சமகால இந்தியாவில் முஸ்லிம் அரசியல் பற்றிய எந்தவொரு விவாதமும் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற வார்த்தையின் பிரபலமானதும் ஒரு வகையில் ஒன்றுக்கொன்று முரண்பட்டதுமான இரண்டு பொருள்களைக் கருத்தில் கொள்ளாவிட்டால் முற்றிலும் அர்த்தமற்றதாகிவிடும். மிகவும் பொதுவான அர்த்தத்தில், முஸ்லிம் பிரதிநிதித்துவம் என்பது நெறிமுறை லட்சியமாக முன்னிறுத்தப்படுகிறது. சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் போதிய அளவு முஸ்லிம் எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் இருப்பதே ஜனநாயக அரசியலின் சீரானதும் பயனுள்ளதுமான செயல்பாட்டை உறுதி செய்கிறது என்று வாதிடப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அல்லது குறைவான பிரதிநிதித்துவத்தை மதிப்பிடுவதற்கான அரசியல் அளவுகோலாக இந்திய அரசியலமைப்பின் சமத்துவ விழுமியங்களை இந்த வாதம் பெரிதும் நம்பியுள்ளது.
இந்த விளக்கம் முஸ்லிம்களின் அரசியல் இருப்பைத் தீர்மானிக்க மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட முறையைப் பயன்படுத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையே நேரடியான, பரஸ்பர உறவு இருப்பதாக இந்தப் பார்வை அனுமானித்துக்கொள்கிறது. இதன்படி, இந்தியாவின் மொத்த முஸ்லிம் மக்கள்தொகையைத் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையால் வகுத்தால், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் சரியான அளவைக் கண்டறிய முடியும் என்று ஆகிறது. முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறித்த இயந்திர ரீதியிலான இந்த விளக்கம் முஸ்லிம் சமூகம் எந்த அளவுக்கு விளிம்புநிலையில் இருக்கிறது, எந்த அளவுக்குப் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பவற்றை விளக்கவும் பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்கள் சமூக ரீதியாகவும் பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கியிருப்பதற்கு முஸ்லிம்களின் குறைவான பிரதிநிதித்துவம் ஒரு முக்கிய காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் வாதிடுகிறார்கள். சச்சார் கமிஷன் அறிக்கையின் (2006) முடிவுகளை முன்னிலைப்படுத்தி, முஸ்லிம்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் தார்மீக ரீதியாக அவசியமானது, ஜனநாயக ரீதியாக விரும்பத்தக்கது என்று அழுத்தமாக வலியுறுத்தப்படுகிறது.
சமகால இந்துத்துவ அரசியல் முஸ்லிம் பிரதிநிதித்துவம் என்ற சொல்லுக்கான மற்றொரு பொருளை நமக்கு வழங்குகிறது. இந்திய அரசியல் சட்டம் மதத்தைச் சமூகநீதி சார்ந்த நடவடிக்கைக்கான அளவுகோலாகவோ, பிரதிநிதித்துவத்துக்கான அடிப்படையாகவோ அங்கீகரிக்கவில்லை என்று பாஜக தலைவர்கள் கூறிவருகிறார்கள். எனவே, முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற கருத்து சட்டரீதியாகச் செல்லுபடியாகாதது, அரசியல் ரீதியாகப் பிளவுபடுத்தக்கூடியது என்று அவர்கள் சொல்கிறார்கள். சப் கா சாத் சப் கா விகாஸ் (அனைவரையும் இணைத்து அனைவருக்குமான வளர்ச்சி) என்ற லட்சியமே முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு இடமளிக்கப் போதுமானது என்று பாஜக வாதிடுகிறது.
முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறித்த இந்த இரண்டு விளக்கங்கள் நம் பொது வெளியில் பரவலாகக் காணப்படுகின்றன. முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய கல்விப்புலம் சார்ந்த விவாதங்களிலும்கூட இந்தப் பொது விவாதங்கள் ஆழமான தாக்கத்தைச் செலுத்துகின்றன. இந்தப் பொருள் குறித்துப் பல்வேறு பல கட்டுரைகள், அலசல்கள், நூல்கள் ஆகியவை உள்ளன. பொதுத்தளத்தில் நிலவும் இத்தகைய கூற்றுகளை அவை மறுவுருவாக்கம் செய்கின்றன. காலனிய காலத்துக்குப் பிந்தைய முஸ்லிம் அரசியல் அடையாளம் எந்த அளவுக்குச் சிக்கலான வழிகளில் பரிணமித்துள்ளது என்பதில் இவை கவனம் செலுத்தவில்லை. தேர்தல் அரசியலின் தன்மையும் தேர்தல் பிரதிநிதித்துவத்தின் மாறிவரும் இயங்கியலும் இத்தகைய விவாதங்களில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகின்றன.
முஸ்லிம்கள் மூடுண்ட, ஒரே விதமான தன்மை கொண்ட மதச் சமூகமாக அரசியலில் பங்கேற்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. வெவ்வேறு சூழல்களில் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற பிரச்சினைகள் அவர்களின் வாக்களிப்பு விருப்பங்களைத் தீர்மானிக்கின்றன என்பதை சிஎஸ்டிஎஸ்-லோக்நீதி (CSDS-Lokniti) ஆய்வுகள் காட்டுகின்றன. அரசியல் ரீதியான முடிவுகளை எடுப்பதில் சமூகம் சார்ந்த பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவம் முக்கியமான காரணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. என்றாலும் முஸ்லிம்கள் தங்கள் அரசியல் பங்கேற்புக்காக முஸ்லிம் தலைவர்களை மட்டும் தேர்ந்தெடுப்பது என்பதை எல்லாச் சமயங்களிலும் விரும்புவதில்லை. சிக்கலான இந்த உண்மை - அரசியலில் முஸ்லிம்களின் இருப்பு குறித்த முஸ்லிம்களின் கவலையும் முஸ்லிம் தலைவர்கள் மீதான அவர்களுடைய அலட்சியமும் - முஸ்லிம் பிரதிநிதித்துவம் பற்றிப் பொதுவெளியில் புழங்கும் வகைமாதிரி விவாதங்களைத் தாண்டி நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தக் காரணத்திற்காகவே முஸ்லிம் அடையாளத்தின் அரசியல் அமைப்பும் அதன் பல்வேறு வெளிப்பாடுகளும், நிறுவன ரீதியான அமைப்புகளின் தர்க்கம், முஸ்லிம் தலைமையின் தன்மை ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
முஸ்லிம்களின் அரசியல் அடையாளமும் பிரதிநிதித்துவமும்
முஸ்லிம் அரசியல் அடையாளம் சிக்கலான வரலாற்றைக் கொண்டுள்ளது. காலனித்துவ இந்தியாவில் முஸ்லிம் லீக்கின் உருவாக்கமும் அதன் அதீதமான வகுப்புவாத அரசியலும் (முஸ்லிம்கள் மட்டுமே வாக்களிக்கக்கூடிய முஸ்லிம்களுக்கான தனித் தொகுதிகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடத்தில் குறைவான பிரதிநிதித்துவமும் சிறுபான்மையாக இருக்கும் இடங்களில் அதிகப் பிரதிநிதித்துவமும் தர வகைசெய்யும் ஒதுக்கீட்டு முறை, இரு தேசக் கோட்பாடு அடிப்படையில் பிரிவினை/பாகிஸ்தானுக்கான கோரிக்கை ஆகியவற்றை முன்வைத்த போக்கு) சுதந்திரத்திற்குப் பின்பு அரசியலில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுவரும் அனுபவங்களுக்கு வலுவானதும் சர்ச்சைக்குரியதுமான வரலாற்றுப் பின்புலத்தை வழங்குகிறது. வரலாற்று ரீதியான இந்தக் குறுகலான பார்வை ஆழமான பிரச்சினைக்குரியது. காலனித்துவ முஸ்லிம் அரசியல், மிகவும் வித்தியாசமான பிரதிநிதித்துவத் தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உயரடுக்கைச் சேர்ந்த, சக்தி வாய்ந்த முஸ்லிம்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை அப்போது இருந்தது. இந்த முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களின் அரசியல் பாதுகாவலர்களாக, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டார்கள். 1951க்குப் பிந்தைய சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது. இந்திய அரசியல் சட்டம் விகிதாசார/வகுப்புப் பிரதிநிதித்துவ வடிவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. அதே நேரத்தில், வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையும் அதிக வாக்குகள் பெறுபவர் வெற்றிபெறும் தேர்தல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை புதிய வடிவிலான அரசியல் பிரதிநிதித்துவத்தை நிறுவின. தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் புவியியல் ரீதியாகக் குறிக்கப்பட்ட தொகுதியில் உள்ள வாக்காளர்களின் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அவர்கள் கடமை உணர்வு கொண்ட தூதர்களாக இந்த மதச்சார்பற்ற சமூகத்தின் அபிலாஷைகளையும் கோரிக்கையையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.
