பம்பாய் திரைப்படத் தொழிலை வடிவமைத்த அடிப்படையான கூறு என்றால் அது தீவிரமான நிச்சயமற்ற நிலைதான் என்பதை எல்லா வரலாற்றாய்வாளர்களும் ஒப்புக்கொள்வார்கள். இன்று ‘பாலிவுட்’ என அழைக்கப்படும் இந்தத் திரையுலகம் வணிக ரீதியாக வலுவானது. உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டது. காலனிய ஆட்சியின் கீழ் இது பிறந்தது. எந்த நிச்சயத்தன்மையும் இல்லாத இந்தப் புதிய துறையில் பங்குபெற எந்த நிதி நிறுவனமும் தயாராக இல்லாத நேரம் அது. சமூகத்தில் மதிப்பில்லாமல் இருந்த இந்தத் துறையில் வேலை செய்யத் தொழிலாளர்கள் பலரும் தயங்கிய காலம் அது. ஆனால், 1930களின் நடுவில் பம்பாய் உயிர்த் துடிப்புள்ள திரைத் துறையின் மையமாக உருவெடுத்தது. இந்தத் துறையின் வேர்கள் பல்வேறு திசைகளில் பரவியிருந்தன. 1931 முதல் 1945வரை இரண்டாயிரத்திற்கும் மேல் “பேசும்” படங்கள் இங்கே உருவாயின. இரண்டாம் உலகப் போரின்போது இந்தத் திரைப்படத் துறையில் குறைந்தது 40000 பேர் முறையாக வேலை வாய்ப்பு பெற்றிருந்தார்கள். இந்தச் சமயத்தில்தான் போராடுபவர் என்னும் புதிய வரலாற்றுக் கதாபாத்திரம் இந்த அரங்கினுள் நுழைந்தது.
“போராடுபவர்” என்னும் சொல் மும்பையில் மிகவும் குறிப்பான பொருள் கொண்டது. எந்த அளவுக்கு என்றால் “பம்பாய்யா” என்று குறிப்பிடப்படும் மும்பையின் அடித்தட்டு மக்களின் பேச்சு வழக்கில் இது கலந்துவிட்டது. பம்பாயில் போராடுவது என்றால் திரைப்படத் துறையில் பிடி கொடுக்காமல் நழுவும் “பெரிய வாய்ப்பு”க்காக அல்லாடுவது. போராடுபவர் என்பவர் மிகவும் குறிப்பானதொரு சமூகப் பிரகிருதி. திரைப்படங்களில் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்னும் கனவைக் கொண்டவர். ஆனால், துறைக்குள்ளோ சமுதாயத்திலோ சரியான தொடர்பு எதுவும் இல்லாதவர். இந்தப் பின்புலத்தில் போராடுதல் என்பது இன்றைய ஊடகத் தொழில் துறையின் அடையாளமாக நீடித்திருக்கும் பல்வேறு நிச்சயமற்ற நிலைகளின் அறிகுறி மட்டுமல்ல. அந்த நெருக்கடிக்கான எதிர்வினையும் ஆகும்.

