2024 ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கவிருக்கும் இந்தியாவின் பொதுத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 2019இல் பெற்ற வெற்றியை மிஞ்ச முடியாவிட்டாலும் அதற்கு இணையான வெற்றியைப் பெற முடியும் என நம்புகிறது. 2019 தேர்தலில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 45 சதவீத வாக்குகளைப் பெற்று 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றன. பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமை, பாஜகவின் சிறந்த நிர்வாக அமைப்பு, உயர்மட்ட நிதி உதவிகள், இந்துத்துவம், தேசியவாதம், சமூக நலன் ஆகியவற்றைத் திறமையாக இணைத்தது ஆகிய காரணிகளால் இந்த வெற்றி கிடைத்ததாகத் தேர்தலுக்குப் பிறகு கூறப்பட்டது. ஆனால், இந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என அரசியல் நோக்கர்கள் யாரும் தேர்தலுக்கு முன்பு எதிர்பார்க்கவில்லை. 2024 ஜனவரியில் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா உருவாக்கிய உற்சாகத்தை அடித்தளமாகக் கொண்டு 2024 தேர்தலில் 400 இடங்களைத் தாண்டுவதை பாஜக இலக்காகக் கொண்டுள்ளது.
தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், அரசியல் ஆய்வாளர்கள் இந்தக் கேள்விகளைப் பற்றி யோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்: மக்கள் ஏன் அப்படி வாக்களிக்கிறார்கள்? இந்தியாவிலும் பிற இடங்களிலும் உள்ள வாக்காளர்கள் சில கட்சிகளுக்கு அதிக அளவில் வாக்களித்து மற்ற கட்சிகளைப் புறக்கணிக்கத் தூண்டுவது எது? வாக்காளர்கள் அறிவுப்பூர்வமாகச் செயல்படுகிறார்களா அல்லது உணர்வுப்பூர்வமாகவா? எதிர்ப்பு அரசியல், சமூக இயக்கங்கள், கலவரங்கள் ஆகியவற்றின் பின்னணியில் உணர்ச்சிகளின் பங்கு பற்றிய புரிதலும் அறிதலும் வளர்ந்துவருகிறது. ஆனால், தேர்தல் அரசியலுக்கு உணர்ச்சிகள் முக்கியமில்லை என்ற தவறான அனுமானத்தை நாம் கொண்டிருக்கிறோம்.
இந்திய வாக்காளர்களைப் புரிந்துகொள்வதற்கான அறிவார்ந்த முயற்சிகள் பெரும்பாலும் பொருளாதாரம், வேலையின்மை, நலவாழ்வு போன்ற பிரச்சினைகளுக்கான அவர்களின் எதிர்வினைகளை அளவிடுவதில், அல்லது சாதி, வர்க்கம், மதம் ஆகியவற்றினூடே அவர்களின் அடையாள அரசியலை ஆராய்வதில், கவனம் செலுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, மதிப்பு வாய்ந்த லோக்நீதி தேசியத் தேர்தல் ஆய்வுகள், வாக்காளர்களின் அறிவு, விழிப்புணர்வு, தங்களுடைய அரசியல் ரீதியான நடத்தையைப் பாதிக்கக்கூடிய அரசியல் நிகழ்வுகள் பற்றிய அவர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை விரிவாக ஆவணப்படுத்துகிறது. தேர்தல் அரசியல் உருவாக்கும் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் போதிய கவனத்தை இந்த ஆய்வு அளிப்பதில்லை.
தேர்தல் அரசியலில் தொழிற்படும் உணர்ச்சிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத சமூக விஞ்ஞானிகள் இந்திய ஜனநாயகத்தின் முக்கியத் தூணான தேர்தல்களில் உணர்ச்சிகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தைப் புறக்கணிக்கிறார்கள். தேர்தல்களைப் பற்றி மேம்பட்ட முறையில் மேற்கொள்ளப்படும் பகுப்பாய்வு உணர்ச்சிகளைப் பற்றிய ஆய்வை ஒருங்கிணைக்க உதவும். தேர்தல் அரசியல் குறித்த அறிவில் உணர்வுகளை ஆய்வுசெய்வது எந்த இடத்தில் பொருந்தும்?