தனிக் குழுக்களின் உரிமைகள் விஷயத்தில் அரசியலமைப்புச் சட்டம் அலட்சியம் காட்டியது என்பது இதன் பொருளல்ல. மதச்சார்பின்மை கொள்கையில் சமரசம் செய்துகொள்ள முடியாத வகையில் குழுக்களின் உரிமைகளை அரசியல் சட்டம் அங்கீகரித்தது. இதன் விளைவாக, குழு அடிப்படையிலான கூட்டு அரசியல் அபிலாஷைகளைக் கையாள்வதற்காக பட்டியல் சாதியினர் (எஸ்.சி.), பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி.), சிறுபான்மையினர் என நிர்வாக ரீதியான சில பிரிவுகள் உருவாக்கப்பட்டன. இந்தக் கட்டமைப்பில் வழக்கமான முஸ்லிம் அரசியலுக்கு இடமில்லை. தேர்தலை மையமாகக் கொண்ட அரசியல் வாழ்வில் ஈடுபட முஸ்லிம் தலைவர்கள் பிரதிநிதித்துவம் என்பதற்குப் புதிய அர்த்தத்தை வளர்த்தெடுக்க வேண்டியிருந்தது. இத்த்கைய சூழலில் அரசியல் பயனுரிமையாளர் என்னும் முறையில் முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் மறுவரையறை செய்யப்பட்டது.
சமகால முஸ்லிம் அரசியல் அடையாளத்தின் இரண்டு முரண்பட்ட அம்சங்களை அடையாளம்காண இந்த வரலாற்றுப் பின்னணி பயனுள்ளதாக இருக்கிறது. ஒருபுறம், கலாச்சார ரீதியாக வேறுபட்ட பல்வேறு இஸ்லாமிய சமூகங்கள் உள்ளன. இவை தம்மை முஸ்லிம்கள் என்று வரையறுத்துக்கொள்கின்றன. இந்த முஸ்லிம் சமூகங்கள் சாதி, வர்க்கம், பிரதேசம், ஏன் மத ரீதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இப்படி வெளிப்படையாகவே பன்முகத்தன்மை கொண்ட முஸ்லிம் சமூகங்கள் பல்வேறு வழிகளில் தேர்தல் முறையுடன் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதன் மூலம் அவரவர் பிரிவுக்கேயுரிய முஸ்லிம்தன்மை என்று அழைக்கப்படும் அடையாளத்தை உருவாக்குகின்றன. தொகுதி மட்டத்திலான முஸ்லிம்களின் தேர்தல் பங்கேற்பு இதை விளக்குவதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கலாம்.