ஃபிலிம்இந்தியா இதழில் 1945இல் வெளியான வாய்ப்பு தேடும் விளம்பரங்கள்
1930களில் திரைப்படத்திற்கான பாதைகள் அனைத்தும் பம்பாயை நோக்கியே சென்றன. திரையுலகில் தங்கள் அதிருஷ்டத்தைச் சோதித்துப்பார்க்க விரும்பிய பலதரப்பட்ட மனிதர்கள் நூற்றுக்கணக்கில் இந்த நகரத்திற்குப் படையெடுத்தார்கள். இது மிகவும் வினோதமான வரலாற்று நிகழ்வு. பணத்தையும் தாண்டிய அரூபமான ஒன்றை அடைவதற்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களைக் கவர்ந்து இழுத்த தொழில் துறை அதற்கு முன்பு இருந்ததில்லை. கடுமையான வேலையின்மை நிலவிய அந்தக் காலத்தில் பணம், புகழ், படைப்பாற்றல் சார்ந்த மனநிறைவு ஆகியவற்றுக்குப் பெரிய அளவில் உறுதியளிக்கக்கூடியதாகத் திரைத்துறை இருந்தது. தொழில்நுட்பம் சார்ந்த நவீனத்துவத்தின் அடையாளமாகவும் தனிநபரின் ஆசைகளை உணர்ச்சி மிகுந்த விதத்தில் வெளிப்படுத்கக்கூடியதாகவும் விளங்கும் ஊடகத்தில் பணிபுரியும் நவீனமான நபராகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பையும் சினிமா ஒருவருக்கு வழங்கியது. திரைத்துறைக்கு வருவதற்குப் போராடுபவரிடம் மகத்தான நிலைமையை அடைவதற்கான கனவுகளைத் தவிர வேறொன்றும் இல்லை. இத்தகையவர்கள் “அருகிலிருந்தும் மிகுந்த தொலைவிலிருந்தும் வந்தார்கள். ஸ்ரீநகரின் மலைச் சிகரங்களிலிருந்தும் வெயில் கொளுத்தும் சென்னையிலிருந்தும் தில்லி, பஞ்சாப் ஆகிய ஊர்களிலிருந்தும் வந்தார்கள். இந்தியாவின் நான்கு மூலைகளிலிருந்தும் வந்தார்கள்” (ஜபக், ஃபிலிம்இந்தியா, 1940, செப்டம்பர்). இப்படிப்பட்டவர்களின் பம்பாய் பிரவேசம் எந்த அளவுக்கு இருந்தது என்றால் இதழியலாளர்கள் இதை “சினிமா பைத்தியம்” என்று குறிப்பிட்டார்கள். எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள் என்று பெற்றோர்கள் மனமுருகும் கடிதங்களை சினிமா பத்திரிகைகளுக்கு அனுப்பினார்கள்.

மனமொடிந்த பெற்றோர் தந்த ‘காணவில்லை’ விளம்பரம். 1939, ஜூன்.
Bombay Hustle: Making Movies in a Colonial City (பம்பாய் சந்தை: காலனிய நகரில் திரைப்படங்களை உருவாக்குதல்) என்னும் என்னுடைய புதிய நூலில் திரைப்படங்களில் பணிபுரிய விரும்பும் திரைப்பட ரசிகர்கள் மீது கவனத்தைக் குவித்திருக்கிறேன். ஒரு துறையின் ரசிகரே அதன் தொழிலாளியாக மாறும் இந்தப் போக்கு தனக்கான தொழிலாளர்களைச் சமூக அளவில் தானே உருவாக்கிக்கொள்ளூம் திரைப்படத் துறையின் முனைப்பை உருவகப்படுத்துகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஊடகத் தொழில்களின் அமைப்பு, செயல்பாடு ஆகியவற்றைப் பற்றிய முக்கியமான பார்வைகளையும் வழங்குகிறது.
பம்பாய் திரைத் தொழிலின் தொடக்க நாட்களில் அதற்கு வேண்டிய முதலீடு கிடைக்கவில்லை. பணம் திரட்டுவது என்பது அன்றாடப் போராட்டமாக இருந்தது. போராடுபவரின் வரலாற்றுப் பாத்திரம் என்பது இந்தத் தருணத்தில் நிதி நெருக்கடியால் சாத்தியமாகிறது. பம்பாயின் மிகப் பிரபலமான திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலர் எண்ணற்ற கூலித் தொழிலாளர்கள், சண்டைக் கலைஞர்கள், லைட் பாய்ஸ், உதிரி வேடங்களை ஏற்கும் நடிகர்கள் ஆகியோரின் நெருக்கடிகளைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளித்தார்கள். திரைப்படத்தின் மூலம் புகழடைய வேண்டும் என்னும் போராடுபவர்களின் கனவு நகரத்திற்கு உபரித் தொழிலாளர்கள் வர வழி வகுத்தது. உழைப்பதற்கான உடல்கள் தொடர்ந்து கிடைத்துவந்தன. இந்தச் சூழல், அன்புக்குரியதும் நெகிழ்வானதுமான திரைப்படத் தொழிலைக் கட்டமைக்க முடிந்தது

பாம்பே ஹேஸில் நூலின் அட்டை. அச்சுத் கன்யா (1936) படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட படம்.