உணர்ச்சிமிகு அரசியல்: ஜனநாயகம், வளர்ச்சி, இந்தியாவின் 2019 பொதுத் தேர்தல் (Passionate Politics: Democracy, Development, and India’s 2019 General Elections) என்னும் நூலை அண்மையில் நான் எடிட் செய்தேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயர் மதிப்புள்ள ரொக்கப் பணத்தை மதிப்பிழக்கச்செய்தது போன்ற பேரழிவுகரமான பொருளாதாரக் கொள்கைகளால் மக்கள் வெளிப்படையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டபோதிலும், 2019ஆம் ஆண்டுத் தேர்தலில் மோடியும் அவரது கட்சியும் பெற்ற அபரிமிதமான ஆதரவிற்கு அடித்தளமாக இருந்த உணர்ச்சிகளை இந்த ஆசிரியர்களும் நானும் இந்த நூலில் எடுத்துக்காட்டியிருக்கிறோம்.
உணர்ச்சிமயமான அரசியலில் உணர்ச்சிகளின் மீதான நமது கவனம் வாக்காளர்களின் பகுத்தறிவை மறுப்பதில்லை. உணர்ச்சிகள் பகுத்தறிவற்றவை அல்ல. தீங்கு விளைவிக்கும் அல்லது நன்மை பயக்கும் என நாம் மதிப்பிடும் நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளை உணர்ச்சிகள் அடையாளம் காட்டுவதாக உணர்ச்சிகள் குறித்த வரையறை கூறுகிறது. உணர்ச்சிகள் பகுத்தறிவுக்குத் துணைபுரிகின்றன என்றும் அதற்கு முக்கியத்துவத்தையும் குறிக்கோள்களையும் வழங்குகின்றன என்றும் நரம்பியல் விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள். உணர்ச்சிகள் சமூகத்தில் உள்ளார்ந்து இருக்கின்றன. பொருளாதார, கலாச்சார, அரசியல் செயல்முறைகளிலும் அவை உட்பொதிந்துள்ளன.
இதர சில அறிஞர்கள் தெற்காசியாவில் நிலவும் உணர்ச்சிகள் பற்றியும் அவை எவ்வாறு முக்கியமானவை என்பதையும் ஆய்வுசெய்யத் தொடங்கியிருக்கிறார்கள். உணர்ச்சிகள் மூன்று வெவ்வேறு நிலைகளில் முக்கியமானவை என்று வரலாற்றாசிரியர் மார்கிரிட் பெர்னாவ் கூறுகிறார். முதலில், மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை அனுபவிக்கும் விதத்தை அவை பாதிக்கின்றன. இரண்டாவதாக, தனிநபர்கள் (மற்றும் சமூகக் குழுக்கள்) தங்கள் அனுபவங்களை அர்த்தப்படுத்திக்கொள்ளும் விதத்தையும் உலகைப் புரிந்துகொள்ளும் செயல்முறையையும் அவை வடிவமைக்கின்றன. மூன்றாவதாக, உலகம் பற்றிய விளக்கத்தை உலகில் நமது செயல்பாடுகளாக மாற்றுவதற்கான உந்துதலை உணர்ச்சிகள் வழங்குகின்றன. உணர்ச்சியும் பகுத்தறிவும் எதிரும் புதிருமானவை என்று கருதிவிடக் கூடாது என உணர்ச்சிகளைப் பற்றிய இத்தகைய புரிதல் நம்மை எச்சரிக்கிறது. சொல்லப்போனால், பகுத்தறிவு சார்ந்த நலன்களைப் பெறுவதற்கான முயற்சியில் உணர்ச்சி ரீதியான தடுமாற்றங்கள் இருக்கும். உணர்வுகள் பெரும்பாலும் தமக்கே உரிய பகுத்தறிவையும் உள்ளடக்கியிருக்கும். மானுடவியலாளர்களான அமெலி ப்லோம், ஸ்டெபானி தவா லாமா-ரெவால் ஆகியோர் தெற்காசியாவின் உணர்ச்சிமயமான அரசியல் பற்றிய தங்களின் ஆழமான அலசலில், உணர்ச்சியின் பிரதிநிதித்துவம், அது அனுபவிக்கப்படும் வழிகள், அதன் வெளிப்பாடு ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டுகிறார்கள். உணர்ச்சிகளின் பிரதிநிதித்துவம் என்பது மக்களின் உணர்ச்சிகள் மற்றவர்களால் எவ்வாறு பிரதிபலிக்கப்படுகின்றன என்பதை விவரிக்கிறது. உணர்ச்சிகளின் வெளிப்பாடு வாய்மொழி மூலமாகவும் சொற்கள் அல்லாத குறிப்பான்கள் மூலமாகவும் நிகழ்கிறது. ஆய்வில் பதிலளித்தவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பது குறித்த பதிவும் இதில் அடங்கும். உணர்ச்சிகளின் அனுபவம் மனிதர்கள் உண்மையில் உணரும் உணர்ச்சிகளுடன் தொடர்புடையது.
