இந்திய சர்வதேச உறவுகளில் காலனிய அடையாளங்களை நீக்குதல்: பின்காலனித்துவ வெகுமக்களியமும் நெறிமுறைசார் குழபங்களும்

25/03/2024
IiT English Page

சர்வதேச உறவுகள் துறை சார்ந்த கல்வியாளர் என்ற முறையில் இந்தத் துறையில் நிலவும் "காலனித்துவக் கூறுகளை நீக்குவது" குறித்த ஆய்வில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டுவருகிறேன். நான் எதைச் செய்ய விரும்புகிறேன் என்பதில் மிகவும் கவனமாக இருக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். கல்வியறிவில் காலனித்துவ நீக்கம் என்பது மேற்கத்திய உலகை மையப்படுத்திய சிந்தனைகளையும் விசாரணை வடிவங்களையும் மறு பரிசீலனைக்கு உட்படுத்துவதாகும். இதைச் செய்வதற்கு, கோட்பாட்டு அளவுகோலாகவும் அனுபவ ரீதியில் கவனம் செலுத்துவதற்கான புள்ளியாகவும் மேற்கத்திய நாடுகள் பெற்றிருக்கும் இடத்திலிருந்து அவற்றை நீக்க வேண்டும்; ஏகாதிபத்திய மரபுகள் சமகால சர்வதேச அரசியலை வடிவமைக்கும் பல்வேறு வழிகளையும் தீவிரமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். காலனித்துவ நீக்கம் என்னும் செயல்பாடு பெற்றுவரும் முக்கியத்துவம் குறித்த அசவுகரிய உணர்வு கல்விப்புலத்தில் அதிகரித்துவருகிறது. காலனித்துவத்திலிருந்து விடுதலை என்னும் வசீகரமான சொல்லாடல் தேசியவாத, சுதேசிய, பழமைவாத நோக்கங்களை முன்னிறுத்துவதற்கான வியூகமாகப் பயன்படுத்தப்படுவதே இதற்கான காரணம்.

Cosmopolitan Elites: Indian Diplomats and the Social Hierarchies of Global Order (Oxford University Press, 2023), என்னும் என்னுடைய நூலில், முறையாகக் காலனி நீக்கம் செய்யப்பட்ட சர்வதேச சமூகங்களில்கூட இந்திய இராஜதந்திரிகள் காலனியத்தன்மைக்கும் அதைத் தவிர்த்த சூழலுக்கும் இடையில் சமநிலைப்படுத்தும் மோசமான செயலைத் தொடர்ந்து செய்கிறார்கள் எனக் குறிப்பிடுகிறேன். பன்முகத்தன்மை, வேறுபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த பின்காலனித்துவ சர்வதேசச் சமூகத்தை உருவாக்குவதற்குப் பாடுபடுவதற்கான உண்மையான விருப்பம் இருந்தபோதிலும், வெள்ளை நிறம் கொண்ட, ஐரோப்பிய ஆதிக்கம் நிரம்பிய ஒருபடித்தான குழு என்னும் கேலிச்சித்திரம் போன்ற கருத்துருவில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இதுபோன்றதொரு குழுவில் இடம்பெறுவது சமூக ரீதியான அத்தியாவசியம் என்பதாக அவர்கள் உணர்கிறார்கள். இந்த இராஜதந்திரிகள் மேற்கத்திய அரசியல் மேலாதிக்கத்தை ஆவேசத்துடன் எதிர்த்தாலும், மேற்கத்தியமயமாக்கப்பட்ட உயர் மட்டக் குழுவின் உறுப்பினர்களாகத் தாங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற ஏக்கத்தைக் கொண்டிருப்பதை அவர்களுடைய சமூக நடத்தைகள் அம்பலப்படுத்துகின்றன. இப்படிச் செய்வதன் மூலம் இனம், வர்க்கம் ஆகியவை சார்ந்து இந்தக் குழுவின் அதிகாரப் படிநிலைகளில் மேலே செல்ல முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். இத்தகைய சமூகப் பின்புலத்தில், காஸ்மோபாலிட்டனிசத்தை உலகளாவிய சகிப்புத்தன்மைக்கான கருத்தியல் வழிமுறையாக, சமத்துவ நெறிமுறையாகக் காணும் அரசியல் கோட்பாட்டின் மரபார்ந்த பொருளில் காஸ்மோபாலிட்டனிசம் பற்றி நாம் நினைக்கக் கூடாது. மாறாக, சமூகவியல் கண்ணோட்டத்தின் மூலம் காஸ்மோபாலிட்டனிசத்தை உயரடுக்கு அழகியலாக நாம் சிந்திக்க வேண்டும். அதாவது, ஆங்கிலோஃபோன் உயர் மட்டத்தினரின் சொல்லாடல்களில் சரளமான கலாச்சார இருப்பும் மேல்-வகுப்பைச் சார்ந்த மேற்கத்தியப் பழக்கவழக்கங்களில் சமூக ஒருங்கிணைப்பும் நிலவுவதாக அனுமானித்துக்கொள்ளும் சமூக அளவுகோலாக காஸ்மோபாலிட்டனிசத்தை நாம் கருத வேண்டும். பிரிட்டீஷ் பேரரசின் மரபுகள் எவ்வாறு இந்திய இராஜதந்திரத்தை வடிவமைக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு பின்காலனித்துவ விமர்சனத்தை இந்தப் புத்தகம் முன்வைக்கிறது. தற்போதுள்ளதைக் காட்டிலும் விரிவான, காலனிய நீக்கம் செய்யப்பட்ட காஸ்மோபாலிட்டனிசம் எப்படி இருக்கும் என்றும் இந்த நூல் ஆராய்கிறது.

