியமான பல்தரப்புக் கூட்டுறவு அமைப்பாக குவாட் அமைந்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகியவற்றின் குவாட் கூட்டணி கூட்டு அறிக்கைகளை வெளியிடுவதை முன்பு தவிர்த்துவந்தன. முக்கியமான பலதரப்பு நிகழ்வுகளின்போது மட்டுமே குவாட் நாடுகளின் தலைவர்கள் சந்தித்தனர். குவாட் குழுவில் இந்தியா மிகவும் எச்சரிக்கையான உறுப்பினராகவே இருந்துவந்தது. குவாட் தொடர்பான தனது செய்திக் குறிப்புகளில் பாதுகாப்புப் பிரச்சினைகளையோ சீனாவையோ குறிப்பிடுவதைத் தவிர்த்துவந்தது. ஆனால், 2021ஆம் ஆண்டிலிருந்து, உள்கட்டமைப்பு உருவாக்கம், முக்கியமான தொழில்நுட்பங்கள் போன்றவை உள்ளிட்ட விரிவான செயல்திட்டங்களைக் கோடிட்டுக் காட்டும் கூட்டு குவாட் அறிக்கைகளை இந்திய அரசாங்கம் வெளியிடத் தொடங்கியது. சீனாவின் செயல்பாடுகளையும் அதன் நோக்கங்களையும் மறைமுகமாகக் குறிக்கும் தெற்கு, கிழக்கு சீனக் கடல்கள் பற்றிய கவலைகளையும் இந்த அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. பல்தரப்புக் கூட்டாண்மையைத் தவிர, இருதரப்பு மட்டத்திலும் இந்தியாவைத் தன்னுடைய பங்காளியாக ஆஸ்திரேலியா அடையாளம் கண்டுள்ளது. செமிகண்டக்டர்கள் போன்ற முக்கியமான தொழில்நுட்பங்களுக்கான நம்பகமானதும் வெளிப்படையானதுமான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல்; மின்னணு வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்துவரும் துறைகளில் தொழில்நுட்பங்களின் உலகளாவிய நிர்வாகத்தை வடிவமைத்தல்; மருத்துவச் சாதனங்கள், தடுப்பூசிகள் போன்ற துறைகளில் கூட்டுப் புத்தாக்கத்தை முன்னெடுத்தல் ஆகியவற்றில் இவ்விரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளும் தற்போது வலுப்படுத்தப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குடியேறும் வெளிநாட்டவர்கள், ஆஸ்திரேலியாவில் படிக்கும் சர்வதேச மாணவர்கள் ஆகியோரை அதிகம் கொண்ட இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இப்போது உள்ளது. ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம் இந்தியாவில் தன்னுடைய கிளையைத் தொடங்கவிருக்கிறது. அப்படித் தொடங்கும் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகமாக இது இருக்கும். இரு நாடுகளும் தொழிலாளர் பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருக்கின்றன. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பட்டதாரிகள், வணிகர்கள் ஆகியோரைப் பரிமாற்றிக்கொள்வதை எளிதாக்க விழையும் ஒப்பந்தம் இது. அரசியல் தலைவர்கள், பாதுகாப்பு ஆய்வாளர்கள் மத்தியில் "இந்தியாவின் மதிப்பை உயர்த்துபவர்கள்" தற்போது கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். சீனாவை விமர்சிக்கும் இவர்கள், “விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கை” ஆதரிப்பதில் பற்றுறுதி கொண்ட நாடு என்று இந்தியாவைப் புகழ்கிறார்கள். ஆஸ்திரேலியாவுடன் ஒருமித்த கருத்துள்ள, ஆஸ்திரேலியாவைப் போன்றே ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட நாடாகவும் இந்தியாவை இவர்கள் முன்னிறுத்துகிறார்கள். இந்தியாவைப் பற்றிப் பேசுகையில், "ஆழமான வரலாறும் நாகரிக அறிவும் கொண்ட சக்தி" என்று இந்திய அரசாங்கம் தனது நாட்டைப் பற்றி முன்வைக்கும் முழக்கத்தை ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி பென்னி வோங் பயன்படுத்தியிருக்கிறார். இந்த முழக்கம் இப்போது இந்து தேசியவாதப் பார்வையின் வாயிலாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. இந்தப் பார்வையின்படி இந்தியா இந்து நாகரிகம்; முஸ்லிம்கள் அதை ஆக்கிரமித்து அடிமைப்படுத்தியவர்கள்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரைசினாவில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டபோது ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் செல்வாக்கைக் கூட்டுவதற்கான பரப்புரை இயக்கத்தை இந்திய அரசு மேற்கொண்டது. தனிப்பட்ட முறையிலான பாராட்டுக் கடிதங்கள், மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகள் ஆகியவற்றின் மூலம் ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துபவர்களுடனான நெருக்கத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் இறங்கியது. ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்தியாவுக்கு வருகைபுரிந்தபோது, நரேந்திர மோடி கிரிக்கெட் அரங்கில் அவரை ரதத்தில் வலம் வரச்செய்து மாவீரருக்கான வரவேற்பை மோடி அளித்தார். ரதம் என்பது இந்து தேசியவாத அரசியலில் தீவிர முக்கியத்துவம் வாய்ந்த குறியீடு. மோடி சிட்னிக்குச் சென்றபோது காவி நிறப் பட்டை அணிந்து அல்பானீஸ் அவரை வரவேற்றார். காவி நிறம் பாரதிய ஜனதா கட்சியுடனும் (பாஜக) தீவிரவாத இந்து தேசியவாதத்துடனும் அடையாளப்படுத்தப்படுவது. பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள் குழுவின் தலைவர்கள் உள்ளிட்ட புலம்பெயர்ந்த இந்தியர்களின் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த இந்திய அரசியல் பேரணியை ஒத்த ஒரு நிகழ்வில் மோடியைத் "தலைவர்" என்று அல்பானீஸ் புழந்தார்.
எனினும், குறிப்பிடத்தக்க சவால்கள் இன்னும் உள்ளன. மேம்பட்ட ஆயுதங்களுக்காக ரஷ்யாவை இந்தியா நம்பியிருக்கிறது. இது ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். ஏனென்றால், ரஷ்யாவின் மீது ஆஸ்திரேலியா அவநம்பிக்கை கொண்டுள்ளது. ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான ஆயுதம்சார் அமைப்புகளின் தொடர்புகளால் பாதுகாப்பு அபாயங்களும் ஏற்படக்கூடும். உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து ரஷ்யாவுடனான இந்தியாவின் "சிறப்பு அந்தஸ்து பெற்ற மூலோபாயக் கூட்டாண்மை" வலுப்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன்மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்க மறுத்த இந்தியா, ரஷ்யாவிடமிருந்து வாங்கும் எரிசக்தியின் அளவை அதிகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம், உற்பத்தி விநியோகச் சங்கிலி இணைப்புகளை ஆழப்படுத்த முயற்சிக்கும் ரஷ்யாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காகப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. மேலும், வங்கிக் கொடுப்பனவுகளை எளிதாக்கி, ரஷ்ய வங்கிகள் மீது மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கும் தடைகளைத் தவிர்ப்பதற்காக ரஷ்யாவின் நிதிச் சேவைச் செயல்முறையை இந்தியா பின்பற்றுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார உறவு குறுகியதாக உள்ளது. நிலக்கரி ஏற்றுமதியே இதில் பெரும்பங்கை வகிக்கிறது. இந்தியாவில் மின்சார உற்பத்தியை விரிவுபடுத்துவதற்காக, இந்தியாவின் கட்டுப்பாட்டில் அமையும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஆஸ்திரேலியாவை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் ஆஸ்திரேலியாவில் சுரங்கத் தொழிலில் இந்திய நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளன. புதிய நிலக்கரித் திட்டங்களில் முதலீட்டாளர்களும் கடன் வழங்குபவர்களும் இல்லாததால் இந்தத் திட்டங்கள் முடங்கியுள்ளன. குயின்ஸ்லாந்தில் உள்ள கலிலி படுகையில் இந்திய நிறுவனமான ஜிவிகே ஹான்காக் திட்டமிட்ட பெரிய அளவிலான சுரங்கங்கள் இப்போது செயலற்றுக் கிடக்கின்றன. அதே பகுதியில் உள்ள அதானியின் கார்மைக்கேல் சுரங்கம் தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட நிலக்கரியின் அளவில் ஆறில் ஒரு பங்கை மட்டுமே உற்பத்தி செய்கிறது.