மிகவும் பன்முகத்தன்மை கொண்ட இந்த முஸ்லிம் சமூகங்கள் முற்றிலும் சிதறுண்டவையாக உள்ளன என்றோ, தங்களைக் கூட்டு அர்த்தத்தில் "இந்திய முஸ்லிம்கள்" என்று அவர்கள் கருதவில்லை என்றோ இதற்குப் பொருளல்ல. கூட்டு முஸ்லிம் அடையாளம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு வழிகளில் உருவாக்கப்படுகிறது. அரசியல் வர்க்கம் முஸ்லிம்களை - மதச் சிறுபான்மையினர் என்னும் அவர்களின் அரசியல் சட்டம் சார்ந்த அந்தஸ்தை அங்கீகரிப்பது அல்லது அவர்களை தேசவிரோதப் பிரிவினைவாதிகள் என்று நிராகரிப்பது ஆகிய வழிகளில் - ஒரே மாதிரியான குழுவாகக் கருதுகிறது. இந்த இரண்டு அணுகுமுறைகளிலும் முஸ்லிம்கள் ஒரே மாதிரியான தொகுப்பாகவே பார்க்கப்படுகிறார்கள். இந்தக் கருத்து முஸ்லிம் சமூகங்கள் தங்களைப் பற்றிக் கொண்டிருக்கும் பார்வையையும் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கிறது. அவர்கள் தங்களை அனைத்திந்தியச் சமூகத்தின் உறுப்பினர்களாகவே கருதிக்கொள்கிறார்கள். இந்தச் செயல்முறை முஸ்லிம்தன்மை என்ற சொல்லாடலை உருவாக்குகிறது. முஸ்லிம்களின் உரிமைகள், சலுகைகள், கடமைகள், செயல்பாடுகள், அவர்கள் கூட்டாக அனுபவிக்கும் துன்பங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இயங்கும் சொல்லாடல் இது.
அவரவர் பிரிவுக்கேயுரிய முஸ்லிம்தன்மை (பன்முகத்தன்மையின் அடிப்படையில்), முஸ்லிம்தன்மை குறித்த பொதுச்சொல்லாடல் (ஒரேமாதிரியான தன்மையின் அடிப்படையில்) ஆகியவற்றுக்கு இடையேயான பரஸ்பர அரசியல் தொடர்பு முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் தன்மையைக் குறிப்பிடத்தக்க வகையில் தீர்மானிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஊடகங்களின் சொல்லாடலில் அசாதுதீன் ஒவைசி ஒரு முஸ்லிம் தலைவராகத் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். நாடு முழுவதும் அவரது பேரணிகள், பொதுக்கூட்டங்களில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த அளவு ஆதரவு இருந்தபோதிலும், ஓவைசியின் கட்சியான அகில இந்திய இத்தேஹாதுல் முஸ்லிமீனால் முஸ்லிம்களின் அபரிமிதமான இந்த ஆதரவைத் தேர்தல் களத்தில் கிடைக்கும் பலன்களாக இன்னமும் மாற்ற முடியவில்லை. முஸ்லிம்கள் தொகுதி அளவில் ஓவைசியின் கட்சியை நிராகரிக்கிறார்கள். ஏனென்றால் அக்கட்சியின் மதம் சார்ந்த குரல் தொகுதி அளவில் நிலவும் சிக்கலான சமூகவியல், பொருளாதாரக் கட்டமைப்புகளுடன் எல்லாச் சமயங்களிலும் பொருந்திப்போவதில்லை. அதாவது, ஓவைசி முஸ்லிம்களின் சொல்லாடலுக்குள் நின்று செயல்படும்போது அனைத்து முஸ்லிம்களின் பிரதிநிதியாக மாறுகிறார். ஆனால், ஹைதராபாத்திற்கு வெளியே தொகுதி அளவில் அவர் முக்கியத்துவமற்றவராகிவிடுகிறார் (அல்லது, அங்கெல்லாம் அவருடைய கட்சிக்கு வாக்காளர்களுடன் எந்த விதமான தொடர்பும் இல்லை). அவரவர் பிரிவுக்கேயுரிய முஸ்லிம்தன்மை என்பது பின்புலங்களைப் பொறுத்து மாறுபட்ட பிரதிநிதித்துவத் தர்க்கத்தை உருவாக்குகிறது என்பதே இதன் பொருள்.