பாலிவுட் என்பது கோடிக்கணக்கில் பணம் புழங்கும் தொழில். பளபளப்பும் வசீகரமும் கொண்ட துறையாக இதை மக்கள் பார்க்கிறார்கள். செய்தி ஊடகங்கள் நட்சத்திரங்கள் மீதும் இதர திரை ஆளுமைகள் மீதும் கவனம் செலுத்துகின்றன. பாலிவுட் பற்றி எதிர்மறையாக எழுதும் ஊடகங்களும் திரைப் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றித்தான் எழுதுகின்றன. போராடுபவர் அல்லது திரைத் துறையில் நுழைய விரும்புபவர் மீது கவனத்தைத் திருப்பினால் மூலம் இந்தத் துறையைத் தொடர்ந்து இயங்கவைக்கும் ஈடுபாட்டையும் உழைப்பையும் நாம் பார்க்கத் தொடங்குவோம். இவை இதுவரை ஆவணப்படுத்தப்படாதவை. போராடுபவர்களை அப்பாவி பலியாடுகளாகவோ நாயகர்களாகவோ பார்க்கவில்லை என்றும் சிக்கலான ஆசைகளைக் கொண்ட சிக்கலான குழுவாகவே அவர்களைக் காண்கிறோம் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன்.

அடுத்த ஷாட்டுக்காக வெயிலில் காத்திருக்கிறார் இந்த இளைஞர். இஸாத் (1937) படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட படம். புகைப்படம் உதவி: ஜோசெஃப் விர்ச்சிங் ஆவணக் காப்பகம் / அல்காஸி புகைப்படத் தொகுப்பு.
போராட்டம் என்பது தொடர்ச்சியானது என்பதைத்தான் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தொலைபேசி இயக்குநராக இருந்து 1930களில் பெரிய நட்சத்திரமாக ஜொலித்த சுலோச்சனா போன்ற நிஜ வாழ்வு வெற்றிக் கதைகளின் மூலம் நட்சத்திரக் கனவு தூண்டப்பட்டாலும் அத்தகைய புகழையும் நட்சத்திர மதிப்பையும் வெகு சிலர்தான் பெறுகிறார்கள். பெரும்பாலானவர்கள் இடையறாத போராட்டத்திலேயே சிக்கிக்கொள்கிறார்கள். ஏமாற்றமும் விரக்தியும்தான் இவர்கள் வாழ்வின் யதார்த்தங்கள். எனினும், நடிகர்களைத் தேர்வுசெய்யும் இயக்குநரான நந்தினி ஸ்ரீகாந்த் குறிப்பிடுவதுபோல, போராடுபவர்கள் ஒவ்வொரு நாளும் “ஓடிக்கொண்டிருக்க வேண்டும்”. எனவே, போராட்டம் எனபது விசித்திரமான உலகியல் நோக்கைக் கொண்டது. எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு உழைத்தாலும் நிகழ்கால யதார்த்தத்தின் மீது உறுதியாகக் காலூன்றியிருக்க வேண்டும்.