விவசாயச் சந்தையை அணுகுவதைத் தாராளமயமாக்குவதில் இந்தியா தயக்கம் காட்டிவருகிறது. தொழிலாளர்கள் கணிசமான அளவில் இந்தியாவிலிருந்து வருவதை அனுமதிக்க ஆஸ்திரேலியா விரும்பவில்லை. முழுமையான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இவை சவால்களாக உள்ளன. ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை விரைவாக வளர்ந்துவருகிறது. விசா மோசடிக் குற்றச்சாட்டுகள், விசா முறையை மாற்றியமைக்கும் திட்டங்கள் ஆகியவற்றால் இது குறைக்கப்படலாம்
இந்தியா தொழில்நுட்ப ஒத்துழைப்பில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவும் குவாட் குழுவின் இதர இரு நாடுகளும் திறந்த சந்தைகள், அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் பற்றுறுதி கொண்டிருக்கின்றன. மின்னிலக்கத் துறையில் சர்வாதிகாரப் போக்கு தலையெடுப்பது பற்றிய கவலைகளைக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் தொழில்நுட்பக் கொள்கைகளோ தரவுகளை உள்ளூர்மயமாக்குதல், சமூக ஊடகங்களைத் தணிக்கை செய்வது, இணையத் தொடர்பைத் துண்டிப்பது ஆகியவற்றின் மூலம் தொழில்நுட்ப சர்வாதிகாரத்தைக் கடைப்பிடித்தல் போன்ற கொள்கைகள் மூலம் தொழில்நுட்ப தேசியவாதத்தை முன்னெடுக்கின்றன. இதன் விளைவாக, மின்னிலக்கப் பொருளாதாரம் குறித்த ஜி20 ஒசாகா பிரகடனம், தகவல்கள் தடையின்றிப் பரவுவதை உறுதிசெய்வதற்கான இணையத்தின் எதிர்காலம் குறித்த பிரகடனம் போன்ற பலதரப்பு உலகளாவிய தொழில்நுட்ப நிர்வாக முனைப்புகளை இந்தியா நிராகரித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா யதேச்சதிகாரத்தை நோக்கிச் சென்றதற்கான விரிவான சான்றுகள் இருப்பதால், இந்தியாவைத் துடிப்பான தாராளவாத ஜனநாயகமாக இந்தியாவின் மதிப்பைக் கூட்டும் குழுவினர் முன்னிறுத்துவதை அறிவுசார்ந்து ஏற்க இயலாத நிலை உள்ளது. இந்த ஏற்பின்மையைக் குறைக்க, இந்தக் குழுவினர் யதேசாதிகாரப் போக்குகளைச் சிறிய நிகழ்வுகளாகச் சித்தரித்தல், அவற்றின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுதல், அவற்றைத் தவிர்த்தல், வேண்டுமென்றே அறியாததுபோல நடந்துகொள்ளுதல் போன்ற உத்திகளைக் கடைப்பிடிக்கிறார்கள். மோடியை அவதூறாகப் பேசியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்துக் கருத்து கேட்டபோது, இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொன்ன அல்பானீஸ், இந்தியாவின் உள்நாட்டு அரசியலைப் பற்றி அறியாதவர்போலக் காட்டிக்கொண்டார். மோடியின் ஆஸ்திரேலிய விஜயத்தின்போது அல்பானீஸ் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் பற்றிக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அதே நேரத்தில் இந்திய விரோதம், இந்துக் கோவில்களில் காலிஸ்தான் ஆதரவுப் பதாகைகள் ஆகியவை பற்றிக் குறிப்பிட்ட மோடி, "இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான இணக்கமான நட்புறவுக்குச் செயல்களாலோ எண்ணங்களாலோ ஊறு விளைவிக்கும் எந்தவொரு பிரிவினருக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை" எடுக்க வேண்டும் கோரினார். அப்படி எடுப்பதற்கான வாக்குறுதியை ஆஸ்திரேலியா தனக்கு அளித்திருப்பதாகவும் கூறினார். இந்தியாவில் சமூக ஆர்வலர்களையும் மாணவர்களையும் கைதுசெய்த நடவடிக்கைகளைப் பெரிய விஷயம் அல்ல என்பதாக இந்தியாவுக்கான ஆஸ்திரேலியத் தூதர் பாரி ஓ'ஃபாரல் கூறினார். இந்தியாவின் பன்மைத்துவ ஜனநாயகத்தையும் வலுவான நிறுவனங்களையும் பாராட்டினார். நிலைமை அப்படி இல்லை என்பதற்கான சான்றுகள் பல இருந்தபோதிலும் அவர் இப்படிப் பேசினார்.