ஜஹாங்கிர்புரி (புது தில்லி), கர்கோன் (மத்தியப் பிரதேசம்), லக்னோ (உத்தரப் பிரதேசம்) ஆகிய இடங்களில் "முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும்" குடியிருப்புகளில் உள்ளதாகக் கூறப்படும் அங்கீகரிக்கப்படாத சொத்துக்களை அரசு அதிகாரிகள் இடிப்பது சமகால இந்தியாவில் முஸ்லிம்களின் அடையாளம், முஸ்லிம்களுக்கான இடப்பரப்பு ஆகியவை குறித்த நிர்வாக ரீதியான சொல்லாடல்களின் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. முஸ்லிம்களுக்கான இடப்பரப்பு என்பது நிர்வாக ரீதியான சொல்லாடல்களில் எப்போதுமே விவாதத்திற்குரியதாக இருந்துவந்தாலும், இந்தப் புதிய புல்டோசர் அரசியல் ஒப்பீட்டளவில் புதிய நிகழ்வாகும்.
முஸ்லிம்களுக்கான இடம் என்பது பிரச்சினைக்குரிய வகைமையாக ஆழமாக மறுவரையறை செய்யப்படுகிறது. "மினி-பாகிஸ்தான்", "பயங்கரவாத மறைவிடங்கள்" என்பனபோன்ற புதிய குறியீடுகளும் சொற்றொடர்களும் இடம் சார்ந்த எல்லைகளைப் பற்றிச் சிந்திப்பதற்கு மதம் ஒரு சட்டபூர்வமான வழிமுறை என்ற தோற்றத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. முஸ்லிம்களுக்கான இடம் என்பதைக் கேள்விக்குரிய ஒன்றாகக் குறிப்பது, இந்திய இடப்பரப்பை வெளிப்படையான இந்துத்தன்மை கொண்ட சொற்களின் மூலம் அணுகுவதற்கான செயல்முறையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அரசியல் பார்வையாளர்கள் பலர் மத அடிப்படையில் இட எல்லைகளை மறுவரையறை செய்வது 2014இல் பாஜக பெற்ற வெற்றியின் வெளிப்படையான விளைவு என்று வாதிடுகிறார்கள். இந்தப் பார்வை, முஸ்லிம் நடைமுறைகள் - அஸான், நமாஸ், உணவு, பண்டிகைகள், அரசியல் நடத்தை, முஸ்லிம்களின் கூட்டுச் செயல்பாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற வடிவங்கள் - தொடர்ந்து இழிவுபடுத்தப்படுவது இந்துத்துவ எழுச்சியின் திடீர் விளைவு என வரையறுக்கிறது. ஆனால், எளிமைப்படுத்தப்பட்ட இந்த முடிவை வைத்துக்கொண்டு, அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அம்சமாக மதம் உருப்பெற்றிருப்பதை முழுமையாக விளக்க இயலாது.
மதத்தை அதிகாரபூர்வமான அரசியல் வகைமையாக மாற்றுவது அண்மைக் காலத்தில் உருவெடுத்த போக்கு. மைய நீரோட்ட அரசியலின் இயல்பில் ஏற்படும் படிப்படியான மாற்றத்துடன் பிரிக்க முடியாத வகையில் இது இணைக்கப்பட்டுள்ளது. பிரிவினைக்குப் பின்னர் அரசை மையமாகக் கொண்ட சமூக நீதியின் மதச்சார்பற்ற செயல்திட்டம் சக்திவாய்ந்த அரசியல் அலகாக இருந்தது. 1980களின் பிற்பகுதியில் மிகவும் ஆழமான மத அடையாள அடிப்படையிலான அரசியலின் கட்டமைப்பு இதை மெல்ல மெல்ல பதிலீடு செய்தது. இந்த முக்கியமான மாற்றம் ஒரு புதிய அரசியல் நெறியாக பெரும்பான்மை-இந்து தேசியவாதச் சொல்லாடலை நிறுவுவதாகப் பரிணமித்தது.
மதமும் குடியுரிமையும்
குடியுரிமைச் சட்டம், 1955இன் கீழ் குடியுரிமைக்கான வரையறையில் மதம் என்ற வகைமையை நிராகரித்து மதச்சார்பற்ற தன்மையை ஏற்றுக்கொண்டது காத்திரமானதொரு நடவடிக்கையாகும். குறிப்பாகப் பிரிவினை தொடர்பான வன்முறையின் பின்புலத்தில் இந்த முடிவு மிகவும் முக்கியமானது. இருப்பினும், அடுத்தடுத்த மாற்றங்கள், குறிப்பாக 1985இல் தொடங்கிய குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள், குடியுரிமைச் சட்டகத்தில் படிப்படியாக மத அடையாளத்திற்கு இடமளித்தன.
