பஞ்சாயத்துத் தலைவர்களும் அவர்களது ஆதரவாளர்களும்: கிராமப்புற இந்தியாவின் கள நிலவரம்

30/09/2024
IiT English Page

1992இல், இந்தியா உள்ளாட்சி ஜனநாயகத்தில் உலகின் மிகப்பெரிய பரிசோதனையை நடத்தியது. அந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டஇந்திய அரசியலமைப்பின் 73ஆவது திருத்தம், கிராமப்புறஇந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட லட்சக்கணக்கான உள்ளூர் அரசியல்வாதிகளுக்குக் கொள்கை அமலாக்கத்தில் கணிசமான அதிகாரத்தை வழங்கியது. இதன் விளைவாக, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் (MGNREGA) வேலைகள் ஒதுக்கீடு போன்ற அரசாங்கத் திட்டங்களின் பலன்கள் யாருக்குப் போய்ச்சேர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் கிராம அளவிலான அரசியல்வாதிகள் அதிகாரம் பெற்றனர். இந்தத் திருத்தம் அரசாங்கத்தைக் கிராம மக்களுக்கு மிகவும் நெருக்கமாகக் கொண்டுவந்தது. அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் அதிகாரம் கொண்ட மாநிலத்தின் பிரதிநிதிகளை நேரடியாக அணுக வழிவகுத்தது.

இந்தஅதிகாரப் பரவலாக்கல் முயற்சியின் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கியமான கேள்விஅதன் முன்னுரிமைகளைப் பற்றியதாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர்த் தலைவர்கள் - குறிப்பாக கிராமப்புறங்களில் அரசாங்கத்தின் கீழ் மட்டத்திற்குத் தலைமைதாங்கும் பஞ்சாயத்துத் தலைவர்கள் - அன்றாடக் கோரிக்கைகளைக் கவனிக்கும்போது யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்? தங்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் பலதரப்பட்ட தன்மைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த முனைகிறார்களா அல்லது வாக்காளர்களில் தங்கள் சொந்த இனத்தைச் சேர்ந்த குறுகிய குழுக்களுக்கு ஆதரவளிக்கிறார்களா? தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம அலுவலர்கள் தங்கள் தொகுதிகளில் உள்ள மக்கள் பிரிவுகளைத்தனிப்பட்ட முறையில் அறிந்திருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே தங்கள் கிராமத்தில்யாருக்கு என்ன தேவை என்பதைஅவர்கள் அறிந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் ஒப்பீட்டளவில் வசதி படைத்த வாக்காளர்களைவிடஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்களா?

சாதியும்வர்க்கமும்
பலன்கள்யாருக்குப் போக வேண்டும் என்பதுகுறித்த பஞ்சாயத்துத் தலைவர்களின் முடிவுகளை நன்கு புரிந்துகொள்வதற்காகக் கடந்த பத்தாண்டுகளில் ராஜஸ்தானில் களப்பணிகளை மேற்கொண்டேன். பஞ்சாயத்துத் தலைவர்களுடனான விரிவான நேர்காணல்கள், 96 கிராமப் பஞ்சாயத்துகளில் வாக்காளர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் பற்றி 2013ஆம் ஆண்டு மேற்கொண்டஆய்வு, 2024இல் 35 பஞ்சாயத்துத் தலைவர்களுடனான நேர்காணல்கள் ஆகியவை இந்தக் களப்பணியில் அடங்கும். 2013இல் மேற்கொண்ட ஆய்வின்ஒரு பகுதியாகப் பஞ்சாயத்துத் தலைவர்களிடம் ஐந்து டோக்கன்களைக் கொடுத்தோம். இந்த டோக்கன்கள் அரசாங்கஉள்கட்டமைப்புத் திட்டத்தில் ஒரு நாள் ஊதியத்திற்குச்சமமான பரிசு கொண்ட லாட்டரியைப் போன்றவை. தோராயமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துப் பிரிவுகளில் ஐந்துக்கு இந்த டோக்கன்களை ஒதுக்குமாறுபஞ்சாயத்துத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டோம். டோக்கன் இல்லாதவர்கள் ஆளுக்கு ஒரு லாட்டரி சீட்டைப்பெற்றார்கள். பஞ்சாயத்துத் தலைவர் வழங்கும் ஒவ்வொரு டோக்கனுக்கும் ஒரு கிராமவாசிக்குக் கூடுதலாகஒரு லாட்டரிச் சீட்டு வழங்கப்படும். பத்துக் குடிமக்களில் பாதிப் பேரை ஒதுக்க வேண்டும்என்ற நிபந்தனை, பஞ்சாயத்துத் தலைவர்கள் சிலருக்குச் சாதகமாகச் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்தை அளித்தது.

