இந்தியாவும் இந்தோ-பசிபிக்கும்: குறைந்த அளவிலான தாராளவாதச் சூழலை நோக்கி

08/05/2023
IiT English Page

ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் உச்சி மாநாடு 2023 மார்ச் மாதம் வழக்கமான பல்லவியுடன் தொடங்கியது: “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைச் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் இருப்பதை ஆதரிப்பதில் இந்த நான்கு நாடுகளின் வலுவான உறுதிப்பாட்டை இந்த மாநாடு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.”

ஆனால் "சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ-பசிபிக்?" என்றால் என்ன? இந்த நான்கு நாடுகளைச் சேர்ந்த குவாட் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போது, "சுதந்திரம், வெளிப்படைத்தன்மை" பற்றிய பேச்சு நடைமுறை சார்ந்த பாதுகாப்புக் கூட்டாண்மையை மறைப்பதற்கான சொல்லணி என்பதற்கு மேல் அர்த்தமுள்ளது. "சுதந்திரம், வெளிப்படைத்தன்மை" என்ற சொற்கள் இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் பங்கு, நடத்தை ஆகியவற்றின் சட்டபூர்வமான தன்மையைக் கேள்விக்குள்ளாக்க இந்த நான்கு நாடுகள் பயன்படுத்தும் சொல்லாட்சி. இந்தோ-பசிபிக் பகுதியை "சுதந்திரமான, வெளிப்படையான" என்று குறிப்பிடுவதன் நோக்கம், அத்தகைய விழுமியங்களை ஆதரித்து நிலைநிறுத்தும் நாடுகளை இந்த வெளிக்குள் இணைத்துக்கொண்டு, அவ்வாறு அல்லாத நாடுகளை இதிலிருந்து விலக்கிவைப்பதே ஆகும்.  

குவாட் அமைப்பிற்குள்ளும் அதன் மூலமாகவும் இந்தியாவுக்கு இருக்கும் நோக்கங்கள் வெளிப்படையானவை: இந்தோ-பசிபிக் கட்டமைப்பின் வழியாகவும், இந்த பிரத்யேக நால்வர் குழு உறுப்பினர்கள் மூலமாகவும், இந்தியாவின் நிலையும் அதன் முகமையும் அண்மையில் விரைவான உயர்வைக் கண்டுள்ளது. ஆயினும்கூட, இந்தோ-பசிபிக் பகுதிக்கான தாராளவாதப் பார்வையை இந்தியா உள்வாங்குவதும் அதைப் பயன்படுத்திக்கொள்வதும் ஆரம்பக் கட்டத்தில் தோன்றக்கூடியதைக் காட்டிலும் மிகவும் சிக்கலானது. இந்தியா - தன்னுடைய தலைவர்களின் பேச்சு, கொள்கைகள் இரண்டின் மூலமாகவும் - வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ள "சுதந்திரமும் வெளிப்படைத்தன்மையும்" என்பதில் உள்ள குவாட் நாடுகளின் நோக்கங்களின் பல அம்சங்களைத் தனித்தனியாகப் புரிந்துகொள்கிறது. இந்தப் பிராந்தியத்தில் நாம் பார்ப்பது குறைந்த அளவிலான தாராளவாத அமைப்பையே. இதை இந்தியாவும் ஆதரிக்கிறது. இந்த உருவகம், சித்தரிக்கும் அமைப்புக்கான வரையறை பலவீனமானதாக இருக்கிறது. இந்த அமைப்பின் நெறிமுறை சார்ந்த உள்ளடக்கத்தின் விளக்கம் நெகிழ்வானதாக உள்ளது. வெளிப்புறமாக ஒரு "ஒருமித்த கருத்தை" முன்னிறுத்துகிறது. இது சிலசமயம் மேலோட்டமானதாக உள்ளது.

இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. பனிப்போர் முடிவடைந்ததிலிருந்து, ஏன் அதற்கும் முன்பே, சர்வதேச அளவில் தாராளவாத அமைப்புமுறையை இந்தியா ஏற்றுக்கொண்டது. அங்கீகாரம், அந்தஸ்து, பொருள் சார்ந்த லாபங்கள் ஆகியவற்றுக்கான விரிவான தேடலின் ஒரு பகுதியாக, பரந்த அளவில் உருக்கொண்ட தாராளவாத சமூகத்தை அது அணுகியது. பொருளாதார மட்டத்தில், 1991ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி, பொருளாதாரக் கட்டமைப்பைச் சரிசெய்வதற்கான சர்வதேச நிதியத்தின் கோரிக்கை ஆகியவற்றைத் தொடர்ந்து உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முழுமையாக ஒருங்கிணைத்தது. அரசியல் மட்டத்தில், இந்தியா பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஜனநாயகத்தைக் கடைப்பிடித்துவரும்  அனுபவத்தைக் கொண்டிருப்பதை இந்தியப் பிரதிநிதிகள் பொதுச் சொற்பொழிவுகளிலும் பலதரப்பு முன்முயற்சிகளிலும் வலியுறுத்தினார்கள். தாராளவாதப் பாதுகாப்பு அமைப்புமுறையின் சில அம்சங்களைக் கைக்கொண்ட இந்தியா, 2000களின் முற்பகுதியில் அமெரிக்காவுடன் மிக முக்கியமான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2016ஆம் ஆண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொண்டன. குவாட் அமைப்பின் மூலம் 2017முதல் பரவலானதும் கட்டுப்படுத்தாததுமான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொண்டன.

பனிப்போருக்குப் பிந்தைய தாராளவாத சர்வதேசச் சூழலின் பிரதானமான நெறிமுறைகளுடன் குறிப்பிடத்தக்க வகையில் ஒன்றிணைந்தபோதிலும் இந்த அமைப்பில் இந்தியாவின் கடப்பாடு "துணைபுரிவதாகவும் பகுதியளவானதாகவும்" இருந்துவருவதாக இந்தியாவும் சர்வதேச விவகாரங்களும் தொடர்பான அறிஞர் தீபா ஒல்லப்பள்ளி குறிப்பிடுகிறார். அமெரிக்காவின் தலைமையில் அமைந்த தாராளவாத சர்வதேச அமைப்பில் இந்தியாவுக்குக் கிடைத்த அனுபவங்கள் எல்லாச் சமயங்களிலும் சாதகமாக இல்லை என்பதால் அதன் முக்கியக் கூறுகளுக்கு எதிராக இந்தியத் தலைவர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, தாராளவாத சர்வதேசச் சூழல் நம்பிக்கை சார்ந்தது என்பதைவிட, விதிமுறை சார்ந்ததாகவும் பொருள் சார்ந்த வள ஆதாரமாகவுமே செயல்பட்டது. தேவைக்கேற்ப அதன் கூறுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன அல்லது நிராகரிக்கப்பட்டன.