குடியுரிமைச் சட்டம் 2004, வம்சாவளி அடிப்படையிலான குடியுரிமைக் கோட்பாட்டினை விரிவுபடுத்துகையில், பிறப்பு என்னும் நிபந்தனையின் எல்லையைச் சுருக்கியது. குடியுரிமை சார்ந்த அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்தை இது குறிக்கிறது. 1955 சட்டத்தில் சேர்க்கப்பட்ட துணைப்பிரிவு [3(ii)], “பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடிநபராகவும் மற்றவர் சட்டவிரோதமாகக் குடியேறியவராக அல்லாமலும்” இருக்கும்பட்சத்தில் மட்டுமே ஒரு குழந்தை பிறப்பால் இந்தியக் குடிநபராக அங்கீகரிக்கப்படும் என்று தெளிவுபடுத்தியது. இந்தச் சட்டம் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் பதிவுசெய்துகொள்ளுதல், நெடுங்காலமாக வசிப்பதன் மூலம் இயல்பாகக் குடிநபராகுதல் ஆகியவற்றின் மூலம் குடியுரிமை பெறத் தகுதியற்றவர்களாக ஆக்கியது. நாடற்ற மக்கள் என்பதாக அவர்களின் நிலையை ஆக்கியது.
அதைத் தொடர்ந்து வந்த விதி குடியுரிமை அந்தஸ்தின் பல்வேறு கூறுகளை அறிவித்தது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்ற வரையறையிலிருந்து பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற சிறுபான்மை இந்துக்களுக்கு விலக்கு அளித்தது. இந்த விளக்கம், மறைமுகமாக, பங்களாதேஷிலிருந்து வந்து குடியேறியவர்களின், குறிப்பாக பங்களாதேஷ் முஸ்லிம்களின் அடையாளத்தைக் குறிவைத்தது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்குச் சிறைத்தண்டனை, நாடு கடத்தல் போன்ற தண்டனைகளை அளித்த அதே வேளையில், மக்கள் நடமாட்டத்தை மேலும் கண்காணிப்பதற்காகத் திருத்தப்பட்ட விதிகளை அடியொற்றித் தேசியக் குடிமக்கள் பதிவேட்டையும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டையும் உருவாக்கிப் பராமரிக்கவும் இந்த சட்டம் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்தது.
குடியுரிமை பற்றிய இந்தப் புதிய கருத்தைக் குடியுரிமைத் (திருத்தச்) சட்டம் (CAA), 2019 மேலும் விரிவுபடுத்தியது. துணைக்கண்டத்தில் இந்தியக் குடியுரிமையைப் பெறுவதற்கான தகுதியாக மத அடையாளத்தை அது நிறுவியது. 2014, டிசம்பர் 31 அன்று அல்லது அதற்கு முன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் அல்லாத, துன்புறுத்தப்பட்ட மதச் சிறுபான்மையினருக்கு (இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள்) சிஏஏ குடியுரிமை வழங்கியது.
மதமும் “சிறுபான்மை”யும்
நேருவிய அரசு மதம் என்ற வகைமையை நிராகரித்து "சிறுபான்மை", "பெரும்பான்மை" என்ற கூடுதல் நடுநிலைத்தன்மை கொண்ட வரையறையை ஏற்றுக்கொண்டது. ஆனால், இந்த வரையறையிலும் அதன் தாக்கங்களிலும் உள்ளார்ந்து அமைந்திருந்த தெளிவற்ற தன்மைகளைப் பிரிவினையின் யதார்த்தங்கள் எடுத்துக்காட்டின. இந்து-பெரும்பான்மை, முஸ்லிம்-சிறுபான்மை என்பதுபோன்ற பிளவுகளை "இயல்பான" கோட்பாடாக மீண்டும் கொண்டுவருவதான அபாயத்தை உணர்ந்த நிலையில் இந்திய அரசியலமைப்பு "சிறுபான்மையினர்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதுடன் அதைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமல் விட்டுவிட்டது.