எனினும், இந்தியாவின் சர்வதேச உறவுகளைக் காலனித்துவ நீக்கம் செய்யும் செயல்முறை நெறிமுறை, அறிவாற்றல் ஆகியவை சார்ந்த தொடர்ச்சியான சிக்கல்களை உருவாக்குகிறது. கோட்பாடு அதிகாரத்துக்கு அப்பாற்பட்டதல்ல; அரசியல் பின்புலம் அதற்கு முக்கியம். சமகால இந்திய விவாதத்தில், காலனித்துவ நீக்கத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாகத் தோற்றமளிப்பவர்கள், காலனித்துவ நீக்கத்தின் தார்மீக அடித்தளங்களுக்கு எதிரான அரசியலை முன்வைக்கிறார்கள்.

இவர்களைப் "பின்காலனித்துவ வெகுமக்களியவாதிகள்" என்று குறிப்பிடுகிறேன். அவர்கள் நரேந்திர மோடியின் இந்தியாவிலிருந்து ரெசெப் தையிப் எர்டோகனின் துருக்கிவரை தங்களை வித்தியாசமாக வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். மேற்குலகால் பாதிக்கப்பட்டவர்கள் என இவர்கள் முன்வைக்கும் வரலாற்றுக் கதையாடல்கள் சமகால சர்வாதிகார அரசியலைக் காலனித்துவ விடுதலையின் திட்டமாக முன்னிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. மதச்சார்பின்மை அல்லது தாராளவாத ஜனநாயகம் போன்ற மேற்கத்தியத் திணிப்புகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டிய "மேற்கத்தியம் அல்லாத சுயம்" மாசுபடுத்தப்படாத, கற்பனாவாத விளிம்பு நிலை இருப்பாக முன்வைக்கப்படுகிறது.