இந்த வியூக அணுகுமுறை தொடர்கிறது. ஆனால் இந்தியா இந்தச் சூழலைக் கையாள்வதற்கான வாய்ப்பு முன்பைவிட அதிகமாக இருக்கக்கூடும். இந்தோ-பசிபிக், குவாட் ஆகியவற்றில் முதன்மையான தாராளவாத நாடாக இருக்கும் அமெரிக்கா, இந்தோ-பசிபிக் பகுதியை தாராளவாதப் பாதுகாப்பு அமைப்பாக வரையறுப்பதில் குறிப்பிட்ட அதிகாரத்தைத் தொடர்ந்து தன்வசம் வைத்திருக்கிறது. தலைமைத்துவத்தில் அண்மையில் ஏற்பட்ட மாற்றங்களின்போது பல்வேறு தருணங்களில், குறிப்பிட்ட தாராளவாத விழுமியங்களின் அடிப்படையில் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் பாதுகாப்பை வழங்கும் குழுவாக குவாட் அமைய வேண்டும் என்ற கருத்தை ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் முன்வைக்கின்றன. இதற்கு நேர்மாறாக, சட்டபூர்வமான தாராளவாத அடையாளம், நடத்தை பற்றி இணக்கமான வகையில் நிறுவப்பட்ட யோசனைகளை முன்னிறுத்துவதற்காக  இந்தியா செயல்படுகிறது. அப்படி நடந்தால் தன்னுடைய தனித்துவமான நலன்களைப் பெறும் முயற்சியில் இறங்க இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கும். அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் ஆகியவற்றின் நிழலில் "தாராளவாத சோஷலிச"ப் பாத்திரத்திற்குப் பணிந்துபோவதையும் இந்தியா தவிர்க்கிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை "சுதந்திரமான, வெளிப்படையான" பகுதியாக இருக்கச்செய்வோம் என்று குவாட் உறுப்பினர்கள் கூறுவதை ஆழமாக ஆராய்ந்துபார்த்தால், குவாட் குழுவில் இந்தியாவுக்கு இருக்கும் ஈடுபாட்டின் முறைமை குறிப்பிட்ட வியூக, அரசியல் பார்வைகளைக் காட்டுவது தெரிகிறது. முதலாவதாக, சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கான வெளிப்படையான கூட்டு வியூகத்தை மேற்கொள்ள இந்தியா விரும்பவில்லை. 2020ஆம் ஆண்டின் மத்தியில் கால்வான் பள்ளத்தாக்கில் சீன, இந்தியத் துருப்புக்களுக்கு இடையே ஏற்பட்ட பதற்றத்திற்கு - ஒரு கட்டத்தில் இது நேரடி மோதலாகவும் மாறியது  - பிறகு, யுத்த வியூகக் கூட்டாண்மையை ஏற்படுத்திக்கொள்வதற்கான இந்தியாவின் விருப்பம் அதிகரித்துள்ளது. யுத்த வியூக ஒத்துழைப்பு, குறிப்பாக அமெரிக்காவுடனான ஒத்துழைப்பு மீதான அதன் முன்னெச்சரிக்கை உணர்வு குறைந்துள்ளது. ஆயினும், குவாட் அமைப்பை ஆழமாக நிறுவனமயமாக்குவதை இந்திய வியூக வகுப்பாளர்களின் உயர் மட்டத்தினர் தீவிரமான பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, தென் சீனக் கடலில் சுதந்திரமான கடல் பயணத்தை உறுதிசெய்வதற்காக ரோந்துகளின் மூலம் அமெரிக்கா மேற்கொள்ளும் செயல்பாடுகளில் இந்தியா இணைந்துகொள்ளவில்லை. ரஷ்யாவுடனான இந்தியாவின் உயர்மட்டப் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்கிறது. இந்தக் கொள்கை குவாட் பங்காளிகளுடனான இந்தியாவின் கூட்டு நடவடிக்கைகளைக் குறுக்கிவிடுகிறது. ஆழமான முறையில் மேம்பட்ட தொழில்நுட்பப் பரிமாற்றம் நடைபெறுவதற்கு குவாட்டிலுள்ள இதர மூன்று நாடுகளின் கூட்டாண்மைகள் இடமளிக்கின்றன.

உச்சி மாநாடுகள் நடத்துதல், பணிக் குழுக்களை உருவாக்குதல் என குவாட்டை நிறுவனமயமாக்குவதற்கான கூறுகளை 2017 முதல் இந்தியா ஏற்றுக்கொண்டிருக்கிறது. இருப்பினும், குவாட் நாடுகளுடனான இந்தியாவின் உறவு எச்சரிக்கை நிரம்பியதாகவே உள்ளது.

குவாட் என்னும் கருத்து உருக்கொண்ட இடத்தின் பிராந்திய ரீதியான தர்க்கங்களைக் குறித்து இந்தியத் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். 2018இல் சிங்கப்பூரில் ஷங்கிரி-லா பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அப்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டார். "இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை இந்தியா வியூகம் சார்ந்ததாகவோ அல்லது குறிப்பிட்ட சில உறுப்பினர்களுக்கு மட்டுமேயான குழுவாகவோ பார்க்கவில்லை" என்று அந்த அறிக்கையில் கூறினார். மாறாக, இந்தியா இந்தப் பிராந்தியத்தைப் பலரையும் உள்ளடக்கும் அணுகுமுறைக்கு முன்னுரிமை அளிக்கிறது என்றும் வாதிட்டார். குறிப்பாக, "இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு அமைப்பும் இப்பிராந்தியம் குறித்த முடிவுகளும் ஏசியான் நாடுகளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்" என்பதை அங்கீகரிப்பதாக அமைய வேண்டும் என்றார். 2019ஆம் ஆண்டில் இந்தியா தொடங்கிவைத்த இந்தோ-பசிபிக் பெருங்கடல்கள் தொடர்பான முன்முயற்சியானது, பிரத்தியேக அணுகுமுறைக்கு மாற்றாக இதேபோன்று பலரையும் உள்ளடக்கும் அணுகுமுறையை வெளிப்படுத்தியது. பொதுவான விழுமியங்களைக் காட்டிலும் அனைவருக்கும் பொதுவான அடிப்படை நலன்களை அடிப்படையாகக் கொண்ட விதிகளை மையமாகக் கொண்ட திட்டம் இது.  நிறுவனமயமாக்கலுக்கான திட்டம் எதுவும் அதில் இல்லை.