அரசியலமைப்பின் 29, 30ஆவது பிரிவுகள் "சிறுபான்மையினர்” என்று குறிப்பிடாமல் அதை மதச் சிறுபான்மையினர், மொழிச் சிறுபான்மையினர் என்ற இரண்டு துணைவகைகளாக வகைப்படுத்துகிறது. திறந்த முறையிலான இந்த வகைப்பாடு அடிப்படை உரிமைகளுக்கான பரந்த சட்டகத்தை வழங்குகிறது. இதன்படி எந்தவொரு சமூகமும் எந்த மாநிலத்திலும் அங்குள்ள பிரதானமான மொழி அல்லது கலாச்சாரத்தைப் பொறுத்து சிறுபான்மையினராக இருக்க முடியும்.
சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையச் சட்டம் (NCM), 1992, எந்தவொரு சமூகத்தையும் சிறுபான்மையினராக அறிவிப்பதற்கான முதன்மைத் தகுதியாக மதத்தை அறிமுகப்படுத்தியது. தேசிய அளவில் ஐந்து சமூகங்களை மதச் சிறுபான்மையினராக அறிவித்தது: முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜொராஷ்ட்ரியர்கள் (பார்சிகள்) . "மத்திய, மாநில அரசுகளின் கீழ் சிறுபான்மையினரின் வளர்ச்சியின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக" சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தை அமைப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம். ஆனால், சமூகக் குழுக்களை அடையாளப்படுத்துவதற்கும் தேசிய அளவில் அவர்கள் எந்த அளவுக்கு விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை அறிவதற்குமான அதிகாரபூர்வமான அடையாளமாக மதத்தை இந்தச் சட்டம் நிறுவியது. சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வரையறையை நிர்ணயித்து, இந்தியாவில் உள்ள ஒரே பெரும்பான்மைச் சமூகமாக இந்துக்களை அறிவித்தது. பிரிவு 2 (c) மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவொரு சமூகத்திற்கும் சிறுபான்மை அந்தஸ்தை அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்தது.
2004 தேசிய சிறுபான்மைக் கல்வி நிறுவனச் சட்டமும் (NCMEI) "சிறுபான்மையினர்" என்பதை மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சமூகமாக வரையறுத்தது. அரசியலமைப்பின் 30ஆவது பிரிவில் வழங்கப்பட்டுள்ளபடி, மதச் சிறுபான்மையினர் தங்களுக்கு விருப்பமான வகையில் கல்வி நிறுவனங்களை நிறுவி அவற்றை நிர்வகித்துக்கொள்வதற்கான உரிமைகளை உறுதிசெய்வதே இதன் நோக்கம். ஆனால், இந்தச் சட்டம் மொழிச் சிறுபான்மையினரை இந்தச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கியது. சிறுபான்மை விவகாரங்களைச் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திலிருந்து பிரித்துச் சிறுபான்மை விவகார அமைச்சகத்தை 2006ஆம் ஆண்டில் அரசு உருவாக்கியது. சமூகக் குழுக்களுக்கு நிரந்தரமான அதிகாரபூர்வ அடையாளம் வழங்கப்பட்டதை இந்த மாற்றங்கள் காட்டுகின்றன. சமூக நீதிக்கான உணர்வானது, பல்வேறு மொழிகள், மாநிலங்கள், சாதிகளைச் சேர்ந்தவர்கள், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள் ஆகியோரின் மத அடையாளத்தோடு குறுக்கப்பட்டதையும் இந்த மாற்றங்கள் எடுத்துக்காட்டுகின்றன. மேலும், ஒரு சமூகத்தைச் சிறுபான்மையினராக அறிவிப்பதற்கான பிரதான அளவீடாக அவர்களுடைய மதச் சமூகத்தின் எண்ணிக்கை சார்ந்த வலிமை நிறுவப்பட்டது. இந்த வகைப்பாடு விளிம்பு நிலையை அறிவிக்க ஒருபடித்தானதன்மை என்னும் கோட்பாட்டை முன்னிறுத்தியது.
