சீனாவை மையமாகக் கொண்ட உலக ஒழுங்கு: ஆசிய வரலாறு கூறுவது என்ன?

11/11/2024
IiT English Page

உலகளாவிய ஒழுங்கு மாற்றத்திற்கு உள்ளாகும் காலத்தின் மத்தியில் நாம் இருக்கிறோம். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்துவரும் தற்போதைய ஒழுங்கு மேற்கத்திய நாடுகளை மையமாகக் கொண்டது. மேற்கு நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான அதிகாரச் சமன்பாடுகளில் பெருமளவில் சமச்சீரற்ற தன்மையும் உலகின் பிற பகுதிகள் மேற்கை நோக்கிச் சாயும் போக்கும் இந்த உலகளாவிய ஒழுங்கில் இருந்துவருகிறது. எனினும், சமகாலத்தில் ஆசியா பெற்றுவரும் எழுச்சி ஒரு புதிய உலக ஒழுங்கை முன்னறிவிக்கிறது. வளர்ந்துவரும் உலக ஒழுங்கின் வடிவம் குறித்து அறிஞர்கள் மட்டத்திலும் கொள்கை வட்டாரங்களிலும் பெருத்த விவாதம் நடந்துவருகிறது. சீனாவின் எழுச்சி இந்த மாற்றத்தின் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், புதிய உலக ஒழுங்கு எப்படி அமையும் என்பது குறித்து எதையேனும் அறிய முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகப் பல அறிஞர்களும் கொள்கை வகுப்பாளர்களும் சீனாவின், ஆசியாவின் கடந்த காலத்தின் பக்கம் கவனம் செலுத்துவதில் வியப்பொன்றுமில்லை.

சீனா, ஆசியா ஆகியவற்றின் கடந்த காலம் ஒரு மையத்தையும் அதைச் சுற்றி இயங்கும் பல்வேறு அங்கங்களையும் கொண்டது என்பதே பெரும்பாலான அறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்களிடையே நிலவும் பார்வை. இது ஒரே சமயத்தில் சுவாரஸ்யமாகவும் ஏமாற்றமளிப்பதாகவும் உள்ளது. இந்தப் பார்வை கடந்த இரண்டு நூற்றாண்டுகளின் மேற்கை மையமாகக் கொண்ட அமைப்புக்கு மாற்றாகச் சீனாவை மையமாகக் கொண்ட (Sinocentric) ஒழுங்கை நிலைநிறுத்துகிறது. பொதுவாக "மரியாதை அமைப்பு" என்று அழைக்கப்படும் இந்த உலகம், மரியாதை செலுத்தும் துணை அமைப்புகளால் சூழப்பட்ட உலக ஒழுங்கின் மையத்தில் சீனாவை வைக்கிறது. இந்த அமைப்பு எதிர்கால உலக ஒழுங்கிற்கான மாதிரி வடிவமாகவும் கருதப்படுகிறது. 2018ஆம் ஆண்டில் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, ஜிம் மேட்டிஸ் அன்றைய சீனாவைப் பற்றி இப்படிக் கூறியிருக்கிறார்: “மிங் வம்சத்தைத் (1368-1644) முன்மாதிரியாகக் கருதும் சீனா, அதைக் காட்டிலும் வலிமை மிகுந்ததாகத் தன்னை உருவகப்படுத்திக்கொள்கிறது. மற்ற நாடுகள் தனக்கு மரியாதை செலுத்தும் அரசுகளாக மாற வேண்டும் என்று அது விரும்புகிறது."

சீனாவை மையமாகக் கொண்ட இந்தக் கண்ணோட்டம் உலக ஒழுங்கு குறித்த "யதார்த்தமான விவரணம்" அல்ல என்றும் இது சீனாவை மையமாகக் கொண்ட சேர்ந்த உயரடுக்குப் பிரிவினரின் உலகக் கண்ணோட்டம்தான் என்றும் அண்மைக்காலக் அறிவுத்துறை ஆய்வுகள் சரியாகவே வலியுறுத்திக் கூறுகின்றன. சீனாவை மையமாகக் கொண்ட உலக ஒழுங்குதான் உண்மையானது என்று தவறாகவும் பரவலாகவும் விளக்கப்பட்டுள்ளதாகவும் அறிவுத்துறை வட்டாரங்கள் கருதுகின்றன. சமீபத்திய நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மேற்கின் எழுச்சிக்கு முன்பு சீனாவை மையமாகக் கொண்ட உலக ஒழுங்குதான் இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலவியது என்றும் நம்பப்படுகிறது.