பிராந்திய தாராளவாதத்தின் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்ட இதர விழுமியங்கள் அடிப்பரப்பில் முரண்பாடானவையாக உள்ளன. "கடற்பரப்பில் சர்வதேசச் சட்டத்தை அமலாக்குவதற்கு, குறிப்பாக ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டில் (UNCLOS) பேசிய அம்சங்களுக்கு, முன்னுரிமை” அளிப்பதாக குவாட் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஆனால், கடல் பயண சுதந்திரம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு சீனாவின் நிலைப்பாட்டைப் போன்றது: வழக்கமான சட்டத்தை அமெரிக்கா புரிந்துகொள்ளும் விதத்திற்கு மாறாகத் தனது பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தில் வெளிநாட்டு இராணுவக் கப்பல்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான உரிமைகளை இந்தியா வலியுறுத்துகிறது. இதன் விளைவாக, அமெரிக்காவின் கடல் பயணச் சுதந்திர நடவடிக்கைகளுக்கான நீண்டகால இலக்காக இந்தியா இருந்துவருகிறது.

இந்த நான்கு ஜனநாயக நாடுகளின் நாற்கரக் கூட்டாண்மை உள்நாட்டு தாராளவாத அடையாளக் குறியீடுகளுடனும் தொடர்புகொண்டது என்பது முக்கியமானது. மோடியின் தலைமையில் தாராளவாதத்திற்கு எதிரான போக்கு வளர்கிறது என அமெரிக்கக் குடிமைச் சமூகம் முன்வைத்த வெளிப்படையான விமர்சனத்தை இந்தியாவின் இந்து தேசியவாதக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் எதிர்த்திருக்கிறார்கள். அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்தியாவில் ஜனநாயகம் பின்னடைவைச் சந்தித்துவருவது குறித்த கவலையை அதிகாரப்பூர்வமாக எழுப்புவதைத் தவிர்க்கின்றன. குவாட் நாடுகள், ஜனநாயக நாடுகள் என்ற முறையில் தங்களுடைய பொதுவான அடையாளங்களைத் தொடர்ச்சியாகவும் கூட்டாகவும் கொண்டாடுவது குழுவின் மையத்தில் முரண்பாட்டை உருவாக்குகிறது: இந்தப் பிராந்தியம் முழுவதிலும் உள்ள உள்நாட்டு நிர்வாக மாதிரிகளில் காணப்படும் பன்முகத்தன்மையை ஏற்கும் அதே நேரத்தில் இந்தியாவில் தாராளவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான போக்கு நிலவுவதை அனுமதிப்பதற்கான வெளியையும் உருவாக்கியுள்ளது.

இந்தப் பிராந்தியத்திற்கு அப்பால் பார்க்கும்போது, இந்தோ-பசிபிக் பகுதிக்குள் குவாட் நலன்கள் சில ஒன்றிணைவது என்றால் அமெரிக்கா, ஜப்பான் அல்லது ஆஸ்திரேலியாவின் தேவைகளை இந்தியா அப்படியே ஏற்றுக்கொள்வதாகப் பொருளல்ல. ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவின் முக்கியத்துவம் வியூக விஷயத்தில் சுயாதிகாரம் என்பதில் இந்தியாவுக்கு இருக்கும் உறுதிப்பாட்டைச் சுட்டிக்காட்டும் குறிப்பானாக உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து இது மிகவும் முக்கியமானதாக ஆகியுள்ளது. 2022 நவம்பரில் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியதுபோல, "அனைத்துப் பிரச்சினைகளிலும் ஒரே மாதிரியான நிலைப்பாடுகளைக் கொண்ட நான்கு நாடுகளின் குழுவாக குவாட் ஒருபோதும் கருதப்படவில்லை."