இந்தியாவில் "காலனித்துவ நீக்கம் செய்யப்பட்ட இந்துத்துவம்" இந்துத்துவத்தின் சுதேசி அரசியலை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற இடதுசாரி மொழியுடன் இணைத்துக்கொள்கிறது. அரசை எதிர்க்கும் "மேற்கத்தியமயமாக்கப்பட்ட" கல்வியாளர்கள், உள்நாட்டுப் பத்திரிகையாளர்கள், வெளிநாட்டில் உள்ள "ஏகாதிபத்திய" மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் முதலான கற்பனையான எதிரிகளுக்கு எதிரான மறுமலர்ச்சி தேசியவாதத் திட்டத்தை முன்னெடுக்க பிரிட்டீஷ் ராஜ்ஜியத்திற்கு எதிரான எதிர்ப்பின் வரலாற்று நிகழ்வுகளை இந்துத்துவம் பயன்படுத்திக்கொள்கிறது. வெளிநாடுகளிலிருந்து எழும் அனைத்து விமர்சனங்களையும் பாரதத்தின் இறையாண்மை விவகாரங்களில் நிகழ்த்தப்படும் ஏகாதிபத்திய ஊடுருவல் என்று நிராகரிக்கிறது; உள்நாட்டு விமர்சனங்கள் அனைத்தையும் காலனியத் தாக்கத்திலிருந்து போதிய அளவு விடுபடாத இந்திய மனதின் தன்மையாகச் சித்தரிக்கிறது. இந்தியா 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருகைக்குப் பிறகு காலனித்துவ ஆட்சியின் கீழ் வரவில்லை; 16ஆம் நூற்றாண்டில் முகலாயர்கள் வந்தபோதே அது நிகழ்ந்துவிட்டது என இந்துத்துவம் கூறுகிறது. காலனித்துவம் நீக்கப்பட்ட தேசத்தைக் கட்டியெழுப்பும் முழக்கத்தின் கீழ் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலைக் கொண்டுவர இதன் மூலம் இந்துத்துவ வரலாற்றியல் முனைகிறது.

காலனித்துவத்திற்குப் பிந்தைய வெகுமக்களியவாதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில முறைகளில் கல்விசார் சொல்லாடல்களை உலக அளவில் பரப்புகிறார்கள். ஜே. சாய் தீபக்கின் India That is Bharat: Coloniality, Civilisation, Constitution நூல் இதற்கான ஒரு உதாரணம். புகழ்பெற்ற காலனித்துவ நீக்கக் கோட்பாட்டாளர் வால்டர் மிக்னோலோ இந்த நூலுக்கான ஏற்பினை அளித்தார். தெற்காசிய அறிஞர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு அவருடைய ஏற்பளிப்பு திரும்பப் பெறப்பட்டது. தீபக்கும் அவருடைய சக பின்காலனித்துவ வெகுமக்களியவாதிகளும் தற்போது வளர்ந்துவரும் ஒரு சிந்தனா முறையை அடியொற்றித் தங்கள் வாதங்களை முன்வைக்கிறார்கள். அந்தச் சிந்தனையின்படி பாரதத்தின் பூர்வகுடிகள் என்பவர்கள் எல்லா இந்தியர்களும் அல்ல (அல்லது, பொதுவாக எதிர்பார்க்கப்படுவதுபோல இந்தியாவின் ஆதிவாசிச் சமூகத்தினர் மட்டுமல்ல). இந்தியச் சமூகத்தில் கேள்விக்கு அப்பாற்பட்ட பெரும்பான்மை அந்தஸ்து இருந்தபோதிலும், மதச் சிறுபான்மையினரால் ஒடுக்கப்பட்டதாகச் சித்தரிக்கப்படும் இந்துக்களையே அது குறிக்கிறது. 3,000 ஆண்டுக் காலமாக இந்தியாவில் நிலவிவரும் சாதிப் பாகுபாடு, பிரிட்டீஷ் அரசால் திணிக்கப்பட்ட காலனித்துவக் கட்டமைப்பாக அறிவிக்கப்படுகிறது. இந்தப் பார்வை சாதிப் பாகுபாட்டிற்கான தார்மீகப் பொறுப்பிலிருந்து இந்தியாவின் பூர்வகுடிகளை (அதாவது இந்துக்களை) விடுவிக்கிறது. "அறிவு சார்ந்து மேற்கு நாடுகளுக்குக் கீழ்படியாமை" என்ற காலனித்துவ நீக்க உணர்வைப் பயன்படுத்தி, காலனித்துவத்தின் நினைவுச்சின்னமாக இருக்கும் இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தை தீபக் விளக்குகிறார். இந்துப் பெரும்பான்மைவாதம் சுதேசி விடுதலையின் செயல்பாடாக வாசகரிடம் முன்வைக்கப்படுகிறது.