வரலாற்றாசிரியர்களும் மானுடவியலாளர்களும் வழங்கும் வளமான, நுணுக்கமான பார்வைகளின் விளைவாக இந்திய அரசியல் அறிஞர்கள் உணர்ச்சிகளின் அரசியலின் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள். இந்திய அரசியல் களம் தீவிரமான உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் கொண்டது. தீவிரமான உணர்ச்சிகள்மீதான கவனம் ஒரு ஜனநாயக நாடாக இந்தியாவின் பெருமையைச் சிதைத்த இந்தியப் பிரிவினை, வகுப்புவாத வன்முறைகள்போன்ற பேரழிவு நிகழ்வுகள்; பசுப் பாதுகாப்புப் பிரச்சாரங்கள் போன்ற வெகுஜன இயக்கங்கள்; சமூக நீதி நடவடிக்கையைச் செயல்படுத்துவதற்கு எதிரான போராட்டங்கள், பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்பட்ட சமூகக் குழுக்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு எதிரான கூட்டுப் போராட்டங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. மிகவும் ஆர்வமூட்டக்கூடிய இந்த வேலையின் பெரும்பகுதி சமூக இயக்கங்கள், சமூகக் குழுக்கள் உருவாக்கம், எதிர்ப்புகள், கலவரங்கள், சீற்றத்தின் வெளிப்பாடுகள், புண்படுதல், தீவிரப்போக்கு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது. பெருமிதம், அவமானம், தேசியவாதம் ஆகியவற்றின் பின்னணியில் உணர்ச்சிகளைப் பற்றிய சிறந்த ஆய்வுகள் சில நம்மிடம் உள்ளன.
இருப்பினும், தேர்தல் அரசியலில் உணர்ச்சிகளின் இடம் குறித்த நேரடியான கேள்வி தொடர்பாகப் போதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. வழக்கமான ஜனநாயக நடைமுறைக்கு உணர்ச்சிகள் எவ்வாறு பொருந்தும் என்பது உள்ளிட்ட கேள்விகள் போதிய அளவு ஆய்வுசெய்யப்படவில்லை. இந்தியாவின் மாபெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ், தான் உச்சத்தில் இருந்தபோது இத்தகைய உணர்ச்சிமயமான அரசியலால் பயனடைந்திருக்கலாம். இந்தியா 1951-52இல் குடியரசாக ஆன பிறகு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி 45 சதவீத வாக்குகளையும், 489 நாடாளுமன்றத் தொகுதிகளில் 364 இடங்களையும் வென்றது. இரண்டாவது பொதுத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வாக்குகளில் தன் பங்கையும் (47 சதவீதம்) இடப் பங்கையும் (371) மேம்படுத்திக்கொண்டது. 1971இல், இந்திரா காந்தி 43 சதவீத வாக்குகளையும், 352 இடங்களையும் பெற்றார். 2019இல் மோடி குறைந்த வாக்குகளைப் பெற்று அதிக இடங்களில் வென்றதைக் காட்டிலும் குறைந்த வாக்குகளைக் கொண்டு அதிக இடங்களை இந்திரா காந்தி பெற்றார். இந்த மூன்று நிகழ்வுகளிலும், வாக்காளர்கள் மத்தியில் நிலவிய பேரார்வமே காங்கிரஸ் கட்சிக்கான அமோக ஆதரவாக மாறியது. காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளர்கள் இத்தகைய மாபெரும் பெரும்பான்மையை வழங்கியதால், அவர்களுடைய உணர்ச்சிகளை நம்மால் மிகக் குறைவாகவே அறிய முடிகிறது.