அரசியல்வாதிகள்தங்கள் சொந்தச் சாதியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உதவும் சார்புடையவர்கள் என்று இந்திய அரசியல் குறித்த பொதுவான அறிவு தெரிவிக்கிறது. ஆனால், எங்கள் களப்பணியில் கிடைத்த சான்றுகள் இந்தக் கருத்தை ஆதரிக்கவில்லை. மற்ற சாதிக் குழுக்களைவிடவும்தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களுக்குப் பஞ்சாயத்துத் தலைவர்கள் சாதகமாக இருக்கிறார்கள் என்பதற்கான புள்ளியியல் ரீதியான ஆதாரங்களை நாம் காணவில்லை. இதுகிராமப்புற ராஜஸ்தானில் உள்ளாட்சித் தேர்தல்களின் கள நிலவரத்தை அடிப்படையாகக்கொண்டது. தேர்தல்களில் வெற்றி பெறுவதற்குப் பொதுவாக பலதரப்பட்ட குழுக்களின் ஆதரவு தேவை.

குறிப்பாக, பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்களுடைய சாதியைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக இருப்பதை நாங்கள் காணவில்லை. பஞ்சாயத்துத் தேர்தலில் அரசியல் கட்சியுடனான நெருக்கமும் தனி நபர் ஆதரவும்கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. வறுமை ஒழிப்புத் திட்டங்களில் பலன்களைப் பெறுதல் அல்லது MGNREGA வேலை வாய்ப்புத் திட்டத்தில்வேலை கிடைக்கும் என்பதுபோன்ற எதிர்பார்ப்புகள் பற்றி வாக்காளர்களிடம் ஆய்வுசெய்தோம். தங்களுடைய சாதியைச் சேர்ந்த ஒரு தலைவர் வேறுசாதியைச் சேர்ந்த தலைவரைக் காட்டிலும் தங்களுக்கு அதிகப் பலன்களைப் பெற்றுத்தருவார் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கவில்லை என்பதைக் கண்டறிந்தேன்

பஞ்சாயத்துத்தலைவர்கள் ஏழைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்களா அல்லது வசதியுள்ள கிராமவாசிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்களா என்பதையும் நாங்கள் பரிசீலித்தோம். அரசு கொள்கைகளின் பலன்களைமக்களுக்குக் கொண்டுசேர்க்கும் விஷயத்தில் அரசு அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டதலைவர்களும் செயல்படும் விதங்களை ஒப்பிடும் ஆராய்ச்சி ஒன்று அண்மையில் நடைபெற்றது. பஞ்சாயத்துத் தலைவர்கள் உயர்சாதி நபர்கள் போன்ற மேல்தட்டுக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. ஏழ்மையான பகுதிகளில், தற்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கும்கிராமங்களில் உள்ள உள்ளூர் அரசாங்கங்கள், ஆதரவற்றவர்களைவிட வசதி படைத்தவர்களுக்கே  அதிகம் உதவிசெய்பவர்களாகஇருப்பதும் இந்த ஆய்வில் தெரியவருகிறது. இந்தக் கேள்வியை மதிப்பிடுவதற்கு, ஒரு கான்கிரீட் வீடுமுதல்செல்போன்வரை ஏழு உடைமைகளை உள்ளடக்கியசொத்துக் குறியீட்டைப் பயன்படுத்தி வசதி என்னும் அம்சத்தைஅளவிட்டோம். இந்த அளவீட்டின் அடிப்படையில்எந்த வாக்காளர்களுக்கு அதிகப் பலன்கள் கிடைக்கின்றன என்பதை கவனித்தோம். பஞ்சாயத்துத் தலைவர்கள் ஒப்பீட்டளவில் ஏழைகளுக்கு ஆதரவாக இருப்பதைக் கண்டறிந்தோம். ஆனால் கடந்த தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று அவர்கள் நம்பும் ஏழை மக்களிடம் பாரபட்சம்காட்டுகிறார்கள்.

ஆதரவாளர்கள், ஒரே கட்சிஒரே இனம்
தேர்ந்தெடுக்கப்பட்டதலைவர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வார்கள் என்பதுதான் ஜனநாயக ரீதியான பிரதிநிதித்துவத்தின் அடிப்படைத் தர்க்கம். அதாவது, முந்தைய உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு வாக்களித்த ஆதரவாளர்களுக்கும் தங்கள் அரசியல் கட்சியை ஆதரிக்கும் ஆதரவாளர்களுக்கும் அவர்கள் அதிக ஆதரவளிப்பார்கள். இந்தியாவில்அரசின் பலன்களை உள்ளூரில் மக்களுக்குக் கிடைக்கச்செய்வது பற்றிய பல கட்டுரைகள் இதில்பாரபட்சம் நிலவுவதைக் காட்டுகின்றன.