சுலோச்சனா என்கிற ரூபி மையர்ஸ், மவுனப் படங்களின் காலத்தில் பெரிதும் விரும்பப்பட்ட நட்சத்திரம். பேசும்படங்களின் காலகட்டத்திலும் வெற்றிபெற்றவர். அந்தக் காலத்தில் சினிமாவுக்கு வர விரும்பியவர்களில் பலர் சுலோச்சனாவின் மீதான அபிமானம்தான் சினிமாவுக்கு வருவதற்கான காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
காத்திருக்கும் பயிற்சி என்பது திரைப்படப் போராட்டத்தின் மிக முக்கியமான அனுபவம். காத்திருத்தல் என்பது சும்மா இருப்பதல்ல; அது குறிப்பிட்ட வகையிலான உழைப்பு என்பதைப் போராடுபவர் நமக்குக் காட்டுகிறார். போராடுபவர் தொலைபேசி அழைப்புகளுக்காகக் காத்திருக்கிறார். முகவர்களிடமிருந்து நல்ல செய்தி வருவதற்காகக் காத்திருக்கிறார். அதே சமயம் எதிர்காலத்துக்கான முன்னேற்பாடுகளையும் செய்துகொள்கிறார். நல்ல படங்கள் எடுத்துவைத்துக்கொள்வது, போர்ட்ஃபோலியோ எனப்படும் அறிமுகக் கையேட்டை மேலும் மேம்படுத்திக்கொள்வது, தன்னைப் பற்றிய விவரங்களைப் பலருக்கும் அனுப்பிவைப்பது, உடற்பயிற்சியிலும் நடிப்புப் பயிற்சியிலும் ஈடுபடுவது, ஸ்டூடியோக்களுக்குச் சென்று வருவது, தொடர்புகளைப் பேணிவருவது ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். காத்திருத்தல் என்பது எப்போதும் செயல்பாட்டில் இருப்பது. எப்போதும் விழிப்புடனும் தயார் நிலையுடனும் இருப்பது. மாறுபட்ட வாழ்க்கையை நடத்தத் தயாராக இருப்பது.

நட்சத்திர நடிகையான சுலோச்சனாவின் மீது இருந்த தீவிரமான அபிமானத்தால் சினிமாவுக்கு வந்தவர் மேடம் அஸூரி. இந்தியாவின் முதல் நடன இயக்குநர்களில் ஒருவர். புகைப்படம் உதவி: ஜோசெஃப் விர்ச்சிங் ஆவணக் காப்பகம் / அல்காஸி புகைப்படத் தொகுப்பு.
காத்திருப்பும் தயாரிப்பும் தொடர் செயல்முறைகள். தொழிற்சாலையிலோ அலுவலகத்திலோ வேலைசெய்பவரோடு ஒப்பிடுகையில் வேலை நேரம் என்பது இவருக்கு முற்றிலும் மாறுபட்டது. வேலை, ஓய்வு, சுய பராமரிப்பு ஆகியவற்றுக்கிடையே எந்தப் பிரிவும் இருக்காது. இன்றைய உலகளாவிய முதலாளித்துவத்தின் நிரந்தரமற்ற ஒப்பந்தப் பணிகளை அடிப்படையாகக் கொண்ட புதிய பொருளாதாரத்தின் பகுதியாக ஆகிவிட்ட இதன் வலியைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். இன்றைய மும்பையின் வீதிகளில் போராடுதல் என்பது கவுரவச் சின்னம். சமூகத்தில் நிச்சயமற்ற நிலையில் சிக்கியிருக்கும் புதிய பிரிவினர் அதிக மக்கள்தொகை கொண்ட, போட்டி நிறைந்த சூழலில் பிழைத்திருப்பதற்கான அன்றாட அல்லல்களுக்கான மரியாதையாக அதைப் பார்க்கிறார்கள். இன்று பண்பாட்டுத் துறையில் பணிபுரிபவர் ஏஞ்சலா மெக்ரூபீ தன்னுடைய Be Creative: Making a Living in the New Culture Industries (Polity, 2016) நூலில் குறிப்பிடும் “படைப்பாற்றலுக்கான