சீனாவை மையமாகக் கொண்ட கிழக்காசியா போன்ற பகுதிகள் கடந்த நூற்றாண்டுகளில் முழுமையான, தன்னிறைவு பெற்ற “பிராந்திய உலகங்களாக” இருந்துவந்தது என்னும் கண்ணோட்டம் புதிய உலக ஒழுங்கு குறித்த இந்தத் தவறான பார்வை உருவாவதற்கு ஒரு காரணம். "மூடுண்ட" பிராந்திய உலகங்கள் கொண்ட அமைப்பு என்னும் கருத்து சீன மையம் குறித்த அறிஞர்களின் பார்வையின் மையமாக உள்ளது. கல்விப்புலத்தில் சீன-மைய உலக ஒழுங்குடன் தொடர்புடைய வரலாற்றாசிரியரான காலம்சென்ற ஜான் ஃபேர்பேங்க்,  "புவியியல்" அமைப்புதான் கிழக்காசியாவை "மேற்கு, தெற்காசியாவிலிருந்து பிரித்து, அனைத்து பெரிய கலாச்சாரப் பகுதிகளிலும் மிகவும் தனித்துவமானதாக ஆக்கியது" என்று கூறியிருக்கிறார்.

எனினும், கிழக்காசியா போன்ற சமகால உலகப் பகுதிகள் கடந்த காலத்தில் பரந்த ஆசிய உலகத்திலிருந்து ஒருபோதும் தனிமைப்படுத்தப்படவில்லை. இந்தப் பகுதிகள் "திறந்த" நிலையிலேயே இருந்தன. வரலாற்றுக் காலத்தில் ஆசியப் பகுதிகள் நிலத்தாலும் கடல்சார் வலைப்பின்னல்கள் வழியாகவும் ஆழமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன. ஒன்றோடொன்று கொண்டிருந்த இந்தத் தொடர்புகளின் தன்மை பல நூற்றாண்டுகளில் பல விதமாக இருந்தாலும், வரலாற்றில் இரண்டாயிரம் ஆண்டுக் காலம் சைனாவை மையமாகக் கொண்ட அமைப்பு இருந்தது என்னும் கூற்று யதார்த்தத்தை "உள்ளபடி விளக்குவதாக" இல்லை என்பதை அவை தெளிவுபடுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, ஆரம்பகால மிங் காலத்தில் (~1400 பொயு) கிழக்காசியாவுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கட்டமைப்பில் மத்திய ஆசியா இருந்தது; ஏகாதிபத்திய சீனா மத்திய ஆசியாவின் தைமுரிட்களுடன் "அரசியல் சமத்துவத்தை" நாடியது. அதே நேரத்தில் "சீனாவில் [மட்டும்] உலக மேலாதிக்கம்" நிலவுவதாகக் கோரியது என்பது தெளிவாகிறது." அதுபோலவே, 15ஆம் நூற்றாண்டில் தென்கிழக்காசியாவின் கடல்சார் உலகின் மையத்தில் மிங் இல்லை. அங்கு மெலகா போன்ற துறைமுகங்கள் சீனாவுடனான பொருளாதாரத் தொடர்புகளுக்கு மதிப்பளித்தாலும் அரசியல் ரீதியாகவும் வணிக அளவிலும் இந்தியப் பெருங்கடலையும் பெர்சோ-இஸ்லாமியக் கலாச்சாரத்தையும் சார்ந்திருந்தன.

அதாவது, கிழக்காசியா "மூடுண்ட", தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது என்னும் பார்வைக்கு மாற்றாக, இப்பகுதியில் இருந்த நாடுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன என்னும் வரலாற்றுக் கண்ணோட்டம், சீன-மையப் பார்வை கொண்ட உயரடுக்குப் பிரிவினரின் சொல்லாட்சியைப் பொருட்படுத்தாமல் உலக ஒழுங்கின் மையத்திலிருந்து சீனாவை விலக்குகிறது. முதல் ஆயிரமாண்டுகளில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பௌத்தத் தொடர்புகள் மையமற்ற ஆசியச் சூழலை வளர்த்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. சீனாவை மையமாகக் கொண்ட உலகக் கண்ணோட்டத்திலும் இது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. சுய்-டாங் காலத்தில் (பொயு 589-907 ) சீனாவில் இந்திய பௌத்தம் பரவிவந்ததால் , பௌத்த இந்தியா தொடர்பான அடையாளச் சிக்கலால் சீனா பாதிக்கப்பட்டது. அப்போது தங்கள் அரசைக் குறிக்க சீனர்கள் சூங்குவூ (Zhongguo) அல்லது “மத்திய ராஜ்ஜியம்” "Middle Kingdom" என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, அந்தச் சொல் இந்தியாவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. சீனாவின் உலகக் கண்ணோட்டத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் கடுமையாகவும் தீவிரமாகவும் இருந்தது. ஏனெனில் அந்தக் காலத்தின் இந்தியா ஒருங்கிணைந்த பேரரசாக அல்லாமல் பல ராஜ்யங்களின் தொகுப்பாக இருந்தது. எனினும், Zhongguo என்னும் சொல் (சீன)மையவாதத்துடன் கொண்டிருந்த தொடர்பைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் சூய்-டாங் ஆட்சிக் காலத்தில் தான் "உலகின் மையம் அல்ல" என்பதைச் சீனா அறிந்திருந்தது என்றும் வாதிடப்பட்டது. அமிதவ் ஆச்சார்யாவின் கூற்றுப்படி, பட்டுப் பாதைகள் (அல்லது யூரேசியா முழுவதும் இருந்த நீண்ட தொலைவிலான வணிகத் தொடர்புகள்), பௌத்தம் ஆகியவை பொதுயுகத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளிலிருந்தே "பல மையங்களைக் கொண்ட உலகம் பற்றிய கருத்தைச் சீனாவிற்கு அறிமுகப்படுத்தியது". இப்படியாக இரண்டாயிரமாண்டுகள் சீனா உலக ஒழுங்கின் மையமாக இருந்தது என்னும் கருத்து தகர்கிறது.