நான் பயன்படுத்தும் "கையகப்படுத்துதல் அல்லது சொந்தம்கொண்டாடுதல்" என்ற சொல் மோசடியாக அல்லது சட்டவிரோதமாக ஒன்றைச் சொந்தமாக்கிக்கொள்வதைக் குறிக்கிறது. பின்காலனித்துவ வெகுமக்களியத்தைக் கண்டிக்கும் நெறிமுறைகள் சிக்கலானவை. முதலாவதாக, காலனித்துவ நீக்கம் தொடர்பான வாதங்களின் போக்கை, குறிப்பாக உலகளாவிய வடக்கிலிருந்து அவை முன்வைக்கப்படும்போது, கட்டுப்படுத்துவதற்கான தூண்டுதலே ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். உலகளாவிய வடக்கின் கோட்பாட்டு மேலாதிக்கத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான மற்றொரு முயற்சியாகவே அதைப் பார்த்து அந்த வாதங்களின் போக்கைக் கட்டுப்படுத்துவதற்கான தூண்டுதல் இது. இரண்டாவதாக, பின்காலனிய முகமையின் செயல்பாடு, விடுதலையைப் பற்றிய மற்றவர்களின் புரிதலுக்கு முரணான தேர்வுகளைச் செய்வதற்கான உரிமையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இத்தகைய சூழலில்தான் அத்தகைய முகமைக்கான உரிமை உண்மையான சோதனைக்கு உள்ளாகும். மூன்றாவதாக, காலனித்துவ நீக்கக் கோட்பாடு தேசியவாதிகள் இதைச் சொந்தம்கொண்டாடுவதை அது தேசியவாதம் என்பதற்காகவே விமர்சிக்கவில்லை. 20ஆம் நூற்றாண்டு முழுவதிலும் மூன்றாம் உலக தேசியவாதங்கள் காலனித்துவ ஆதிக்கத்தை மாற்றும் சக்திகளாக இருந்தன. அகற்றப்பட்ட அதிகார சக்திகளுக்கு இணையான இறையாண்மையை இவை நியாமாகவே பெற்றன. கூடுதலான விடுதலை என்னும் நோக்கத்துடன் நியாயமற்ற அதிகார அமைப்புகளைக் கேள்விக்குள்ளாக்குவது என்னும் காலனித்துவ நீக்கக் கோட்பாட்டின் அடிப்படை நோக்கங்களுக்கு நாம் திரும்ப வேண்டும். இனத்துவ தேசியவாதத் திட்டங்கள் பழைய அநீதிகளைச் சுட்டிக்காட்டலாம். ஆனால் பிறரை விலக்குதல், திணிக்கப்பட்ட ஒற்றுமை, அடக்குமுறை ஆகிய அவற்றின் செயல்திட்டங்கள் அவை பேசும் விடுதலையைக் கேலிக்கூத்தாக்குகின்றன.

இது கல்விப்புலத்தில் காலனிய நீக்க நிகழ்ச்சி நிரலை எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது? அறிவுசார் சீர்திருத்தத்தின் இரண்டு புள்ளிகளுடன் இந்த விவாதத்தைத் தொடங்க விரும்புகிறேன். எனது முதல் வாதம் கற்பனாவாத சுதேசியவாதத்துக்கு எதிரானது. பின்காலனித்துவ வெகுமக்களியமானது, மாசுமருவற்ற முன்காலனித்துவ உலகத்தை உருவகித்துக்கொண்டு, அதில் நிம்மதியாகத் தஞ்சமடையும் நோக்குடன் செயல்படுகிறது. யதார்த்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் இந்தப் போக்கு, மேற்கத்திய நவீனத்துவத்தின் சிதைவுகளிலிருந்து விலகிய, இயல்பான நன்னெறிகளையே தன் அடையாளமாகக் கொண்ட, தார்மீக வலிமையுள்ள பூர்வகுடியினரை முன்னிறுத்துகிறது. இந்த கருத்து அனுபவ ரீதியாக நேர்மையற்றது; அரசியல் ரீதியாக ஆபத்தானது. குறிப்பிடத்தக்க அளவில் பன்முகத்தன்மையும் பல்வேறு கலப்புகளும் கொண்ட இந்தியா, காலனித்துவத்திற்கு முன்பு ஒற்றுமையின் உருவகமாக இருந்தது என்னும் கேலிச்சித்திரத்தை இந்தப் பார்வை உருவாக்குகிறது. இத்தகைய கற்பனாவாதம் முற்போக்கான மேற்கத்தியக் கல்வி வளாகங்கள் பலவற்றில் நடைமுறையில் உள்ளது. தன்னுடைய சுதேசிவாதம், பூர்வீக அடையாளம் ஆகியவற்றை இது மறைத்துக்கொள்கிறது. காலனித்துவ நீக்கத்துக்கான பெருமையில் உரிமை கொண்டாடும் போக்கு இதை அம்பலப்படுத்துகிறது.