பிரதிநிதித்துவமும் நிறுவனம் சார்ந்த கட்டமைப்பும்
முஸ்லிம் பிரதிநிதித்துவ அரசியல் என்பது தேர்தல் அரசியலின் செயல்பாட்டு அம்சங்களை நிர்வகிக்கும் நிறுவன ரீதியான கட்டமைப்புகளுடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வயதுடைய அனைவரும் வாக்குரிமை என்பதை அடிப்படையாகக் கொண்ட மக்களவை, மாநில சட்டமன்றங்களுக்கான நேரடித் தேர்தல் முறை, வெற்றியை உறுதிசெய்யக்கூடிய வாக்காளர்களின் கட்டமைப்பை உருவாக்கும் முனைப்பை அரசியல் கட்சிகளிடையே ஏற்படுத்தியது. மோடிக்கு முந்தைய குஜராத்தில் க்ஷத்ரிய, தலித், ஆதிவாசி, முஸ்லிம் ஆகியோரை இணைத்து உருவான மாதிரியும், பாபர் மசூதிக்குப் பிந்தைய சூழ்நிலையில் உ.பி., பிகாரில் முஸ்லிம், யாதவ் பிரிவினரை இணைத்து உருவான மாதிரியும் இதுபோன்ற வாக்குச் சமூகங்களின் அரசியல் கூட்டணிகளுக்கு நல்ல எடுத்துக்காட்டுகள். கடந்த எட்டு ஆண்டுகளில் உருப்பெற்றிருக்கும் பாஜகவின் மேலாதிக்கம் இந்தக் கட்டமைப்புகளை வெற்றிகரமாக உடைத்துள்ளது. முஸ்லிம்களைத் தவிர்த்த வாக்காளர்களின் புதிய கட்டமைப்பை உருவாக்க பாஜக முனைகிறது. வெற்றிபெறுவதற்கான கட்டமைப்பிலிருந்து முஸ்லிம்களை விலக்குவது சமகாலத் தேர்தல் அரசியலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று.
மாநிலங்களவைக்கும் மாநில சட்ட மேலவைகளுக்குமான உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சட்டப்பூர்வமான இந்த அமைப்புகள் அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமான முஸ்லிம் தலைவர்களை நாடாளுமன்றத்திலும் மாநில சட்ட மேலவைகளிலும் சேர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. மறைமுகமான இந்தத் தேர்தல் வடிவம் விரிவான அளவில் அனைவரையும் உள்ளடக்குவதற்கான அரசியல் வர்க்கத்தின் கடப்பாட்டை நிறைவேற்றப் பயன்படுத்தப்படுகிறது. "மாநிலங்களவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்: வடிவங்களும் பாதைகளும்" (Muslim Representation in Rajya Sabha: Forms and Trajectories,) என்பது குறித்து 2015ஆம் ஆண்டில் நான் மேற்கொண்ட ஆய்வு, மக்களவையைப் போலன்றி, மாநிலங்களவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் எப்போதும் சிறப்பாக உள்ளது (9-10 சதவீதம்) என்பதைக் காட்டுகிறது. முஸ்லிம் பிரதிநிதித்துவமானது எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையிலும், சட்டமன்ற அமைப்புகளின் நிறுவன அமைப்பைச் சார்ந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் முக்கியமான கண்டுபிடிப்பு இது.
பிரதிநிதித்துவமும் தலைமையும்
முஸ்லிம் பிரதிநிதித்துவம் என்பது எப்ப்டிப் பார்த்தாலும் அதன் தலைமையின் செயல்பாடு பற்றியது. 2017-19இல் “தேர்தல்களுக்கு இடையேயான அரசியலும் சமூகமும்” என்பது குறித்து மூன்று சுற்றுகளில் நடைபெற்ற மேற்கொள்ளப்பட்ட சிஎஸ்டிஎஸ்-லோக்நீதி-ஏபியு-வின் (CSDS Lokniti-APU) ஆய்வு (Politics and Society Between Elections), தேசிய பிரதிநிதித்துவ மாதிரியுடன் 24 மாநிலங்களைச் சேர்ந்த 48,000த்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் கேட்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு கேள்வி மிகவும் முக்கியமானது: “உங்களுக்கான பணிகளை முடித்துத் தருவ்தில் சமமான திறமையுடைய இருவர் ஒரே அரசியல் கட்சியில் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களில் ஒருவர் உங்கள் மதத்தைச் சேர்ந்தவர், மற்றவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்றால், முதலில் யாரைத் தொடர்புகொள்ள விரும்புவீர்கள்?