உள்ளூர்அரசியல் சூழலில், அரசாங்க அல்லது தேசியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு முதன்மையாக அதிகாரம் உள்ளது. அன்றாட நிர்வாகத்தில் எந்தெந்தப் பிரிவுகளுக்கு உதவுவது என்னும் தேர்வும் அவர்களிடமே உள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொண்ட உயர் மட்டப் பிரதிநிதித்துவத்தேர்தல்களில் போட்டியிடும் பிரதிநிதிகளைப் போல அல்லாமல், உள்ளாட்சிமட்டத்தில் பஞ்சாயத்துத் தலைவர்களும் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களும் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். தங்கள் கிராமப் பஞ்சாயத்தில் உள்ள வாக்காளர்கள் குறித்துப்பஞ்சாயத்துத் தலைவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பஞ்சாயத்துத் தலைவர்கள் 95 சதவீத வாக்காளர்களைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. மேலும், ஆடம் அவுர்பக்குடன் (Adam Auerbach) இணைந்து அரசியல் விஞ்ஞானி கேப்ரியேல் க்ருக்ஸ்-விஸ்னர் மேற்கொண்ட ஆய்வில் (Gabrielle Kruks-Wisner’s research) 47 சதவீதகிராமப்புற வாக்காளர்கள் உள்ளூர் அதிகாரியை அணுகினால் பலன் கிடைப்பதாகத் தெரிவித்தார்கள். இது கிராமப்புற இந்தியாவில் வாக்காளர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை விளக்குகிறது. அரசுத் திட்டங்களின் பலன்களை மக்களிடையே விநியோகிப்பது குறித்த முடிவுகளை எடுப்பதற்கு உதவியாக அதிகாரிகளிடம் ஏராளமான தகவல்கள் இருப்பதையும் இது காட்டுகிறது.

ராஜஸ்தானில்உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குச் சீட்டில் கட்சி சின்னங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதிகாரப்பூர்வமான முறையில் கட்சி சார்பற்ற தேர்தல்களாக இவை நடைபெறுகின்றன. இந்தத்தேர்தலில் பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். பஞ்சாயத்துத் தலைவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை மதிப்பிடும் ஆய்வில் தலைவர்களின் ஆதரவாளர்களாகக் கருதப்படுபவர்கள் மற்றவர்களைவிட 94 சதவீதம் அதிகமான டோக்கன்களைப் பெற்றார்கள். பஞ்சாயத்துத் தலைவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் ஆதரவாளர்களுக்குக் கூடுதலான ஆதரவைத் தருகிறார்களா என்பதையும் கட்சி சார்புகள் குறித்த கேள்வியின் மூலம் ஆராய்ந்தோம்

தங்களதுகட்சியின் ஆதரவாளர்களாக இருந்தும் தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் எனப் பஞ்சாயத்துத் தலைவர்களால்கருதப்பட்டவர்கள் சராசரியாக .33 டோக்கன்களைப் பெற்றதுதான் இதில் சுவாரஸ்யம். சராசரியாக .81 டோக்கன்களைப் பெற்ற அதே கட்சியின் ஆதரவாளர்களைவிடஇது குறைவு. ஆனால் கட்சியையும் சாராத, ஆதரவும் அளிக்காதவர்கள் பெற்ற .22ஐக் காட்டிலும் இதுஅதிகம். அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், ​​தேர்தலில்தங்களுக்கு ஆதரவளித்ததாகத் தாங்கள் கருதுபவர்களை, குறிப்பாக அவர்கள் தங்களுடைய கட்சியின் ஆதரவாளர்களாக இருக்கும்போது வலுவாக ஆதரிக்கிறார்கள். தங்களுக்கு வாக்களிக்காவிட்டாலும் தங்கள் கட்சிக்கு ஆதரவாக உள்ளவர்களிடமும் அவர்கள் ஆதரவு காட்டுகிறார்கள். தனிப்பட்ட ஆதரவைப் பெறாவிட்டாலும்கூடத் தங்கள் கட்சியின் ஆதரவாளர்களைப் பஞ்சாயத்துத் தலைவர்கள் ஆதரிக்கிறார்கள் என்ற இந்தக் கருத்து, வாக்காளர் கருத்துக்கணிப்புகளிலும் நிரூபணமாகிறது. அதாவது, தலைவர்களுக்குச் சார்புகள் உள்ளன; வாக்காளர்களும் இதை உணர்ந்திருக்கிறார்கள்.