சுதேசித்தன்மை குறித்த கற்பனாவாதக் கருத்துக்கள் ஒரு தனிநபரின் நெறிமுறைகளும் அரசியலும் அவர்களின் அடையாளத்தால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை என அனுமானித்துக்கொள்கின்றன. ஒருவருக்கென்று வரையறுக்கப்பட்ட அடையாளக் குழுவிற்கு அப்பால் அவருடைய சிந்தனையின் சாத்தியத்தை இந்தப் பார்வை மறுக்கிறது. பிறக்கும்போதே தீர்மானிக்கப்பட்ட கலாச்சாரங்கள், ஒழுக்கங்கள், கண்ணோட்டங்கள் ஆகியவற்றுடன் தனிநபர்களை இது இணைக்கிறது. பூர்வீகத்துடனான இத்தகைய "ஆதாரப்பூர்வமான" பிணைப்பை வலியுறுத்துவது விடுதலைக்கான செயல்பாடல்ல. காலனிய நீக்கம் பற்றிப் பேசும் இந்துத்துவம் இந்திய மனதைக் காலனியத்தின் தாக்கத்திலிருந்து விடுவிப்பது குறித்த வாதங்களுடன் தொடங்கி, முஸ்லிம் குடிமக்கள் அல்லது அதிருப்திக் குரல் எழுப்பும் மாணவர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரை உள்நாட்டுப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள், "தேச விரோதிகள்" அல்லது போதிய அளவு இந்தித்தன்மை இல்லாதவர்கள் என்று முத்திரை குத்தும் அரசியலுக்கு வந்துசேர்வது தற்செயல் நிகழ்வல்ல.

எனது இரண்டாவது வாதம் ஏதேனும் ஒரு வகையிலான உலகளாவிய ஒற்றுமையை மீட்டெடுப்பதாகும். காலனித்துவக் கோட்பாடு காலனித்துவ அதிகாரம் என்னும் பக்கச் சார்பான நிலையின் நின்றபடி போலி உலகளாவிய தன்மையைப் போதித்தன என்னும் அடிப்படையில் காலனித்துவ நீக்கக் கோட்பாடுகள் உலகளாவிய தன்மை குறித்த உரிமைகோரல்களை எதிர்க்கின்றன. ஆயினும், கடந்த கால உலகளாவியவாதங்களின் தோல்விகளை ஒப்புக்கொள்வது, ஆதிக்கம் செலுத்தாத பின்காலனித்துவ உலகத்திற்கான உலகளாவியவாதங்களை வளர்த்தெடுக்க விடாமல் நம்மைத் தடுத்துவிடக் கூடாது. இங்கே நாம் அமெரிக்கத் தத்துவவியாளரான ஒலுஃபெமி ஓ தய்வோ (Olúfẹ́mi O. Táíwò) குறிப்பிடும் “பிறர் கருத்தை ஏற்கும் அரசியல்” என்னும் கருத்தைப் பரிசீலிக்க வேண்டும். இது தற்போது புழக்கத்திலுள்ள முற்போக்கான நடைமுறை. இது "மிகவும் ஒதுக்கப்பட்டவர்களை மையப்படுத்தி" அவர்களின் "வாழ்க்கை அனுபவ"த்தின் அடிப்படையிலான கருத்துக்களை நடைமுறை. குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் அங்கம் வகிக்கும் தனிநபர்களால் மட்டுமே அந்தச் சமூகத்தின் உண்மை நிலவரங்களை விளக்க முடியும் என்பதால், சமூகங்கள் - பல தலைமுறைகளாகவும் இருக்கலாம் - ஏதேனும் ஒன்றைப் பற்றித் தவறான கருத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்று கூறிவிட முடியாது. இது உள்நாட்டுக் கருத்து வேறுபாடுகளை அல்லது கலாச்சாரப் பிரிவுகளுக்கிடையே நடக்கும் விவாதங்களை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை இல்லாமல் ஆக்குகிறது.