அமைப்புமுறையில் மாற்றம் செய்வதற்கான காலத்தினூடே, சட்டபூர்வமான அடையாள வடிவங்களையும் செயல்பாட்டை வடிவமைக்கும் விழுமியங்களையும் குறித்த விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோ-பசிபிக்கின் அமைப்பு முறை இன்னும் ஆரம்பநிலையில் இருப்பதால், குவாட் குழு இதில் பங்கேற்பதற்கான விதிமுறைகளையும் இந்தோ-பசிபிக் அமைப்பு முறையின் தன்மையையும் இந்தியா தனது சொந்த அடையாளத்தையும் நலன்களையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் பொருள், கருத்தியல் சார்ந்த அம்சங்களுக்கிடையே சமநிலை காண்பதற்கான  செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் தற்போதைய சூழல், தாராளவாத வெளியில் சட்டபூர்வமானதாகக் கருதப்படக்கூடிய அடையாளம், நடத்தை ஆகியவற்றில் முடிவெடுப்பதற்கான அதிக அதிகாரத்தை இந்தியாவுக்கு அளிக்கிறது.

கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, இந்தியா தன்னுடைய அந்தஸ்தை மேம்படுத்திக்கொள்ளவும் சீனாவுக்கு எதிராகக் குறுகிய கால பாதுகாப்பு அரண்களை நாடவும் இந்தியா முனையும் மாற்றம் நிகழும் இந்தத் தருணத்தில் இந்தோ-பசிபிக் பகுதிக்குள், தாராளவாத அடையாளத்தையும் விழுமியங்களையும் குறைந்த அழுத்தத்தோடு இந்தியா ஏற்பது தற்போதைய மாறிவரும் சூழலில் செல்லுபடியாகக்கூடியதுதான். எனினும், குவாடிற்கு உள்ளேயும் அதற்கு அப்பாலும், அமெரிக்காவையும் அதன் தலைமையிலான தாராளவாத சர்வதேச அமைப்புமுறையையும் பாதுகாப்பவர்கள் அல்லது பின்பற்றுபவர்கள் விஷயத்தில் பாரம்பரியக் கூட்டணி உருவாக்கத்தை இந்தியா நிராகரிப்பது, முறையான நிறுவனங்கள் அமைப்பதை எதிர்ப்பது, பிராந்திய அளவில் அனைவரையும் உள்ளடக்குவதை வலியுறுத்துவது, தன்னுடைய ஜனநாயக அடையாளத்தின் மீதான பிறரது தீர்மானங்களை ஏற்க மறுப்பது ஆகிய செயல்பாடுகள் இந்தோ-பசிபிக் பகுதியில் ஒரு அமைப்பைக் கட்டியெழுப்புவதில் தங்கள் முத்திரையைப் பதித்துவருகின்றன. குறைந்த அளவிலான தாராளவாத அமைப்பின் இருப்பை இந்தச் செயல்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்த அமைப்பில் பயன்படுத்தப்படும் "சுதந்திரம், வெளிப்படைத்தன்மை" என்னும் சொற்கள் நெகிழ்வான பொருளில் புரிந்துகொள்ளப்படுகின்றன. மூன்று உடன்படிக்கை நட்பு நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கும் பிராந்திய அமைப்புமுறை மாற்றத்தில், சீனாவை ஒதுக்க முனையும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள இடைவெளிகளைக் குறைக்கும் பாலமாக இது செயல்படுகிறது.

கேட் சல்லிவன் டே எஸ்டிராடா

Author

கேட் சல்லிவன் எஸ்டிராடா ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தெற்காசியச் சர்வதேச உறவுகள் துறையின் இணைப் பேராசிரியர். தி பசிஃபிக் ரிவ்யூ என்னும் இதழில் “India and Order Transition in the Indo-Pacific: Resisting the Quad as a ‘Security Community’.”  என்னும் கட்டுரையை அண்மையில் எழுதியிருக்கிறார்.

(Tamil Translation by Aravindan D.I.)
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்