ஆக, ஆசியாவின் கடந்த காலம் பல மையங்கள் கொண்ட சூழலைச் சுட்டுவதன் மூலம் உலக ஒழுங்கு பற்றிய முற்றிலும் மாறுபட்ட பார்வையை நமக்கு வழங்குகிறது. இந்த மையங்களில் இருந்த பல்வேறு சக்திகளுக்கிடையே அரசியல், இராணுவம், வணிகம், கலாச்சாரம் முதலான அம்சங்களில் எண்ணற்ற தொடர்புகள் இருந்தன. அவை அந்த சக்திகளின் புவிசார் அரசியல் கட்டமைப்புகளிலும் அடையாளங்களிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தத் தொடர்புகளை உருவாக்குவதில் ஆசியாவின் சிறிய சக்திகள் வகித்த முக்கியமான பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கடல்வழிப் பாதைகளில், இந்த இணைப்புகளின் முன்னோடியாகத்  தென்கிழக்கு ஆசியக் கப்பல் கேப்டன்களும் வர்த்தகர்களும் இருந்தார்கள். தென்கிழக்கு ஆசியத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தென்கிழக்காசியாவில் கட்டப்பட்ட கப்பல்களைப் பயன்படுத்தி ஆசியாவை ஒன்றோடொன்று இணைப்பதில் பல நூற்றாண்டுகளாக அவர்கள் முக்கியப் பங்கு வகித்தார்கள். தென்கிழக்காசியா சீனா அல்லது இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கவில்லை. அந்தக் காலத் தென்கிழக்காசிய அமைப்புதான் ஆசிய உலக ஒழுங்கை உருவாக்கியது. ஆசியாவின் கடந்த காலத்தில் அதிகாரத்தில் சமச்சீரற்ற தன்மைகள் நிலவத்தான் செய்தன. இருந்தபோதிலும், ஆசிய உலக ஒழுங்கு அதன் பல்வேறு அங்கத்தினர்களால் கூட்டாகக் கட்டமைக்கப்பட்டு நீடித்தது.

ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பல மையங்களைக் கொண்ட ஆசியாவின் கடந்த காலம் கூட்டாகக் கட்டமைத்த நீண்ட கால உலக ஒழுங்குகள் மையப்படுத்தப்பட்டவை அல்ல. எதிர்காலத்திற்கான உலக ஒழுங்கிற்கான விரும்பத்தக்க மாற்று அமைப்பொன்றை முன்வைக்கக்கூடிய உலகளாவிய (அல்லது ஆசிய அளவிலான) எந்த ஒரு சக்தியும் ஆசியாவின் கடந்த காலத்து உலக ஒழுங்கில் இல்லை. ஆழமான பன்மைத்துவத்தைக் கைக்கொள்வதுதான் பெரியதும் சிறியதுமான சக்திகள் கூட்டாகத் தங்கள் சர்வதேச ஒழுங்கைக் கட்டமைத்துக்கொள்ளக்கூடிய உலகத்தை உருவாக்கிக்கொள்வதற்கான திறவுகோல். இத்தகைய பன்மைத்துவமும் "பன்முகத்தன்மையும்" கொண்ட உலகிலும் பொருள் சார்ந்த அதிகாரச் சமச்சீரற்ற தன்மை தொடரலாம் என்றாலும், கன்ஃப்யூசியஸ், பௌத்தம், பெர்ஷிய-இஸ்லாம் முதலான எந்தச் சித்தாந்தத்தையும் மீறி உருப்பெறக்கூடிய கலாச்சார, வணிக ரீதியான உயிரூட்டமுள்ள இயக்கத்திற்கு மத்தியில் சகவாழ்வும் ஸ்திரத்தன்மையும் சாத்தியமாகக்கூடிய உலக ஒழுங்கு உருவாகக்கூடும் என இந்தப் பன்மைத்துவ உலகம் சுட்டிக்காட்டுகிறது.

மஞ்சித் எஸ். பர்தேசி

Author

மஞ்சித் எஸ். பர்தேசி (manjeet.pardesi@vuw.ac.nz) வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளின் இணைப் பேராசிரியர். இந்தக் கட்டுரை இவர் அண்மையில் எழுதிய “இணைந்த ஆசிய வரலாறும் ‘திறந்த’ உலக ஒழுங்குகளும்” (“Interconnected Asian History and ‘Open’ World Orders,” - ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி கலைக்களஞ்சியம், அரசியல், ஏப்ரல் 17, 2024) என்னும் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. 

(Tamil Translation by Aravindan D.I.) 
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்