விலை” என்பதை வைத்து அடையாளப்படுத்தப்படுகிறார். படைப்பாற்றலுக்கான விலை என்பது படைப்பாற்றலைப் பணிப் பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு, வரையறுக்கப்பட்ட பணிநேரம் ஆகியவற்றுக்கு எதிரானதாக ஆக்குவதன் மூலம் நிச்சயமற்ற நிலையைச் சாத்தியப்படுத்தி, அதை உறுதிப்படுத்தவும் செய்யும் கருத்தியல் கருவி. உடலுழைப்பற்ற பணிகளைச் செய்யும் பலர் பணி நிரந்தரம் அற்ற ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட்டாக வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால், அது அவர்கள் தேர்வு என்று கூறப்படுகிறது. 1930களில் திரையுலகில் போராடியபவர்களின் பின்புலத்தில் இந்தக் கருத்தாக்கங்களைப் பற்றி யோசிக்கும்போது நிச்சயமற்ற நிலை என்பதை சாகசம் என்பதாகக் கட்டமைப்பதன் மூலம் திரைத்துறையின் நிச்சயமற்ற நிலையை இயல்பானதாக எடுத்துக்கொள்ளவோ அல்லது அதை மகிமைப்படுத்தவோ விழைவதற்கான தூண்டுதல் எழுவதை உணரலாம். இந்த வகையில் பார்க்கும்போது, 20ஆம் நூற்றாண்டில் திரைத் துறையில் போராடியவரை, குறிப்பாகப் படைப்பாற்றல் சார்ந்தவை எனக் கூறப்படும் தொழில்துறைகளில் இன்று நிலவும் நிச்சயமற்ற நிலைக்கு முன்னோடியாக இருக்கிறார்.

“நடனமாடுபவர், பாடகர், உதவியாளர், ஒளிப்பதிவாளர், உதவி இயக்குநர், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர், லைட் மேன்” போன்ற வேலைகளுக்காகப் “புதியவர்கள்” தேவை என்று கோரும் விளம்பரம். மும்பையில் 2020ஆம் ஆண்டு வெளியானது. புகைப்படம்: அவ்ஜித் முகுல் கிஷோர்.
பாலிவுட் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டாலும் மும்பையின் திரைப்படச் சூழல் கவலைகள் நிறைந்த உலகமாகத்தான் இருந்துவருகிறது. பெருந்தொற்று முதல் அரசியல் ஊழல்கள்வரை பல்வேறு நெருக்கடிகளை எதிர்த்து அது போராட வேண்டியிருக்கிறது. எனினும், உயர்ந்துவரும் கடல் மட்டத்தால் ஏற்படும் அபாயத்திற்கு எதிராக நகரம் தன்னை விரிவுபடுத்திக்கொண்டு மக்களுக்கும் அவர்களுடைய கனவுகளுக்கும் இடமளிப்பதுபோல மும்பையின் திரைப்படத் தொழிலாளர்களும் தங்களுடைய போராட்டங்களுடன் வாழ்ந்துவருகிறார்கள். திரைப்பட ரசிகர்கள், உதிரி நடிகர்கள், இதர தொழிலாளிகள் ஆகியோரின் போராட்டம் என்பது பலவீனமானதொரு காலகட்டத்தில் பலவீனமான தங்கள் வாழ்க்கைக்குப் பொருள் கொடுக்கும் முயற்சியாகவே இருக்கிறது. போராடுபவர்கள், சினிமாவின் மீதான தங்களுடைய அதீதமான பற்றின் மூலம் சினிமாவுக்கும் நமக்குமான உறவைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வைக்கிறார்கள். பம்பாய் திரையுலகம் குறித்த நம்முடைய உன்னதக் கனவுகளையும் தீர்மானகரமாகக் கட்டமைக்கப்பட்ட பர்வைகளையும் கலைத்துப் போடுகிறார்கள்.