சாதிஅல்லது இனம் என்று வரும்போது, ​​உள்ளாட்சித் தேர்தலில்தங்களுக்கு ஆதரவளிக்காத தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பலன்களை ஒதுக்குவதைவிட, வேறு இனங்களைச் சேர்ந்த  தங்கள் ஆதரவாளர்களுக்கே பஞ்சாயத்துத் தலைவர்கள் கூடுதல் பலன்களை ஒதுக்குகிறார்கள் என ஆய்வு தெரிவிக்கிறது.

படம் 1: தேர்தல் ஆதரித்தவர்கள், சக இனத்தவர்கள் ஆகியோரிடையேடோக்கன் வினியோகம்

தேவைப்படுவோருக்குப்பலன்களைப் பகிர்ந்தளிப்பதில் வர்க்கத்தின் பங்கு என்ன என்னும் கேள்விகளைப்பொறுத்தவரை, சராசரியான அளவைக் காட்டிலும் குறைவான வசதி படைத்தோர் சராசரியானஅளவு வசதி படைத்தோரைக் காட்டிலும் 17 சதவீதம் கூடுதல் டோக்கன்களைப் பெற்றார்கள். மறுபுறம், ஆதரவளிக்காத ஏழைகளைவிட ஆதரவளிக்கும் பணக்காரர்கள் அதிக டோக்கன்களைப் பெற்றார்கள். இதன் பொருள் என்னவென்றால், கிராமப்புற இந்தியாவில் ஏழைகளுக்குச் சேவை செய்வதற்கான அழுத்தம்இருந்தாலும், பஞ்சாயத்துத் தலைவர்கள் அரசியல் ரீதியாகத் தங்களுக்கு ஆதரவளிக்காதவர்கள் எனத் தாங்கள் கருதும்ஏழைகளைக் காட்டிலும் தங்களுக்கு வாக்களித்த ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.

தாக்கங்கள்
பஞ்சாயத்துத்தலைவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இனப் பாகுபாடு காட்டாமல்தங்கள் ஆதரவாளர்களை உள்ளடக்கிய பல இனங்களைச் சேர்ந்தமக்களுக்குப் பலன்களைப் பெற்றுத்தருகிறார்கள் என்பதை இந்த ஆராய்ச்சி காட்டுகிறது. ஏழ்மையை ஒழிப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் அன்றாட உதவிகளை வழங்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் உள்ளூர் அரசியல்வாதிகள் ஏழை மக்களுக்கு ஆதரவாகஇருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அரசியல் ஆதரவாளர்களாகவும் இருக்கும்போது மட்டுமே இந்த ஆதரவு கிடைக்கிறது. தங்கள் தேவைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றக்கூடியவர்களாகத் தாங்கள் கருதுபவர்களையே வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கும் சூழலுடன் இது ஒத்துப்போகிறது.

இந்தஆராய்ச்சியின் நிகழ்ச்சி நிரலில் வரும் அடுத்த கேள்வி, பஞ்சாயத்துத் தலைவர்களிடம் நாம் அவதானித்த செயல்பாட்டுமுறைகள் உள்ளூர் அதிகாரவர்க்கத்தினரின் செயல்பாட்டு முறைகளிலிருந்து அல்லது பலன்களை மக்களுக்கு விநியோகிப்பதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளின் செல்வாக்கை அகற்றும் வழிமுறைகளிலிருந்து வேறுபடுகின்றனவா என்பது பற்றியது. தற்போது நடந்துகொண்டிருக்கும் இந்த ஆராய்ச்சியில், உள்ளூர்அரசியல்வாதிகளும் உள்ளூர் அதிகாரிகளும் அளிக்கும் முன்னுரிமைகளில் உள்ள வேறுபாடுகளையும், அரசியல்வாதிகளும்அதிகாரவர்க்கத்தினரும் விரும்பும் கொள்கைகளின் வகைகளில் உள்ள வேறுபாடுகளையும் ஆராய்ந்துவருகிறேன். அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் சார்புகளை மீறி அதிகாரவர்க்கத்தினரைவிடவும் ஏழைகளுக்கு ஆதரவாக இருக்கும்பட்சத்தில் அண்மையில் உள்ளாட்சி அமைப்புகளில் பஞ்சாயத்துத் தலைவர்களின் பங்கைக் குறைத்து நிர்வாகத்தை மையப்படுத்திய நடவடிக்கைக்காக நாம் கொடுக்க வேண்டியவிலை என்னவாக இருக்கும் என்பதில் இது தாக்கங்களை ஏற்படுத்துகிறது

மார்க் ஷ்னைடர்

Author

மார்க் ஷ்னைடர் வெளிநாட்டைச் சேர்ந்த CASI விசிட்டிங் ஸ்காலர். அரசியல் விஞ்ஞானியான இவர் சமூக மாற்றத்திற்கான ஆராய்ச்சியாளரும் ஆலோசகரும் ஆவார். 

(Tamil Translation by Aravindan D.I.) 
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்