மக்களின் பேரார்வம் அரசியலின் வழக்கமான அம்சங்களைத் தேர்தலினுள் செலுத்துவதன் வழிகளைப் புரிந்துகொள்ள உதவுவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள உணர்ச்சிகரமான அரசியலானது, எதிர்ப்புகள், கலவரங்கள், சமூக இயக்கங்கள் போன்ற பெருநிகழ்வுகளின்போது உருவாக்கப்படும் உணர்ச்சிகளிலிருந்து வேறுபட்டது. தேர்தலின்போதும் அதற்கு முன்பும் பின்பும் வெளிப்படும் உணர்ச்சிகளைப் பகுப்பாய்வு செய்வதும், 2019 பொதுத் தேர்தல்களை அர்த்தப்படுத்திக்கொள்ளும் விதத்தில் அந்தப் பின்புலத்தில் வைத்து இந்த உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதும் இந்தப் புத்தகத்தின் நோக்கம். இந்த நிகழ்வின் மீது கவனத்தைக் குவிப்பது, அரசியலில் தொழிற்படும் உணர்ச்சிகள் பற்றிய ஆய்வுக்குக் கோட்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்குகிறது. உணர்ச்சி தர்க்க ரீதியான காரணத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது என்னும் கோட்பாட்டை இது வலுப்படுத்துகிறது. உணர்ச்சிக்கும் பகுத்தறிவுக்கும் இடையே உருவாகும் பொய்யான முரண்பாடுகளை இது மறுக்கிறது.
மானுடவியலாளரான முகுலிகா பானர்ஜி, இந்தியாவின் 2009 பொதுத் தேர்தல் குறித்து இனவரைவியல் அடிப்படையில் ஆய்வுசெய்தார். அவர் அரிமுகப்படுத்திய அந்தப் புதுமையான பாதையில்தான் அரசியலில் உணர்ச்சிகள் ஆற்றும் பங்கை எங்கள் புத்தகம் ஆய்வுசெய்கிறது. "சாதாரண இந்தியர்களின் தேர்தல் அனுபவம், தேர்தல் என்பது அவர்களுக்கு என்ன" என்பவை குறித்து அவரது புத்தகம் கவனம் செலுத்துகிறது. மக்களின் "வாக்களிப்புச் செயல்பாடு”களை விவாதிக்கிறது. இந்தச் செயல்பாடுகள் நாட்டிலுள்ள பிரச்சினைகள்மீதும் அரசியல்வாதிகள்மீதும் மக்களுக்கு இருக்கும் உணர்வுகள், உணர்ச்சிகளிலிருந்து உருவாகின்றன. பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இதுபோன்ற அம்சங்களைக் காட்டிலும் மோடியைப் பற்றியோ இந்து தேசியத்தைப் பற்றியோ விவாதிப்பதையே அதிகம் விரும்புவார்கள். நமது ஜனநாயக நடைமுறையின் போதிய அளவு ஆய்வுசெய்யப்படாத இந்த முக்கியமான கூறுகளை ஆராயும் அரசியல் விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள், சமூகவியலாளர்கள், மானுடவியலாளர்கள் ஆகியோருக்கிடையே மேலும் உரையாடல்கள் நடைபெற வேண்டும். அதன் மூலமாகவே இந்தியாவில் தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படையாக அமையும் உணர்ச்சிமிகு அரசியலை மேலும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.