இந்திய முஸ்லிம் சமூகத்தின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்த 2006ஆம் ஆண்டின் சச்சார் கமிஷன் அறிக்கை சட்ட ரீதியாக ஏற்பட்ட இந்த மாற்றத்திற்குப் பங்களித்தது. இந்த அறிக்கை முஸ்லிம்களுக்கும் பிற மதச் சமூகங்களுக்கும் இடையே அவர்களின் ஓரங்கட்டப்பட்ட நிலைகளுக்கிடையே அதிகரித்துவரும் இடைவெளியை எடுத்துக்காட்டுவதற்காக இரண்டையும் ஒப்பிட்டுப் பகுப்பாய்வு செய்தது. இந்தப் பகுப்பாய்வு பகுத்தறிவையும் விமர்சனபூர்வமான வழிமுறையையும் அடிப்படையாகக் கொண்டது. இது, மதச் சிறுபான்மையினரின், குறிப்பாக முஸ்லிம்களின் வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமானதும் விரிவானதுமான கோட்பாட்டுச் சட்டகத்தை உருவாக்குவதற்கான பகுப்பாய்வு. இந்த அறிக்கை பொதுக் கோட்பாடு, சமூக ஆராய்ச்சி ஆகியவற்றின் சட்டகங்களுக்குள் மத அடையாளத்தை நிறுவியது. இது சமூக நீதி, சமத்துவம் குறித்த பரந்துபட்ட சொல்லாடல்களில் வர்க்கம் என்னும் வகைமையை மத அடையாளத்தை வைத்துப் பதிலீடு செய்தது.
இதைத் தொடர்ந்த அரசியல் நகர்வுகள் இந்த சட்ட-நிர்வாகச் சொற்களஞ்சியத்தின் சில வெளிப்படையான தாக்கங்களைப் பிரதிபலிக்கின்றன. இரண்டு மாற்றங்கள் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை. 2014இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, சிறுபான்மை விவகார அமைச்சர் நஜ்மா ஹப்துல்லா, “முஸ்லிம்கள் எந்த வகையிலும் சிறுபான்மையினர் அல்ல” என்றும், பார்சிகள்தான் கலாச்சாரம், இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உண்மையான அபாயத்துக்குள்ளாகியிருக்கிறார்கள் என்றும் கூறிச் சர்ச்சையை ஏறபடுத்தினார். அமைச்சரின் அறிக்கையைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மையினரான சீக்கியர்கள், பாரிஸ்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அதிகப் பங்காற்றியதாகக் கூறி, சிறப்பு உரிமைகளைக் கோரும் முஸ்லிம்கள் என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இஸ்லாமிய வெறுப்பின் இந்த வெளிப்பாட்டில் வேகமாக வளர்ந்துவரும் சமூகமாகவும் விரைவில் பெரும்பான்மையாகிவிடக்கூடிய சமூகமாகவும் முஸ்லிம் சமூகம் சித்தரிக்கப்பட்டது. முஸ்லிம்களைக் கட்டுப்படுத்திவைக்காவிட்டால் இந்துக்களை அவர்கள் விஞ்சிவிடுவார்கள் என்றும் சொல்லப்பட்டது.
இரண்டாவது மாற்றம் - சிறுபான்மையினர் என்பது குறித்த சட்ட வரையறைக்கும் சிறுபான்மையினரின் நிலையை அறிவிப்பதில் மத்திய அரசுக்குள்ள அதிகாரத்திற்கும் இடையிலான மோதல் - மிகவும் ஆபத்தானது. NCM, NCMEI ஆகிய சட்டங்கள் செல்லாது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, ஜம்மு காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய எட்டு மாநிலங்களில் இந்துக்கள் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினராக இருப்பதைக் குறிப்பிடும் இந்த மனுக்கள், தேசிய மதச் சிறுபான்மையினர் என்று பிற மதத்தவரைப் பிரகடனம் செய்வது இந்த மாநிலங்களின் இந்துக்களுக்கு எதிரான பாரபட்சம் என்று வாதிடுகின்றன. இந்த மாநிலங்களில் யூத மதம், பஹாய் சமயம், இந்து மதம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களுக்குச் சிறுபான்மை அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று இந்த மனுக்கள் கோருகின்றன.