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை எதிர்கொள்ளவதில் இந்திய ஜனநாயகத்திற்கு இருக்கும் திறன்மீது இந்தியாவின் மதிப்பைக் கூட்டும் குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இந்த வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளும் அரசு நிறுவனங்களும் உடந்தையாக இருப்பதும் தண்டனையின்றி அவர்கள் தப்பித்துக்கொள்வதும் அதிகரித்துவருவதற்கான சான்றுகள் இருந்தபோதிலும் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். இந்திய அரசியல், ஊடகம், உயர்கல்வி, குடிமைப் பணிகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றில் இந்தியாவின் உயர் சாதி, உயர் நடுத்தர வர்க்க இந்து ஆண்கள் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள். என்றாலும், ஒரு குறிப்பிட்ட சமூகம் மொத்த சமுதாயத்தின்மீதும் நீண்ட காலம் மேலாதிக்கம் செலுத்துவதை இந்தியாவின் பன்முகத்தன்மை தடுக்கிறது என்று இந்தியாவின் மதிப்பைக் கூட்டும் குழுவினர் கூறுகிறார்கள். உயர் சாதி, உயர் நடுத்தர வர்க்க இந்து ஆண்களின் குழுதான் பாஜகவின் முக்கிய ஆதரவுத் தளமாகவும் தலைமையாகவும் உள்ளது. இந்தக் குழுவின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் விதத்தில் நிறுவனங்களையும் பொதுக் கலாச்சாரச் சூழலையும் பாஜக மறுவடிவமைத்துவருகிறது. இந்திய மத்தியதர வர்க்கம் ஆளும் கட்சியின் சித்தாந்தத்தை ஆதரிக்கவில்லை என்றும் இந்தியாவை (மீண்டும்) மகத்துவமான நிலைக்குக் கொண்டுசெல்வேன் என்று மோடி உறுதியளிப்பதால் ஆதரிக்கிறது என்றும் கூறி, இந்தியாவில் இந்து தேசியவாதம் பெற்றுள்ள முக்கியத்துவத்தை இந்திய ஆதரவுக் குழுவினர் குறைத்துக் காட்டுகிறார்கள். சராசரி இந்திய வாக்காளர்கள் இப்போது பாஜகவின் இந்து மைய, முஸ்லிம் எதிர்ப்புக் கண்ணோட்டத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதையும், உயர்கல்வி பெற்ற வல்லுநர்கள் உள்ளிட்ட நடுத்தர வர்க்கத்தினர் இந்தக் கண்ணோட்டத்தைச் சமுதாயத்தில் பரப்புவதில் தீவிரமாகப் பங்கேற்பதையும் ஆய்வுத் தரவுகளும் அறிவார்ந்த ஆய்வுகளும் காட்டுகின்றன. இருந்தபோதிலும் இந்தியாவின் ஆதரவுக் குழுவினர் பாஜக அரசுக்கு அளிக்கும் ஆதரவு தொடர்கிறது.
இந்திய-ஆஸ்திரேலிய உறவு புறக்கணிக்கப்பு என்னும் நிலையைத் தாண்டிவிட்டது என்றாலும் இரு நாடுகளின் புவிசார் அரசியல், பொருளாதார நலன்களில் காணப்படும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இந்த உறவில் கடக்க வேண்டிய சவால்களாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் மதிப்பைக் கூட்டும் பணியில் ஈடுபடுபவர்கள் இந்த உறவை இயல்பாக்குவதற்கான ஆர்வத்தில் உலக அளவில் போற்றப்படும் தலைவர் என மோடியைப் பற்றி முன்வைக்கப்படும் படிமத்தை ஊதிப் பெருக்குகிறார்கள். இந்து தேசியவாதக் கண்ணோட்டத்தில் அவர் மறுஉருவாக்கம் செய்யும் இந்தியாவை முன்னிறுத்துகிறார்கள். மோடிக்கான எதிர்ப்பைக் குறைத்துக் காட்டி, இந்துக்கள் மேலாதிக்கம் செலுத்தும் தேர்தல் யதேச்சாதிகாரத்தின் இந்திய மாதிரி பற்றிய கட்டுக்கதைகளை யதார்த்தமாகச் சித்தரிக்கிறார்கள். இந்திய-ஆஸ்திரேலிய உறவுகளின் வரலாற்றில் மிகவும் கெடுவாய்ப்பான அம்சம் என இதைச் சொல்ல வேண்டும்.