அது மட்டுமல்ல; தொடர்ந்து சுருங்கிவரும் அடையாள வகைமைகள் குறித்த அதீதமான நுண்ணுணர்வு கூட்டுச் செயலையும் சிந்தனையையும் கிட்டத்தட்டச் சாத்தியமற்றதாக ஆக்குகிறது. சமூகத்தையும் நெறிமுறைகளையும் அளப்பதற்கு அந்தச் சமூகத்தின் பொதுவான வாழ்க்கை அனுபவம் மட்டுமே அளவுகோல் என ஆகிவிட்டால் ஒற்றுமைக்கான எந்தவொரு சாத்தியக்கூறும் அடைபட்டுவிடும். மாறுபட்ட அடையாளங்கள் கொண்ட குழுக்களுக்கிடையே பரிவுணர்ச்சியும் இணைந்து செயலாற்றும் அரசியலும் இருக்க வேண்டும் என்பது ஒற்றுமைக்கான சாத்தியக்கூறு உருவாவதற்கு முக்கியமானது.

Cosmopolitan Elites நூலுக்காக நான் நேர்காணல் செய்த இந்திய இராஜதந்திரிகள் சிலர், மேற்கத்திய ஆதிக்கத்திற்குப் பிந்தைய உலக அமைப்பு உதயமாகும்போது எல்லோரும் ஓர் இனம் என்று கருதும் காஸ்மோபாலிட்டனிசமும் உருவாகும் சாத்தியக்கூறுகளைப் பற்றிக் கூறினார்கள். தேவையில்லாத மேற்கத்திய, வர்க்கம் சார்ந்த, பிறரை விலக்கிவைக்கும் கருத்துக்களிலிருந்து உலகியல் பற்றிய பழைய, குறுகிய வாசிப்புகளை விடுவித்தது சரிதான். காஸ்மோபாலிட்டனிசத்திற்கு மறுவடிவம் அளிக்கலாம். காலனிய நீக்கம் என்பது இந்த மறுகற்பனையின் ஒரு பகுதியாக இருக்கலாம். காலனித்துவ நீக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பது அனுபவ ரீதியாகவோ, அறிவுப்பூர்வமாகவோ அல்லது நெறிமுறை ரீதியாகவோ இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. காலனித்துவ நீக்கக் கோட்பாட்டின் சமகால விளக்கங்கள் பலவும் அறிந்தோ அறியாமலோ வெளிப்புற எதிர்ப்புக்கும் உள்ளுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளுக்குமான இடத்தைச் சுருக்கிவிடுகின்றன. உலகெங்கிலும் உள்ள யதேச்சாதிகாரிகள் காலனித்துவ நீக்கம் என்னும் பெயரால் இந்தக் குறுகலை ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள். கோட்பாடு "யதார்த்த உலகில்" வாழ்கிறது. அது எப்போதும் அரசியலாகவே இருக்கிறது. காலனிய நீக்கத்திற்கு உரிமை பாராட்டும் போக்குகளைத் தடுக்க முடியும் என்னும் நம்பிக்கையில் நாம் அரசியலற்ற பாசாங்குகளை நாடக் கூடாது. மாறாக, காலனிய நீக்கக் கோட்பாட்டை நாம் புதிதாகக் கற்பனை செய்ய வேண்டும்.

கிரா ஹுஜு

Author

கிரா ஹுஜு லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸில் சர்வதேச உறவுகள் துறையின் கல்வியாளர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையில் அவள் பிஎச்.டி. முடித்துள்ளார். அவருடைய முதல் நூலான Cosmopolitan Elites: Indian Diplomats and the Social Hierarchies of Global Order 2023இல் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ் மூலம் வெளியானது.

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்