NCMEI சட்டத்தின் பிரிவு 2(f)இன் validity செல்லுபடியாகும் தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இது இந்தியாவில் சிறுபான்மைச் சமூகங்களை அடையாளம் காணவும் குறிப்பிட்ட சமூகத்தைச் சிறுபான்மைச் சமூகம் என அறிவிக்கவும் மத்திய அரசுக்குக் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை அளிக்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சட்டம், "அப்பட்டமாகவே தன்னிச்சையானது, பகுத்தறிவுக்கு ஒவ்வாதது” என்று கூறிய மனுதாரர்கள், அரசியலமைப்பு சிறுபான்மையினருக்கு உத்தரவாதம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை மறுக்கும் சட்டம் என்றும் குறிப்பிட்டார்கள். "சிறுபான்மையினர்" என்பதை மத்திய அரசு வரையறுக்க வேண்டும் என்றும் மாநில, மாவட்ட அளவில் மதச் சிறுபான்மையினரை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோருகிறார்கள். மக்கள்தொகை அடிப்படையில் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் சிறுபான்மையினராக அறிவிக்க மாநிலங்களுக்கும் உரிமை உண்டு என்று சிறுபான்மை ஆணையம் நிறுவியிருந்தாலும், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
மதமும் மதம் சார்ந்த புவியியலும்
குடியுரிமையையும் சிறுபான்மை அந்தஸ்தையும் வரையறுக்கும் சட்டபூர்வமான வகைமையாக மதம் உருவானது இந்தியாவின் இடப்பரப்பு, அதன் தேசிய அடையாளம் ஆகியவை குறித்த சிந்தனைகளையும் பாதித்துள்ளது. குடியுரிமை பற்றிய விவாதம், குறிப்பாக சிஏஏ சட்டத்திற்குப் பிந்தைய விவாதம், இந்தியாவின் இடப்பரப்பு பற்றிய விவாதத்தின் எல்லையை விரிவுபடுத்தியிருக்கிறது. மதம்-இடப்பரப்பு என்னும் புதிய கட்டமைப்பை இது உருவாக்குகிறது. அண்டை நாடுகளிலுள்ள மூன்று முஸ்லிம் பெரும்பான்மை தேசங்களில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் முஸ்லிம் அல்லாத மதச் சிறுபான்மையினரை இந்தியாவின் சாத்தியமான குடிமக்களாக அங்கீகரிப்பதன் மூலம், இந்தியப் பகுதி முஸ்லிம் அல்லாதவர்களுக்கான, குறிப்பாகத் தெற்காசியாவின் இந்துக்களுக்கான தாயகமாக உருவகப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் இடப்பரப்பு முஸ்லிம் அல்லாதவர்களுக்கான இடம் அல்லது இந்துக்களின் தாயகம் என்கிற இந்தப் புதிய கருத்தாக்கமானது, இந்தியாவில் நிலைபெற்ற வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தையும் சீர்குலைக்கிறது. ஒரு தேசம், ஒரு கலாச்சாரம், ஒரு மதம் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மையான பழைய ஐரோப்பிய பாணி தேசிய-அரசாக மாற இயலாமையின் காரணமாக இந்தியப் பிரதேசம் சமமான போட்டி நிலவக்கூடிய இடமாக உருப்பெற்றுள்ளது. விரும்பத்தக்க இந்த இலக்கை அடைவதற்கு முஸ்லிம்களின் இடம்சார்ந்த இருப்பு தேசிய, மாநில, உள்ளூர் மட்டங்களில் நிரந்தரத் தடையாகிறது.
மத அடிப்படையிலான சிறுபான்மை-பெரும்பான்மை குறித்த சொல்லாடல், மதச் சமூகத்தின் எண்ணிக்கை பலம் பற்றிய கேள்வியை எழுப்புகிறது. மத அடிப்படையில் பெரும்பான்மையினராக இருபதால் இந்துக்கள் இந்தச் சட்டகத்தில் தேசிய அடையாளத்தின் வெளிப்படையான உரிமை கோருபவர்களாக வெளிப்படுவார்கள். முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மையாக, எப்போதும் அச்சுறுத்தக்கூடிய பிரிவினராகப் பார்க்கப்படுவார்கள். இந்த அர்த்தத்தில் முஸ்லிம்கள் இருக்கும் இடப்பரப்புகள் சர்ச்சைக்குரிய இடங்களாகக் கருதப்பட வேண்டிய நிலை காலப்போக்கில் உருவாகும்.
ஜனசங்கத்தின் துடிப்பான மறுபதிப்பான பாஜக தேசிய அரசியலில் குறிப்பிடத்தக்க பங்குதாரராக உருவானது இந்த விஷயத்தில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒரு முக்கியக் காரணியாகும்., இந்துத்துவ அரசியலின் வெற்றியை அதன் கருத்தியல் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் கிடைத்த வெற்றி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. மதம் பற்றிய வளர்ந்துவரும் சொல்லாடல்களை பாஜக தன்வசப்படுத்தியுள்ளது. தேசிய அளவில் இந்து உணர்வுகளின் ஒரே பிரதிநிதியாகவும் தன்னை அது நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. எனவே, "இந்து வாக்கு வங்கி", "இந்துக்களின் தொகுதி", "இந்துக்களின் பகுதி" போன்ற சொற்கள் சமகால இந்திய அரசியலில் புதிய அரசியல் நிகழ்வாக உருவெடுத்துள்ளன.