அட்டவணை 1: முஸ்லிம்களும் முஸ்லிம் தலைவர்களும்

(ஆதாரம்: 2016-2019 CSDS-APU ஆய்வு. எண்கள் சதவீதத்தில். கூட்டு எண்கள் மூன்று சுற்றுக்களையும் சேர்த்தவை.. *இதர மதத்தவரையும் உள்ளடக்கியது).
அட்டவணை 1 இந்தக் கேள்விக்குக் கலவையான பதிலைக் காட்டுகிறது. சமயப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் (ஒட்டுமொத்தச்) சமூகத்தின் தலைவர்களையே நம்புகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. முஸ்லிம்களின் கருத்துக்களும் இந்தப் பொதுவான போக்கை உறுதிப்படுத்துகின்றன. பதிலளித்த முஸ்லிம்களில் 46 சதவீதம் பேர் தங்களுக்குத் தேவை என்றால் ஒரு முஸ்லிம் தலைவரைத் தொடர்புகொள்ள விரும்புவதாகக் கூறினர். ஏறக்குறைய இதே எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் (41 சதவீதம்) இந்தக் கருத்தை ஏற்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, ஒரு தலைவரின் மதம் முக்கியமான அளவுகோல் அல்ல.
இந்தக் கண்டுபிடிப்புகளிலிருந்து இரண்டு முக்கியமான அனுமானங்களுக்கு வரலாம். நிர்வாக ரீதியான அதிகாரத்தை அன்றாடம் எதிர்கொள்வதற்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் தலைவர்களைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை முஸ்லிம் சமூகங்கள் அங்கீகரிக்கின்றன என்பது தெளிவாகிறது. இரண்டாவதாக, எல்லா சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் பிரதிநிதிகளாகப் பார்க்கப்படுவதில்லை. தங்கள் சொந்த நலன்களுக்காக அரசியலில் பங்கேற்கும் தொழில்முறை அரசியல்வாதிகளாகவே அவர்கள் கருதப்படுகிறார்கள்.
இந்தப் போக்குகளை நுணுக்கமாக அலசிப்பார்த்தால், முஸ்லிம் தலைமை என்பது தன்னளவில் மிகுந்த பன்முகத்தன்மை கொண்டது என்பதாகத் தெரிகிறது. வெவ்வேறு சூழல்களில் மிகவும் குறிப்பிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளும் மூன்று வகையான முஸ்லிம் தலைவர்கள் உள்ளனர்: தொழில்முறை முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் உயரடுக்கைச் சேர்ந்தவர்கள், செல்வாக்கு செலுத்தக்கூடிய முஸ்லிம்கள். தொழில்முறை முஸ்லிம் அரசியல்வாதிகள் கட்சிகளுக்கும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் குறிப்பிட்ட முஸ்லிம் சமூகத்திற்கும் இடையே முக்கிய இணைப்பாகச் செயல்படுகின்றனர். முஸ்லிம் உயரடுக்க்கைச் சேர்ந்தவர்களோ அமைப்புகளின் கட்டமைப்பு சார்ந்து செயல்படுகிறார்கள். அதிகாரக் கட்டமைப்பின் உள்ளடுக்கைத் தங்களுக்கு ஆதரவானதாக ஆக்குவது அல்லது சட்டப்பூர்வமான அங்கீகரம் பெற அந்தக் கட்டமைப்புக்கு எதிராகச் சவால்விடுவது என்னும் இரு வகைகளில் செயல்படுகிறார்கள். செல்வாக்கு செலுத்துபவர்கள் ஊடகத்தால் இயக்கப்படும் பொதுச் சொல்லாடலில் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள். இந்த மூன்று வகையான தலைவர்களும் மாறுபட்ட அரசியல் சூழல்களில் மிகவும் குறிப்பிட்ட செயல்பாடுகளை மேற்கொள்கிறார்கள். இதன் மூலம் அன்றாட வாழ்வில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கான அர்த்தங்களை உறுதியான முறையில் உருவாக்குகிறார்கள். அவை பிரதிநித்துவம் குறித்த பொதுக் கருத்துக்களிலிருந்தும் ஊடக விவாதங்களிலிருந்தும் மிகவும் வேறுபட்டவை.